கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுப்பது என்றத் தனது முடிவை செயல்படுத்த தருணம் குறித்துவிட்டார் செயலலிதா என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கூடங்குளம் அணு உலை கூடாது என தெளிவாக அறிவிப்பதற்குப் பதில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை கூடங்குளம் அணு உலைப் பணிகள் தொடரக்கூடாது என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் செயலலிதா. தமது கட்சி அமைச்சர்களை அனுப்பியும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியும் நேரடியாக கடிதம் அனுப்பியும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இக்கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தினார்.

“கூடங்குளம் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என உள்ளாட்சித் தேர்தலின் போது மக்களிடம் உறுதி கூறிய செயலலிதா, மறுபுறம் சு.ப.உதயகுமார், புஷ்ப ராயன் உள்ளிட்ட போராட்டக்குழு தலைவர்கள் மீதும், போராடும் மக்கள் மீதும் அடுக்கடுக்கான வழக்குகளை தொடர்ந்தார். அணுஉலைக் கெதிரான பரப்புரை தமிழகம் தழுவியதாக வீச்சு பெறுவதை தடுப்பதற்கு காவல்துறை வழியாக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்.

செயலலிதா அரசின் இரட்டை நிலையால் துணிச்சலடைந்த இந்து முன்னணியினரும், காங்கிரசுக்காரர்களும், போராட்டக் குழுவினரை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே தாக்கினர். இத்தாக்குதலில் பாதிக்கப் பட்ட போராட்டக்குழுவினர் மீதும் வழக்குத் தொடுத்தது தமிழகக் காவல்துறை.

கூடங்குளம் மக்களின் உணர்வோடு இணைந்து இருப்ப தாக இதுவரை புனைந்திருந்த வேடத்தைக் கலைப்பதற்கு செயலலிதா முடி வெடுத்து விட்டார் என்று தெரிகிறது.

“மக்களின் அச்சத்தைப் புரிந்து கொண்டு அறிக்கைத் தருவதற்கு” எனச் சொல்லி தமிழக அரசின் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளார். அம்மக்களின் அச்சத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே கூடங்குளம் அணுஉலைப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரா? இல்லை. இந்திய அரசோடு வெளிப் படையாகச் சேர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக களம் இறங்க காலம் குறித்து விட்டார் என்பதற்கான முன் அறிகுறியே இது.

செயலலிதா அமைத்துள்ள வல்லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள முதன்மையான அறிவியலாளர் இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் ஆவார். இவர், தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிரான கூடங்குளம், ஜெய்தாப்பூர் போராட்டங்களை எதிர்த்துப் பேசி வருபவர் ஆவார். பல்வேறு ஊடகங்களிலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருபவர் அவர்.

எம்.ஆர்.சீனிவாசனை இக்குழுவில் அமர்த்தியதிலிருந்தே செயலலிதாவின் உண்மை நோக்கம் புரிகிறது. கடந்த 04.02.2012 அன்று வல்லுநர் குழு அமைக்கும் முடிவை சட்ட மன்றத்தில் அவர் அறிவித்த போது அவர் நிகழ்த்திய உரையே அவரது பக்கச் சாய்வைக் காட்டியது.

இந்திய அரசு அமைத்த வல்லுநர் குழுவோடு பேச்சு நடத்த அழைக்கப்பட்டிருந்த போராட்டக்குழுவினர் மூவரில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார் என செயலலிதா குற்றம் சாட்டியதும், இந்திய அரசின் குழு தனது 71 பக்க அறிக் கையில் கூடங்குளம் அணு உலையில் செய்யப் பட்டுள்ள உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தெளிவாக எடுத்துக்காட்டியது என கூறியதும் செயலலிதாவின் மன நிலைக்குச் சான்று.

இதற்கு ஏற்பவே, 09.02.2012 அன்று எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட நால்வர் குழுவை செயலலிதா அரசு அறிவித்தது.

கூடங்குளம் அணுஉலைக்கு குளிர்விப்புத் தண்ணீர் கடலி லிருந்து எடுக்கப்படும் என அவ்வணுஉலைத் திட்டம் கூறுகிறது. கடல்நீர் தூய்மை யாக்கல் நிலையம் ஏதோ ஒரு காரணத்தால் பழுதுபட்டால் மாற்றுத் தண்ணீர் வாய்ப்பு எங்கே என்ற கேள்விக்கு அரசிடமிருந்து பதில் இல்லாம லிருந்தது.

இப்போது, செயலலிதா அரசு பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும் என அறிவித்து, அதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. இது குமரி மாவட்ட உழவர்கள் மீதுள்ள அக்கறையினால் என நம்ப முடியவில்லை. கூடங்குளம் அணுஉலைக்கு மாற்றுவழித் தண்ணீர் வாய்ப்பாக பேச்சிப் பாறையை செயலலிதா அணியப் படுத்துகிறார் என ஐயம் எழுகிறது.

ஏனெனில், கூடங்குளம் அணுஉலைத் திட்டம் 1987இல் முன்வைக்கப்பட்ட போது பேச்சிப்பாறைத் தண்ணீரைத் தான் முதன்மை நீர் ஆதார மாகக் காட்டினர். பிறகு தான், கடல் நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்தும் திட்டம் கூறப் பட்டது. இப்போது அவசரகால மாற்றுத் தேவைக்கான நீராதார மாக பேச்சிப்பாறை அணிய மாகிறதோ என ஐயம் எழுகிறது.

செயலலிதாவின் கருத்து நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட இந்திய அரசும், காங்கிரசுக் கட்சியும் அண்மைக் காலமாக கூடங்குளம் அணு உலையைத் திறப்பதற்கான தங்களது முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீது விசாரணை என்ற பெயரில் காவல்துறையும் வருமானவரித் துறையும் ஏவிவிடப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துக் கூறிய ஊடகங்கள் மடக்கப்பட்டன. கூடங்குளம் அணுஉலைக்கு அடித்தள மாநாடு என கடந்த 04.02. 2012இல் நெல்லையில் காங்கிரசு நடத்திய மாநாடும், இந்து முன்னணியினரும் காங்கிரசுக் காரர்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகி லேயே போராட்டக்குழுவின ரையும், பெண்களையும் தாக்கி யதும் இதற்கொரு முன்னோட் டமாகும்.

காங்கிரசுக் கட்சியும் அணு உலைக்கு ஆதரவான சக்தி களும், தமிழகத்தில் தற்போது நிலவும் தாறுமாறான மின் வெட்டைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகப் பயன் படுத்திக்கொள்கின்றன. கூடங் குளம் அணுமின் உற்பத்தி தொடங்கி விட்டால் தமிழ் நாட்டில் மின் பற்றாக்குறையே இருக்காது என்பது போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

கூடங்குளம் அணுஉலை தமிழினத்திற்குப் பேரழிவை உண்டாக்கும் என்பது மட்டு மின்றி அந்த அணுஉலையால் தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை தீர்வதற்கும் வழியில்லை. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி, அணுக்கழக அதிகாரிகள் வரை சொல்வதெல்லாம் 1000 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள முதல் அணுஉலை அணியமாக இருக்கிறது என்பது மட்டுமே.

கல்பாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் எந்த அணு மின்சார நிலையத்திலும் அதன் முழு உற்பத்தித் திறனில் பாதி யளவு உற்பத்தி கூட நடந்ததாக இதுவரை வரலாறில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடக்க நிலை யிலேயே 50 விழுக்காடு உற் பத்தித்திறனோடு இயங்கும் என கற்பனையாக வைத்துக் கொண்டாலும், 500 மெகா வாட் மின்சாரம் தான் உற்பத் தியாகும். அதில் 30 விழுக்காடு மட்டுமே அதாவது 150 மெகா வாட் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைக்கும். அதாவது தமிழக மின்பற்றாக் குறையான 1500 மெகா வாட்டில் 10 விழுக்காடு மட்டுமே கூடங்குளம் வழியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு தான் இவ்வளவு பெரிய பேரழி வைத் தமிழர்கள் தலையில் கட்டத் துடிக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலை யைத் திறப்பதற்கு துணை போக தமிழக அரசு முடிவு செய்தாலும், அணுஉலைக்கு எதி ரான மக்கள் போராட்டம் தொய்வின்றித் தொடர வேண்டும். இடிந்த கரையோடு மட்டும் சுருங்கிவிடாமல் தமிழகம் தழுவிய ஒட்டு மொத்தத் தமிழர்களின் தற்காப்புப் போராட்டமாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் விரிவு பெற வேண்டும். இது ஒட்டு மொத்தத் தமிழர்களின் கடமை.

Comments

1 comment

1
karthik
What is the other solution?If we oppose everything then how we will survive.The koodankulam protester oppose the project now but it is started on 1987 at the time why they are not opposing. Now japan renewing the plant and germany also reconsider their plant project but our peoples still repating the same story.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.