இரு தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம்.

Dubai Desertதம்பியின் கதை கேட்டு மனதே கனத்தது. என்ன செய்வது ஒரு பக்கம் சாப்ட்வேர் (software) மூலம் நம் இளைஞர்கள் பணத்தில் மிதப்பதும் ஞாபகம் வந்தது.

தம்பி பத்தாவது வரை படித்துள்ளார்... வெளிநாட்டு மோகத்தினால் மட்டும் இல்லாமல் தன் குடும்ப நிலையை மாற்றவும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டுக்கு கொடுத்துவிட்டு விமானம் ஏறியுள்ளார்.

இறங்கியபின்பு தான் தெரிந்தது, அது ஒட்டக கூடாரம் என்று. துபாய் நகரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அரவம் இன்றி இருந்ததாம். வேலை புல் தோட்டத்தில் புல் அறுத்து ஒட்டகத்துக்கு இடுவது.

தன் ஊரில் வீட்டில் உள்ள மாட்டுக்குக் கூட ஒரு வேளை புல் போடாதவன். புது வாழ்க்கை புல்லே ஆனது கொடுமையாய் இருந்தது. ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்துக் கொண்டு காசுக்காக பணி செய்தபோது அரபி உரிமையாளர் சம்பளமே கொடுக்காத போது தான் புரிந்ததாம், அரபி நேர்மையான ஆள் அல்ல என்று.

மூன்று அல்லது நான்கு சம்பளமே இல்லையாம். பின்பு ஒரு மாதம் சம்பளம் கிடைத்ததாம். இப்படி ஒரு வருடம் தண்டனையைக் கழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி துபாய் நகருக்கு சென்றிருக்கிறார்.

அங்கே வேறு ஒரு தமிழ் நண்பரின் உதவியுடன் ஒரு கார் ஒர்க்ஷாப்-பில் சேர்ந்திருக்கிறார். இது முறை தவறிய (illegal) பணி தான். என்ன செய்வது... குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், முக்கியமாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். வெளியே தலையே காட்டாமல் இரு வருடங்கள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார்.

இதனிடையே அரசு, விசிட் விசாவில் வந்து திரும்பாதவர்களுக்கும், வேறு வேலைக்குத் தப்பி ஓடியவர்களுக்கும் கருணை அடிப்படையில் தங்கள் நாடு திரும்பலாம் என அறிவித்தது. அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது. விமான டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்களுக்கு இந்திய சேவை அமைப்புகள் உதவி செய்தன.

தம்பி இதை அறிந்து இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகள் இவர் கதையை கேட்டு உதவி செய்வதாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்றனர். புல் தோட்டத்து முதலாளி அரபியிடம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்டதால், சிரமப்பட்டு அரசின் ஆதரவினால் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார்.

கடைசியாக, இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டேன். பதிலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்தது.

''தடைக்காலம் (Ban period) முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து மீண்டும் துபாய் செல்வேன்.'' 

- கடலூர் முகு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.