பன்மையினவாதம் என்கிற வார்த்தைக்கு 'Cosmopolitan' என்பது பொருள். 'Cosmopolitan, Metropolitan' போன்ற வார்த்தைகள் ஒரு நகரத்தின் அபரிமிதமான வளர்ச்சியைக் குறிக்கும் அடையாளங்களாக உள்ளன. முதலாளித்துவ உலகம் தனது சுரண்டல் சந்தையை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தும் வடிவங்களே பன்மையினவாத நகரம். பல்வேறு தேசிய இனங்கள் ஒரே இடத்தில் குடியமர்ந்து தொழில் செய்ய வாய்ப்பாக இருக்கும் நகரத்திற்கு பன்மையினவாத நகரம் என்று பொருள். இந்த பன்மையினவாத போக்கிற்கு விலையாகிப் பலியாகிக் கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்றுதான் நமது சிங்காரச் சென்னை, மார்வாடி, குசராத்தி மற்றும் மலையாளி, தரகு தேசிய முதலாளிகள் தமிழ்த் தேசிய இனத்தின் பொருளாதார, வாழ்வாதார சூழலை அபகரிக்கும் போக்கினை சென்னையின் வளர்ச்சியாக உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது இந்த பன்மையினவாத பாசிசக் கும்பல்.

மலையாளி முதலாளிகள், மார்வாடி முதலாளிகள், தமிழ் முதலாளிகள் என்று பிரித்து பார்ப்பது ஏன்? அனைவரும் "முதலாளியப் பார்வை உடையவர்கள்தான். இதில் என்ன மொழி அடிப்படையில் பிரித்து பார்த்து, மலையாளிகளையும், மார்வாடிகளையும் மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?” என்று பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் பல ஆண்டுகளாக நம்மைப் பார்த்து கேட்டுகொண்டிருக்கிறார்கள். “பீகார், ராசஸ்தான், மத்தியபிரதேசம் உட்பட வடஇந்தியாவில் இருந்து சென்னைக்கு, அன்றாடங் காய்ச்சிகளாக பிழைக்க வரும் ஏழைத் தொழிலாளர்களையும், பிற மாநிலத்தவர்கள் என்றும், பன்மையினவாத பாசிசத்திற்குக் காரணமானவர்கள் என்று சொல்லமுடியுமா?” என்று யாரேனும் நம்மிடம் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு நாம் பதில் சொல்லலாம் “ஆம்'' என்று. ஏனென்றால், தமிழகத்திற்கு பிற மொழி பேசும் மாநிலத்தவர்கள் தொழிலாளர்களாகவோ, கடைநிலைத் தொழிலாளர்களாகவோ, எந்த வடிவில் தமிழகத்தில் குடியிருப்புகளை அமைத்தாலும் அது பின்வரும் பாதிப்புகளை தமிழகத்திற்கு ஏற்படுத்தும்

1) தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

2) விவசாயிகளின் நீராதாரம் பாதிக்கப்படும்

3) மொழி வளர்ச்சி முழுமையாகத் தடைபடும்

4) சொந்த மண்ணில் உதிரிகளாக்கப்படும் அவலம்

5) சமச்சீர் கல்விக்கு ஆபத்து

6) கல்வி கட்டணக் கொள்கை அதிகரிக்கும் ஆபத்து

7) தேசிய இனம், தாய்மொழி உணர்வை மட்டுப்படுத்துதல்

8) “இந்துத்துவா'' கலாச்சாரம் பரவலாக்கப்படும்

9) பார்ப்பன மேலாண்மை நிலைநிறுத்தப்படும்

10) இசுலாமியர்களுக்கு எதிரான கருத்தியல் வலுப்படும்.

மார்வாடிகளின் படையெடுப்பினால் சென்னை வாழ் தமிழர்களின் தனித்த அடையாளம் அழிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் பூர்வகுடிகளான மீனவர்களும், பறையர்களும் தங்கள் கலாச்சாரத்தில் நடைமுறையில் இல்லாத, விநாயகர் சதுர்த்தி, ஹோலிப் பண்டிகைகளை கொண்டாடக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வட இந்தியர்கள் அதிகமாக வாழக்கூடிய தமிழகப் பகுதிகளில், நமது (தமிழ்) இளைஞர்களிடம் போதை பாக்கு பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகியுள்ளது. மார்வாடி மற்றும் மலையாள தரகு தேசிய முதலாளிகள் நுகரக்கூடிய வணிக மய்யங்களான 'சிட்டி சென்டர்', 'ஸ்கை வாக்' மற்றும் 'எக்ஸ்பிரஸ் அவென்யூ' போன்ற கார்பரேட் நிறுவனங்கள் வசதிக்காக, தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்கிங்காம் கால்வாய் உட்பட சென்னையின் அனைத்து பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டுவதற்காக வெள்ளைக்காரர்களால் வடஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் சென்னையில் குடியமர்த்தப்பட்டனர்.

ஆனால், இன்று, மார்வாடி உட்பட பிற தேசிய இன முதலாளிகளின் உபரி வேட்டைக்காக (இலாப வெறிக்காக) சென்னையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். மார்வாடி முதலாளிகள் பெரும்பாலும் பி.ஜெ.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களாக உள்ளனர். இதனால், “விநாயகர் சதுர்த்தி'' போன்ற இந்துத்துவா விழாக்கள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. சென்னை போன்ற பன்மையினவாத நகரங்களில் இசுலாமியர்களுக்கும், தலித்துகளுக்கும் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் வீடு கொடுப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். இந்த இந்துத்துவா மனநிலை வளர்வதற்கு மார்வாடிகளின் ஆதிக்கம் முக்கிய காரணியாக உள்ளது. பார்ப்பனரல்லாத பிற தமிழ் சமூகங்களுடன் தன்னை அடையாளப்படுத்துவதை விட மார்வாடி போன்ற தரகு தேசிய முதலாளிகளுடன் இணைந்து நிற்பது பார்ப்பனர்களுக்கு உவப்பான நடைமுறை. இதனால், பார்ப்பனீயம் மேலும் தன்னை வலுப்படுத்தி கொள்ள பன்மையினவாத போக்கு சாதகமாக உள்ளது. வியாசர்பாடி, காசிமேடு, ராயபுரம், புதுப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை உட்பட வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் பறையர்களும், மீனவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடிய பகுதிகள். இந்த பகுதியில் வாழும் மக்கள் பேசக்கூடிய தமிழ் சென்னைத் தமிழ் என்றும், சேரித்தமிழ் என்றும், மொழி சிதைந்த தமிழ் என்றும் தனித்தமிழ் ஆர்வலளர்கள் உட்பட அனைவரும் விமர்சிக்கின்றனர்.

நமது தமிழ் திரைப்படங்கள் அதில் முக்கிய இடம் வகிக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், மிகப்பெரிய தமிழ்ப்புலவர்களான காசிமேடு சதாவதனி, வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830 – 1892) வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசர் (1835–1900) ஆகியோர் மிகப்பெரிய தமிழ்ப் புலவர்களாகவும், சித்த வைத்தியர்களாகவும், வரலாற்றாய்வாளர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஆனால், இன்று இப்பகுதியில் வாழும் மேற்கூறிய பண்டிதர்களின் வாரிசுகளான ஆதிதிராவிட மக்களின் நிலை என்ன? மொழி சிதைந்த தமிழையும், “அமைப்பு'' சிதைக்கப்பட்ட உதிரி வாழ்க்கை முறையையும் வாழ்த்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலை இன்றைய 'உதிரி' வாழ்க்கை முறையிலிருந்து மட்டுமே “இடதுசாரி'' தோழர்கள் பார்க்கின்றனர். வரலாற்று கண்ணோட்டத்துடன் அணுகும் பார்வை அவர்களிடம் இல்லை. இன்னொருபுறம், பின்நவீனத்துவ சிந்தனைவாதிகளோ ஒருபடிமேலே சென்று, தலித்துகளின் “உதிரி'' வாழ்வுமுறையை நியாயப்படுத்துவதும், பெருமைப்படுத்துவதுமான அரசியலை முன்வைக்கின்றனர்.

மேற்கண்ட இரண்டு அரசியல் வழிமுறைகளும், தாழ்த்தப்பட்டோர் விடுதலையையும், சாதி ஒழிப்பையும் சாத்தியப்படுத்தாது. தாழ்த்தப்பட்டோர் “உதிரி''களாக்கப்பட்டதற்கு, தொடர்ச்சியான பிறதேசிய இன முதலாளிகளின் படையெடுப்பும், அவர்கள் திணித்த பார்ப்பனிய செயல்பாடுகளுமே காரணம். பீகார், உத்திர பிரதேசம் போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய வடஇந்திய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களால், வேலையிழப்பவர்கள் தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களே. கட்டிடம் கட்டும் தொழில், சாலை செப்பனிடும் தொழில் போன்ற கடுமையான உடலுழைப்பு சார்ந்த தொழிலை செய்பவர்கள் கண்டிப்பாக பார்ப்பனர்கள் அல்ல என்பது நமக்கு நன்றாக தெரியும்.

ஆகவே, இத்தகைய தொழில்களை செய்வதற்காக வடஇந்தியாவில் இருந்து வரும் தொழிலாளர்களால் வேலையிழப்பு ஏற்பட்டு 'உதிரி'களாக்கப்படுபவர்கள் பார்ப்பனரல்லாத உழைக்கும் சாதி மக்களே, அதிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். இவ்வாறாக, பிறதேசிய இன படையெடுப்பால் (பன்மையினவாத பாசிசப் போக்கு) மொழி சிதைந்து, வாழ்விழந்து போன இம்மண்ணின் பூர்வக்குடிகள் மார்வாடி முதலாளிகளின் கைக்கூலிகளாகவும், ஏவலர்களாகவும் மாறும் அவலம் சென்னை போன்ற பெருநகரங்களில் தொடர்கிறது. தமிழ் சமூகத்தின் ஆதி குடிகளை 'உதிரி பாட்டாளிகளாக' மாற்றுகின்ற வேலையை பன்மையினவாத கலாச்சாரம் செம்மையாக செய்து வருகிறது. பூர்ஷ்வா வர்க்கத்தை விட ஆபத்தானது Lumpen Proliterian (உதிரி பாட்டாளி வர்க்கம்) என்னும் இந்த வர்க்கம் என்று காரல் மார்க்ஸ் எச்சரிக்கிறார். 1950களிலே 'குடியரசு' ஏட்டில் சென்னை மாகாணத்தில் மார்வாடிகள் மற்றும் மலையாளிகள் ஆக்கிரமிப்பை எதிர்த்து பெரியார் கண்டன கட்டுரைகள் எழுதியுள்ளார். (ஆதாரம் : 22.09.1954 “விடுதலை'' ஆசிரியர் உரை). 1956 நவம்பர் 1 முதல் மொழிவழி மாநில உரிமை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் கிடைத்துள்ளது. இது ஒரு வகையில் பார்த்தால் தேசிய இனங்களின் சுயநிர்ணய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியே ஆகும்.

இந்த உண்மையை மெய்ப்பிக்கும் வகையில், அஸ்ஸாம், மத்தியபிரதேசம் மராட்டிய அரசு, ஏன் பொதுமை இயக்க தோழர்கள் ஆதிக்கம் செலுத்தும் கேரளா அரசு கூட பிறமாநிலத்தவர், தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்கக்கூடாது என்று எதிர்ப்பு குரல்களைத் தெரிவித்து வருகின்றன. தமிழகம் தான் இந்த போராட்ட களத்தில் பின்தங்கியுள்ளது என்பது வேதனைப்பட வேண்டிய உண்மை. பல்வேறு தேசிய இனங்களை ஒன்றாக பணியமர்த்துவதன் மூலம் மக்களின் போராட்ட குணங்களை மழுங்கடிப்பதே 'இந்திய‌ வல்லாதிக்கத்தின்' நோக்கம் உழைக்கும் மக்கள் அரசியல் பேசும் அனைவருமே இந்த பன்மையினவாத பாசிசத்தை எதிர்த்து போராட வேண்டும். குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியலும், தமிழ்த்தேசிய அரசியலும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய கட்டாயத்தை நாம் உணர வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலையும், தமிழ்த்தேசிய அரசியலையும் ஒன்றிணைக்கும் மய்யப்புள்ளியாக பன்மையினவாத பாசிச எதிர்ப்பு அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It