இன்று உலகறிந்த சூழலியல் போராளியாக இருக்கும் வந்தனா சிவா, ஆரம்பத்தில் குவான்டம் தியரியில் முனைவர் பட்டம் பெற்ற முன்னணி இயற்பியலாளராக இருந்தார். 1982ஆம் ஆண்டு தனது இயற்பியல் துறையை துறந்துவிட்டு அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (ஆர்.எப்.எஸ்.டி.இ) தொடங்கினார். தற்போது நவதான்யா என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

கடந்த 38 ஆண்டுகளில் இயற்கையை பாதுகாக்கவும், நீர், நிலம், காடுகஷீமீ, பல்லுயிரியம் போன்ற இயற்கை வளங்களின் மீதான மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் போராடி வருகிறார். இப்பணிகளுக்காக மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் வாழ்வாதார உரிமை விருது 1993ஆம் ஆண்டு பெற்றவர். அவர் எழுதிய உயிரோடு உலாவ, பசுமைப் புரட்சியின் வன்முறை ஆகிய நூல்கள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பி.டி கத்தரிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க சமீபத்தில் சென்னை வந்திருந்த சூழலியல் பெண்ணியவாதி வந்தனா சிவாவுடன் பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈரோடு ஆர். செல்வம் ஆகியோர் செய்த நேர்காணல்:

பெண்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன வகையான உறவு என்று நினைக்கிறீர்கள்?

உலகில் பெண்கள் தான் எப்பொழுதுமே உணவு உற்பத்தி செய்பவர்களாக இருந்து வருக்கின்றனர். ஆனால் விவசாயம் ஆண்களின் ஆதிக்கத்துக்குள் வந்த பின், அதில் பெண்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போனது. விவசாயி என்றாலே டிராக்டரில் அமர்ந்திருக்கும் ஓர் அமெரிக்கரோ அல்லது தலைப்பாகை அணிந்த ஓர் இந்தியருடைய ஓவியமோதான் நினைவுக்கு வரும் அளவுக்கு அது ஆண்களின் தொழிலாகவே கருதப்படுகிறது. 1982 அல்லது 83 என்று நினைக்கிறேன், அமெரிக்காவுக்கு நான் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், இந்தியாவின் விவசாயத்தை, அதன் வழியாக செலுத்தப்படும் உழைப்பு, விவசாய அறிவு, விவசாயத் திறன் ஆகிய அனைத்தும் பெண்களுடையது என்று குறிப்பிட்டிருந்தேன்.

உணவுச் சங்கிலியின் முதல் கண்ணியாக இருக்கும் விதையை எடுத்துக் கொண்டோம் என்றால், பெண்கள்தான் விதையைப் பாதுகாப்பவர்களாக இருந்திருக்கின்றனர். அது மட்டுமன்றி ஒரு வகையிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்துவதிலும் அவர்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய ஆற்றலால்தான் விதையைப் பெருக்கவும் முடிகிறது. அதேபோல இன்னொரு விசயமும் இதில் முற்றிலுமாக விலக்கப்படுகிறது. அது உணவைப் பதப்படுத்தும் முறை. குறிப்பாக ஊறுகாய் போன்ற பாரம்பரிய உணவு பதப்படுத்தும் முறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் உணவுத் தொழிற்சாலையின் வரையறையைப் பொறுத்தவரை தொழிற்சாலையில் பதப்படுத்தும் உணவின் அளவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பெண்களின் உழைப்பு என்பது வேலையாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருளில் ஒரு சதவிகிதமே பதப்படுத்தப்படுத்துவதாக கூறப்படுகிறது. பெண்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே, பாரம்பரிய முறையில் பதப்படுத்தும் முறைகளும் அவர்களது உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. இப்படி பெண்களின் உழைப்பில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், சிறு வியாபாரத்தில் பெண்கள் அளிக்கும் உழைப்பு. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் எங்கிருந்து நாம் காய்கறிகளைப் பெறுகிறோம்? சிறுசிறு கூடைகளில் பசுமையான காய்கறிகளைச் சுமந்து வரும் பெண்களிடமிருந்துதான். ஆனால் இந்த வியாபார முறையும் விநியோக முறையும் இன்று ஒரே மைய அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. இந்த வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் கல்வி பெற்றிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களால் ஒரு கணினியைவிட வேகமாவும் துல்லியமாகவும் விலைக் கணக்கைக் கணிக்க முடியும். ஆனால் இத்தகைய விவசாய முறையும் விநியோக முறையும் இன்று பெரும் கம்பெனிகளால் களவாடப்பட்டுவிட்டது. இன்று அவர்கள்தான் ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவாகச் செயல்படுகின்றனர்.

இந்தியா என்பது இன்னும் சுரண்டப்படாத ஒரு நாடாக பெருநிறுவனங்களால் பார்க்கப்படுகிறது. உலகச் சந்தைக்கு ஏற்ற ஓர் உணவுக் கட்டுப்பாட்டு முறையையும் விவசாய முறையையும் ஏற்படுத்த, விதைகளைக் கையாளும் பாரம்பரியச் செயல்பாடுகளிலிருந்தும் உணவு உற்பத்தி வேலைகளிலிருந்தும் விநியோக முறைகளிலிருந்தும் பெண்களை இடம்மாற்றுவதுதான் அவர்களின் வியாபாரத் தந்திரம். என்னைப் பொறுத்தவரை பெண் - ஆண் சமத்துவம் என்பது இந்த வியாபார முறைகளும் உணவு உற்பத்தி முறைகளும் கார்ப்பரேஷன்களால் கையகப்படுத்துவதை நாம் அனுமதிக்காமல், வீட்டிலும் விவசாய நிலத்திலும் பெண்ணும் ஆணும் இணையாக நின்று நமது உணவுத்துறையை இன்னொருவருக்கு அடிமையாக்காமல் செயல்படுத்துவதில் இருக்கிறது.

பசுமைப்புரட்சிக்கும் பி.டி. (பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்) கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? ஏன் பி.டி. கத்தரிக்காயை நாம் எதிர்க்கவேண்டும்?

பசுமைப் புரட்சி, மரபணு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பி.டி. கத்தரிக்காய் உள்ளிட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி ஆகிய இரண்டுமே அமெரிக்க வல்லரசால்தான் இயக்கப்படுகின்றன. இரண்டுமே சூழல் பாதுகாப்பைவிட நஞ்சை விற்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விவசாய மாதிரியை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. இதில் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல், விவசாயிகளின் வாழ்வியல் நிலைமை இரண்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவிய 1965ஆம் ஆண்டு பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்று. உலக வங்கி அதற்கு ஏற்ற வசதிகளையும் தானே உருவாக்கிக் கொண்டது. நமது விவசாய முறைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், 1965 பஞ்சத்தின்போது நமக்கு அதிகமாகத் தேவைப்பட்ட கோதுமையை கப்பலில் நமக்கு அனுப்பமுடியாது என்று  அச்சுறுத்தியது.

லால் பகதூர் சாஸ்திரி பசுமைப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிய அளவில் புதுவகை விதைகளையும் வேதியியல் பொருள்களையும் அறிமுகப்படுத்தலாம். ஆனால் முற்றிலுமாக இந்தியா முழுமைக்கும் இதைச் செயல்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றார். இந்திய - பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்துக்காக தாஷ்கண்ட் சென்றிருந்தபோது மர்மமான முறையில் விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டிருந்தார். பிறகு இந்திரா காந்தியிடமும் பசுமைப்புரட்சி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டது. இதன் பின்னணியில் இருந்த இரண்டு முக்கியமான நபர்கள் சி. சுப்ரமணியமும் எம்.எஸ். சுவாமிநாதனும். இயேசு கிறிஸ்துவைப் போலிருந்த நார்மன் போர்லாக்கின் சிஷ்யனைப் போல இருந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட விதை ரகங்கள் நிறைய வேதியியல் உரத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக மகசூலையும் குறைந்த வைக்கோலையும் கொடுக்குமென்று பசுமைப் புரட்சியின்போது ஒரு பொய் சொல்லப்பட்டது. இன்று என்ன நடந்திருக்கிறது? கடுமையான நீர்ப்பஞ்சமும் உயிர்ச்சூழல் முழுதும் விஷமூட்டப்பட்டும் இருக்கிறது. பசுமைப்புரட்சி கோலாகலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலமான பஞ்சாப் எங்கும் மக்களுக்கு கடுமையான புற்றுநோய் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான வகைவகையான உணவு வகைகளாகச் செழித்திருந்த நமது உணவு, இன்று வெறுமனே அரிசியாகவும் கோதுமையாகவும் குறுகிவிட்டது.

நிறைய தானிய வகைகள் மறைந்துவிட்டன. இன்றைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து போலியான தானிய வகைகள் (துவரம் பருப்பு) இறக்குமதி செய்யப்படுகிறது. சோயா எண்ணெயும் பனை எண்ணெயும் (பாம் ஆயில்) நமது பாரம்பரிய எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணேய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயின் இடத்தை பிடித்துக்கொண்டன. தானியங்கள் மற்றும் எண்ணெய்களின் இந்தப் போதாமைதான் பசுமைப் புரட்சி நமக்கு அளித்த மிகப் பெரிய பரிசு.

இரண்டாவது பரிசு மரணத்தை உருவாக்கும் விவசாய முறை. செயற்கை உரம் சார்ந்த விதைகளையும் அதிக நீர் தேவையைக் கொண்ட செயற்கை உரத்தையுமே பசுமைப்புரட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. பசுமைப்புரட்சியின் முதல் சில வருடங்களிலேயே நிலத்தின் மரணத்தினால் விவசாயிகள் அகற்றப்பட்டனர். ஆனால் அதை யாருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. 1984இல் அங்கு ஏற்பட்ட கொடூரமான வன்முறையால் நான் இதைக் கவனித்தேன். "ஆபரேஷன் புளூ ஸ்டார்" இந்திரா காந்தியைக் கொன்றது.

முதல் பசுமைப்புரட்சியில் எது எதெல்லாம் தவறானதோ அவற்றை அடிப்படையாகக் கொண்டே இரண்டாம் பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி, நீர் மிகையாகத் தேவைப்படும் பயிர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதே மாதிரி ஒற்றைப் பயிர்ப் பண்பாடே பயன்படுத்தப்படுகிறது. செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எதுவுமே மாறவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நஞ்சூட்டப்பட்ட மரபணுக்களாயின.

இயற்கையாக கத்தரிக்காயில் உள்ள பாக்டீரியா புரோட்டின் என்பது ஒரு எண்டோ டாக்சின். அது ஒரு குறிப்பிட்ட வகை வெட்டுக்கிளியை மட்டுமே எதிர்க்கக் கூடியது. ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயில் உள்ள எண்டோ டாக்சின் வெட்டுக் கிளிக் குடும்பத்தின் எந்த வகையான பூச்சியையும் தாக்கக் கூடியது. இது உயிர்ச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது. இந்த உயிர்ச்சூழலுக்குள் அடங்கும் எல்லா உயிர்களும் அதனதன் சிறப்பியல்புகளோடு வாழ நாம் அனுமதிக்க வேண்டும்.

முதல் பசுமைப்புரட்சி வெளிப்புறத்திலிருந்து நஞ்சைப் பரப்பியது. இரண்டாம் பசுமைப்புரட்சி இன்னும் ஒரு படி ஆழமாகப் போய் செடியின் மரபணுக்களிலேயே நஞ்சை விதைக்கிறது. பி.டி கத்தரிக்காய் போல. இப்பொழுது செடியே விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது. முதல் பசுமைப்புரட்சியின் போது விவசாய வேதித் தொழிற்சாலைகளும் உரத் தொழிற்சாலைகளும் இருந்த நிலை மாறி, இப்பொழுது விதை ஆலைகளாகவும் உயிர்வேதி ஆலைகளாகவும் உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த விதைகள் விஷக்கொல்லிகளுக்கான மாற்று என்று பொய் சொல்கிறார்கள்.

அதற்கான மாற்றுதான் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் என்கிறார்கள். முதலில் விஷக்கொல்லிகளை விற்றார்கள். இப்பொழுது மரபணு மாற்றப்பட்ட பி.டி. பாக்டீரியா பொதியப்பட்ட விதை விற்க முயற்சிக்கப்படுகிறது. பசுமைப்புரட்சிக்கும் இரண்டாம் பசுமைப்புரட்சிக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்பது, இரண்டாம் பசுமைப்புரட்சியில் ஒத்துழைப்பு நேரடியாக அளிக்கப்படுவதுதான். முதலாவதில் அது திரைமறைவிலிருந்து அளிக்கப்பட்டது.

இரண்டிலுமே ஐக்கிய நாடுகள் நம் மீது மிக வலுவான அழுத்தத்தை செலுத்தின. WTO ஒப்பந்தம் வழியாகவும் TRIPS வழியாகவும் அது தொடர்ந்தது. இந்தியாவுக்குள் மான்சாண்டோவின் வருகை அமெரிக்கா வற்புறுத்தலால்தான் ஏற்பட்டது. பி.டி. கத்தரிக்காய் என்பதுகூட பன்னாட்டு நிதி உதவி அமைப்பான US aid- ன் நேரடி நிதியுதவியின் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவுதான். இறுதியாக, உயிர்ப்பாதுகாப்பு குறித்த வரையறைகளை மாற்றுவது மற்றும் ஒழுங்கைக் குலைப்பதன் முயற்சிதான்.

ஆக, காலங்காலமாக இந்தத் தொல்லை தொடர்கிறது. 1987 முதல் இந்தப் போராட்டத்தில் நான் ஈடுபட்டு வருகிறேன். இயற்கை காலங்காலமாக கருவில் சுமந்து, இழைத்துஇழைத்து உருவாக்கிய விதையைச் சோதித்து அதை மரபணு மாற்றப்பட்ட விதையுடன் ஒப்பிட்டு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். இயற்கை உருவாக்கிய விதைக்கு காப்புரிமை கிடையாது. இதை நான் மிகப் பெரிய ஏமாற்று வேலை என்பேன். மான்சாண்டோ பயிர்களை மட்டும் பாழ்படுத்தவில்லை விஞ்ஞானத்தையும் பாழ்படுத்திவிட்டது.

நமது அன்றாட நடவடிக்கைகளையும் பாழ்படுத்திவிட்டது. இதில் அமெரிக்க அரசின் கை ஓங்கியுள்ளது. நான் வெள்ளை மாளிகையை முழுக்க முழுக்க மான்சேண்டோவின் நிதியுதவியுடன் வாழும் ஒரு மாளிகை என்றுதான் கூறுவேன். நமது ஜனநாயக அரசும் அப்படி மான்சேண்டோவின் கைத்தடியாக மாறுவதை நான் விரும்பவில்லை. பிரதமரின் அலுவலகமும் அமெரிக்காவின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது என்று நமக்குத் தெரியும்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் U.S. Indian KnowledgeAgreement இல் கையப்பமிட்டுக் கொடுத்ததில் நமது ஒட்டுமொத்த விவசாயத்தையும் மான்சாண்டோ, கொனக்ரஸ், வால்மார்ட்டிடம் கொடுத்துள்ளார். ஆக, நமது பிரதமர் அலுவலகத்தை தான் நடத்திக் கொண்டிருப்பதாக அமெரிக்க அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. நமது மக்கள்தான் இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமது பிரதமருக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

அன்று பஞ்சத்தைக் காரணம் காட்டித்தான் பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இன்று பி.டி. - கத்தரிக்காயைக் கொண்டுவருவதற்கு என்ன காரணம்?

விதையிலிருந்து உணவு உண்ணும் மேசை வரை புழக்கத்தில் இருக்கும் இயற்கையான நவதானியங்கள் சிறப்பான முறையில் நம் நாட்டில் விளைவிக்கப்படுகின்றன. நாம் இயற்கையான முறையில் அவற்றை வளர்க்கிறோம். அவற்றை ஒவ்வொரு வாரமும் நமது வீட்டிற்கே கூடைகளில் கொண்டுவந்து தரும் சிறு வியாபாரிகளைக் கொண்டிருக்கிறோம். பாரம்பரியமாகவே இத்தகைய இயற்கையான முறையில் விளையும் நவதானியங்களைக் கொண்டிருக்கிறோம். அதனால் ஏதோ இந்தப் பஞ்சம் வந்து நம்மை சாகடித்துவிடும் என்று அஞ்சவேண்டிய தேவையில்லை. இந்த பூச்சிக்கொல்லி மருந்தாலைகள் எல்லாமே, இந்த பாரம்பரிய ரகங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்ற பார்வையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். ஆனால் இந்தத் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் அந்தப் பயிர்களை அழிக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, உலக வங்கியால் அறிவிக்கப்பட்ட 1988 கொள்கையின்படி இந்தக் கார்பரேஷன்களை எளிதாக தங்களைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. மான்சாண்டோவின் விதை மாதிரிகளை அரசு பரிசோதிக்க முடியாது. அந்த விதைகளில் என்ன இருக்கிறது என்று அரசுக்கும் தெரியாது. கம்பெனிகள்தான் இந்த அறிவின் காப்புரிமையை வைத்திருப்பதுடன் இது மிகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த விதையின் காப்புரிமையுடன் அதற்கான தொழில்நுட்பத்தையும் பேணும் உரிமையும் பெற்றிருப்பதுடன் அதன் இனப்பெருக்கத் தொடர்ச்சியைத் துண்டிக்கும் அறிவையும் அவையே பெற்றிருக்கின்றன.

ஆனால் பலரும் நம்புவது போல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பயிர்களும் இந்த பூச்சித் தொல்லைக்கு நிவாரணம் தரவில்லை. பி.டி. பருத்தி விஷயத்தில் இது தெளிவாகிவிட்டது. அதில் ஒவ்வொரு பருவத்திலும் வித்தியாசமான பூச்சித் தொல்லையை அனுபவித்தோம். அது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எல்லாப் பருவங்களிலும் ஏதோ ஒரு எதிர்பார்க்கப்படாத பூச்சியால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் இருக்கிறது. நேரடியான வன்முறை மூலம் நச்சு மரபணு உள்ளே செலுத்தப்படுகிறது. இதில் செடியின் ஒட்டுமொத்தமான வளர்சிதைமாற்ற ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது.

அதன் வளர்சிதைமாற்றம் பாதிக்கப்படும்போது, அதன் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து விடுகிறது. அப்பொழுது எல்லா பூச்சிகளும் அதன் எதிரியாக மாறிவிடுகின்றன. இதனால்தான் பாரம்பரிய பயிர்களில் காணப்படும் பூச்சிகளைவிட மரபணு மாற்றப் பயிர்களில் நாம் நிறைய பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டியிருக்கிறது. எங்களது கணக்கீடுகளின்படி பி.டி.பருத்தி அறிமுகம் செய்யப்பட்ட பின் விதர்பாவில் மட்டும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு 13 மடங்கு அதிகரித்துள்ளது. ஆக, பூச்சிகள் அழிக்கப்படுவதற்கான பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது தெரிகிறது.

பி.டி கத்தரி அறிமுகம் தொடர்பாக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று நினைக்கிறீர்கள்? ஏற்கெனவே அது ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தானே தெரிகிறது? இந்நிலையில் ஒரு சாதாரண குடிமகன் இதை எப்படி எதிர்க்க முடியும்?

வேளாண் அமைச்சர் சரத்பவார் மான்சாண்டோவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார். அவருடைய தொடர் வற்புறுத்தலால் தான் மரபணு மாற்றத்தை அனுமதிக்கும் குழு பி.டி. கத்தரியை அனுமதித்து கையப்பமிடுகிறது. இது சரத்பவாரின் அமைச்சகம் இல்லையென்றாலும், அவரது எல்லை தாண்டி மூக்கை நுழைத்துள்ளார். அவருக்கு சர்க்கரைத் தொழிற்சாலை, பி.டி. தொழிற்சாலை மற்றும் பால்பண்ணைகளிடம் நிறைந்த செல்வாக்கு இருக்கிறது. அதனால்தான் சர்க்கரையின் விலை அதிகரிக்க அனுமதித்தார். சர்க்கரையால்தான் 340 மடங்கு லாபம் ஈட்டமுடிகிறது. ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பெருத்த இழப்பால் தற்கொலை செய்து கொண்டனர். ஆக, சரத் பவார் பெருந்தொழிற்சாலைகளின் பக்கம்தான் சாய்ந்திருந்தார்.

பி.டி. தொழில்நுட்பம் பற்றி பொது விசாரணை நடத்தவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் விசாரணையில் கூறப்பட்டது வேறு. பதிவு செய்யப்பட்டது வேறு. நிறைய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று விசாரணையில் சொல்லப்பட்டது. ஆனால் பசுமைப்புரட்சி மிகச் சரியான அறிவியல் தொழில்நுட்பம் என்று பதிவுசெய்யப்பட்டது. ஆக, எல்லா பிரச்சனைகளிலுமே அரசு தவறான முடிவுகளைத்தான் எடுக்கும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

நாம் எல்லா வகைகளிலும் இதற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும். ஒரு காலத்தில் விவசாயிகளின் இயக்கங்கள் மட்டுமே இதில் பங்கெடுத்தன. உணவு என்பது நமது பிரச்சனை இல்லை என்று பெண்கள் இயக்கங்கள் கருதின. இன்று மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லா பெண்கள் இயக்கங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. இருபத்தைந்து வருடங்களுக்கு சூழல் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கும்போது போராட்டத்தில் சூழலியலாளர்கள் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட போராட்டத்தில் மருத்துவர்கள், பொது சுகாதார நிபுணர்கள், உடல் ஆரோக்கிய வல்லுநர்கள் மற்றும் நுகர்வாளர்கள் அனைவருமே விவசாயிகளுடன் இணைந்து போராட வேண்டும். அதற்கான காலக்கட்டம் இது.

நான் நவதானியா அமைப்பை ஏற்படுத்தியதுகூட நமது பாரம்பரிய விதைகளை, நமது மண்ணின் விதைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில்தான். அயல் மகரந்தச் சேர்க்கையின் வழியாகக் கிடைக்கும் விதைகளைப் பாதுகாப்பதும் எனது எண்ணமாக இருந்தது. இவ்விதைகளைக் கொண்டு 50 சதவிதம் விளைச்சலைப் பெருக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டினேன். ஆக, முதல் வேலையாக நமது விதைகளைப் பாதுகாக்கவேண்டும். எங்களிடம் உள்ள விதைகள் எல்லாமே விவசாயப் பெண்களால் விளைவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுபவை.

இரண்டாவது முக்கியமான வேலை, இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்துவது. மூன்றாவதாக, உணவுப்பொருளை நுகர்வோருக்கும்விவசாயிக்கும் இடையில் ஒரு நேரடியான தொடர்பை ஏற்படுத்துவது. நிவிளி விலக்கப்பட்ட பயிர்களை பயிரிடும் கிராமங்களை நாம் உருவாக்க வேண்டும். பஞ்சாயத்து ஜனநாயக இயக்கங்களால் 6000 கிராமங்களை அப்படி உருவாக்கியிருக்கிறோம். ஆக எந்த வகையிலும் நஞ்சை விதையாகவோ உணவாகவோ பெற மாட்டோம் என்று நுகர்வோரும் விவசாயியும் சேர்ந்து இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டால்தான், மான்சாண்டோவின் விதைகள் நமது வயலிலோ வயிற்றிலோ நுழைய வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நாம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பி.டி. பிரச்சனை திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

முக்கியமான 10 மாநிலங்களின் அரசுகள் பி.டி.க்கு எதிராக கூறியுள்ளன. இந்நிலையில் நமது கூட்டாட்சி முறையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர் குறித்த இப்பிரச்சனையில், மத்திய அரசு - மாநில அரசு யார் முடிவெடுப்பது, விதைகளுக்கு யார் காப்புரிமை தருவது, மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது போன்றவற்றால் தங்கள் விவசாயிகள் கஷ்டப்படுவது குறித்த கவலையில் மாநில அரசுகள் இருக்கின்றன. விவசாய முறைகள் மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும். ஆனால் நடுவண் அரசு கார்பரேஷன் கம்பெனிகள் வழியாகத் தன் முடிவுகளைத் திணிக்கிறது.

காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் சரத் பவாரிடமிருந்து விலகி இருக்கிறது. ஏனெனில் சரத்பவாரைவிட சுற்றுச்சூழல் அமைச்சர் மக்களுக்கானவர் என்று நிரூபிக்க காங்கிரஸ் அரசுவிரும்புகிறது. இயக்கப் பணிகளில் நாம் ஓய்ந்து போகக் கூடாது. என்ன நடந்தாலும் நாம் தொடர்ந்து போராட வேண்டும். அரசு இதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதை உணரும் வரை நாம் ஓயக் கூடாது.

ஜெர்மனியில் நடந்ததை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்நாட்டு வேளாண் அமைச்சர் மான்சாண்டோவின் செல்வாக்கால் பி.டி. சோளத்தை அறிமுகப்படுத்தினார். அங்கிருந்த விவசாயிகள் 6000க்கும் மேலானோர் பேரணியாகத் திரண்டு போராடினர். அரசுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் மின்னஞ்சல் அனுப்பினர். அரசு முதலில் இதை மிகச் சிறிய விஷயமாகத்தான் எடுத்துக்கொண்டது. ஆனால் விவசாயிகள் பெரிய அளவில் திரண்டதுடன், பி.டி. சோளத்தை அரசு திரும்பப் பெற வில்லையென்றால், தாங்கள் வாக்குகளை இடப்போவதில்லை என்று கூறினார்கள்.

இந்த எச்சரிக்கைதான் அங்குள்ள அரசியல்வாதிகளின் முடிவை மாற்றியது. ஏனெனில் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம் வாக்குகள் வழியாக அதிகாரத்தைப் பெறுவதுதான். விவசாயிகளின் இந்த எச்சரிக்கைக்கு அரசியல்வாதிகள் பணிந்தார்கள். இத்தகைய ஆற்றலை நாமும் பெற வேண்டும். ஏனெனில் காங்கிரஸ§ம் மக்களின் வாக்குகள் தரும் அதிகாரத்திற்காக எதையும் செய்யும்.

 

Pin It