மழையை ரசித்தல்

குடையை பிடித்துக் கொண்டு அல்ல
மழையில் நனைந்து கொண்டே
மழையில் ரசிப்பது தான் அமர்க்கு அழகு
என்கிறார் புட்டா*
மழையில் நனைந்து கொண்டே
உழுகிறான் உழவன்
மழையில் நனைந்து கொண்டே
படுத்துக் கிடக்கிறான் பாதசாரி
மழையில் நனைந்து கொண்டே
வாழ்கிறார்கள் ஏழைகள்.

* புட்டா: கவிஞர் விக்ரமாதித்யனின் மற்றொரு புனைபெயர்

பறத்தல்

பறக்கத் தயாராகும் பருவத்தில்
கனவுத்தீ படர்ந்து பிடிக்கும்
இனிக்கும் தீயின் ஆவல்
உடல் முழுக்க பரவி
சிறகுகள் அசையும்
பறத்தலில்
காற்றின் அலைக்கழிப்பும்
மரக்கிளைகளின் தடையும்
மேகங்களின் வேகமும்
சிறகுகளை வலுவாக்கும்
அல்லாதவற்றின் சிறகுகள்
முறிந்து தொங்கும்

நண்பர்களும் எதிரிகளும்

எதிரிகளுடனான சண்டையை
நண்பனிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்
சண்டைக்கான காரணங்கள்
வலுவாக இருக்கின்றன
எல்லா சண்டைகளும்
காரணங்களுடன் தான் நிகழ்கின்றன
நேற்று நெருக்கமாக நடந்தவர்கள்
பிரியமும் அன்பும் கொண்டவர்கள்
இன்று கீரியும் பாம்பும்
நேற்றைய நண்பர்கள் தான்
இன்றைய எதிரிகள்
இன்றைய எதிரிகள்
நாளை நண்பர்கள் ஆகலாம்
ரணக்கீறல்களுடன் பிரிந்தோம்
பேச்சின் முடிவில்

இரவின் மடி

வெளியெங்கும் நிசப்தம்
குடிகொண்டிருந்த போதும்
மனக்கதவுகள்
மூட மறுக்கும் வேளைகளில்
தூக்கம் ஏழேழு கடல் தாண்டி சென்று விடுகிறது
பாடுகள் சுமந்து எப்போதும்
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
இயேசுவைப் போல
சிலுவையில் அறையப்படுகிறது எனது தூக்கமும்
புரண்டு புரண்டு நினைவுகள் அகற்றியும்
மண்டை சூடாகி தகிக்கிறது
நிகழ்வுகளின் காயங்ளில் வெடித்துக் கிளம்பும்
புதிய பாதை
படைப்பின் மூலவேர்கள் தேடி அலையும்
மானிடப் பரப்பின்
அயர்ந்து தூங்கும் பின்னிரவு
காகங்களின் கரைதலில்
விழித்தெழும் காலை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.