உண்மையை உளறிய அசோக் சிங்கால்

18 ஆண்டுகள் விசாரணை நடத்திய லிபரஹான் கமிஷன் பாபர் மஸ்ஜித் இடிப்பு நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு சம்பந்தம் இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத் ததை நாட்டு மக்கள் நம்பவில்லை என்ற போதிலும் இதனை வைத்து நரசிம்மராவை உத்தமராக்க காங்கிரஸ் முயற்சித்து வந்தது.

காங்கிரஸ் கட்சியினரின் முயற்சி களை எல்லாம் ஒரே ஒரு செய்தி யாளர் கூட்டத்தின் மூலம் அசோக் சிங்கால் பொடிப் பொடியாக்கியி ருப்பது அவர்களது முகங்களில் கரியை கிலோ கணக்கில் பூச வைத்துள்ளது.

1992 ஆம் டிசம்பர் மாதம் 6ந் தேதி பாபர் மஸ்ஜித் வளாகத்தில் கர சேவை செய்யப் போவதாக பாஜக அறிவித்தது. பாஜகவினரால் பாபர் மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்று அஞ்சிய முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜிதை காக்க வகை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

பாபர் மஸ்ஜித் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்திலும் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பாபர் மஸ்ஜிதைக் காப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உத்திரப்பிரதேச அரசுக்கு அறிவுரைகளை வழங்கியது.

அன்றைய தினம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினர் முன்னிலையில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இடிப்பு நடவடிக் கையைத் தடுக்குமாறு ராணுவத்தின ரிடம் முஸ்லிம்கள் மன்றாடிய போதும், தமக்கு இன்னும் உத்தரவு வரவில்லை என்பதே ராணுவத்தின் பதிலாக இருந்தது.

அயோத்தியில் நடைபெறும் அநீதியை பிரதமர் நரசிம்மராவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக மனித நேயர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முயற்சித்த போது பிரதமர் எங்கே இருக்கிறார் என்பதையே யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாபர் மஸ்ஜித் முழுக்க இடிக்கப்படும் வரை தலைமறைவாக இருந்த நரசிம்மராவ் அதன் பிறகு தொலைக்காட்சியில் சோக முகத்தோடு உரையாற்றி தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காட்ட முயற்சித்தார்.

அடுத்த நாளே அவருடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறியது. பாராளுமன்றத்தில் பேசிய வாஜ்பாயும், உ.பி. முதல்வர் கல் யாண் சிங் அரசின் வழக்கறிஞரும் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்ட இசைவு தெரிவித்த போதும் அதற்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்புக் காட்டியது நரசிம்மராவ் அரசு வழக்கறிஞர்தான். அப்போதே எல்லோருக்கும் புரிந்து விட்டது நரசிம்மராவ் உள்ளத்தில் காவியையும் உடலில் கதரையும் அணிந்திருந்த வேஷக்காரன் என்று. 

போதாக்குறைக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் நரசிம்மராவின் தகவல் ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்ற பி.வி.ஆர்.கே. பிரசாத்தின் புத்தகம் தகர்த்தெறிந்தது.

உண்மையில் என்ன நிகழ்ந்தது (அசல்லு ஏமி ஜரிகின்டடே?) என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட புத்தகத் தில் 1992 டிசம்பர் 6க்குப் பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சி யத்தைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார். அதற்காக அரசியல் சார்பற்ற டிரஸ்ட் ஒன்றையும் துவக்கினார். ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர் கோவில் கட்ட முடியவில்லை. நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந் தால் ராமர் கோவிலைக் கட்டியிருப்பார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கூறிய அனைத்தும் பாபர் மஸ்ஜித் இடிப்பில் நரசிம்மராவின் பங்கை எடுத்துக் காட்டிய போதும், மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி 18 ஆண்டுகள் விசாரணை நடத்திய லிபரஹான் கமிஷனுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டது! அதனால்தான் பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றத்தில் ஈடுபட்ட 68 நபர்களின் பெயர் பட்டியலில் நரசிம்மராவின் பெயர் இடம் பெற வில்லை. இதனால் நரசிம்மராவ் விசுவாசிகள் புளகாங்கிதம் அடைந்து விட்டனர். நரசிம்மராவை உத்தமராக சித்தரிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்துத்துவாவினரை குற்றவாளியாக்கி விட்டு கதர்ச் சட்டை போட்டதனாலும், நரசிம்மராவின் பெயரை குறிப்பிடாமல் விட்டதனாலும் கொதித்தெழுந்த அசோக் சிங்கால் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

அசோக் சிங்கால் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, "ராமர் கோவில் கட்டுவதில் நரசிம்மராவின் பங்க ளிப்பில் எந்தவித சந்தேகத்துக்கும் இட மில்லை. அவரின் பங்கு மறைக் கவோ, மறுக்கவோ முடியாதது. பிரதமர் நரசிம்மராவ் பாபர் மஸ்ஜிதை இடிப்பதை தடுக்கும் நடவடிக் கைகளில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை. உடனே அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதையும் தடுக்க வில்லை. பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் மீண்டும் பள்ளியை கட்டித் தருவராக வாக்குறுதி கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு நடவடிக் கைகளில் நரசிம்மராவின் பங்கு குறித்து புளகாங்கிதம் கொள்ளலாம். மகிழ்ச்சியடையலாம். நன்றி சொல்லலாம். புகழலாம். பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். நரசிம்மராவின் துரோகத்தினால் எழுந்த சீற்றம், கொந்தளிப்பு ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தி லும் கனன்று கொண்டு இருக்கிறது.

இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் நரசிம்மராவை துரோகி, துரோகி என்று சொல்லுவான்... சாகும் வரை சொல்லிக் கொண்டே இருப்பான்.

- அபு சுபஹான்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.