பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில், தமிழின உணர்வாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் உளவுத்துறையின் துணையோடு, சென்னை மாநகர இணை ஆணையர் தலைமையில், தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படுவதாக இன்று இந்து நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.   

சமூக வலைத்தளங்களில் செயல்படுகின்ற தமிழக இளைஞர்கள், அதில் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதுடன், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசு இழைத்தக் குற்றங்களை மற்றவர்களுக்கு தெரிய வைக்கும் வகையில் பரப்புரையும் மேற்கொள்கின்றனர்.

 பெரும் ஊடகங்கள் இன்றைக்கு அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், இது போன்ற சமூக வலைத்தளங்கள்தான் மக்களின் உண்மையான கருத்துகளை பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்கிவருகின்றது. இதனால் தான், உலகெங்கும் வெவ்வேறு சிக்கல்களில் போராடுகின்ற மக்கள், இயல்பாக சமூக வலைத்தளங்களில் தங்கள் போராட்டங்களின் ஞாயம் குறித்து பரப்புரை செய்து வருகின்றனர். 

தமிழ்நாட்டு மாணவர்கள், இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசு மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும், தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், தமிழீழ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்து வெளியில் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இது இந்திய அரசமைப்புச் சட்ட விதி வழங்கியுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை அடிப்படையிலான உரிமையாகும்.

இந்நிலையில், தமிழகக் காவல்துறையின் இவ்வறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் இயங்கும் மாணவர்களையும், தமிழின உணர்வாளர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கலையும், மனித உரிமை இயக்கங்களையும் ஒடுக்குவதற்காக விடுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கின்ற சர்வாதிகாரச் செயலுமாகும். இத் தாக்குதலில் தமிழின உணர்வு அரசியலை நோக்கி கூர்மைப்பட்டு உள்ளதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒருபுறம், சட்டப்பேரவையில் தமிழீழத்திற்கான பல தீர்மானங்களை இயற்றுகின்ற அ.தி.மு.க. அரசு, இன்னொருபுறம் போராடும் மக்களை கண்காணிக்கும் நயவஞ்சக செயலிலும் ஈடுப்படுகிறது. தமீழீழம் தொடர்பான போராட்டங்களையும் வெளிப்பாடுகளையும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள  செயலலிதா அரசு விரும்புகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

எனவே கருத்துரிமையைப் பறிக்கின்ற தமிழினப்பகை நடவடிக்கையை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் உடனடியாக கவனம் செலுத்தி, அரசின் இம்முடிவுக்கு எதிராக கரம் கோத்துப் போராடவும் அழைப்பு விடுக்கிறோம். 

-          கி.வெங்கட்ராமன்,பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Pin It