1969 ஜனவரி 20 ஆம் நாள்...

உடல் நலிவுற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா. உற்சாகம் ததும்ப புன்னகை பூத்த முகத்துடன் மருத்துவமனையில் வந்து இறங்கிய அண்ணா, ஏராளமான புத்தகங்களுடன் உள்ளே நுழைந்தார்.

Annaduraiஅங்கு அவர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் ஏ.சி அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி தயாராக இருந்தது. அமெரிக்காவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் புற்றுநோய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அண்ணாவுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற பதைபதைப்பில் தமிழக மக்கள் ஆழ்ந்தனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

திமுக பொருளாளர் சாதிக் பாட்சா தமது அறிக்கைகளின் மூலம் அண்ணாவின் நிலை பற்றிய அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார். இத்தனை பரபரப்பும் பதற்றமும் சூழ்ந்து நிற்க அண்ணா மட்டும் அமைதியாக, தாம் கொண்டுவந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.

உயிர் போகும் வேளையில் கூட வாசிப்பை நிறுத்தாத அன்றைய முதல்வர் எங்கே..? உலகத் தரத்துடன் கூடிய ஒரு வாசிப்புச் சாலையை உருக்குலைக்க நினைக்கும் இன்றைய முதல்வர் எங்கே..?

புற்றுநோய் முற்றிய நிலையிலும் புத்தகங்களோடு வந்திறங்கி, மருத்துவமனையைக் கூட நூலகமாக மாற்றினார் அன்று அண்ணா! என்ன நோய் முற்றியதோ தெரியவில்லை, அந்த அண்ணாவின் பெயரால் அமைந்த அழகிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடிக்கிறார் இன்று அம்மா!

"ஜெயலலிதா முதல் முறை ஆண்டபோது 'தடா' அரசு நடத்தினார்; அவர் இரண்டாவது முறை ஆண்டபோது 'பொடா' அரசு நடத்தினார்; இப்போது மூன்றாம் முறை ஆளும்போது 'தடாலடி' அரசு நடத்துகிறார்" என அண்ணா நூலக மீட்புப் போராட்டத்தின்போது சொன்னார் மக்கள் கவிஞர் இன்குலாப்.

ஜெயலலிதாவின் தடா அரசு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களையும், அரச பயங்கரவாத எதிர்ப்பு சக்திகளையும் சூறையாடித் தீர்த்த‌து. ஜெயலலிதாவின் பொடா அரசு, மதவெறி எதிர்ப்புப் போராளிகளையும், தமிழீழ ஆர்வலர்களையும் சிறையில் பூட்டி ரசித்தது.
இப்போது ஜெயலலிதாவின் தடாலடி அரசு, விளிம்பு நிலை மக்களின் அறிவு வளங்களை சிதைத்தும் அழித்தும் வருகிறது. ஆக மொத்தத்தில் எப்போதுமே ஜெயா அரசு, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவே இயங்குகிறது.

கடந்த மே மாதம் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், கோட்டையில் இயங்கி வந்த செம்மொழி தமிழாய்வு நூலகத்தைச் சீர்குலைத்தார்; சமச்சீர் கல்விக்குத் தடை விதித்தார்; தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலையை மாற்றினார்; அரசு இடத்தில் இயங்கி வரும் முத்தமிழ்ப் பேரவையை காலி செய்ய உத்தரவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்குவேன் என அறிவிப்பு செய்தார். ஜெயலலிதாவின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னாலும் ஒரு பார்ப்பனீயச் சார்பும், இந்துத்துவ சாயலும் இருப்பதைக் காண முடிகிறது.

கல்வியும், கல்வியினால் கைகூடும் அதிகாரமும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களுக்கு எட்டாக் கனியாய் இருக்கின்றன. அடிப்படையிலேயே தரமான கல்வியைப் பெற்று, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக அநீதியைப் போக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தரமான பள்ளிக் கல்வியை வழங்க வழிசெய்கிறது சமச்சீர்க் கல்வி.

காலங்காலமாக கல்வியிலும், அரசு மற்றும் தனியார்த்துறை வேலை வாய்ப்புகளிலும் மேலாண்மை செலுத்தி வரும் உயர்சாதியினரின் பொருளாதார வளமையினால் அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளின் வாசனையைக் கூட நுகர முடியாமல் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு அறிவுசார் தளத்தில் எந்த வாய்ப்பும் எளிதில் கிடைப்பதில்லை. இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க நிலையை மாற்றி, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், மின்விளக்குகள் வெளிச்சத்தில், உலகின் அரிய நூல்களை எல்லாம் கைகளில் ஏந்திய நிலையில், அமைதியாக அமர்ந்து படிப்பதற்கும் அறிவை வளர்ப்பதற்கும் விளிம்புநிலை மக்களுக்கு வரமாக வாய்த்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

jayalalitha_cho_500

உயர்சாதிக் கலைஞர்களின் இசை அரங்கேற்றத்திற்கு ஒரு மியூசிக் அகாடமி இருக்கிறது. நாடகம் நடத்துவதற்கு ஒரு நாரதகாண சபா இருக்கிறது. நடனம் பயில்வதற்கு ஒரு கலாஷேத்ரா இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலைகளைப் பயிலவும், அரங்கேற்றவும் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் முத்தமிழ்ப் பேரவை. இயல் இசை நாடகத் துறையில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த கலைகளையும் கலைஞர்களையும் வார்த்தெடுக்கும் அரும்பணியை அப்பேரவை செய்து வருகிறது.

ஆக, சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், முத்தமிழ்ப் பேரவை ஆகிய எளிய மக்களின் அறிவு வளங்களின் மீதுதான் ஜெயலலிதா தொடர்ச்சியாக கைவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இத்தகைய அடாவடிகளை 'ஏதோ கருணாநிதி எதிர்ப்பு' என்ற வகையில் சுருக்கி விடுவதற்கு இங்கே எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் முயலுகின்றன. ஆனால், கருணாநிதி எதிர்ப்பு எனும் நிலையைத் தாண்டி ஒரு பார்ப்பனீய அஜெண்டாவை செயல்படுத்துவதற்கு அவர் முனைந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி எவரும் இங்கே பேசுவதில்லை.

கருணாநிதி தொடங்கியதை எல்லாம் ஜெயலலிதா முடக்கி விடுவார் என்றால், மதுக்கடைகளை ஏன் முடக்கவில்லை? அண்ணா மேம்பாலம் முதல் அனைத்துப் பாலங்களையும் ஏன் உடைக்கவில்லை? அரசு பொது மருத்துவமனைக்கு கருணாநிதி சூட்டிய ராஜீவ் காந்தியின் பெயரை ஏன் மாற்றவில்லை? எனவே ஜெயலலிதாவின் அதிரடிகளுக்கு 'கருணாநிதி எதிர்ப்பு' மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் பார்ப்பனீயம் மேலோங்கியிருக்கிறது.

'நான் படிக்கும் கல்வியை நீயும் படிப்பதா?' எனும் பார்ப்பனீய மனோபாவம்தான் சமச்சீர் கல்வியைச் சிதைக்கிறது. 'எனக்குச் சமமாக நீயும் வளர்வதா?' எனும் வெறுப்புணர்வுதான் முத்தமிழ்ப் பேரவையை சூறையாடுகிறது. 'எனக்குக் கிடைத்ததெல்லாம் உனக்கும் கிடைப்பதா?' எனும் ஆத்திரம்தான் அண்ணா நூலகத்தை நிர்மூலமாக்குகிறது.

இந்தக் காட்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே மறுபுறம் கிராமம்தோறும் சேரிகள்தோறும் ஆடு மாடுகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஒடுக்கப்பட்டோரின் அறிவு வளங்களை அழித்து, அவர்களை மீண்டும் ஆடு மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார். இராஜாஜி கண்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவம் தான், ஜெயலலிதாவின் இன்றைய நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

ஐஐடி வளாகத்தில் அமைந்திருக்கும் உயர்தர நூலகத்திற்குள் நுழைவதை, ஒரு சேரிச் சிறுவனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டின் வாசலைக் கூட, ஒரு ஏழை முஸ்லிம் மாணவனால் நெருங்க முடியாது. ஆனால், அண்ணா நூலகத்தில் சேரிச் சிறுவனால் நுழைய முடியும்; அங்கிருக்கும் அறிவுக் கருவூலங்களை அறிய முடியும்; உலக இலக்கியங்களோடு உறவாட முடியும். சர்ச் பார்க் கான்வென்டில் தரப்படும் உயர்தரக் கல்வியை, ஏழை முஸ்லிம் மாணவனால் சமச்சீர்க் கல்வியின் மூலம் பெற முடியும்.

இத்தகைய சமூகநீதிக்கு வேட்டு வைத்து, மீண்டும் மனுதர்ம ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜெயலலிதா முனைகிறார். அதனாலேயே சோவின், குருமூர்த்தியின், இராமகோபாலனின், தினமலரின் ஆதரவு மழையில் அவர் நனைகிறார்.

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

12 comments

12
viyapathy
இவ்வளவு காலமும் அம்மா செய்வதெல்லாம் கருணாநிதி எதிர்ப்பு செயல்கள் என்றே எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது அவரது செயல்களின் பின்னணி,
திலிப் நாராயணன்
/ஜெயலலிதாவின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னாலும் ஒரு பார்ப்பனீயச் சார்பும், இந்துத்துவ சாயலும் இருப்பதைக் காண முடிகிறது.
திராவிட இயக்கத்தின் தலைமயில் ஒரு பார்ப்பன/ மனுவாதி இருக்கிறார். அவர் மாற மாட்டார். அவரின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் மாற வேண்டும். அவ்வளவுதான்..
சக்தி வேல் .க.
பார்ப்பன அரசியலை முன் வைப்பார் எனத் தெரிந்தும் ,அவரை அந்த இடத்தில் அமர வைத்தது ? யார் , நாம் தானே!
thamizhchudar
சிரந்த கன்னொட்டம் .இலவசஙலைகாட்டி, உரிமைகலைப் பரிக்கிரார்.
எதிர்புக் குரல் கொடுக்கவென்டிய தமிழன், இலவசஙலில் பரவசம் காஙிரான்.
முனைமழுஙிய ஆயுதமாக முடஙிக்கிடக்கிரான்.

தமிழ்சுடர்
கி.பிரபா
செயலலிதா உழைக்கவும் இல்லை; உயர் சாதியைச் சேர்ந்தவரும் இல்லை.நம் வரிப்பணத்தில் உண்டு கொழுக்கும் பலரில் ஒருவரே. சோ,குருமூர்த்தி,இராமகோபாலன், தினமலர் இன்னும் பல. இவர்களின் சீர்கேடான வழிகாட்டுப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு பெண்ணாகவே காணமுடிகிறது.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும். அந்த நிலையில் "செத்தாருள்" என்பதே மிகப் பொருத்தமானதாக உள்ளது.
thamil
அவரது முடிவுகளை விமர்சிப்பவர் அவர் 69% இட ஒதுக்கீட்டில் உறுதியாக இருப்பதை ஏன் மறைக்கிறார்.ஜெயலலிதாவின் சில முடிவுகள் தவறானவை.ஜெயல்லிதா தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட,தாழத்தப்பட்ட பிரிவினரின் நலனை புறக்கணிக்கவில்லை. உயர் சாதியினருக்கு எதையும் வாரி வழங்கவில்லை.முஸ்லீம்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை.ஷாநாவாஸின் அரசியல் என்ன - முஸ்லீம்கள்+தலித்கள் கூட்டணி அமைத்து முஸ்லீம் இயக்கத்தின் தலைமையில் தமிழகம் ஆளப்பட வேண்டும்.

ஷாநாவாஸ் தலிபான்களை,பாகிஸ்தானை விமர்சிக்க மாட்டார்.இந்து அரசியல்வாதிகளைத்தான் விமர்சிப்பார். ஐஐடியில் முஸ்லீம்கள் படிக்கிறார்கள். அங்கு மத வேறுபாடு இல்லை.முஸ்லீம் அறக்கட்டளையும் கல்வி நிறுவனண்க்களை நடத்துகின்றன, அதில் ஏழை முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளதா. ஐஐடியில் 27% இடங்கள் பிற்பட்டோருக்கு உண்டு, தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.சிறுபான்மையோர் நடத்தில் கல்வி நிலையங்களைல் இவை கிடையாது.அந்த உண்மையை மறைத்து எழுதுகிறார்.
தலித்கள் முதுகில் சவாரி செய்ய நினைப்பவர்
தலிதகளுக்கு முஸ்லீம்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இட ஒதுக்கீடு தேவை என்று எழுதுவாரா.இவர் போன்ற குழப்பவாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பீர்.
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
நியாயமான கேள்விகளும் நியாபகபடுத்திய பழைய நினைவுகளும்... சபாஷ் ஷாநவாஸ்
ஆம் பேரறிஞர் அண்ணா அவர்களை போன்ற மக்கள் தலைவர்கள் ஆண்ட தமிழகத்தை இன்று பே...???
வாசிக்கும் தலைமுறை தடை இல்லாமல் வளர்ந்தால்தான் எதிர்காலம் சிறப்பாகும் இந்த அம்மையார் அவர்களின்
ஆட்சி என்னவோ வாசிப்பிற்க்குத்தான் பலவகைகளில் தடை வருகிறது... இது யாரை திருப்திபடுத்த என்பதை
தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும்...

மிஸ்டர் தமிழ் உங்கள் பின்னூட்டத்தில் ஏன் இவ்வளவு அபத்தம்... அரசு எந்திரங்கள் முறையாக இயங்க வேண்டுமென்பதுதான்
எம்மை போன்ற ஷாநவாஸ் போன்றவர்களின் ஆவல்... அதனைத்தான் தோழர் ஷாநவாஸ் துல்லியமாக பதிவு செய்துள்ளார்...
அரசின் ஒதுக்கீடுகள் முறையாக இல்லை என்கிற வாதத்தின்போது தனியார் நிறுவனங்களை காரணம் சொல்வது அபத்தம் அல்லவா...

இட ஒதுக்கீடுகள் ஆட்சியாளர்களின் கபட நாடகம் என்பதற்கு பல சான்றுகளை கூறமுடியும் மிஸ்டர் தமிழ்...
தலித்துகளின் முதுகில் ஏறி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமோ தேவையோ முஸ்லிம்களுக்கு இல்லை
ஆனால் ஷாநவாஸ் போன்றவர்களின் எழுச்சிமிகு தலித் மற்றும் முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த அரசியல் பரப்புரைகள்
உங்கள் போன்ற ஆதிக்க வெறியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்த்தியதற்கு மிக்க நன்றி...
ஆம் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்களாகிய தலித்துகளும் முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டுவிட்டால் ஆதிக்க சக்திகள்
மீண்டும் கைபர் மற்றும் போலன் கணவாய்களுக்கு வழி தேடவேண்டியதுதான்... இந்திய நாட்டின் இறையாண்மையை
பற்றிய விவாதத்தில் பாக்கிஸ்தானும் தாலிபான்களும் வரவேண்டிய அவசியம் என்ன?? மிஸ்டர் தமிழ் உங்களை போன்றவர்கள்
எவ்வளவோ பிரச்சாரங்களை முஸ்லிம்களுக்கு எதிராக இம்மண்ணில் விதைத்தும் வெற்றிபெற இயலவில்லை... இனியும் முடியாது...

தலித்துகளின் முதுகில் நாங்கள் சவாரி செய்வதாக சொல்லும் நீங்கள் ஒரு தலித் சமூகத்தவனின் தலைமையை ஏற்க்க தயாரா...?
எந்த முஸ்லிமுடைய தலைமையையும் எந்த த;லித்தும் தமிழ் மண்ணில் ஏற்க்கவில்லை மாறாக முஸ்லிம்கள்தான் தலித்துகளின்
தலைமையை ஏற்றுள்ளனர்... ஆம் உண்மையாக இம்மண்ணில் சமத்துவத்தை நுகருபவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதை
உங்களுக்கு அறியத்தருகிறேன்...
IIT Student
//ஐஐடியில் 27% இடங்கள் பிற்பட்டோருக்கு உண்டு, தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு//

இதை ஐஐடிக்கள் ஒரு போதும் பின்பற்றுவதில்லை. என் துறையில், 6 பேரைத் தவிர அனைத்து ஆசிரியர்களும் பார்ப்பனர்களே. இந்த ஆறு பேரில் ஒருவர் கூட தலித் கிடையாது.

இது தான் உண்மை. வேண்டுமானால் நீங்கள் இங்கு நேரில் வந்து பார்க்கலாம்.

பார்ப்பனீயத்திற்கு மற்றுமோர் உதாரணம். நீங்களோ, நானோ நினைத்தால் கூட, சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முடியாது. BC இந்துக்களாலும் முடியாது. இது போராட்டம் நடைபெற்ற பிறகும் கூட. அவர்களின் சிலைக்குத் தீட்டாம்?!!
Thamizhmaran
எண்ணிக்கையில் சிறிய தொகையாக இருந்து கொண்டு இம்மண்ணின் மைந்தர்களாகிய எம்மை மிகக்கேவலமாக நடாத்தும் பார்ப்ப்ன கும்பல்களையும் அன்னிய அதிகார வர்க்கத்தினரையும் துரத்தியடிக்கும் நாளை நாம் உருவாக்க வேண்டும்.அந்த நாளுக்காய் நாம் உழைக்க வேண்டும்.
kumar
போங்கடா நீங்கலும்.............. உங்கள் website um....
பிறைநதிபுரத்தான்
பார்ப்பன அரசியலை செயலலிதா முன் வைப்பார் எனத் தெரிந்தும் அவரை அந்த இடத்தில் அமர வைத்தது எது? யார் காரணம்?

தமிழக மக்களின் மனதில் உருவாகிய 'கருனாநிதி குடும்ப எதிர்ப்பு அலைதான்' செல்வியின் கையில் செங்கோலை கொடுத்திருக்கிறது.

அவரது குடும்பத்தினர் அடித்த கொள்ளைப்பணத்தில் சிறுபங்கைக்கொண்டு மாவட்டத்திற்கொரு அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்திருக்க முடியும். செய்தார முத்தமிழ் காவலர்?

அதீத மொழிப்பற்று காரணமாக அவர் அரங்கேற்றிய செம்மொழி மாநாட்டில் - தமிழைப்பாடியவர்களை விட அவர் புகழ்பாடியவர்கள்தானே அதிகம்.

சமூக அநீதியைப் போக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தரமான பள்ளிக் கல்வியை வழங்க வழிசெய்கிறது சமச்சீர்க் கல்வி. உண்மைதான். ஆனால் கட்டணக் கொள்ளையடித்து கல்லா கட்டிய கல்வி கடைகளை கண்டுகொள்ளாமல் விட்டது கலைஞர் அரசுதான்.

கலைஞர் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொடுத்து தமிழர்களை வீட்டிலேயே முடக்கினார் - ஆடு மாடுகளை இலவசமாகக் கொடுத்துக் செல்வி.ஜெயலலிதா அலைய விடுகிறார்.

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சமூகநீதிக்கு வேட்டு வைத்து, மீண்டும் மனுதர்ம ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜெயலலிதா முனைகிறார் என்றால் அதற்கு முழுமுதற்காரணம்- டாக்டர் கலைஞரும் - அவரின் குடும்ப அரசியலுமே!

செல்விக்கும் - கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை - இருவரும் அரசியல் வாதிகள் என்பது மட்டுமல்ல - இருவரும் தமிழின துரோகிகள்..
THALITH NESAN
கோடானுகோடி செலவு செய்து லட்சோபலட்சம் நூல்கலை திரட்டி தமிழ் மக்கலை வாசிக்க தூன்டினால் ... இங்கோ இலவசம் தந்து யாசிக்க தூன்டும் அவலம்... தமிழ் மக்கலை யோசிக்க வைத்த நவாசுக்கு நன்ரி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.