மதத்தை அபினுக்கு ஒப்பிட்டார் காரல் மார்க்ஸ்.

அபினைப் போன்று மதம் மயக்கத்தைத் தரும், மதியிழக்கச் செய்யும், அமைதியைக் குலைக்கும், வன்முறைக்கு வழி கோலும்.

அதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது.

சமஸ்கிருதத்தை முன்னிறுத்தி மதவாத அரசியல் விளையாட்டில் தீவிரம் காட்டுகிறது பா.ஜ.க.வின் அரசு.

மாட்டுக் கறி சாப்பிடத் தடை என்கிறது மோடி அரசு. மாட்டுக் கறியை விட பன்றிக்கறி சாப்பிடலாம் என்கிறார் அர்ஜூன் சம்பத்.

மாட்டுக்கறியை விட நாய்க்கறி நன்றாக இருக்கும் என்கிறார் எச்.ராஜா.

மாட்டுக்கறியை விட மலம் சாப்பிடலாம் என்கிறார் இராம. கோபாலன் இவையெல்லாம் மதவாத அரசியலில் வன்முறையைத் தூண்டுவதாகவே இருக்கிறது.

மாணவர்கள் அரசியலில் இறங்கக் கூடாது என்கிறார் ஒரு பா.ஜ.க. தலைவர். அப்படி என்றால் அவர்களின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை இந்நேரம் கலைத்திருக்க வேண்டாமா?

அன்மையில் மாட்டிறைச்சி சாப்பிடத் தடை குறித்துக் கலந்து பேச சென்னை ஐ.ஐ.டி. வளாக இமாலய லான்ஸ் பகுதியில் மாணவர்கள் கூடினார்கள். அங்கே கொடுக்கப்பட்ட மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்டதற்காக மாணவர் சூரஜ் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இதுவரை காவல் துறை முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யவில்லை.

சூரஜ் மாட்டுக்கறி சாப்பிடதற்காக அவரின் தனி உரிமைக்கு எதிராக, அவர் மீது தாக்குதல் நடத்திய மணீஸ் குமார் மீது இதுவரை ஐ.ஐ.டி. நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இது நீதிமன்றத்தில் வழக்காக இப்பொழுது இருக்கிறது.

வட இந்திய ஐ.ஐ.டி.களிலும் இதுபோன்று நிகழ்ந்துள்ளன, இனி நிகழும் என்ற கூட எதிர்பாக்க வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் மதவாத அரசியல் விளையாட்டு.

மசூதி இடிப்பு, மாட்டிறைச்சி, சமஸ்கிருதம், தனிமனிதத் தாக்குதல் என்று மதவாத அச்ச உணர்வை வளர்க்கும் பா.ஜ.க. அரசு, அப்பொழுது அதை ஐ.ஐ.டி. மூலம் மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது, அது ஆபத்தில் தான் முடியும்.

இந்தியா காவிமயமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் அமித்ஷா.

இந்தியா காவிமயமாக வேண்டும் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான் காவிமயமாக வேண்டும் என்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

கத்தியின் கூரிய முனை எதிரியை மட்டும்தான் குறி வைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது.

தன்னையும் அது தாக்கிவிடும்.

மதமும் அப்படித் தான், அது ஒரு அபின்.

Pin It