கருநாடகாவில் பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகளில் ‘உருண்டு புரளும்’ சடங்குகளுக்கு கருநாடக அரசு தடை விதித்தது. நீண்டகாலமாக நடக்கும் இந்த அய்தீகத்தை தடை செய்யக் கூடாது என்று பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் கரூர் மாவட்டம் நெடூர் கிராமத்தில் சதாசிவ பிரமேத்திரா கோயிலில் எச்சில் இலை யில் உருளும் சடங்கு 100 ஆண்டுகளாக நடந்து வந்தது. வி. தலித் பாண்டியன் என்பவர் இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். நீதிமன்றம் பார்ப்பனர் திணித்த இந்த இழிவான சடங்குக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் எ.ஸ் மாணிக்கம், வி.எம். வேலுமணி ஆகியோர் இந்தத் தடையை விதித்துள்ளனர்.

தாலி நீக்கம் : பழ. கருப்பையா கேள்வி

அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா, ‘நக்கீரன்’ வார இதழில் எழுதிய கட்டுரையில், தாலி அகற்றும் நிகழ்வை எதிர்க்கும் மதவெறி சக்திகளை கடுமையாக சாடியுள்ளார். தாலியை அணிந்து கொண்டவர்கள் அதை அகற்று கிறார்கள். தாலியை கட்டியவரே அதற்கு ஒப்புதல் தருகிறார்கள். இதில் அரசு வழக்கறிஞர் மனம் ஏன் புண்பட வேண்டும்? - என்று அந்தக் கட்டுரை யில் கேட்டுள்ளார். பழ. கருப்பையா, தனது வீட்டில் மனைவியின் தங்கத் தாலி திருட்டுப் போனபோது, 10 பவுன் நகை போய்விட்டதே என்று தனது மனைவி வருந்தினாரே தவிர, தாலி போய்விட்டதே என்று கவலைப்பட வில்லை என்ற தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“எல்லாம் அவன் செயல்”

பஞ்சாப் மாநிலம் மோசா நகரில் கடந்த வாரம் ஓடும் பேருந்தில் தாயுடன் பயணம் செய்தார் ஒரு பெண். அப்போது சில இளைஞர்களின் பாலியல் தொல்லைக்கு பயந்து, ஓடும் பேருந்திலிருந்து குதித்ததால் மரண மடைந்தார். அவரது தாயாரும் படு காயமடைந்தார். அந்தப் பேருந்து மாநில துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலுக்கு சொந்தமானது. இந்தக் கொடூர மரணம் குறித்துப் பேசியுள்ள பஞ்சாப் கல்வித் துறை அமைச்சர் சுர்ஜித்சிங் ரஜ்ரா, இந்தப் பெண் பலியானது, கடவுளின் விருப்பப்படி நடந்துள்ளது. இதற்கு அரசு மீது பழி போடக் கூடாது என்று கூறியிருக் கிறார். அரசியல் கட்சிகள் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

‘திவ்ய புத்ர ஜீவக் பீஜ்’

யோகா குரு ராம்தேவ் பா.ஜ.க. ஆட்சியின் செல்வாக்கு பெற்ற பிரமுகர். அரியானா பா.ஜ.க. ஆட்சி அவருக்கு ‘காபினட்’ அமைச்சருக்கு உரிய ஏற்பை வழங்கியது. அமைச்சரவைக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்ததால், அவர், அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டார். செம்மரங்களை ரூ.250 கோடி அளவுக்கு ஏலத்தில் எடுத்ததில் இந்தியாவில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

‘ராம் தேவ்’ தனது மருந்து உற்பத்தி நிறுவனத்துக்காக ஏலம் எடுத்தாராம். இப்போது ஆண் குழந்தைகள் பிறக்க விரும்புவோருக்கு மருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியிருக் கிறாராம். அதற்கு சூட்டியுள்ள பெயர் தான் ‘திவ்யபுத்ர ஜீவக் பீஜ்’. இது சமஸ்கிருதப் பெயர். ஒரு பக்கம் மோடி ஆட்சி, ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ (பேட்டி பச்சாவோ பாதோவ்) என்ற திட்டத்தை அறிமுகப் படுத்திக் கொண்டு மற்றொரு பக்கம் ஆண் குழந்தை பெறுவதற்கான மருந்து என்று அறிவியலுக்கு எதிரான ஒரு கருத்தை வர்த்தகமாக்கிடும் ‘ராம் தேவ்’வையும் ஆதரிக்கலாமா என்று மாநிலங் களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

‘பெண்கள்’ எதிர்ப்பு என்பதே - ‘இந்துத்துவா’ கொள்கை தான். இந்து சாஸ்திரங்கள் ‘பெண்களை’ சம உரிமையுள்ளவர் களாக அங்கீகரிப்பதில்லை. இப் போதும் ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் உறுப்பினராக முடியாது. அந்த ‘தத்துவத்தின்’ அடிப்படையில்; தான் ராம்தேவும், லேகிய விற்பனையை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அன்னா அசாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ராம்தேவ் பங்கேற்ற போது, போலீசார் தடியடி நடத்தினர். அப்போது பெண்களுக்கான ‘சுடிதார்’ உடையை அணிந்து கொண்டு இரவோடு இரவாக கூட்டத்திலிருந்து ஓடியவர் இதே ‘ராம்தேவ்’தான். இப்போது ஆண் பிள்ளைகளுக்கு மருந்து தயாரிக்கிறார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.