காலி புட்டியில் அடைத்துப் பரிசளிக்கப்பட்ட
இரவு ஒன்றை
விருப்பம் உந்தப் பருகினார்கள் அவர்கள்

ஒரு யுவதி
யுவன்
நடுவயதினள் தவிர
ஒரு கனவானும்

பருவக் குறுகுறுப்பின் மர்மம் அறிந்தாள்
யுவதி
இரவைச் சுவைத்த பின்
யுவனின் தேடலில் நிர்வாணமடைந்தாள்
ஒரு தேவதை
கொஞ்சம் இரவை விழுங்கிய பிறகு
சற்றே நீண்ட கள்ளப் புணர்வில்
கண்ணீர் மல்கி விம்மினாள்
நடுவயதுக்காரி மேலும்
அவ்விரவைக் குடித்த
பெருந்தொப்பைக் கனவான்
மல்லார்ந்தபடி ஸ்கலிதமடைந்தான்
அள்ளக் குறையாச் செல்வத்தின் மீது

ஒரு மிடறே சரித்த
சிறுமியின் கனவிலோ
காட்டுமலர்கள் விரிந்த கானக அதிகாலையாய் புலர்கிறது
புட்டிக்குள் அடைந்திருந்த மீதி இரவு...

 

மரியாவும் ஜோசஃப்புமாக இருந்தவர்கள்...

இருபது வயதேயான ஜோசஃப் அலைந்தபடியிருந்தான்
இருபது வருடங்களுக்கும் மேலாக அந்நாவலுக்குள்
மூன்று கொலைகளையும்
ஐந்து வன்புணர்ச்சிகளையும் தடயமெதுவுமின்றி
முடித்திருந்த ஜோசஃப்
போலீஸின் கண்களுக்கெப்போதும் அகப்படாமலேயிருந்தான்
அவனைக் காட்டிக் கொடுக்க எவருமே துணியாததால்
நாவலாசிரியனுக்கு டிமிக்கி கொடுத்து மேலும்
ஐந்து கொலைகள் ஏழு வல்லுறவுகளையும் நிகழ்த்தி
வாசகராயன்றி தமது விசிறிகளாகிச் சிலாகித்தவர்களுக்கு
கிளர்ச்சியூட்டியபடியும் இருந்தான்

கிழிந்த குடையொன்றின் கீழிருந்த மரியாவை
முலை சுருங்கிய கிறுக்கிச்சியென்றனர் அந்நெடுங்கதையை வாசித்தவர்கள் அவளோ
நடைதளர்ந்து அமர்ந்த சாக்கடையோரம்
எப்போதேனும் விழுகிற நாணயங்களை மட்டும்
சேகரித்து வருகிறாள் பல வருடங்களாக
மூக்கைப் பொத்தியவாறே எல்லோரும் அவளைக்
கடப்பது போல வாசகர்களும்
கடப்பதை அவள் விரும்பவில்லையெனினும்
கறாராகச் சொல்லியிருந்தான் கதாசிரியன் பாத்திரப் படைப்பை மாற்ற இயலாதென

நகரில்
கொலைகளும் மாயமாகும் இளம் பெண்களும்
அதிகரிக்க அதிகரிக்க
போலீஸின் கெடுபிடியால் குறைந்தபடியிருந்தது
மரியாவின் தட்டில் விழும் நாணயங்கள்

நாட்பட்ட பசியில் சுருண்டிருந்த மரியாவையும்
மூன்றாந்தர
மதுவிடுதியில் ஒளிந்திருந்த ஜோசஃப்பையும்
அழைத்து வந்திருந்தேன் எனது தோட்டத்திற்கு

பிச்சையெடுத்துப் பிழைக்கவிருக்கும் வாழ்வறியா
மரியாவும்
செய்யவிருக்கிற முதல் கொலைக்கு வெகு அப்பால்
ஜோசஃப்பும்
உயர உயரப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
தத்தமது பால்யத்தில்...

- சம்பு

Pin It