நன்றிக்குப் பேர் போன நாயும்
உழைப்பிற்குப் பேர் போன நானும்
ஒரு வகையில் ஒரே தரம்தான்
இருவரும் வாசலில்தான்
வாசம் செய்கிறோம் !
நானோ!
மழையிலும் வெயிலிலும்
கல்லிலும் முள்ளிலும்
உனக்காகவே உழைத்து - என்
உடலை இரணமாக்கினேன் !
நீயோ
என் காதறுந்ததற்கு
ஆணியைப் பரிசளித்தாய்!
பேசக் கூடாதென
ஊசி கொண்டு தைத்தாய்!
நீயோ!
என்னை மதிப்பதே இல்லை!
நானோ!
உன்னைச் சுமக்க மறுப்பதேயில்லை!
அன்பே
நீ என்னைத் தீண்டாத போதுதான்
உணர்ந்தேன் இன்னும்
"தீண்டாமை"
தீரவில்லை என்று!
- தென்றல் பாரதி
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி
பெரம்பலூர்