தமிழ்நாட்டுக்கு விடுதலைப் புலிகளால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறார், தென் மண்டல ராணுவத் தளபதி. தமிழக அரசின் காவல் துறையோ - விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கம் முதன்முதலாக தடை செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ‘தமிழர் மீட்சிப் படை’, ‘தமிழர் விடுதலைப்படை’ என்ற அமைப்புகளுடன் சேர்ந்து, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டை துண்டாட சதி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழர் மீட்சிப்படை என்று உளவுத் துறையின் கற்பனையில் உருவான அமைப்புகள் ஏதும் தமிழகத்தில் இப்போது செயல்படவில்லை.

ஆனாலும் ஒவ்வொரு முறையும் தடையை நீடிக்க, காரணத்தைத் தேடும் உளவுத் துறை, தடை நீடிக்கப்பட வேண்டிய காலகட்டங்களில், ‘விடுதலைப்புலிகள் கைது’ என்ற செய்தியைப் பரப்பி, யாரோ சிலரைக் கைது செய்து, விடுதலைப்புலிகள் கைது என்று அறிவிப்பது வழக்கமாகிவிட்டது.

2004-2005 ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் நடமாடுவதாக குறிப்பிட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடனே இதை மறுத்து வேண்டுமென்றே தனது ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறது என்றார். சுப்பிரமணிய சாமியும், ஜெயலலிதா ஆட்சியை குறை கூறினார். இந்த செய்திகள் வெளியானது - 2005 ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி (ஆதாரம் - ‘இந்து’).

விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையைச் சார்ந்த பெண் ஒருவரால் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து ஏற்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு செய்தி அனுப்பியது. இத்தகவல் அனுப்பப்பட்டது 2005 மே 19 ஆம் தேதி. இதுவும் மே மாதத்தில் தான்.

2002 ஆம் ஆண்டு அதே மே மாதம் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள், இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு வருவதாக ‘தலித்ஸ்தான்’ என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துள்ள வீரப்பன், இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், இந்த இணையதளம் கூறியுள்ளதாகவும் கூறி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட செய்திகளை விடுதலைப் புலிகள் தடை நீடிக்கப்பட வேண்டிய மே மாதங்களில் தவறாமல் உருவாக்குவது மத்திய அரசின் வழக்கம். அரசு வெளியிடா விட்டால் ‘இந்து’ ஏடு ஒரு செய்தியை உருவாக்கி வெளியிடும். மே, 16, 2000 ஆம் ஆண்டில் இதேபோல் இந்திய இறையாண்மைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்ற செய்தியை ‘இந்து’ வெளியிட்டது.

2005 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏடு வெளியிட்ட ஒரு செய்திப்படி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவரை மதுரை உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது. ராமேசுவரம் கடற்கரையில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் இரண்டே இரண்டு ஜெல்லட்டின் குச்சிகளும், ஒரு சிறிய மின் கம்பியும் (ஒயர்), 2 பிளாஸ்டிக் கேன்களும், ஒரு தீப்பெட்டியும் கைப்பற்றப்பட்டதாக ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. மேற்குறிப்பிட்ட ‘பயங்கர ஆயுதங்களை’ கடத்த முயன்றதாக என்.போசு, ராசா என்ற இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது; அதை நீதிமன்றம் ரத்து செய்தது.

மே மாதம் நெருங்கும் போதெல்லாம் இரண்டாண்டுக்கு ஒரு முறை பொய்யான வழக்குகள் போடுதல், விடுதலைப் புலிகள் கைது - நாட்டை துண்டாட சதி என்ற செய்திகளை உருவாக்குதல்; என்ற அறிவிப்புகள் வந்து விடுகின்றன. இது விடுதலை புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் வழக்கமான நாடகங்களாகி விட்டன!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.