ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து 'கேரவன்' பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும், சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது.

அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் "சீனிவாச முரளிதர்." பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த மனித உரிமை மீறல்களை புலனாய்வு செய்து அறிக்கை தரும் மூவர் குழுவுக்கு இவர் தலைமை தாங்குகிறார். 1980 களில் சென்னையில் வழக்கறிஞராக தொழிலை தொடங்கியவர் பிறகு உச்சநீதிமன்றம் சென்று மனித உரிமைகளுக்கான வழக்குகளில் வாதாடி மனித உரிமையாளராக தன்னை அடையாளப் படுத்தியவர்; மனித உரிமை ஆணையத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவர். உச்சநீதிமன்ற வளாகத்தில் தனது மாருதி கார் வாகனத்தையே அலுவலகமாக்கி மனித உரிமைகளுக்கான வழக்குகளை நடத்தி புகழ் பெற்றவர்.

கோபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கும், டெல்லியில் சீக்கியர்கள் படுகொலையை நடத்திய குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதிலும் உறுதியாக நின்று தீர்ப்பு வழங்கியவர். அவரது திறமையால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியானார். நீதிபதிகளுக்கு தரப்படும் காலனி கால மரபுகளை மறுத்ததோடு தன்னை 'சார்' என்று அழைத்தால் போதும் என்று அறிவுறுத்தியவர்.

2020 ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரும் மதக் கலவரம் வெடித்தது. மூன்று பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சால் உருவான இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். காவல்துறையின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உத்தரவை அவர் பிறப்பித்தார். அதன் காரணமாக நள்ளிரவில் ஒன்றிய பாஜக ஆட்சி அவரை இடமாற்றம் செய்து பழி வாங்கியது. உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் திறமையான இந்த நீதிபதியை தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்த போது தமிழ்நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க ஒன்றிய பாஜக ஆட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் வந்துவிட்டால் தங்களின் மதவாத அரசியலை நடத்த முடியாது என்ற ஒரே காரணத்தினால் ஒன்றிய ஆட்சி இந்த நியமனத்தை ஏற்க மறுத்தது. வேறு வழி இன்றி கொலிஜியம் இவரை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றியது. 2023 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் வழக்கறிஞர் திரண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்ததை வழக்கறிஞர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். பதவி ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளில் இப்போது ஐ.நா. அவரை அழைத்து முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறது.

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மனித உரிமைகளுக்காக சட்டத்தின் வழி நிற்கும் நீதிபதிகளுக்கு அவமதிப்பு! இதுவே இந்துத்துவத்தின் மனுநீதி!"

- விடுதலை இராசேந்திரன்

***

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா?

ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. தீபம் ஏற்றாவிட்டால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று எச்சரித்த சுவாமிநாதன், நீதிபதி தன் எதிர்ப்புகளைக் கண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார். அதேசமயம், தீபத்திருவிழாவே முடிந்த பின்பும் விளக்கு ஏற்றுவது வழக்கம் இல்லை என்று திருப்பரங்குன்றம் கோயில் தரப்பு அளித்த பதிலை, அரசு வாதமாக வைத்தபோது, இது தீபம் ஏற்றும் பிரச்னை மட்டுமல்ல, சொத்துரிமை பிரச்னையும் கூட என தனது ஆர்.எஸ்.எஸ். புத்தியை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார் அவர். இந்த மதவாத நீதிபதி இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என்று தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். அந்த செய்திகள் கீழே. 

dvk against gr swaminathanசென்னை: மதக் கலவரத்தை தூண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், டிச-8,2025 காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி ஒருங்கிணைத்தார். பாடகர் வீரமணி இசையில், பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் பாடல்களைப் பாடினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா, U2BRUTUS மைனர், இடதுசாரி சிந்தனையாளர் மருதையன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந.தட்சிணாமூர்த்தி மாவட்டத் துணைச்செயலாளர்கள் இராவணன், ஆ.வ. வேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், கடலூர் சிவகுமார், இரண்யா தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, மயிலை பகுதித் தோழர்கள் சுகுமார், மனோகர், சிவா, பிரவீன், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், கவுதம் ஷாம் (Dravidian Stock பதிப்பகம்), அருள்தாஸ், துரை உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு வடக்கு: மாவட்டக் கழகத்தின் சார்பில், ‘மதக்கலவரத்தைத் தூண்டும் ஜி.ஆர். சுவாமிநாதனே பதவி விலகு!’ கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர்-7, 2025 ஞாயிறு காலை 11 மணியளவில் கோபி ஜியான் திரையரங்கம் அருகில் நடைபெற்றது. செல்வகுமார் (மாவட்டச் செயலாளர்) தலைமை ஏற்க, வினோத் (பவானி ஒன்றியச் செயலாளர்), ஜெகநாதன் (கோபி ஒன்றியத் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமைக் கழகம் கந்தசாமி, குரைஷி அப்துல்லா விசிக, பசுபதி (ஆதித்தமிழர் பேரவை) , எஸ் சர்ஜித் ரகுமான் (எஸ்டிபிஅய் தொகுதி செயலாளர்) , ஸ்டாலின் (மே 17), அப்துல்லா (தமிழ்ப் புலிகள் கட்சி), ரமேஷ் (பு.இ.மு), துரையன் (திஇதபே) ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டனவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கி கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

நிவாஸ் (மாவட்ட அமைப்பாளர்) நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் விசிக, ஆதித்தமிழர் பேரவை, எஸ்.டி.பி.அய் கட்சி, மே 17, தமிழ்ப் புலிகள் கட்சி, பு.இ.மு, திஇதபே உள்ளிட்ட தோழமைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றமே, மதக் கலவரவத்தைத் தூண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்! எனும் முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 9, 2025 செவ்வாய் மாலை 05.00 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகில் துரைசாமி (கழகப் பொருளாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் தனபால், மாதவன், இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகில் ராசு (மாவட்டத் தலைவர்) கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்.

பரிமளராசன் (சமூக ஊடகப் பொறுப்பாளர்), மாநில பேச்சாளர் சேக் அலாவுதீன் (எஸ்டிபிஅய்), அபுசாலி (ம.ம.க மாவட்டச் செயலாளர்), ஏ.பி ஆர்.மூர்த்தி (வி. சி.க. மாவட்டச் செயலாளர்), பாரதி சுப்பராயன் (தலைவர், நவீன மனிதர் குழு), தமிழ் அமுதன் (மார்க்சிய முற்போக்குப் பேரவை), விடுதலை செல்வன் (துணைப் பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை), கார்மேகம் (மக்கள் பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கழகப் பொருளாளர் துரைசாமி நிறைவுரையாற்றினார். மாதவன் (மாநகரத் தலைவர்) நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். மாரிமுத்து (மாநகர துணைத் தலைவர்) நன்றி கூறினார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.