புவியியலைப் புரிந்து கொள்வோம்

-கேத்தரின்

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்

சென்னை_-18

பக்:48 | ரூ.20/-

பள்ளிக் கல்வியில் பல சுவையான இயல்கள் வேப்பங்காயாக மாறிவிடுகிறது. புவியியலும் அப்படிதான். நமது இயல்பு வாழ்க்கையோடு பொருந்திய செய்திகள்தான் என்றாலும் பள்ளிப் பாடத்தில் இவை விளக்கும் விதம் மாணவரை விலகச் செய்துவிடுகிறது.

புவியியல் செய்திகளை வெகு அழகாக, நேர்த்தியாக, எளிமையாக எல்லோரும் ருசிக்கும் விதமாக கேத்தரின் இந்நூலில் விளக்கி இருக்கிறார். அழகு தமிழிலே ஆழமான செய்திகளை விளக்கும் திறமை இந்த நூலில் புலப்படுகிறது. அறிவியல் தமிழ் உலகம் பெற்றுள்ள புதுவரவு - கேத்தரின்.

தமிழகத்தை குலுக்கிய சுனாமியில் துவங்கி புவியின் உள் அமைப்பை விளக்கி, சூரிய குடும்பத்தில் புவியின் இருப்பிடத்தை சுட்டி, புவியின் மீது கற்பனையாக தீட்டப்படும் அட்சரேகை, தீர்க்க ரேகையைக் கூறி புவியின் இடம்தோறும் காலம் வேறுபடும் என்பதை விளக்கியுள்ளார் கேத்தரின். மேலும் காற்று, புயல், மின்னல், இடி போன்ற இயற்கை நிகழ்வுகளையும், மண், கனிவளம் முதலிய புவியியல் வளங்களையும் கூறியுள்ளார் இவர்.

"பூமிக்குள் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரிக்கும்போது மாக்மா ஏதாவது ஒரு வழியில் வெளிவர முயல்கிறது. (நமது வீட்டு பிரஷர் குக்கர் மாதிரி) இதுவே எரிமலையாகிறது" என கேத்தரின் விளக்குவது அருமை. எளிமை நடைமுறை, இயல்பு வாழ்க்கை உவமைகள் வழியாக அறிவியலை விளக்குவது என்பது அறிவியல் பரப்புதலின் கோட்பாடு - அழகியல். இந்த அழகியல் அருமையாக கேத்தரின் இந்த நூலில் எங்கும் காணக் கிடைக்கிறது. எனவேதான் இந்த நூலைப் படிக்கத் துவங்கினால் தொய்வு இன்றி வாசிக்க முடிகிறது.

'வளம்' என்பதை பலரும் அரசியல் பார்வையில் பார்ப்பதில்லை. கேத்தரின் அவர்கள் வளம் என்பது என்ன என்பதை கேள்வி கேட்டு இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு வளர்ச்சி இன்றைய தொழில் வளர்ச்சியை சரியாக சாடுகிறார். வேலைவாய்ப்புதான் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வளர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டும் அவர் "நாம் பயணம் செய்யும் பாதையை மாற்றிட வேண்டும்" எனவும் கூறுவது மெச்சத்தக்கது.

- த.வி. வெங்கடேஸ்வரன்

*****

வசை தீர எண்ணி

(பஞ்சாட்சரம் செல்வராஜன்)

அன்னை சாரதா பதிப்பகம்,

5050/1, பொன்னி காலனி,

அண்ணாநகர் மேற்கு, சென்னை -40

பக்: 152 ரூ. 70/-

சிறுகதை என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா, சிறுகதைகளும் ஒன்றில்லை. ஒவ்வொரு கதையும் தன்னளவில் மாறுபட்டிருக்கும். மாறுபடுவது என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. அதே சிறுகதையைப் படிக்க வைக்கிறது. கதைகள் பழையது; புதியது என்பதைத் தகர்த்து விடுகிறது.

வசைதீர எண்ணி - என்பது பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறுகதை பத்தொன்பதின் தொகுதி. வாழ்க்கை என்பதுதான் எல்லா சிறுகதைகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. எல்லோர்க்கும் பொதுவாக இருக்கும் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்பட்டிருப்பதை நுட்பமான தொனியில் ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

மனிதன் என்று பொதுவாக அறியப்படும் மனிதன் உள்ளே இருக்கும் மனிதனை அறிய வைக்கும் முறையில் மைக்கேல் இருக்கிறான். மைக்கேல் யார்? அவன் வாழ்க்கை முறை என்ன? அதெல்லாம் படைப்பு என்கிறபோது அவசியம் இல்லாமல் போகிறது. சொல்லப்படும் முறையில் மைக்கேல் கவனம் பெறுகிறான். சமூக நீதிகள் எதுவும் இலக்கியத்திற்குக் கிடையாது. இலக்கியம் என்பதற்கு இலக்கியப் படைப்பே நீதியை அமைத்துக் கொள்கிறது. அது சொல்லப்படும் முறையில் மதிப்பு பெற்றுவிடுகிறது.

வசை தீர எண்ணி - தொகுப்புக் கதைகளில் பல மருத்துவப்பிரச்சனைகள் சார்ந்த கதைகள் நோய், வைத்தியம் என்று இருக்கின்றன. ஆனால் அவை அதில் சிக்குவதில்லை. மனிதர்கள் நோய் வந்தபோது மனதிற்குள் என்னென்ன நேர்கிறது என்பதை நேர்ந்த முறையில் சொல்கின்றவை அதற்கோர் எடுத்துக்காட்டு. வசை தீர எண்ணி - பிரச்சனை நோயில் இருக்கிறதா - மனிதனின் மனத்தில் இருக்கிறதா - என்று யோசிக்க வைக்கும் கதை. வாழ்க்கை எத்தனை சிக்கலுக்கு உள்ளாகிறது; சிக்கல் எதில் இருந்து வருகிறது என்பதை எல்லோர்க்கும் சொல்வது மாதிரி ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

ஆசிரியரின் தனிப்பட்ட பார்வையும் கதை சொல்லும் விதமும், மொழியும் கதைக்கு ஓர் அழுத்தமும் சூழலும் கொடுக்கின்றன. 2009-ஆம் ஆண்டு படித்த புத்தகங்களில் குறிப்பிட வேண்டியதும் - பிடித்த புத்தகம் வசைதீர எண்ணி என்ற சிறுகதைத் தொகுப்பு இருக்கிறது.

- சா. கந்தசாமி

Pin It