தொடர்புடைய படைப்புகள்

மோடியின் ஆட்சியில் விவசாயிகள் உயிர் வாழ்வதே பெரிது என்றளவுக்குத் தான் அவர்களின் வாழ்க்கை முறை இருந்துள்ளது.

modi 272விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது 2014ஐ கணக்கிடும் போது 2016ல் 42% அதிகரித்துள்ளது. 2014 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5650. 2016ம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 8007 ஆக உயர்ந்துள்ளது.

இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய போது பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராதா மோஹன் சிங் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் "காதல் விவகாரம் மற்றும் கையாலாகத்தனம்" என்றார். ஹரியானவைச் சார்ந்த பாஜகவின் விவசாயத்துறை அமைச்சர் இவர்களை "கோழைகள்" என்றார். இவர்கள் தான் விவசாயத்தை மதிப்பவர்கள் என நாம் நம்புவோம்.

ஏப்ரல் 25, 2014ல் பிரதம மந்திரி வேட்பாளாராக மக்களைப் பார்த்து இப்படிப் பேசினார் மோடி. "நான் ஆட்சிக்கு வரும் போது அறுவடை செய்யும் பொருள்களுக்கு இப்போதுள்ளதை விட 50% லாபம் அதிகமாக்கப்படும். MSPயின் அளவும் 50% அளவுக்கு உயர்த்தப்படும்" என்றார்.

2011-2013ல் காங்கிரஸ் ஆட்சியில் அரிசிக்கான MSP = 9.5%

2015-2016ல் பாஜகவின் ஆட்சியில் அரிசிக்கான MSP = 3.9%

அதே போல்,

2011-2013ல் காங்கிரஸ் ஆட்சியில் கோதுமைக்கான MSP = 7%

2015-2016ல் பாஜக ஆட்சியில் கோதுமைக்கான MSP = 4.1%

இப்படித்தான் விவசாயத்தைப் பொருத்தளவு இந்த மூன்றாண்டுகளில் இந்தியா பெரும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது. இதை விவாதிக்கும் காலத்தில் இறைச்சிக்கான தடையைக் கொண்டு வந்து பாஜக இப்பிரச்சனையின் போக்கை திசை திருப்பியிருக்கிறது.

வளர்ச்சியைப் பேசி ஆட்சிக்கு வந்த மோடி வளர்ச்சியைத் தவிர தன் மக்களை அழித்தொழிக்கும் வேலைகளைத் தான் சிறப்பாக செய்கிறாரே ஒழிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் முன்னேறா விட்டாலும் கூட பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்.

MSP என்றால் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக...

MSP (Minimum support Price) என்பது 1970களில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுடன் 1975-76 களிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு ஓர் உறுதியை அளித்து விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாக இது இருக்கிறது. எவ்வளவு MSP உயர்கிறதோ அந்தளவுக்கு இது விவசாயிகளுக்குப் பலன் தரக் கூடியது.

உதாரணத்திற்கு நான் நெல் விளைவிக்கிறேன் என்றால், ஒரு நெல் மூட்டின் சராசரி விலை 200 ருபாய். ஆனால் மார்கெட்டைப் பொருத்தவரை வெறும் 150ரூபாய்க்குத் தான் செல்கிறது என்றால் அரசின் சார்பில் உறுதித் தொகையாக லாபத்துடன் கூடிய விலையாக விவசாயிகளுக்கு 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு விடும். நெல் மார்க்கெட்டிற்கு செல்லாமல் நேரடியாக அரசாங்கத்திடம் சென்று பணம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். இதனால் மார்கெட் நிலவரம் வீழ்ச்சியடையும் போதும் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.

நெல், கோதுமை போன்ற 26 பொருட்களுக்கு இந்திய அரசானது MSPயை நிர்ணயிக்கிறது.

- அபூ சித்திக்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.