எங்கள் ஊரில் ஒருவருக்கு அடைக்கோழி என்று பட்டப் பெயர். வேட்டி கட்டுகிற வயசு வந்தபிறகும் கூட அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டே அலைந்தததால் இந்த நாமகரணம் சூட்டப்பட்டது. ஆனால் கோழி அப்படி குஞ்சுகளை அழைத்துக்கொண்டு திரிவதில்லை. குஞ்சுகள் தனியாக இரைதேடும் காலம் வந்தவுடன் தாய் கோழி குஞ்சுகளை கொத்தி விரட்டிவிடும். அடைக்கோழி என்று அடைமொழி பெற்ற அவர் திருமணம் ஆன பிறகு அவருடைய மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்துவிட்டார் என்பது தனிக்கதை.

கோழி முட்டைகளின் மேல் உட்கார்ந்து அடைகாக்கும்போது அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு முனிவர் களை சொட்டும். தர்மயோகம், ஞானயோகம் என்று கதைப்பவர்கள் அடைக்கோழியைப் பார்த்தால் வெட்கப்படுவார்கள். அப்படி ஒரு கர்மசிரத்தை ஞானயோகம். பெரும்பாலும் அடைக்கோழி மதிய நேரங்களில்தான் இரைதேடச் செல்லும். அப்போது கூட அடைமுட்டைகள் இருக்குமிடத்தை விட்டு ரொம்பதூரம் சென்றுவிடாது. ஒரு பரப்பரப்போடும், பதட்டத்தோடும் ஏதாவது கிடைக்கிறதா என்று அலையும். சந்தேகத்திற்கு இடமாக சிறு ஒலி கேட்டால் கூட கெக்கே கெக்கக்கே என்று கத்தியபடி முட்டையில் வந்து அமர்ந்துவிடும். பெரும்பாலும் அரைப்பட்டினியாகத்தான் கிடக்கும்.

கோழி அடைகாத்த இடத்தில் ஒருவகையான செல் மொய்க்கும். பெரும்போக்காகப் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. உன்னிப்பாகப் பார்த்தால் மாவு போல வெள்ளையாகத் தெரியும். தப்பித்தவறி அதில் கைவைத்துவிட்டால் மொழு மொழுவென்று உடம்பு முழுவதும் ஏறிவிடும். பத்துமுறை குளித்தால் கூட உடம்பில் ஏதோ மொய்த்துக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.

செல்போனுக்கு செல் என்று பெயர் வந்ததற்கு கோழிச்செல் ஏதாவது ஒரு வகையில் காரணமா என்பதை மொழி அறிஞர்கள் ஆய்ந்து சொன்னால் நல்லது. கோழிச்செல் எப்படி பிடித்துக்கொண்டால் விடுவதில்லையோ அது போல இந்தச் செல்லும் பிடித்தால் விடுவதில்லை.

பெரிய பெரிய நிறுவனங்கள் சிக்கன்65 சாப்பிட மக்கள் செல் மொய்க்க அடைகாக்கிறார்கள். . செல்போன் பேசுபவர்களின் வாய் மொழியை மட்டுமின்றி உடல் மொழியையும் கவனித்தால் நாடகப்பாங்குடன் இருக்கும். தரைவழிப் பேசியில் ரிசீவரை வைத்த ஞாபகத்தில் இன்னமும் கூட செல்போனிலும் அப்ப வெச்சிரட்டுமா என்று கேட்டுக்கொண்டிருப்போர் பலர்.

அலுவலக வாசலில் ஒரு இளைஞனை நான் அன்றாடம் சந்திப்பேன். அவருடைய முகவரி என்ன? ரேசன் கார்டு உண்டா? என்பதெல்லாம் கிடையாது. ஆனால் எப்போதும் செல்போனில் பேசியபடியேதான் இருப்பார். அவர் என்ன பேசுகிறார் என்று பக்கத்தில் சிபிஐ அதிகாரி இருந்தால்கூட கண்டுபிடிக்க முடியாது. சிபிஐ அதிகாரிகள் அதைத்தான் கண்டுபிடித்தார்கள் நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது.

எதிர்முனையில் இருப்பவர் இவர் என்ன பேசுகிறார் என்பதை எப்படித்தெரிந்துகொள்வார் என்று தெரியவில்லை. பார்வையற்றவர்கள் பயன்டுத்தும் பிரெய்லி மொழி போல ஒலியே இல்லாத புதுவகையான மொழி எதையும் கண்டுபிடித்திருக்கிறார்களோ என்னமோ தெரியவில்லை.

ஒரு இடத்தில் அமர்ந்து அவர் பேசமாட்டார். ஐந்தாறு இடம் மாறி மாறி உட்காருவார். ஆனால் ஒரு முறை உட்கார்ந்துவிட்டால் அந்த இடத்தை விட்டு எழுந்திரிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். இதற்கென ஏதாவது கால அட்டவனை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.

அந்தக்காலத்து தசாவதானி, அஷ்டாவதனிகள் போல ஒரு செல்லில் பேசிக்கொண்டே மறு செல்லில் வந்த குறுஞ்செய்திகளை படிப்பது, அதற்கு பதில் அனுப்புவது என்று எப்போதும் கண், காது, கை என எல்லா உறுப்புகளுக்கும் வேலை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.

நீராராடியா பேசியதை டேப் செய்தது போல இந்த வாலிபர் பேசுவதையும் டேப் செய்தால் ஏதாவது பரபரப்பான செய்தி கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.

எதிர்காலத்தில் செல்போன் தனியாக இருக்காது. எல்லோர் தலையிலும் ஒரு ஆன்டெனாவை தனியார் கம்பெனியிலும் பொருத்திவிடுவார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் தம்பி பூபாளம் பிரகதீஸ்வரன் சொன்னார்.

கபால ஆன்டெனா ஊழல் என்று அதிலும் பெருந்தொகை சுருட்டப்படக்கூடும்.

Pin It