பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஆறறிவு பெற்ற மனித இனமாக மானுடம் விளங்குகின்றது. உலக இனமாகவும் நாடுகளுக்குடனான இனமாகவும் மொழிகளுக்குள் உண்டான இனமாகவும் மானுடத்தை வகைமை அடிப்படையில் பிரிக்கலாம். இனம் என்ற ஒற்றை நிலையில் தொடர்ந்து சமூகத்தில் உயர்ந்த பங்களிப்பை நாகரிகம் பெற்ற மனித இனம் செய்து கொண்டே உள்ளது. மனித இனம் கால மாறுபாட்டாலும் வளர்நிலை அறிவியல் காரணமாகவும் நவீன தொழில் நுட்ப பயன்பாட்டின் ஆளுமைகளாலும் இலக்கிய பனுவல்களின் பதிவுகளும் மானுடம் பல்வேறு பரிணாமங்களை அடைந்து உள்ளதை அறிவோம். அந்த அடிப்படையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மானுடத்தின் மீதான தாக்கத்தைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

thiruvalluvarமானுடம் என்ற சொல் ஒட்டுமொத்த மனித இனத்தையும் குறிப்பதாக தான் அமையும். மனிதர் மனித பண்புகளை வரையறுப்பது கடினம், ஒவ்வொரு இனக்குழு மக்களின் வாழ்வும் வெவ்வேறு வகையிலான பண்புகள், கோட்பாடுகள், வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வாழ்வதுடன் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சொல்லி செல்லவும் முயல்கின்றனர். எவை எவ்வாறாக இருந்தபோதும் பொது தன்மையிலான வாழ்வை வைத்து மதிப்பிடும் போது, பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதுவும் அன்புகாட்டி நெறிப்படுத்துவதும் மனிதரின் முதன்மையான இடத்தைப் பெறுகின்றனர். இந்த அடிப்படையில் அற இலக்கிய கருத்தாக்காங்களோடு தோன்றிய திருக்குறள் மானுட சமூக வெளியில் பெரிய அளவிலான பாதிப்பைச் செய்துள்ளன, அவைகளை இலக்கிய தாக்கம், சமூகத் தாக்கம், அறிஞர்களின் தாக்கம், அரசியல் தாக்கம், இயக்கம் சார்பான தாக்கமெனப் பல்வேறு தாக்கங்களால் புதிய பரிணாமத்தையும் அடைந்து கொண்டே உள்ளது.

திருக்குறளுக்கு அறிமுகம் தேவையில்லை என்கும் நிலைக்கு இன்று உயர்ந்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. “1947-இல் கல்வியமைச்சர் அவினசிலிங்கம் பள்ளி வகுப்புகளில் திருக்குறளைக் கட்டாயமாகப் போதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்” இன்று திருக்குறள் தேடி எடுக்கும் நிலை வந்தால் ஆய்வு நூலாக, பதிப்பு நூலாக, உரைநூலாக நூறு புத்தகங்களுக்கு மேல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கலாம்.

தமிழ் இனத்தின் அடையாளமாகவும் பொது தன்மையுடன் பேசும் நீதி நெறியாகவும் உலக மக்களும் ஏற்றுக்கொள்ளும் அங்கீகரிக்கப் பட்ட உயர்ந்த நிலைக்கு சென்று அடைந்ததால் இன்று 80க்கு மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் 40க்கு மேற்பட்ட நிலையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று நாம் இப்படி காண்பதற்கு திருக்குறள் எந்த மத நெறிகளுக்கும் அடங்காத உயர் சிந்தனை கொண்டவையாகவே விளங்குகின்றது என்று கூறிக் கொள்ள தான் வேண்டும். அதனால் தான் இதனை, “சமண, பௌத்தர், சைவர், வைணவர் அனைவரும் எங்கள் ஒரே நூல் எனப் போற்றும் பெருமைக் கூறிய பொதுமை நூல்”1 என்ற வார்த்தைகளால் அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலக்கிய வெளியில் திருக்குறள் என்ற தனித்த நிலையில் நாம் தேடுவோமானால் ஈறாயிர ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள் பதிப்பை மதிப்பை ஏற்றுக் கொண்ட பல்வேறு அறிஞர்கள் தங்களது வாழ்வில் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளனர். இது தற்போதைய காலத்திற்கான சுவடுகளாக உள்ளன என்ற ஒரு குறிப்பையும் கூறிக்கொள்ள வேண்டும். திருக்குறள் சங்க இலக்கியங்கள் முதல் பல்வேறு இலக்கியங்களில் பதியப்பட்ட தகவல்கள் உண்டு. ஆரம்பத்தில் திருக்குறள் அரங்கேற்ற முடியவில்லை என்ற ஒரு தகவலும் பின்னர் அதற்கான ஆதரவு குரல் கொடுத்த பல்வேறு கவிஞர்கள் பதிவுகளாக ‘திருவள்ளுவமாலை’ நம் கண்முன்னே தெரிகிறது. இப்படிப்பட்ட திருக்குறள் போல வேறு எந்த இலக்கியத்திற்கும் ஒரு நூல் வெளிவரவில்லை. தனித்த நிலையான நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நூலின் மதிப்பை உணர்ந்து ஆங்காங்கே இருக்கும் படைப்பாசிரியர்கள் பதிவு செய்யப்பட்ட தகவல்களாக திருவள்ளுவமாலை விளங்குகின்றது. இந்த திருக்குறளுக்கு 140 மேற்பட்டோர் உரை எழுதி உள்ளார்கள்.மேலும் ஆசிரியர் பெயரே இல்லாமல் பல உரைகளும் வெளி வந்துள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ‘திருக்குறள் களஞ்சியம்’ என்ற 5000 பக்க அளவில் பத்து தொகுதிகளாக 125 அறிஞர்கள் எழுதிய உரையுடன் தற்போது வெளிவந்து இருக்கின்றன. இதை இந்துதமிழ் திசை என்ற நாளிதழ் இரண்டு முறை விளம்பரப்படுத்தி உள்ளனர். 25.03.2022, அன்றும் 30.03.2022 அன்றும் ஒரு பக்க அளவிலான விளம்பரமும் வெளிவந்துள்ளது. இதில் தவதிரு வீரமாமுனிவர் தொடங்கி மருத்துவர் சு.கார்த்திக் வரை 125 வேர் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளன.

சமூக தளத்தில் பெரிய அளவிலான பாதிப்பை அதாவது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியாது உள்ளது. அன்றைய காலத்தில் பல வெளிநாட்டு அறிஞர்கள் பொது தன்மையிலான அடிப்படையில் திருக்குறள் அமைந்திருந்தமையால் திருக்குறளை உயர்த்திப் பிடித்து இருந்தனர் என்று மட்டும் கூறிக்கொள்ள முடியாது. சமூக நீதியை அது வெளிப்படுத்தியதால் எந்த ஒரு மத கருத்துகளோடும் சாரமல் தனித்தன்மையோடு வெளிப்படுத்துவதால் இவற்றை நாம் ஏற்றுக்கொண்டு கூறினர். பல வெளிநாட்டு அறிஞர்கள் திருக்குறளை உயர்த்திப் பிடித்தது மட்டுமன்றி மொழிபெயர்த்தும் செய்திருக்கின்றனர். பெஸ்கி என்ற வீரமாமுனிவர், எல்லீஸ் இவரே திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க காசினையும் வெளியிட்டு உள்ளார். இவர் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். மேலும், ட்ரூ, லாசரஸ், போப் எனப் பல்வேறு அறிஞர்கள் தங்களுக்கு பிடித்த உரையாசிரியர்களின் உரைகளை தழுவி ஆங்கில மொழிபெயர்ப்பு செய்துள்ளன. இதனால் நம் இதனை “19ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் காலனி ஆட்சியாளர்களும் பாதிரிமார்களும் பாதிரிமார்களும் திருக்குறளை முற்றுமாக அறிந்திருந்தனர் என தெரிகிறது”2 என்கின்றார் தொ.பரமசிவம்

திருக்குறள் ஓலைச் சுவடிகளில் இருந்த பதிவுகளைப் பற்றி குறிப்பிடும்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை தொகுதி-2 இலக்கியம் என்ற பிரிவில் வெளியிடப்பட்ட திருக்குறள் ஓலைச்சுவடிகள் பற்றி 519, 520, 521, 522 போன்றவற்றில் இடம்பெறும் திருக்குறள் ஓலைச்சுவடிகளை அடையாளப்படுத்துகிறது. இதில் இடம்பெறும் 520வது திருக்குறள் நான்கு அதிகாரங்கள் இருப்பதாகவும் 1650 திருக்குறள் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்புகள் நமக்கு இடம்பெற்று காட்டுகிறது. அறப்பால், பொருட்பால், காமத்துப்பால், வீட்டுநெறிப்பால் அடங்கியதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், “சுவடியில் 129 அதிகாரம் முடிய 1290 குறட்பாக்கள் மட்டுமேயுள்ளன தொடக்கத்தில் 4 வெற்றேடுகள் உள்ளன”3 என்று பதி. தி.மகாலட்சுமி கூறிப்பிடுகிறார். அன்றைய காலகட்டத்தில் திருக்குறளுக்கான ஓலைச்சுவடி பாதிப்புகள் அதிகம் இடம்பெற்று இருப்பதையும் அதில் பல்வேறு அறிஞர்கள் உரை எழுதி இருப்பதையும் சுட்டிக் காட்டுவதன் மூலம் திருக்குறள் ஓலைச்சுவடிகளில் அதிகம் இடம்பெற்று இருந்திருப்பதை உணரலாம். மேலும், திருக்குறள் ஓலைச்சுவடி 521இல் இடம்பெற்றுள்ள உரையாசிரியர்கள்,

“திருமா மணக்குடவர் தாமத்தர் எச்சர் பரிமேலர் நந்தி
பருதி கவிராசர் மல்லர் சிலைபெருமாள்
காளிங்கர் வள்ளுவனூற்கு உரையெழுதினார்”4

என்ற ஒரு செய்தி பாயிரத்தில் இடம்பெற்று இருந்ததாக குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பல்வேறு காலகட்டங்களில் திருக்குறளுக்கான தொடர் தாக்கம் இருந்து இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

திருக்குறள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது அதன் பதிவுகளால் தான் என்று கூறிக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை, சமூகப் பரப்பில் திருக்குறளுக்கான ஒரு தாக்கம் அரசியலில் அது ஆணித்தரமான ஒரு பதிவை செய்து இருக்கிறது. பெரியார் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி இருக்கிறார் 1,2,3 ஆகிய மாநாடுகள் நடத்தி இருப்பதாக தெரிகிறது. முதல் மாநாடு15,16.01.1947 ஆகிய இரண்டு தேதிகளில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநாடுகள் நடத்தி இருப்பதாகவும் இருக்கின்றது. தற்போது திராவிட கழக தலைவர் கி.வீரமணி என்பவர் கூட திருக்குறள் மாநாடு குறித்தான இணையதள பதிவை நாம் காணமுடிகிறது. தொடர்ந்து திராவிட கழகம் திருக்குறளுக்கு மாநாடு செய்து கொண்டே உள்ளனர் இதனுடைய தொடர்ச்சி ஏன் என்றால் உலக அமைப்பிற்கும் ஒரு தமிழன் அடையாளத்தை தகுதியுள்ளதாக இது எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அரசியல் ரீதியாக முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டு போக்குவரத்துக் கழகத்தை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்(State Express Transport Corporation-SETC) என்ற பெயரில் வழங்கப்பட்டு இருந்தது இன்றும் தொடர்கிறது ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் இருந்தாலும் திருவள்ளுவர் பெயர் தொடர்ந்து இருப்பதற்கான நோக்கம் என்ன அதன் தாக்கம் ஆகவே நாம் உணரவேண்டும். திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் கே.ஆர்.வேணுகோபால்சர்மா மத்திய அரசு1960, தமிழக அரசு1964 இவரது வள்ளுவர் ஓவியத்தை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொண்டதை உணரலாம். இவை மட்டுமின்றி தமிழ்நாட்டில் மூலைமுடுக்குகளில் எல்லாம், எல்லா மாவட்டங்களிலும் திருக்குறளுக்கான ஒரு மைய இயக்கம் நிகழ்ந்து கொண்டே உள்ளது. தென்காசியில் ‘திருவள்ளுவர் கழகம்’ என்ற ஒரு அமைப்பு 1920இல் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது இது வெள்ளி விழாவை சிறப்பாக நடத்தியதும் திருவள்ளுவர் ஆண்டை ஆங்கில ஆண்டான 1971வதை 2000 ஆண்டாக திருவள்ளுவர் நாளில் சிறப்பு புத்தகங்களை வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் திருவள்ளுவர் நாட்காட்டியைப் பயன்படுத்துவதையும் அறிய முடிகிறது. அரசு பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறளை கட்டாயமாக போதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு அறிவிப்பையும் செய்திருக்கிறார். இதன் மூலம் இன்று வரைக்குமான பாடத்திட்ட புத்தகங்களில் திருக்குறள் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. மேலும் நாகர்கோவில் திருக்குறள் அமைப்பு இருப்பதாக மீரான் மைதீன் தகவல் பதிவு செய்தார் ராஜபாளையத்தில் திருக்குறள் அமைப்பு இருந்ததற்கான தகவலை ச.வே.சுப்பிரமணியன் அவர்களுக்கு 26.6.2006 ஆம் தேதி ‘பொதுமறை அறிஞர்’ என்ற விருது ராஜபாளையம் ‘திருவள்ளுவர் மன்றம்’ அவருக்கு வழங்கியிருக்கிறது இதன்படி நாம் காண்போமானால் எல்லா இடங்களிலும் திருவள்ளுவர்கான மன்றங்கள், கழகங்கள் குறலகம் என ஏதோ ஒரு பெயரில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

அறிஞர்கள் முன்வைக்கும் திருக்குறள் என்ற நிலையில் வைத்து பார்த்தால், கால்டுவெல் இன்னும் பலர் திருக்குறளை மொழி பெற்றிருக்கின்றனர் திருக்குறள் அறிஞர்கள் வெளிப்படுத்திய முறையை நாம் நோக்கும் போது மனோன்மணியம் தந்த சுந்தரம்பிள்ளை ஆரியருக்கு –திராவிடர்களின் எதிர்வினையாக திருக்குறளை முன்வைப்பதாக உள்ளது. மனுநீதி கருத்துகளை புறம் தள்ளும் விதமாக இது அமைகின்றது. அதனால் தான்,

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத் தொருநீதி”5 என்கிறார்.

இதில் திருக்குறளை நன்கு கற்றவருக்கு மனு முதலிய ஆசிரியர் நூல்களை நினைக்க மாட்டார்கள் என்கிறார். இதற்கிடையே பௌத்த மதத்தின் சாரத்தோடு பண்டிதர் அயோத்திதாசர் திருக்குறளை திரிக்குறள் என்ற பெயருடன் அதன் பதிவுகளை வெளியிட்டுள்ளார். எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை எழுதிய நூல்களில் பல இடங்களில் திருக்குறளை மையமிட்டு சொல்லியிருப்பார் திருவள்ளுவரைப் பற்றி அவர் குறிப்பிடும்போது மகா ஞானியாகிய திருவள்ளுவர், திருவள்ளுவர் என்னும் மகா ஞானி, தமிழ்நாட்டு தீபம் என்பன போன்ற திருவள்ளுவரையும் திருக்குறளையும் பல இடங்களில் அங்கீகாரம் செய்கிறார். இதைப்போல, “திருவல்லிக்கேணி இந்து தியாலஜிகல் பள்ளி தமிழாசிரியரும் வேதாந்தியுமான கோ.வடிவேலு செட்டியார் திருக்குறளுக்கு உரை எழுதுகிறார். ஆக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் திருக்குறள் சைவர்களும், கிருத்துவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், வேதாந்திகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாக காட்சியளித்தது. மறுபுறத்தில் அது வேத மரபுக்களுக்கும் மனுநீதிக்கும் மாற்றானதாகவும் தமிழர்களில் சொந்த அடையாளங்களில் ஒன்றானதாகவும் காட்சியளித்தது”6 என்று வழித்தடங்கள் என்ற நூலில் பதிவுகளை காண முடிகிறது. 1905 இல் இருந்து 1935 க்கு இடைப்பட்ட தமிழ் இதழ்களில் திருக்குறளின் அடியொற்றிய பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன

சமூக தளத்தில் சமூகம் என்ற மிகப் பெரியதான மக்கள் வாழ்கின்ற இடத்தில் கல்வி அறிவு பெற்ற ஒரு கூட்டமும் கல்வி அறிவு இல்லாத மறு பக்கங்களும் உண்டு இந்த இரு பேரான நிலை கணங்களுக்குள், பழமரபுக் கதைகள் வடிவமாக சமூக தளத்தில் திருவள்ளுவர் பற்றிய சிந்தனை இருந்திருக்கிறது. இவர் பற்றிய அருமையான பல்வேறு கதைகள் வழிவழியாக வழங்கப்பட்டு இருக்கின்றதா என்பதை விளக்கும் விதமாக வள்ளுவர் வாழ்ந்ததாகவும் அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் வாசுகி திருவள்ளுவருக்கு உணவு படைக்கும் போது ஒவ்வொரு நாளும் உணவு உண்ணும்போதும் உணவிற்கு முன் ஒரு குவளை நீர் மற்றும் ஊசியும் வைத்திருப்பதாகவும் கதை வடிவம் உண்டு, மேலும் மனைவி என்ற இந்நிலையில் கற்பின் உயர்வைப் பற்றி பேசும்போது கொக்கென நினைத்தாயோ கொங்கணவா என்ற ஒரு முனிவரை பேசும் வாசுகி உடைய கதை வடிவமும் உண்டு

திருக்குறள் செய்யுள் உறவைப் போல பல்வேறு நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன திருக்குறளைப் போல அறநெறி கருத்துக்களை ஏற்படுத்தவேண்டும் என்ற பல்வேறு இலக்கியங்கள் பேசுகின்றன அதை சாயலோடு அதே வடிவமைப்பு சில குறள்கள் உருவாகியிருக்கின்றன இது குறள் வெண்பா வடிவமாகவும் இருந்திருக்கிறது ஆசிரியப்பா வடிவமாக இருந்திருக்கிறது புதுக்கவிதை வடிவமாகவும் இருந்திருக்கிறது திருக்குறளுக்கு கையடக்க உருவத்தில் உரை உண்டு தனியே குறள் உரை என்னும் பெயர் தராவிட்டாலும் அவை குறள் உரைகளின் தன்மையை உடையவனாகவே தெரிகின்றன, இரங்கேச வெண்பா, சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா முதலியன திருக்குறளுக்கு உதாரணம் கூறும் நூல்கள் ஆகும். இவை மட்டுமின்றி இன்னும் நிறைய நூல்கள் திருக்குறளுக்கு உரை வடிவிலான விளக்கங்கள் உண்டு திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாள் தை முதல் நாளை பொங்கல் தினமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மறுநாளான தை இரண்டாம் நாளை திருவள்ளுவர் தினமாக அரசு அங்கீகரித்து இன்றுவரையும் கொண்டாடப்படுகிறது. அரசியல் ரீதியான வாழ்க்கை முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரியதான பரப்புரை அமைப்பிலும் தமிழன் என்ற இன அடையாள அமைப்பிலும் இந்த திருவள்ளுவரையும் திருக்குறளையும் மையப்படுத்தி உள்ளனர். வடமொழியில் அறத்துப்பால் மாத்திரம் மொழிபெயர்த்து நீதிக்குச் இயலுமா என்று ஒருவர் வெளியிட்டிருக்கிறார் அதனை அன்றி குறள் முழுவதையும் என்னுடைய நண்பர் ஆகிய தியாக சமுத்திரம் ஸ்ரீ சங்கர பாணி ஐயர் என்பவர் பல வருஷங்களுக்கு முன்பு வடமொழி சுலோகங்களாக மொழிபெயர்த்து அமைத்திருக்கிறார் அப்புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை என்ற ஒரு குறிப்பை திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற தலைப்பின் கீழ் கூறிய சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். இதன் மூலம் திருக்குறளுக்கான வடிவம் அடுத்த நூல் வடிவமாக பிறக்க காரணமாக இருந்திருக்கிறது

திருவள்ளுவர் தங்கள் சாதிக்கானவராக சோதிடம் சொல்லக்கூடியவர்கள் தங்கள் சோதிட நிலையங்களுக்கெல்லாம் திருவள்ளுவர் சோதிட நிலையம் என்றே பெயர் வைக்கின்றனர். திருவள்ளுவரை கடவுளாக பார்ப்பவர்களும் பெறுகியதால் திருவள்ளுவருக்கு சென்னையில் உள்ள மைலாப்பூரில் முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகில் அமைத்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் வள்ளுவர் கோட்டம் என்ற ஒன்றை உருவாக்கியும்1330 குறள்களையும் பதிந்துள்ளனர். மேலும் திருவள்ளுவர் பல்கழகம் வேலூரில் உள்ளது. 2000ஆம் ஆண்டின் தொடக்கநாளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு கணபதி ஸ்தபதி மூலம் 133 அடி உயரத்திற்கு சிலை வடித்தையும் கூற வேண்டும். சைவ சித்தாந்த கழகம் நடத்திய செந்தமிழ்ச் செல்வி என்ற இதழில் ‘ஒரு குறளுண்மை விளக்கம்- ஜலகண்டபுரம்’ ‘திருக்குறட் பாயிரக் கருத்து- மா.வே.நெல்லையப்ப பிள்ளை’ ‘வள்ளுவன் என் காதலன், வள்ளுவன் என் தோழன் ஆகிய இரண்டும் வித்துவான் திரு சொ.சிங்காரவேலன்’ ‘வள்ளுவரின் கடவுட்டன்மை-வித்துவான் திரு வி சச்சிதானந்தம்’ ‘இருகுறட் பொருளுண்மை, குறுகத்தறித்த குறள் ஆகிய இரண்டும்-பி.எல்.சாமி’ ‘வள்ளுவர் காலம்- கு.பரமசிவன்’ ‘வள்ளுவன் சொல்லே வேதம்-பேராசிரியர் கா.பொ.இரத்தினம்’ ‘வள்ளுவர் ஓர் உயிர் நூற் புலவர்- செல்லூர்க்கிழார்’ என்பன போன்ற பல்வேறு கட்டுரை இடம் பெற்று உள்ளது மேலும் பல கட்டுரைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

20ஆம் 21ஆம் நூற்றாண்டுகளில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் பல்வேறு புத்தக வடிவத்தில் திருக்குறளுக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது ‘மு.சண்முகம்பிள்ளை- திருக்குறள் அமைப்பு முறையும், சென்னைப் பல்கலைக்கழகம் 1972’, ‘கருவை பழனிச்சாமி-திருக்குறளில் மரபும் திறனும், திருமொழிப் பதிப்பகம் சென்னை 2004’, ‘எச்.இராமசாமி- திருக்குறள் அகராதி, மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2004’, ‘கு.ச.ஆனந்தன்- வள்ளுவரின் மெய்யியல், மணிவாசகர் பதிப்பகம் சிதம்பரம் முதற் பதிப்பு 1986’, ‘கிருட்டினமூர்த்தி (பதிப்பாசிரியர்)- இக்கால உலகிற்குத் திருக்குறள்,உலகத் தமிழாராச்சி நிறுவனம் சென்னை 2004 மூன்றாம் தொகுதி’, ‘செ.வில்லியம் டெல்- குறளும் ஆன்மிகமும், ஆர். கீதா புத்தகாலயம் திருவள்ளூர் 2002’,கு.மோகனராசு- திருக்குறளின் குறிக்கோளியலும் உலகப் பொதுமையியலும், சென்னைப் பல்கழகம் 1983’, இன்நூலில் துணை செய்த நூல்கள் கட்டுரைகள் பட்டியலிடும் போது 1 முதல் 171 வரை தமிழ் நூல்களும் 172 முதல் 197 வரை ஆங்கில நூல்களையும் அட்டவணைப் படுத்தியுள்ளார். இதன் மூலம் எவ்வளவு புத்தகங்கள் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். ரா.பி.சேதுப்பிள்ளை- வழி வழி வள்ளுவர், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை பதினோராம் பதிப்பு 2009’, திருக்குறளுக்கான ஆய்வடங்கல் பல்வேறு புத்தகங்களோடு தொடர்ந்து இன்றும் செய்துகொண்டு இருக்கின்றனர்.

இதில் இலக்கிய வகைமையிலான தாக்கம் என்பது நாகரிகம் மொழி வளம் பெற்ற பின்னர் உருவான பெரும் கொண்ட கூட்டு சமூகம் அறிவு வளர்ச்சியின் தேடிப்பிடிக்கும் கூட்டு வாழ்வு முறையை இதில் சார்ந்ததாக அமைகிறது. திருக்குறளுக்கு பல்வேறு வகையான உரைகள் வெளிவந்துள்ளன பொழிப்புரை கட்டுரைகள், ஒருவரி உரைகள், விளக்கவுரைகள், கருத்துரைகள் என்பன பல்வேறு உரை அமைப்புகள் வெளிவந்துள்ளன.

மேலும், தமிழக அரசு திருக்குறளின் பெருமையை எல்லா இடங்களில் பரப்பிய நிலைபாடுகள் உண்டு. தமிழ் சமூக வெளியில் திருக்குறளின் தாக்கம் அளப்பரியது அளவில் இடம் பெற்றிருப்பதற்கு தமிழக அரசின் செயல்பாடுகளும் ஒன்றே.

1.மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு நூலில் கூறிப்பிட்டுள்ளார். ப.115
2.தொ.பரமசிவம், வழித்தடம்
3.பதி. தி.மகாலட்சுமி, திருக்குறள் ஓலைச் சுவடிகளில் ப.304
4.ப. 305
5.மனோன்மணியம்

முனைவர் மா.ச.இளங்கோமணி, உதவிப் பேராசிரியர், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை

Pin It