தமிழர்கள் தங்களின் பண்பாடாக போற்றியது, அவர்களின் பொருள் செறிந்த (meaningful) வாழ்வை மட்டும்தான். பொருளற்ற சொற்களைக் கூட தமிழ் தன்னகத்தே வைத்திருக்காது. அறம் சார்ந்த தனது வாழ்வின் மூலம் உலகத்துக்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம் தமிழ் இனம்.
"அரிச்சந்திரா" நாடகம் மூலம் அர்த்தமற்ற சத்தியம் பரப்பப்பட்ட காலத்திற்கும் முன்பாகவே"பொய்மையும் வாய்மை.... நன்மை பயக்கும் எனின்" என்று அறம் போற்றிய "குறள்" கூறிய இனம் தமிழினம்.
புத்தருக்கு முன்பே காளையனையும் (ஆதிதீர்த்தங்கரர்), கபிலரையும் (ஆசீவக தத்துவ ஞானி) தந்த தத்துவ பூமி தமிழகம்.
தன்னை சிலுவையில் அரைந்த மக்களைப் பார்த்து பரிதாபப்பட்ட இயேசுநாதருக்கு முன்பே "இன்னா செய்தாருக்கும் இனியவே" செய்யும் சான்றாண்மை பகன்ற நாடு தமிழ்நாடு.
ஆனால் வெற்றுச் சடங்குகளை தமிழர்களின் பண்பாடாக மாற்ற முற்படும் நிகழ்கால நிகழ்வுகள் வேதனையளிக்கிறது.
ஏறு தழுவுதல் தமிழர்கள் கொண்டாடிய விளையாட்டாக இருந்திருக்கிறது. இவ்விளையாட்டின் மூலம் வீரத்தை கொப்பளித்திருக்கிறார்கள் தமிழர்கள். இவ்விளையாட்டைக் குறித்த செய்திகளை, சுவடுகளை சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சங்க இலக்கியங்களின் பாடல்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இந்த ஏறு தழுவுதல் விளையாட்டு மூலம் வீரர்களின் வீரம் வெளியுலகுக்கு வெளிப்பட்டது. வீரர்களின் வீரம் ஒரு நாட்டின் வளம். தனது வளத்தை பறைசாற்றவே இவ்விளையாட்டுக்கள் பயன்பட்டிருக்கக்கூடும்.
ஆனால் இன்று காளைகளை அடக்கிவிடுவதால் மட்டுமே நம் நாட்டின் வீரத்தை (வீரத்தின் வளத்தை) வெளிநாட்டுக்குப் பறைசாற்றிவிட முடியாது.
காளைகளை அடக்கும் காளையர்களைக் கண்டு பயந்து பக்கத்து மாநிலங்கள் தங்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த, கிருஷ்ணா - காவிரி நீர் குறித்த, நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிடாது. நம்மையும் சேர்ந்து ஆண்டு கொண்டிருக்கும் நடுவண் அரசு இவ்விளையாட்டில் வீரம் காட்டிய வீரர்களைப் பார்த்து பயந்துபோய் இலங்கைத் தீவை தீமையிழைத்த நாடு என்று கூறி விடாது. கட்சத்தீவு தமிழகத்தின் சொத்து என்று கூறிட முன்வராது. மேற்கண்ட தமிழகத்தின் சிக்கல்களுக்கெல்லாம் இவ்வீரவிளையாட்டின் மூலம் வெளிப்படும் வீரம் தீர்வாக அமைந்துவிடப் போவதில்லை.
தமது நாட்டின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உருவான இவ்விளையாட்டுக்கான பொருள் இப்போது தேவையற்றதாகிவிட்டது.
உயிரை பறிக்கும் இவ்விளையாட்டு இன்றும் தேவை என்று கூறுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்.
உயிர் வதை கூடாது என்று உலகத்துக்கே உரக்கக் கூவிய தமிழ்நாட்டில், உயிர் வதைக்கும் ஜல்லிக்கட்டு விடையாட்டு எப்படி தமிழ்ப் பண்பாடாக இருக்க முடியும்.
உயிர்(பசு) வதை கூடாது என்பதையே - பசு(மாடு) வதை கூடாது என்ற பொருளில் புரிந்து கொண்டு இன்று பிறத்தற்கரிய மானுட இனத்தையே அழிக்க நினைக்கும் நிலையும் - ஏறு தழுவுதல் என்னும் வீர விளையாட்டை, அதற்கான தேவைகளற்ற இக்காலத்தில் ஆதரிப்பதும் ஒன்றுதான். (பசு என்ற சொல்லுக்கு உயிர் என்ற பொருள்- பதி, பசு, பாசம் என்ற பதத்தில் பசு என்றால் உயிர்)
நம்மில் பழக்கப்பட்ட ஒன்றை பண்பாடாகப் பார்த்தால்... சாதியும், மதவெறியும், அர்த்மற்ற மூடச் சடங்குகளும், பெண்ணடிமைத்தனமும், ஆண்டான் அடிமைப் பழக்கமும் கூட இன்று பண்பாடாகிப்போகும் விபரீதம் நிகழ்ந்துவிடும்.
உயிர் பழி மட்டுமல்லாமல் சாதிக் கலவரங்களுக்கும், வர்க்க முரண்பாடுகளுக்கும் கூட இன்று இந்த வீர விளையாட்டு வழி ஏற்படுத்தித் தருகிறது.
விளைவுகளைப் பார்த்தேனும் உங்களின் விளையாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆம் இந்த வீர வீளையாட்டையும் நிறுத்திக்கொள்ளுங்கள்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர், பேராவூரணி
Yes true don't need jallikattu.
People are suffering from accidents.
Bufflow already kept quit with you.
People are suffering from accidents.
Bufflow already kept quit with you.