பெருமளவு விற்பனையாகும் முன்னணி  தமிழ் நாளிதழ்களில், அஜ்மல் கசாப்பிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்கு தண்டணை குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்தால், தமிழ் நாளிதழ்கள் கட்டமைக்கும் சமூகம், நாகரீகச் சூழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்ற அச்சம் மேலிடுகின்றது.

இச்செய்தியை காய்தல் உவத்தல் இன்றி, மிகச் சரியாக அறிக்கையிட்டது பிபிசி தமிழோசை மட்டுமே:

 "மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை 7.30 மணிக்கு புனே நகரில் உள்ள எரவாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.....".  இந்தச் செய்தியில்  தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ அடைமொழியிட்டு செய்தி அறிக்கையிடப் படவில்லை.

தமிழ் முன்னணி நாளிதழ்கள் இச்செய்தியை அறிக்கையிட்டுள்ள விதத்தைக் கவனிப்போம்:

அஜ்மல் கசாப்பை "பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதியான அஜ்மல் கசாப்"  என்று குறிப்பிட்டது தினமணி.

"உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்" என்று தினகரன் வர்ணித்திருந்தது.  தினத்தந்தியோ, "மும்பை தாக்குதல் தீவிரவாதி", என்று குறிப்பிட்டிருந்தது.

"ஈவு இரக்கமின்றி 166 பேரைக் கொன்று குவித்த பாகிஸ்தானின் லஸ்கர் -இ-தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்" என்று நீண்ட அடைமொழியுடன் கசாப்பைக் குறிப்பிட்டது தினமலர்.

முன்னணித் தமிழ் நாளிதழ்கள் குறைந்தது மூன்று பக்கங்களிலாவது இந்தச் செய்தி தொடர்பான படங்கள், கிராபிக்ஸ், துணுக்குகள் என்று இந்தச் செய்தியை விரிவாகக் கொண்டாடியுள்ளன.    இந்த 4 நாளிதழ்களுமே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட பூனா நகரில் செய்தியாளரைக் கொண்டிருக்கவில்லை. இவை நான்குமே,  பிடிஐ அல்லது யுஎன்ஐ என்ற இரு செய்தி நிறுவனங்கள் தரும் செய்தியை மொழி பெயர்த்தே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.

தி இந்து நாளிதழ்  தனது முதல் பக்கத்தில் அரைபக்கத்திற்கும் மேல் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் எங்குமே தீவிரவாதி என்ற சொல்லையோ, பயங்கரவாதி என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை.

உலகில் 110 நாடுகள் மரண தண்டணையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று ஐ நா மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியா இந்த மரண தண்டணையை நிறைவேற்றியுள்ளது. தமிழ்ச் சமூகம் இதனைக் கொண்டாடிக் கொண்டுமிருக்கின்றது.

தமிழ்ப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக அஜ்மல் கசாப்பின் தூக்கினை விவரித்துக் கொண்டாடும் அதே வேளையில்,  நாகரீக சமூகங்கள் மரண தண்டணையை ஏன் ஒழிக்க விரும்புகின்றன என்பது பற்றிய விவாதத்தைத் தமிழ் மக்களிடம் தொடங்கி வைத்திருக்கும் அரிய வாய்ப்பினைத் தவற விட்டிருக்கின்றன.

தூக்கு தண்டணை நிறைவேற்றப்படக்  காரணமாக அமைந்த மும்பைத் தாக்குதலை கசாப் திட்டமிட்டவரல்ல என்பது உலகறிந்த விஷயம்.  அதனால் தான், அவரை துப்பாக்கிதாரி என்ற அடைமொழியுடன் நிறுத்திக் கொண்டுள்ளது பிபிசி தமிழோசை.  "அவரைத் தூக்கில் போடாமல் இருந்திருந்தால், இந்தச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் பற்றி அவர் இன்னும்  விரிவாகச் செல்லியிருக்கலாம் என்பதையும்", ஒரு ஆங்கில நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

2000 பேருக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்த இன மோதல்களைத் திட்டமிட்டவர்களும், செயல்படுத்தியவர்களும் குற்றவாளிகளாகவோ, தீவிரவாதிகளாகவோ, பயங்கரவாதிகளாகவோ கருதப் படவில்லை என்பதையும் ஒரு விவாத்ததில் ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி, நாகரீக சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து, பக்குவப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளன.

Comments

9 comments

9
P ILANGO SUBRAMANIAN
முன்னணித் தமிழ் நாளிதழ்களின் நாகரிகமற்ற(!!!)
செய்கையை கட்டுரையாளருடன் சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன். கசாபுக்கு பொருத்தமான அடைமொழியாக, அஹிம்சாவாதி, காருண்ய கசாப் ஆகியவற்றைப் பரிந்து உரைக்கிறேன். கட்டுரையாளர் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொட வேண்டும்? கசாபுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி இயக்கம் நடத்தலாமே! கசாப்பின் மிருக வெறிக்குப் பலியான 166 உயிர்களும் கட்டுரையாளருக்கு மயிருக்குச் சமம் போலும்! இணைய தளத்துடன் நின்று விடாமல், கட்டுரையாளர் தெருவில் இறங்கி மக்களிடம் சென்று தம் கருத்தைப் பரப்பட்டும்! அதுதான் நேர்மை!
மனோகரன்
இந்திய ஏகாதிபத்தியத்தின் மற்றுமொரு காட்டுமிராண்டித்தனம். மரண தண்டனைக்கு எதிராக அனைவரும் வலுவாக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
inian
பதிவு ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், இன்னும் சற்று ஆழமாக இறங்கி ஆய்வு செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.
இந்த தாக்குதல் , தீவிரவாதத் தடுப்புப்படைத்தலைவரும் தீவிரவாதம் என்பது முகமதியர்களிடம் மட்டுமல்ல இந்துஅடிப்படைவாதிகளிடமும் இருக்கிறது என்று சொல்லி, இந்து சாமியாரிணி பிரக்யா சிங், போன்ற மற்றும் பலரை காராக்கிருகத்தில் உறங்கவைத்த, இந்து தீவிரவாதிகளுக்கு ராணுவமேஜர் வரை தொடர்பு உள்ளது என்று வழக்கு தொடுத்த( ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து ராணுவத்தில் மட்டுமே பயன்படுகிறது அது பள்ளிவாசல் வாயிலுக்கு எப்படிவந்தது என்று கேள்வி எழுப்பவைத்த ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்ட விதமும் சந்தேகத்தை எழுப்பவல்லது என குறைந்த அளவே ஆராய்ச்சி செய்யும் யாருக்கும் இந்த 166 பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்க முடியும் என்றும் என்ன காரணத்திற்காக திறந்த வீட்டில் நாய் நுழைகிற அளவுக்கு அந்நிய நாட்டில் நுழைகின்ற பதற்றமே இல்லாமல் நுழைய வைத்த காவலினைமைக்குக் காரணம் யார் என் விநா எழுப்பியுள்ளார் முநநாள் காவல்துறை அதிகாரி ஒருவர். படியுங்கள் கர்க்காரேவைக் கொன்றது யார்? என்ற மும்பை தாக்குதல் மட்டுமன்றி கவனத்தை ஈர்த்த அனைத்து தீவிரவாதச்செயல்களையும் ஆய்ந்திருக்கிறார் . இது ஒரு அரசு செய்த கொலை என பெரும்பாலோர் கணிக்கின்றனர்.
venthan
உயிர் என்பது குண்டு வெடிபிலும் போகும்

துக்கிலிட்டாலும் போகும்

இந்திய ஏகாதிபத்தியத்தின் மற்றுமொரு காட்டுமிராண்டித்தனம். மரண தண்டனைக்கு எதிராக அனைவரும் வலுவாக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
Natarajan
1948 ல் மகாத்மா காந்தி கொல்லப் பட்டவுடன் இனிப்பு வழங்கி கொண்டா டியவர்கள் நம் நாட்டில் இருந்தனர். ஒரு உயிர் பிரிந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடுவது கீழ்த் தரமானது. கசாப் தான் செய்த குற்றதுக்கு தண்டனை சட்டப் படி கொடுக்கப் பட்டுள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருவர் இறப்பை இனிப்பு வழங்கி கொண்டாடுவது சிறப்பல்ல.
ச.சீ.இரா
எவரது மரணமும் துக்ககரமானது. அவர் வளரும் பருவத்தினராய் இருந்தால் மிக, மிகக் கொடியது. ஒருவர் சாவு எந்த தீர்வையும் கொண்டுவராது. இஸ்லாமியர் நான்காந்தர மக்களாக நடத்தப்படுகின்றார்கள் என்பது கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்றவை வெளிப்படுத்துகின்றன. இந்த நிலைக்குக் காரணமானவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கைக் கொண்டாடுபவர்கள் மனிதர்களல்ல.
ஷாலி
// இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்த இன மோதல்களை திட்ட மிட்டவர்களும்,செயல் படுத்தியவர்களும் குற்றவாளிகளாகவோ,தீவிரவாதிகளாகவோ பயங்கரவாதிகளாவோ,கருதப்படவில்லை. என்பதையும் ஒரு விவாதத்தில் ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி,நாகரிக சமூகம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து,பக்குவப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு,உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத்தாமே தரம் தாழ்த்தி கொண்டுள்ளன.//
தமிழ் நாளிதழ்கள் தாமும் தரம் தாழ்ந்து, படிக்கும் வாசகன் அறிவையும் மழுங்கடித்து அவனை வெறும் உணர்ச்சிப் பிண்டமாக வார்த்தெடுப்பதில் வெற்றிபெற்று விட்டன,என்பது முதல் பின்னூட்டத்திலேயே தெரிந்துவிட்டது.அவர்கள் இலக்கை அடைந்து விட்டார்கள். “தி இந்து” திருந்தினாலும் தமிழ் காகித வியாபாரிகள் திருந்தமாட்டார்கள்.அநியாயமாக கொல்லப்படும் அப்பாவி மனித உயிர்கள் கூட இங்கு மதத்தை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது போன்ற மதிப்பீட்டாளர்கள் மனம் குளிர மோடி அவசியம் பிரதமர் ஆகி, இரண்டாயிரத்தை இரண்டு லட்சமாக உயர்த்தவேண்டும்
P ILANGO SUBRAMANIAN
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது தாராளவாத முதலாளித்துவக் கோரிக்கை. அதாவது, லிபரல் பூர்ஷ்வா கன்செப்ட்.இது ஒரு மேட்டிமைத் தனமான சித்தாந்தம். மரண தண்டனை கூடாது என்ற முட்டாள்தனமான கருத்துக்கு மார்க்சியத்தில் இடமில்லை. ஸ்டாலின் காலத்திய ரஷ்யாவில் மாபெரும் களையெடுப்பின் போது பல போல்ஷ்விக் தலைவர்கள் தூக்கில் இடப்பட்டனர் (புகாரின், காமெனேவ் முதலியோர்).தமிழ் ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்திய போது டி.யு.எல்.எஃப் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியும் காட்டினர் புலிகள்.மேலும் துரோகி மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்தனர் புலிகள். வசந்தத்தின் இடிமுழக்கமாக நக்சல்பாரி புரட்சி வெடித்த போது, வர்க்க எதிரியை அழித்தொழித்தல் என்ற கோட்பாட்டை நடைமுறைப் படுத்தினார் சாரு மஜும்தார்.ஆக, ஒட்டு மொத்தத்தில். மேற்கூறிய சான்றுகளின் மூலம் மரண தண்டனை கூடாது என்பது மார்க்சியக் கோரிக்கை அல்ல என்பது புலனாகும். சுரண்டல் சமூக அமைப்பில் மரண தண்டனையை ஆளும் வர்க்கம் வைத்திருக்கும். புரட்சி நடந்து பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும், அங்கு மரண தன்டனை இருக்கும். பணக்காரத் திமிரில் கொழுப்பேறிய மேட்டுக்குடிச் சோம்பேறி மூளைகளில் புழுத்த கருத்து தான் மரண தண்டனை கூடாது என்ற கருத்து.

மக்களுக்காக உழைப்பவர்களின் மரணம் தாய் மலையை விடக் கனமானது என்றார் மாவோ. பகத்சிங்கின் மரணம் தாய் மலையை விட கனமானது. அதே நேரத்தில் மக்கள் விரோதிகளின் மரணம் இறகை விட லேசானது. கொண்டாடத் தக்கது. 166 பேரைச் சுட்டுக்கொன்று, 250க்கும் மேற்பட்டோரை நொண்டி முடமாக்கிய அஜ்மல் கசாப் வெறுக்கத்தக்க மக்கள் விரோதி. அந்த மிருகத்தின் சாவுக்கு வருந்துபவன் மனப்பிறழ்ச்சி நோய் உடையவன். ஊருக்குள் புகுந்து கண்டவர்களையும் கடித்துக் குதறும் வெறி நாயைச் சுட்டுக் கொல்வதில் என்ன தவறு? ஒரு மக்கள் விரோதியின் மரணத்தைக் கொண்டாட மறுப்பவன் மன நோயாளியே!
இளங்கோ சுப்பிரமணியனின் இடுகைக்கு எதிர்வினையாக , நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியுள்ள நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யரின் பதிவைச் சுட்டலாமெனக் கருதுகிறேன்.

கசாபைக் குற்றவாளியாக உருவாக்கிய இந்தச் சமூகம் தண்டிக்கத் தக்கதில்லையா ? என்பதே அவரது வாதம்.
பாகிஸ்தனில் ஏழ்மையில் வாடவிட்டு, கல்வியை மறுத்து குற்றவாளியாக உருவாக்கியது இந்தச் சமூகம்.
நீதி பரிபாலனத்தின் வழி ஒருவருக்கு மரண தண்டணை வழங்கலாகாது என்பது நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யரின் கருத்து. ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ் சாட்ட்டப் பட்டு தூக்கு தண்டணை விதிக்கப் பட்டுள்ளவர்களைத் தூக்கில் போட வேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதி கே அர் நாராயணனுக்கு சோனியாகாந்தி எழுதிய மடலை முன்வைத்து வாதிட்டுள்ளார் கிருஷ்ணய்யர்.

http://www.thehindu.com/opinion/open-page/a-question-of-rights-and-wrongs/article4130788.ece

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.