ரோமாபுரியில் அடிமைகளைக் கொல்வதற்கு அவர்களின் ஆண்டைகளுக்கு உரிமை உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உலகில் யாரைக் கொல்லவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு “உரிமை“ உண்டு.

ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஈராக் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் குடியரசுத் தலைவரையும் தளபதிகளையும் தூக்கில் போடலாம். லிபியா மீது போர் விமானங்களை அனுப்பி அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை மீதும், குடியிருப்புகள் மீதும் குண்டு வீசலாம்.

ஈரான் மீது எந்த நேரமும் குண்டு வீசுவோம் என்று மிரட்டலாம்.

இப்படிப்பட்ட மனித குலத்திற்கெதிரான பயங்கரவாதப் படுகொலைகள் அனைத்தையும் வட அமெரிக்க நாடு தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வரிசையில் வட அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெறாமலும் அந்நாட்டிற்கு செய்தி தெரிவிக்காமலும் 2.5.2011 அன்று பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடன், அவர் உறவினர்கள், இயக்கத்தவர்கள் பலரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டு வான்வழியே திரும்பிப் போய்விட்டனர்.

அமெரிக்கப் படையினர் அத்துமீறி இன்னொரு நாட்டிற்குள் சென்று படுகொலைகள் புரியும் காட்சியை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டன் மற்றும் படைத் தளபதிகள் உள்ளிட்டோர் வாசிங்டன் வெள்ளை மாளிகையில் அமர்ந்து கமுக்கமான நேரடி ஒளிபரப்பில் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரிப் பிரபுக்கள் சிங்கங்களுடன் அடிமைகளை மோதவிட்டு அச்சிங்கங்கள் அடிமை மனிதர்களைக் கொன்று உண்ணும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள். இன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் அவர்களின் தளபதிகளும் தங்களின் படையாட்கள் மனிதர்களைப் படபடவென்று சுட்டுக் குருதி வெள்ளத்தில் வீழ்த்துவதைப் பார்த்துச் சுவைத்தார்கள்.

பின்லேடனை உயிரோடு பிடிக்க வாய்ப்பிருந்தும் வேண்டும் என்றே சுட்டுக் கொன்றோம் என்று அந்நடவடிக்கையில் ஈடுபட்டோரே கூறுகிறார்கள். சட்ட நீதியை அமெரிக்கா மதிக்காது என்பதற்கு இது ஒரு சான்று.

ஈராயிரம் ஆண்டுகளாக இந்தக் குரூரம், கொலைவெறி, ஆதிக்க வர்க்கத்திடம் தொடர்கிறது. பாரக் ஒபாமா, கருப்பர் என்றும், சனநாயகவாதி என்றும் அவருக்கு முற்போக்கு ஒப்பனை செய்தார்கள் பலர். அவர் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிய வர்க்கத்தின் பேராளர். அந்த வர்க்கத்தின் குணத்தைத்தான் அவர் வெளிப்படுத்துவார் என்று நாம் அப்போதே சொன்னோம்.

ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு வெள்ளை நிற மேலாதிக்கக்குணம் இணைப்புச் சங்கிலியாக இருக்கிறது. கருப்பு ஒபாமா வெள்ளை நிறத்திமிரின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்.

அமெரிக்க பயங்கரவாதம் என்பது ஏகாதிபத்தியப் பயங்கரவாதமாகவும் வெள்ளை பயங்கர வாதமாகவும் செயல்புரிகிறது.

பின்லேடனைச் சுட்டுக் கொன்றதில் இரண்டு கோட்பாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை. ஒன்று பயங்கரவாதம், இன்னொன்று ஒரு நாட்டின் இறையாண்மையும் அமெரிக்காவின் உலக இறையாண்மையும்.

பயங்கரவாதம் என்றால் என்ன? அப்பாவிப் பொதுமக்களைக் கூட்டமாகக் கொல்வது, வன்முறை மூலம் மக்களை அச்சுறுத்துவது, இந்த அளவுகோலின்படி பின்லேடனும் பயங்கரவாதி. அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் பயங்கரவாதி.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் நியுயார்க் இரட்டைக் கோபுரங்களை விமானங்களால் மோதிச் சாய்த்தனர் பின்லேடனின் அல்கய்தா அமைப்பினர். இதில் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அமெரிக்க படைத் தலைமையகமான பென்டகன் மாளிகை மீது இன்னொரு விமானம் மோதி சில பகுதிகளைத் தகர்த்தது. இந்நடவடிக்கைப் பயங்கரவாதச் செயல் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

பின்லேடனையும் பின்லேடனின் பயங்கரவாத அமைப்பையும் உருவாக்கியவர்கள் யார்? இதே வட அமெரிக்க ஆட்சித்தலைவர்களும் படை மற்றும் சி.ஐ.ஏ.அமைப்புகளும்தாம் 1970 களில் ஆப்கானிஸ்தான் இராணுவத் தளபதி தராக்கி புரட்சி செய்து, அந்நாட்டு மன்னராட்சியை நீக்கிக் குடியரசு ஆட்சி முறையை உருவாக்கினார். அவர் சோவியத் ஒன்றிய ஆதரவாளர். ஆப்கனில் உள்நாட்டுக் கலகம் வெடித்தது. அதை அடக்க தராக்கி, சோவியத் படைகளை வரவழைத்தார்.

சோவியத் படைகளை வெளியேற்றக் கோரி ஆயுதப் போர் நடத்தியவர்களில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் அடங்குவர். இஸ்லாமிய அடிப்படை வாதியாக இருந்து கொண்டு சோவியத் படைக்கு எதிராக ஆயுதப் போர் நடத்த பின்லேடனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அள்ளி அள்ளி வழங்கியது வட அமெரிக்கா. அமெரிக்கா ஊட்டி வளர்த்த பின்லேடன் பின் அமெரிக்காவுக்கு எதிராக எப்போது திரும்பினார்?

உள்நாட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத சோவியத் படைகள் பேரிழப்பிற்குப் பின் ஆப்கனை விட்டு வெளியேறி சொந்த நாட்டிற்குத் திரும்பின. ஆயுதக் குழுக்களில் வலுவான தாலிபன் குழு மற்ற குழுக்களை வீழ்த்தியும் விரட்டியும் ஆட்சியைப் பிடித்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடைய தாலிபான் ஆட்சி அமெரிக்காவின் கைப்பிள்ளையாகச் செயல்பட மறுத்தது.

அமெரிக்கா ஆப்கானுக்குள் படை அனுப்பி, தாலிபான் ஆட்சியை நீக்கி, தனது பொம்மை அரசை நிறுவி நாளது வரை அந்நாட்டை ஆண்டுவருகிறது. அங்கு பல்லாயிரம் மக்களை அமெரிக்கப் படையும். அதன் கூட்டணி நாட்டுப் படைகளும் கொன்று குவித்தன.

ஆப்கனில் அமெரிக்காத் தலையிட்டதற்கும் பின்னர் ஈராக்கில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் 1990களில் நடத்தியதற்கும் பதிலடி கொடுக்க பின்லேடனின் அல்கய்தா நடத்தியதே 2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல்.

ஈராக்கில், தடைசெய்யப்பட்ட வேதி (இரசாயன) ஆயுதங்கள் இருக்கின்றன, அவற்றைக் கைப்பற்றி அழிக்கப் போகிறோம் என்று சொல்லி அமெரிக்கப் படை ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் குடியரசுத் தலைவர் சதாம் உசேனைப் பிடித்துத் தூக்கில் போட்டது. இது வரை வட அமெரிக்கா பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட கூட்டணி நாடுகள் ஒன்பது இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றுள்ளன. எல்லாம் முடிந்த பிறகு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் ஈராக் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் தடை செய்யப்பட்ட வேதி ஆயுதம் எதுவும் இல்லை என்று அறிவித்தனர்.

இப்போது லிபியாவில் அமெரிக்க - பிரஞ்சுப் படை விமானங்கள் வான் தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்று வருகின்றன.குடியரசுத் தலைவர் கடாபியைக் கொல்ல முயல்கின்றன.

அமெரிக்கா,பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மேற்கண்ட ஆக்கிரமிப்புப் போர்கள் அனைத்தும் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதப் போர்களே.புதிய செங்கிஸ்கான்கள் குடியரசுத் தலைவர் என்றும் பிரதமர் என்றும் முகவரி ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பயங்கரவாதக் குற்றத்திற்காக ஒசாமா பின்லேடனைத் தண்டிப்பதென்றால், முதலில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர், பிரித்தானியப் பிரதமர், பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் ஆகியோர்க்குத் தண்டனை வழங்கிவிட்டு அதன் பிறகே பின்லேடனிடம் வரவேண்டும்.

2002ஆம் ஆண்டு சென்னை வந்திருந்த அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான நோம் சோம்ஸ்கி.“பின்லேடன் பன்னாட்டு பயங்கரவாதி என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எப்போதுமே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தான் முதல்நிலைப் பன்னாட்டுப் பயங்கரவாதி ''என்றார்.

அடுத்து இறையாண்மை. பாகிஸ்தான் மேலும் மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து தனது இறையாண்மையை மெல்ல மெல்ல அந்நாட்டிடம் அடமானம் வைத்து வருகிறது.

ஆப்கனில் ஏற்பட்ட தாலிபான் அரசை ஏற்று அதனுடன் தூதுரக உறவை உருவாக்கியிருந்தது பாகிஸ்தான். ஆனால் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தவுடன் ஆப்கான் மீதான அதன் ஆக்கிரமிப்புப் போரைப் பாகிஸ்தான் ஆதரித்தது. அமெரிக்காவின் அடியாளாக பாகிஸ்தான் மாறியது.

பாகிஸ்தான் நாட்டுக்குள் வடமேற்கில் வச்ரிஸ்தான் பகுதியில் அடிக்கடி அமெரிக்க வான் படையினர் குண்டு வீசித் தாக்குகின்றனர். பழங்குடி மக்களைக் கொல்லப்படுகின்றனர்.

இப்பொழுது பாகிஸ்தானின் உள் நாட்டுப் பகுதிக்குள் அதன் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிமீ தொலைவில் அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவது பற்றிய தயக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை.

""அமெரிக்காவின் பகைவன் உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் போய்த் தாக்குவோம்'' என்கிறார் ஒபாமா. பாகிஸ்தான் போன்ற அண்டிவாழும் நாடு மட்டுமல்ல, நட்பல்லாத நாடாக இருந்தாலும், அந்நாட்டின் அனுமதியின்றி உள்ளே போய் தாக்குவோம் என்ற பொருளில் ஒபாமா கூறுகிறார்.

வட அமெரிக்காவுக்கு, எவர் அனுமதியுமின்றி எல்லா நாட்டுக்குள்ளும் போய்த் தாக்க உரிமை உண்டு. அதாவது அமெரிக்க இறையாண்மை உலக இறையாண்மை என்பது இதன் பொருள்.

அமெரிக்காவின் உலக இறையாண்மையை எல்லா நாடுகளும் ஏற்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகளுக்குத் தன் நாட்டில் கூட இறையாண்மை இல்லை.

"ஏகாதிபத்தியம் என்பதன் பொருள் போர்" என்றார் லெனின். ஏகாதிபத்திய முதலாளிய முறையை ஒழிக்கும் வரை எந்தநாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பில்லை. அதன் எதிர் வினையாக, ஏகாதிபத்தியங்களின் இறையாண்மைக்கும் பாதுகாப்பில்லை. நியூயார்க் இரட்டைக் கோபுரங்களும் பெண்டகன் படைத் தலைமையகமும் பின்லேடன் அமைப்பால் தாக்கப்பட்டது இதற்கு ஒரு சான்று.

பின்லேடன் உடலை இஸ்லாமிய முறைப்படி நிலப்பகுதியில் எங்காவது புதைத்தால் அது நினைவுச் சின்னமாகிவிடும் செல்வாக்குப் பெற்றுவிடும் என்று அஞ்சி எங்கோ நடுக்கடலுக்கடியில் புதைத்தது அமெரிக்காவின் சின்னத் தனத்தையே காட்டுகிறது.

இராசபட்சே விடுதலைப் புலிகளின் நினைவிடங்களை அழித்ததும் அரச பயங்கரவாதப் பண்பியல் வக்கிரத்தின் வெளிப்பாடே!

வருங்காலத்தில் ஒபாமாவை விட பின்லேடன், மக்கள் செல்வாக்கைப் பெற்றிருப்பார் என்பதை ஒபாமாவே ஒப்புக் கொண்டது போல் அந்தச் சவ அடக்கம் நடந்துள்ளது.

உலகை விழுங்க அமெரிக்கா கொண்டுவந்த உலகமயக் கொள்கை அமெரிக்காவையே விழுங்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து அமெரிக்காவைத் தப்பிக்க வைக்கவும் அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் அடுத்த நாட்டை ஆக்கிரமிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒபாமா வருங்காலத்தில் மேலும் தீவிரமாகவே ஈடுபடுவார். கடைசியில் ஒபாமாவும் அவருக்குப் பின் அவர் பதவிக்கு வருபவரும் அமெரிக்காவை கிட்டதட்ட எல்லாவகையிலும் திவாலாக்கி விடுவார்கள். அமெரிக்காவின் அடியாளாக இந்தியாவை மாற்றிக் கொண்டுள்ள மன்மோகன்-சோனியா ஆட்சியும் இந்தியாவைப் பாகிஸ்தான் நிலைக்குக் கொண்டுவந்து விடும்.

மேலாதிக்க வல்லரசான அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியப் புரட்சியே தமிழக இறையாண்மையை மீட்டு உறுதிப்படுத்தும்.
Pin It