இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பாசன நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினர். குமிழித் தூம்புகள் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன என்று வரலாற்று ஆய்வாளர்  குடவாயில் பாலசுப்ரமணியன் பேசினார். 

திறனாய்வுக் கூட்டம் 

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், வழக்கறிஞர் பாலமுருகன் இயக்கிய “நொய்யல் - தொலைந்த தடங்கள்” என்ற ஆவணப்படம் திரையிடல் மற்றும் திறனாய்வுக்கூட்டம் தஞ்சை  பெசன்ட் அரங்கில் 31.07.2009 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் புலவர் கோ. நாகேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரலாற்று ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் பேசியதிலிருந்து:-

தமிழ்ச் சமூகம், தமிழ்நாடு தடம் மாறிப்போய்க்கொண்டிருக்கிறது என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. காவிரியின் துணை நதிகளில் ஒன்றான நொய்யல் நதி சங்க காலத்தில் காஞ்சி ஆறு என அழைக்கப்பெற்றது. இந்த ஆற்றின் கரையில் கொடுமணல் போன்ற நகரங்கள் இருந்துள்ளன. இங்கு தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. 

சோழப் பேரரசர்கள் 

நொய்யல் பாயும் பகுதியில் சேரர்கள், கங்கர்கள் ஆட்சி செய்திருந்தாலும் அங்கு பாசன நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தியவர்கள் சோழப் பேரரசர்கள்தான். நொய்யல் நதியை அந்தப்பகுதி மக்களுக்குப் பயன்படச் செய்தது சோழ அரசர்கள்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள் அமைத்து நீரின் பயனை அந்தப்பகுதிமக்களுக்கு  அளித்தனர். சங்கிலித் தொடராகக் குளங்களை அமைத்தனர். பெரிய குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து அவற்றிற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் அளித்து, உபரி நீர் மீண்டும் ஆற்றிற்கே வந்து சேரும் வழி அமைத்தனர். 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் பெரிய ஏரிகளில் குமிழித் தூம்பு என்ற நீர்ஒழுங்கு அமைப்பை நிறுவித் திறம்படப் பாசன நீர் மேலாண்மை செய்து வந்தவர்கள் தமிழர்கள். இந்த குமிழித் தூம்பு அமைப்பு மூலம் பாசனத்திற்குத் தண்ணீர் அளித்தது மட்டுமின்றி, ஏரிகள் வண்டல் படிந்து தூர்ந்து போகாமலும் தடுத்தனர். இந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாசன நீர் நிர்வாகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியது தெரியவருகிறது. 

காவிரியில், மாயனூரில் இருந்து உய்யக்கொண்டான் கால்வாயை வெட்டி, வழியில் ஆயிரம் ஏரிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்தான் ராஜராஜசோழன். காவிரி நீர் வீணாகாமல் சேமிக்கப்பட வீராணம் ஏரியை வெட்டியவன் பராந்தகச்சோழன். தஞ்சை நகரின் நீர்த்தேவையை சேவப்பநாயக்கன்  ஏரியில் வந்துவிழும் தண்ணீரைக் கொண்டு பூர்த்தி செய்யும் அமைப்பு இருந்தது. இந்தத் தண்ணீரை சிவகங்கைக் குளத்திற்கு அனுப்பி அங்கிருந்து நகரின் முக்கிய குளங்கள், கிணறுகளுக்குக் கொண்டு செல்லும் அமைப்பு இருந்தது. 

சுடுமண் குழாய்களைக் கொண்ட இந்த அமைப்பில் பாதி தற்போது உடைக்கப்பட்டுவிட்டது. நீர் நிர்வாகம் குறித்து நமக்கு விழிப்புணர்வு தேவை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில தோழர்கள் பெ. பூங்குன்றன், இராமதாசு ஆகியோர் திறனாய்வு உரை நிகழ்த்தினர். முன்னதாக க.காமராசு வரவேற்றார். அ. தனபால் நன்றி கூறினார். முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் வ.அய். சுப்ரமணியன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.