நான் இரவில் நீந்தி பகலை தொடுபவன்
கப்பல்கள் என்னை முட்ட வரும் போது
அலட்சியப்படுத்தி நீந்துவேன்

கைகள் சோரும்போது ஒரு மீனை
துணைக்கழைப்பேன்.

இரவுகள் எனக்கானவை
அங்கே யாரும் வர அனுமதிக்க மாட்டேன்

பூனை ஒன்றின் துணையோடு
எல்லா வீதிகளையும் கண்காணிப்பேன்

ரப்பர் பாப்பாக்கள் கிளி பொம்மைகள்
குழந்தைகள் வீடுகளின்
எல்லா வாசல்களிலும் வைப்பேன்

பன்றிகளின் வசிப்பிடம் சென்று
அவற்றின் தூக்கத்தைக் கலைப்பேன்

எஜமானர்களுக்குத் துரோகமிழைக்கும்படி
நாய்களுக்கு சமிக்ஞை செய்வேன்

குருட்டுப் பிச்சைக்காரர்கள் வசிப்பிடம் சென்று
சண்டை தீர்த்து சமாதானம் செய்வேன்

குள்ளர்களின் வசிப்பிடம் சென்று
குட்டிகரணம் கற்பேன்

சினிமா போஸ்டர்களில்
நடிகைகளின் ஜட்டி தெரிகிறதா
என குனிந்து பார்ப்பேன்

நடிகர்களுக்கு ஓங்கி குத்து விடுவேன்.

குடித்து விட்டு கட்டிப் புரளும்
கவிஞர்களுக்கு சிகரட் வாங்கித் தருவேன்

வெறுமையுடன் அவர்கள் சோர்ந்து போகும்போது
இன்று நல்ல கவிதை எழுது
என உற்சாகப்படுத்துவேன்
இரவில் போலீஸ் வேனை பார்த்தால்
தபால் பெட்டியின் நிழலில் மறைந்து கொள்வேன்

மனிதர்கள் பிசாசுகளாக திரியும்
காலைப் பொழுது எனக்குப் பயங்கரமானது
பறவைகள் எனக்கு எச்சரிக்கை விடுக்கும்போது
அறைக்குத் திரும்பி
கனவை போர்த்தி உறங்குவேன்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.