தொடர்புடைய படைப்புகள்

NEET PROTESTமரணங்களை ரசித்து வேடிக்கைப் பார்க்கும் சமூகமாக நாம் மாறி விட்டோம். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க அவ்வபோது சில மரணங்கள் தேவைப்படுகின்றது. அதுவும் வழக்கமான மரணங்கள் என்றால் அது நம் விழிகளில் இருந்து மூளைக்குள் தகவல் கடத்தப்படுவதற்கு முன் எண்ணங்களில் இருந்து காணாமல் போய் விடுகின்றது.

மரணங்களில் ஒரு மர்மமும், கிளுகிளுப்பும் இருந்தால் மட்டுமே அது சமூகத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றது, பேச வைக்கின்றது. அப்படிப்பட்ட சமூகத்தில்தான் தங்களுக்கான இடம் தகுதியின் பேரால் மறுக்கப்பட்டு “ஒன்று நீ உன் தகுதியை நிரூபி இல்லை என்றால் உன்னை தகுதியற்றவன் என ஒப்புக்கொண்டு இந்த உலகத்தில் உனக்கான இடத்தை நீயே தேடிக் கொள்” என விரட்டியடிக்கப்பட்ட இளம் குருத்துகள் தன்னுடைய திறமையின்மை எண்ணி குற்ற உணர்வடைந்து அதிலிருந்து விடுபட தற்கொலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

திறமையின் பேரால் தற்கொலை செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு இளம் குருத்துகளும் இறுதிமூச்சு அடங்கும் போது சுரணையற்ற வெட்கக்கேடான இந்தச் சமூக அமைப்பின் மீது நிச்சயம் காறி உமிழ்ந்துவிட்டுதான் சென்றிருப்பார்கள்.

ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால், பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி, ரிதுஸ்ரீ, மோனிஷா, வைஸ்யா என்று நீட் தேர்வுக்காக மோடி அரசு கொடுத்த பலிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போக நீட் தேர்வை தடுத்த நிறுத்த அதிகாரம் உள்ளவர்களும், தடுத்து நிறுத்தி வைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சிகளும் என்ன செய்தது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

இழவு விழுந்த வீட்டுக்கு கேமரா சகிதம் சென்று நிவாரணம் வழங்குவதும், செத்துப் போனவர்களின் குடும்பத்துடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்வதும், சுரணையற்ற ஜென்மங்களுக்கு கேவலமாகவே தெரிவதில்லை.

அவர்கள் எப்போது இழவு விழும் விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று கையில் பணத்தோடு சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். துரதிஷ்டவசமாக நாம் இதுபோன்றவர்கள்தான் நீட்டை தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதைவிட பெரிய கொடுமை நீட் என்னும் அநீதி ஒழித்துக் கட்டப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை நடிகர் சூர்யா நீட்டை எதிர்ப்பது சரியா தவறா என்று பிரச்சினை மடைமாற்றப்பட்டதுதான்.

உண்மையில் இந்தப் பிரச்சினை நடிகர் சூர்யா தொடர்புடையதா இல்லை லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையதா என்று பார்க்காமல் சூர்யா திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் என்ன வகையான அரசியல் நிலைப்பாடு? சூர்யா போன்றவர்கள் ஏதாவது சமூகத்துக்குச் செய்ய வேண்டும் என விரும்புகின்றார்கள்.

பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் பல கோடி சம்பளம் வாங்குகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் பலர் அதை வைத்துச் சமூகத்துக்கு எந்தவகையான உருப்படியான செயல்களையும் செய்வதில்லை.

ஆனால் சூர்யா போன்றவர்கள் ஏழை மாணவர்களை படிக்க வைப்பதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என நம்புகின்றார்கள். அதைத் தாண்டி வேறு எந்த வகையான சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவர் குரல் கொடுப்பதில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

தன்னை அரசியல் சாராத நபராகவே அவர் முன்னிறுத்திக் கொள்கின்றார். அவர் எந்த சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி தனது கருத்துக்களை வெளிப்படுத்தவுமில்லை. சூர்யா மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பல செல்வந்தர்கள் இது போல பள்ளிகளுக்கு நன்கொடை கொடுப்பதும், சில ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவவும் செய்துதான் வருகின்றார்கள்.

தமிழ்நாட்டில் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பல கல்லூரிகளின் வரலாற்றைக் கேட்டால் சாதி, மதம் கடந்து அது ஏழை மாணவர்கள் குறிப்பாக பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெற்றுவந்த சூழ்நிலையில் அனைத்துசாதி மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் கட்டப் பெற்றதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு சமூகம் உயர வேண்டும் என்றால் கல்வி நிச்சயம் முக்கியம். அதை யாரும் மறுப்பதிலை. இன்று தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக இருக்கின்றது என்று சொன்னால் அதற்கு பின்னால் அரசு மட்டுமல்ல பல சமூக அக்கறை உள்ள தனி நபர்களின் பங்களிப்பும் உள்ளது.

ஆனால் உண்மையில் தன் குடிமக்களுக்கு கல்வியை அதுவும் தரமான பொதுவான கல்வியைக் கொடுக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உள்ளது.

நம்மிடம் உதவி செய்யும் அளவுக்கு பண வசதி இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு என்பது அரசு அதை செய்ய வைக்க நாம் நிர்பந்திப்பதுதான். அரசு செவி கொடுத்து கேட்காமல் சில தனியார் கல்விக் கொள்ளையர்கள் லாபம் ஈட்ட உடந்தையாக இருந்தால் அதற்கு எதிராக மக்களை திரட்டி வெற்றி பெறும்வரை போராடுவதுதான் சரியான வழியாக இருக்கும்.

பணத்தைச் செலவு செய்து தர்மவான்கள் பட்டத்தை வேண்டுமானால் வாங்கலாம், ஆனால் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் நிரந்தரமானது.

சூர்யா போன்றவர்கள் எப்போதுமே தங்களின் செயல்பாடுகளுக்கு வரம்பிட்டுக் கொண்டுதான் பேசுவார்கள். அவர் கல்வி சார்ந்த பிரச்சினைகளைத் தவிர வேறு எதற்கும் குரல் கொடுக்க விரும்பவில்லை என்பதில் இருந்தே இதை அறிந்து கொள்ளலாம்.

அதனால் சூர்யாவை பிரச்சினையின் மையமாக்கி விவாதிப்பது தேவையற்றது. பிஜேபி சூர்யாவை எதிர்த்தால் நாம் நிச்சயம் சூர்யாவுக்காக குரல் கொடுப்போம். ஆனால் சூர்யாவை நீட் பிரச்சினையை தீர்த்து வைக்க வந்த நாயகனாக சித்தரிப்பது உள்ளபடியே நீட்டை எதிர்த்து இத்தனை ஆண்டுகளாக களத்தில் இறங்கி போராடியவர்களைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

தற்போது பிரச்சினை இதுவல்ல...

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என பல வகையான கல்வி முறைகள் நடைமுறையில் இருந்தாலும் அரசானது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே கேள்விகளைக் கேட்பதே பெரும் அநீதியாகும்.

இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மைக்கும் ஏற்றார் போல இருந்த பாடத்திட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு வலுக்கட்டாயமாக மாற வைக்கும் சதித்திட்டமே ஒளிந்திருக்கின்றது.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை நுழைத்தால் ஒருபக்கம் இந்தியையும் திணித்து விடலாம்; மற்றொரு பக்கம் பெரும் கார்ப்ரேட்களுக்கு இந்திய கல்விச் சந்தையையும் திறந்து விடலாம் என்பதுதான் நயவஞ்சகர்களின் கனவாகும்.

ஒரு பக்கம் நீட்டை எதிர்ப்போம் என்று தமிழ்நாடு அரசு சொல்லிக் கொண்டே நீட் பயிற்சி வகுப்புகளை நடத்துவதும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவாக 7.5 சதவீதம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதும் இவர்கள் நீட்டை ஒழிக்கும் லட்சணத்தைக் காட்டுகின்றது.

உண்மையில் இவர்களுக்கு ஏழை மாணவர்கள் மீதும் அரசுப் பள்ளிகள் மீதும் அக்கறை இருக்குமானால் நீட்டை ஒழித்துக் கட்டிவிட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

சமூகத்தின் கடைக்கோடியில் இருந்து போராடி மதிப்பெண் பெற்று மருத்துவக் கனவோடு வரும் ஏழைகளுக்காக கட்டப் பெற்றதுதான் அரசு மருத்துவக் கல்லூரிகள். சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்க அல்ல. அவர்களுக்கு வேண்டுமானால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ போய்க் கொள்ளட்டும்.

தமிழகத்தில் புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் தற்போது முளைத்திருக்கின்றன. ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 4 லட்சம் வரை பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இவ்வளவு செலவு செய்து ஒரு அன்றாடம்காய்ச்சியின் பிள்ளை படிக்க முடியுமா? நிச்சயம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும்.

எனவே இந்த அரசுக்கு உண்மையில் மாநில உரிமைகளின் மீது அக்கறை இருக்குமானல் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்களில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு போக மீதமிருக்கும் 2445 இடங்களிலும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1300 எம்பிபிஎஸ் இடங்களில் 783 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைத்தாலும் அதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.தனியார் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பயிலும் பணக்கார மாணவர்கள் வேண்டுமென்றால் அங்கு சென்று படித்துக் கொள்ளட்டும்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., எம்.எஸ் போன்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 1585 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் முடித்து, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு இந்த உயர் படிப்புகளில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு இருந்தது.

கிராமப்புறப் பகுதிகள், மலைக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவோருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்பட்டு முன்னுரிமையும் வழங்கப்பட்டு வந்தது.மேலும் முன்னுரிமையில் சேர்பவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றியாக வேண்டும் என்று ஒப்பந்தமும் இருந்தது ஆனால் தற்போது இந்த முறையை எடுத்து விட்டார்கள்.

நீட் தேர்வு மூலம் தான் இந்த இடங்களும் இனி நிரப்பப்படும். இதனால் எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனைக்கு வரவே தேவையில்லை என்ற நிலையை நீட் ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே பிரச்சினை சாதாரணமானதல்ல, கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிரோடு சம்மந்தப்பட்டது. நீட் என்பது பார்ப்பன பயங்கரவாதத்திற்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும் எதிராக சாமானிய மக்கள் நடத்தும் போராகும்.

தகுதி, திறமை என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக உண்டக்கட்டி வாங்கித் தின்றே பிழைத்த கூட்டத்தின் வெற்றுக்கூச்சல் என்பதைப் புரிந்து கொண்டு தனியார்மயம், தாராளமயம், பார்ப்பனியம் போன்றவற்றை எதிர்க்கும் கட்சிகளோடு, இயக்கங்களோடு இணைந்து போராடி இதை நாம் முறியடிக்க வேண்டும்.

- செ.கார்கி

Comments

17 comments

17
S.Periyasamy
அன்று நாமக்கல், சேலம், அரூர், திருச்சங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தமிழ்நாடு முழுவதும் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு +11. பாடமே நடத்தாமல் நேரடியாக +12. பாடத்திட்டம் நடத்தப்பட்டது இரவு பகல் என்னேரமும் அவர்கள் அதை மனப்பாடம் செய்தனர், பல மாணவர்கள் கொடுக்கப்பட்ட மன நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டனர். மனப்பாடத்தை தாண்டி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எல்லோரும் 1100.கு மேல் மதிப்பெண் பெற்று மருத்துவம் நுழைந்து ஆங்கிலம் தெரியாமல் அவதிப்பட்டனர், ஆனால் பள்ளிகள் பெயர் சிறந்த பள்ளி எவ்வளவு கேட்டாலும் கொடுக்க பெற்றோர் தயாராயினர். நீட் இவர்களுக்கு ஒரு சவுக்கடி கொடுத்தது. தகுதி இருப்பவன் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும், மனப்பாடம் செய்து 1190. மதிப்பெண் எடுத்தாலும் தகுதியில்லாதன் தான். மேலும் கல்லூரி நடத்துபவர்கள் பணம் பறிக்க முடியவில்லை. 900. மதிப்பெண் எடுத்தாலும் சில கோடிகள் பெற்றுக்கொண்டு மேனேஜ்மென்ட் கோட்டாவில் டாக்டர் ஆகி விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நீட் எதிர்ப்புக்கு காரணம் நம் கல்லுரியில் பணம் பெறமுடியவில்லை என்ற ஆத்திரம் தான் நீட்டுக்கு எதிராக மக்களை தூண்டுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் பாடம் நடத்தவேண்டும் என்று ஏன் எந்த தலைவரும் கேட்பது இல்லை. மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சியிலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பெரும்பாலானவை திமுக ஆட்சியிலும் ஆரம்பிக்கப்பட்டவை. நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசியல்வாதிகள் பொங்குவது இதன் காரணமாகத்தான்.
Rajan
Even merit is not the criterion for some entrance tests.The cut-off marks fixed for the so called EWS is less than that fixed for OBCs,SC,ST etc,Some say that private college promoters are affected.OK.We have seen the creation of new money minting institutions in the form of Coaching Centers.
Rajan
Read it as "some competitive exams"instead of "some entrance tests".The author cannot call it as "incompetency".How can we expect a student from state syllabus write answers questions framed in CBSE syllabus?
Rajan
As usual,Mr Periyasamy,without proof,alleges that more number of private medical colleges were opened during DMK regime.As per data collected by me,out of 20 private medical colleges,14 were opened during ADMK regime only.If necessary,I will furnish the list with dates of establishment.
S.Periyasamy
கல்வித்துறையில் ஏழை மக்களை முன்னேற்றுவதற்கு குறுக்கு வழி ஏதும் கிடையாது. நேர்வழி தான் உண்டு. அது கடினமானது. தமிழ்நாட்டில் 2006 வரை மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்களை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தியது. இந்த முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மிகச்சிறந்த மருத்துவர்களாக பொறியாளர்களாக உருவானார்கள். இந்தியாவில் ஒரு மாநில அரசு தயாரிக்கும் பாடத் திட்டம் மத்திய அரசின் பாடத் திட்டத்தை ஒட்டியே தயாரிக்கவேண்டும் என்பது சட்ட விதி... ஊழல் செய்வதற்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் கண்டதை செய்தால் கல்வி முறை குப்பையாக தான் ஆகும். இதில் மத்திய ஆட்சியாளர்களை குறை சொல்வதற்கு என்ன இருக்கிறது..அவர்கள் எதிர்பார்த்த பலவீனங்களை இவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்... தமிழ்நாடு பாடநூல் வாரியம் புரிந்து படிக்கும் படியான முழுமை தன்மை வாய்ந்த பாடப் புத்தகம் கூட இதுவரை தயாரித்தது இல்லை. அதற்கான முயற்சியை இப்போதுதான் எடுத்து எதையோ செய்திருக்கிறார்கள். தமிழக கல்வி முறை rote learning முறையிலிருந்து புரிந்து படிக்கும் முறைக்கு மாறினால் ஒழிய விமோசனம் கிடையாது.
Rajan
Which act says that state syllabus should be in tune with Centre's syllabus?Education was taken away from State List and still it is in Concurrent List only and not in Central List. NEP should be introduced only after consulting the States. Samacheer Kalvi is OK for Tamilnadu. After 2006,Entrance Tests were abolished and students were admitted on the basis of marks obtained in 12 th std till 2016..Renowned doctors belonging to TN all over the world never wrote NEET exam.
S.Periyasamy
தமிழகத்தில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 58% கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட வை. கருணாநிதி ஆட்சியில் 14 மருத்துவக் கல்லூரிகளும் ய ஜெயலலிதா ஆட்சியில் 5-ம் எடப்பாடி ஆட்சியில் இரண்டும் எம்ஜிஆர் ஆட்சியில் இரண்டும் தொடங்கப்பட்டன. இத்தனைக்கும் அதிமுகவை விட திமுக குறைந்த காலமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை திமுக கட்சிக்கு ஒழுக்கமானவர்கள் நடத்துகிறார்கள். திமுகவினர் எப்போதுமே தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை தான் விரும்பி ஆதரித்து வந்திருக்கிறார்கள். இப்போது எடப்பாடி இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும் மத்திய அரசிடமிருந்து 11 அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க அனுமதியும் நிதியும் வாங்கி இருக்கிறார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வந்திருக்கிறார். திமுக ஆட்சியாக இருந்திருந்தால் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார்கள். மாநில ஆட்சியாளர் என்கிற முறையில் அதிமுகவினர் இந்த விடயத்தில் பாராட்டுக்குரியவர்கள்.
Rajan
List of Private Medical Colleges
SNo Name of the College Year under which regime
1 Sri Ramachandra 1985 ADMK
2 Tagore Medical 2013 ADMK
3 Annapoorana 2016 ADMK
4 Meenakshi 2004 ADMK
5 Chettinadu 2012 ADMK
6 Saveetha 2005 ADMK
7 Karpagam 2012 ADMK
8 Vinayaka Mission 1981 ADMK
9 P.S.G Institute 1985 ADMK
10 Velammaal 2013 ADMK
11 Melmaruvathur 1986 ADMK
12 Ponnaiah Ramajayam2016 ADMK
13 Annaji,Pennalur 2016 ADMK
14 Raja Muthaiah 1985 ADMK

1 Sri Muthukumaran 2009 DMK
2 ACS 2008 DMK
3 Dhanalakshmi 2011 DMK
4 Sri Sathya Sai 2008 DMK
5 Sri Mookambika 2006 DMK
6 Karpaga Vinayaga 2009 DMK
Rajan
Kalaignar Karunanidhi brought about internal reservation for Arunthathiyar community which is the most downtrodden community among the SC within the quota reserved for SC on 29-4-2009.During the past 11 years,thousands and thousands of Arunthathiyar students became doctors and engineers.If only DMK is in power,it would have granted 10% reservation for Govt school students,as recommended by Justice P.Kalalaiyarasan's report.
S.Periyasamy
திரு ராஜன் கொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளின் பட்டியலை பார்க்கும்போது இவர் ஒரு பிராடு என தெரிகிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் தாகூர் மருத்துவ கல்லூரி 2009ஆம் ஆண்டு அனுமதி பெற்றது. செட்டிநாடு மருத்துவ கல்லூரி அனுமதி பெற்ற ஆண்டு 2006. சவீதா மருத்துவக் கல்லூரி 2008. மேற்கண்ட தகவல்கள் அந்த கல்லூரிகளின் வலை தளத்திலும் மற்ற தளங்களிலும் உள்ளன. வேண்டுமானால் தேடி பார்த்துக் கொள்ளலாம். பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லூரிகள் திமுக ஆட்சியில் தான் அனுமதி பெற்று தொடங்கப்பட்டன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கல்விக் கொள்கை வகுப்பது மத்திய அரசுதான். மாநிலங்களுக்கு கல்விக் கொள்கை வகுக்கும் அதிகாரம் கிடையாது. மத்திய அரசின் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே மாநிலங்கள் தங்களுடைய கல்விமுறையை வடிவமைக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் NCERT அமைப்பும் தெளிவாக வலியுறுத்தியுள்ளன. இந்த சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது குறித்த சர்ச்சையை அடக்க இந்தத் திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தான் அடிப்படையாக கொண்டிருக்கிறது என அப்போதைய திமுக அரசு சப்பைக்கட்டு கட்டியது. தமிழ்நாட்டில் அருந்ததியரை விட பின்னடைந்து இருக்கும் இருளர்கள் முதலியோருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் அருந்ததியருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியது வெறும் ஓட்டு அரசியல் மட்டுமே. பின்னடைந்த மக்களின் மீதான உண்மையான கரிசனத்தின் பால் அல்ல. மத்திய அரசிடம் இருந்தும் வெளியிலிருந்தும் இந்த மாநில மக்களுக்கு எதுவும் கொண்டு வராமல் இங்கே இங்கே இருக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பிடுங்கி கொடுப்பதை சாதனையாக சொல்லமுடியாது. தமிழ்நாட்டில் கல்வியின் பெயரால் திராவிட கட்சிகள் நடத்தும் ஊழல்கள் மற்றும் ஓட்டு அரசியலை பார்க்கும்போது கல்வி பொதுப் பட்டியலுக்கு போனது நல்லதே என தோன்றுகிறது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு உண்மையிலேயே பிரச்சனையாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலத்தின் ஆளும் கம்யூனிஸ்டுகள் நிச்சயம் பிரச்சனை செய்திருப்பார்கள். இன்னும் பல மாநிலங்களும் அதை ஏழைகளுக்கு எதிரானது என குரல் கொடுத்திருப்பார்கள். யாரும் அப்படி செய்யவில்லை என்பதிலிருந்து தமிழ்நாட்டில் இருப்பவர்களிடம் குறிப்பாக அரசியல் கட்சிகளிடம் தான் பிரச்சனை என்பது தெரிகிறது. இப்போதைய நிலையில் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்காத அதுவும் நோட்டாவோடு போட்டி போடக்கூடிய பாஜக மத்தியில் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை செய்வதற்கு தடையேதும் இல்லை. தமிழ்நாட்டை ஒரு பொருட்டாக கருத வேண்டியது இல்லை. ஆகவே மாநில அரசு என்னும் லோக்கல் நிர்வாகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு மேல் இருக்கக் கூடிய பாஜக ஆளும் மத்திய அரசை பகைத்துக்கொள்ள முடியாது. பகைத்துக் கொண்டால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை. திமுகவுக்கும் தமிழ் நாட்டுக்கும் தான் மேலும் இழப்பு. ஆகவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வு ரத்து ஆவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லவே இல்லை. தேவையில்லாமல் இந்த மாதிரி அழுகுனி புளுகுனி கட்டுரைகளை எழுத வேண்டாம். பொய் தகவல்களுடன் பின்னூட்டம் இட வேண்டாம்.
Rajan
This is the story of a doctor who passed NEET and completed MBBS course in 2017.He got admitted in a private college in the neighboring Union Territory for a PG course.Paid an exorbitant amount (running into 70 lakhs)as fees so far. He has completed the course this year.The college reportedly demanded like sum for releasing PG certificate.It had not fixed fees for PG courses in spite of repeated court orders for release of PG certificate and appointing a "Fees Committee"in consultation with MHRD,Delhi.The doctor passed as the First student in the entrance test conducted by JIPMER for joining as research student. JIPMER was ordered by the court to admit the student without the PG degree certificate.The private college has not yet complied with court order directing it to release the PG certificate by getting an indemnity to pay the fees fixed by the "Fees Committee"
The party affiliation of the college is not known.
S.Periyasamy
நான் வெளியிட்ட பின்னூட்டத்தை வெளியிடவே இல்லை இந்த தளத்தில் என்ன கருத்து சுதந்திரத்தை பராமரித்து கிழிக்கிறார்களோ. இந்த லட்சணத்தில் பாஜகவை குறை சொல்கிறார்கள்.
S.Periyasamy
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ முதுநிலைப் படிப்பில் இருக்கும் மொத்த இடங்களில் 50% மாநில அரசு கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில். அப்படி இல்லை. இங்கே இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பில் இருக்கும் மொத்த இடங்கள் நிர்வாக கோட்டாவில் தான் வருகின்றன. அத்தனை இடங்களையும் மார்க்கெட் ரேட்டுக்கு ஏற்றவாறு விற்பனை செய்து காசு பார்த்துக்கொள்ளலாம். மாநில அரசு கோட்டா என்பதே கிடையாது.. இதுதான் தமிழ்நாட்டில் திராவிடக் கும்பல்கள் சமூகநீதியை பராமரிக்கிற லட்சணம். கல்வித்துறையில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல். காசு இருப்பவனுக்கு தான் தரமான கல்வி. இல்லாத உனக்கு அரசு பள்ளியில் சமச்சீர் கல்வி என்னும் குப்பை. இதிலே ஆர்எஸ்எஸ் அமைப்பையும் பாஜகவையும் குறை சொல்ல என்ன இருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வித்துறையில் திராவிடக் கும்பல்கள் தங்களுடைய ஊழலுக்காக ஓட்டு அரசியலுக்காக ஏற்படுத்தியிருக்கும் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் எதுவுமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை என்பதிலிருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்.
Rajan
I am a Priyarist .Periyar never criticized Puranas and Epics without giving a deep reading.As his follower,I used to take care of verifying the authenticity of any data provided by me.Of course,there was some mix-up in the starting dates of Tagore Medical College and Chettinad Medical College.But,in the case of Saveetha,the following is stated in its website."Saveetha Dental College was started in the year 1988 and in "2005",it was established as a deemed university and renamed as Saveetha Institute of Medical & Technical Sciences".The additional proof for the starting year 2005 is the fact that its 15th Convocation was held on 24-8-2020.Our all-knowing friend could actually pick only two colleges from the list containing 14 colleges.Does he accept the existence of 12 colleges in the list?Because of his incapacity(KAIYAALAAGATHATHANAM) to give proof for his line of argument, out of sheer FRUSTRATION,he is calling me names.Our great slave tries to justify the unjustified actions of the center and I am talking about the counter action expected of the state govt.
S.Periyasamy
Mr Rajan gave wrong information regarding colleges and is not repenting for it. Instead he is telling I am frustrated. I checked the details of some two three colleges and found things contrary to what Mr Rajan said. This shows that he is a fraud like these Dravidian poloticians. These politicians of DMK and ADMK a weakened the education standard in Tamilnadu and now BJP is exploiting that. Weakness This is my point..
Rajan
50% PG Medical seats are to be shared with state govt by private medical colleges including deemed universities as per Section 9(2)/9(vi)of IMC Act,2000.Only minority institutions are exempted.This rule was not implemented by the state govt in TN.In its judgement dated 2-5-2017,the High Court of Madras imposed an exemplary penalty on the state govt as well as on the MCI for non-implementation of seat sharing and ordered them to follow seat sharing.As long as DMK govt was in power,the regulations were followed.
Rajan
"AATHIRAKKARAUKKU PUTHI MATTU" "KUPPURA VEEZHNTHAALUM MEESAYIL MAN OTTAVILLAI,Well done,Mr Periyasamy. You are a good disciple of Goebels.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.