தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம்

                                         -  வரலாற்றியலாளர் டாயன்பீ

1

சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன.

ஒரு வகையில் இந்த அங்கலாய்ப்பு இயல்பான ஒன்றுதான். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றல், அறிவு வளங்கள் அனைத்தையும் தம்மை நோக்கி உள்வாங்கிக் கொண்டதொரு அமைப்பின் வீழ்ச்சி எந்தவொரு தமிழனுக்குமே அதிர்ச்சியையும் சோர்வையும்தான் கொடுக்கும். எனவே இந்தச் சூழலில் நாம் நமது பழைய கருத்துக்களை, நிலைப்பாடுகளை சற்று மீள்பரீசிலனை செய்து கொள்வது நல்லதுதானே. இது ஒரு வகையில் நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளுதல்தான். சுயவிமர்சனம் என்பது பெரும்பாலும் தற்கொலைக்கு ஒப்பானது என்றே சிலர் எண்ணுவதுண்டு, அதில் உண்மை இல்லாமலுமில்லை. தற்கொலை ஒரு மனிதனின் அதுவரையான இயக்கத்தை நிறுத்தும். சுயவிமர்சனமும் அதுவரைகால தவறுகளை விளங்கிக் கொண்டு புதியதொரு பாதையை வகுக்க உதவும்.

நான் இங்கு சமீபகாலமாக நம்மிடம் நிலவிவந்த ஆனால் இன்று ஒரு நகைச்சுவைக்குரிய ஒன்றாக மாறிவிட்ட நமது யூதக் கனவு பற்றித்தான் சில அபிப்பிராயங்களைப் பதிவு செய்ய விழைகின்றேன். நாம் நம்மை யூதர்களாக எண்ணிக் கொள்ளுவதற்கு ஏதுவாக என்னனென்ன காரணங்கள் இருந்தன என்று யோசித்துப் பார்த்தேன். யூதர்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். நாங்களும் அவ்வாறு சிங்களத்தின் ஒடுக்குமுறையால் உலகின் பல பாகங்களிலும் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம். (நம்மில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு மோகம் கொண்டு எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது லண்டனுக்கோ கனடாவுக்கோ போய்விட வேண்டுமென்ற தீரா ஆசையில் ஓடியதும் உண்டு. அதை எந்த யூதக் கணக்கில் சேர்ப்பது?) யூதப் பெயர்வின் போது அவர்கள் தம்மை உலகளாவிய ரீதியில் ஒருமுகப்படுத்துவதற்காக பயன்படுத்திய புலம்பெயர் சமூகம் (Diaspora)  என்ற கருத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டோம். இதன் மூலம் நாம் யூதர்களுக்கு இணையானவர்கள் என்றதொரு கருத்து வளர்ந்தது. நாம் கல்வியில் மேலோங்கிய சமூகம். இப்படியெல்லாம்தான் எங்களது யூதக் கனவு வளர்ந்தது.

இந்த கருத்தின் பின்னால் எடுபட்டுப் போனவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால் இப்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து சற்று திரும்பிப் பார்க்கும்போது அது நாம் தகுதியற்று வளர்த்துக் கொண்டதொரு கற்பனையென்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் நம்மை யூதர்களாக கற்பனை செய்து கொள்வதற்கான எந்தவொரு தகுதியும் நம்மிடமில்லை. அடிப்படையிலேயே ஈழத் தமிழர் சமூகம் தனக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை கௌரவமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டதொரு சமூகம். சக மணிதர்களையே பறையன், பள்ளன், வண்ணான் எனப் பிரித்தாளுவதில் பெருமை கொண்டவர்கள் நாம். பின்னர் சாதி ரீதியாக பிரிந்து வளர்ந்த சமூகத்தினுள் விடுதலை சார்ந்து இயக்கங்கள் தோன்றிய போதும் விடுதலை அரசியலிலும் ஒரு வகைத்தான  தீண்டாமைதான் நிலவியது. ஆளையாள் ஓரங்கட்டுதல், பிரித்தாளுதல் அல்லது அழித்தொழித்தல் என்பதாகவே நமது விடுதலை அரசியல் சுருங்கியது. இன்று கற்பனைகள் கலைந்து நடு வீதியில் திசையற்றுக் கிடப்பது நமது அரசியல் மட்டுமல்ல நன்பர்களே நமது யூதக் கனவும்தான்.

2

கல்வியில் நம்மை மிஞ்ச யாருண்டு என்ற யாழ்ப்பாண மத்தியதரவர்க்க செருக்கை உள்வாங்கி வளர்ந்த ஈழத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் படுதோல்வியடைந்திருப்பதே வரலாறு. மோட்டு சிங்களவர்கள் அவர்களுக்கு என்ன மசிரோ தெரியும் என்ற அரைவேக்காட்டுத்தனமான மத்தியதரவர்க்க மாயையில் நாம் காலத்தை கழித்திருக்கின்றோமே தவிர நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. சிங்கள இராஜதந்திரம் பற்றி நம்மில் சிலரே வியந்து எழுதியிருக்கின்றனர். இது பற்றி அடிக்கடி தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர் நமக்கு நன்கு பரிச்சயமான ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. அவர் அவ்வப்போது பேராசிரியர் இந்திரபாலா குறித்துரைக்கும் ஒரு கருத்தை நினைவுபடுத்துவதுண்டு. இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பேணிப்பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இராஜதந்திரம் தேவை. இராஜதந்திரம் இல்லாமல் அது ஓரு போதுமே சாத்தியப்படாது.

இன்று சிங்களம் தன்னை சுற்றி எழும் எத்தனையோ சவால்களை சமாளித்துக் கொண்டவாறு தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் லலித் அத்துலத் முதலி சொல்லுவது போன்று எங்களிடம் எம் மூதாதையர்கள் வழி வந்த இராஜதந்திர ஆற்றல் என்னும் பொக்கிசம் இருக்கிறது. இதனைத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோல்டண்திரட் (Golden thread) என்று வர்ணித்தார். ஆனால் நாங்களோ உலகப் போக்குகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப சிந்திக்க, செயற்பட திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறோம்.  உசுப்பிவிடும் அரசியல், அதற்கான சுலோகங்கள், பின்னர் அதனைச் சுற்றி விமர்சனமற்ற கற்பனைகள் இதுதான் எங்கள் அரசியல். இது குறித்து யாரையும் நோக்கி விரல் சுட்டுவதல்ல எனது நோக்கம். நம்மை நாம் கற்பனைகளற்று சரியாக அளவிட்டுக் கொள்ளும் பண்பு நமக்குத் தேவை என்பதையே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது. அவ்வாறு அடுத்தவரை நோக்கி விரல் சுட்டுவதன் மூலம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எழுத்துக்களை இந்தக் கட்டுரை விமர்சிக்க முயல்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும், என்னைப் போன்றவர்களுக்கும் இவ்வாறான கற்பனைகளை விமர்சனமற்று பரவ விட்டதில் பங்குண்டு என்னும் எழுத்து நேர்மையுடன்தான் எழுதுகின்றேன். பன்முக நோக்கில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்பது நம் மத்தியில் ஒரு பண்பாடாகவே வளர வேண்டியிருக்கிறது. வசை மற்றும் துதி பாடுவதில் திருப்தி, விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்வை விவாதப் பொருளாக்கும் வக்கிரம் இவ்வாறான பண்புகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது.

நான் சமீபத்தில் சிறிலங்காவிற்கான முன்னைநாள் தூதராக இருந்த ஜெப்ரி லுன்ஸ்டேட் எழுதியிருந்த அறிக்கையொன்றைப் பார்த்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் இந்தத் தலைப்புடன் மிகவும் பொருந்தக் கூடிய ஒன்று. “அமெரிக்கா இலங்கை விடயத்தில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உள்ளக அரசியலில் (Domestic politics) செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இலங்கை பிரஜைகள் அமெரிக்காவில் வலுவாக நிலைபெறவில்லை’. இதன் உள் அர்த்தம் அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள் அமெரிக்க அரசியல் நிலைப்பாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகளாக இல்லை என்பதாகும். இந்த வாதத்தை அப்படியே யூதர்களுக்கு திருப்பிப் போட்டுப் பார்த்தால் எங்கள் யூதக் கனவின் பின்னாலுள்ள மடைமை வெள்ளிடைமலையாகும்.

யூதர்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களே முதன்மையானவர்களாக இருக்கிறார்கள் அறிவிலும் செல்வத்திலும். இதன் காரணமாக அவர்கள் அந்தந்த நாட்டின் உள்ளக அரசியலை நிர்ணயிக்கக் கூடிய மாற்றும் (Change the polticle Agenda) சக்திகளாக தொழிற்படுகின்றனர். அவர்களது ஆற்றலும் அறிவும் தேவைப்படும் அந்த நாடுகள் அவர்களை தமது நேச சக்திகளாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கரிசனையும் பெருமையும் கொள்கின்றன. இன்று இஸ்ரவேல் அமெரிக்காவின் வரலாற்றுக் கூட்டாளியாக இருக்கும் யதார்த்தத்தை இந்த பின்புலத்தில் நின்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அல்லாது வெற்று கோஷ‌ங்களை எழுப்புவதிலிருந்தோ வெறும் கற்பனைகளை தலைமுறைகள் சார்ந்து பரப்புவதாலோ அல்ல.

3

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கியதும் சிறிது யூத வரலாறு அவர்களின் ஆளுமை குறித்து அறியும் நோக்கில் இணையத்தளங்களில் தேடினேன். யூதக் கனவில் திளைத்த நாம் யூத ஆளுமை, அறிவு பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் அறிய முற்பட்டிருந்தோம் என்பது வேறு விடயம். ஒரு வேளை அறிந்திருந்தால் தகுதி மீறிய கனவும் வளர்ந்திருக்காதோ என்னவோ! இன்று உலகின் மிகப் பெரும் ஆளுமைகளாக சிலாகிக்கப்படும் பலர் குறிப்பாக மார்க்ஸ் உட்பட பலரும் யூதர்கள் என்பது பலர் அறியாத ஒன்று. லூயிஸ் ரிகன்ஸ்டின் (Lewis Regenstein) என்பவர் எழுதிய யூதர்கள் ஏன் இவ்வளவு செழிப்பாக இருக்கின்றனர் (Why Are Jews So Smart?) கட்டுரையொன்றைப் பார்த்தேன். உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (Jews constitute only about two-tenths of one percent of the world’s population; Jews won 29 percent of the Nobel Prizes in literature, medicine, physics and chemistry in the second half of the 20th century. So far this century, the figure is 32 percent) - http://www.jewishmag.com/115mag/smartjews/smartjews.htm - (மேலதிகமாக அறிய இந்த இணையத்தைப் பார்க்கலாம்)

ஏன் இந்த விடய‌த்தைக் குறிப்பிடுகிறேன் என்றால் கனவு காண்பது பிழையல்ல. ஆனால் அந்தக் கனவை காண்பதற்கு நமக்கு தகுதியிருக்கின்றதா என்பதுதான் இங்கு பிரச்சனை. போலிப் பெருமைகளிலும், அர்த்தமற்ற சடங்குகளிலும், ஒழுக்கக் கோவைகளிலும் (இதிலும் போலித்தனம்தான் அதிகம்) காலத்தை கழிக்கும் நாம் எவ்வாறு யூதர்களுக்கு இணையாவது? அதிலும் வல்வெட்டித்துறை, உரும்பிராய் அளவெட்டி வந்தாறுமுலை கதைகள் அர்த்தமற்ற குலப் பெருமைகள். இப்படி அசிங்கங்களை பெருமையாக சுவைத்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தகுதியிருக்கிறது இப்படியான கனவிற்கு?

1983களில் இருந்தே ஈழத் தமிழர்கள் பல்வேறு ஜரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். இன்று கிட்டத்தட்ட 25 வருடங்களைக் கடந்துவிட்டது நமது புலம்பெயர் வாழ்வு. இந்தச் சூழலில் அந்தந்த நாட்டின் சிந்தனைச் சூழலில், நமது சிந்தனைச் சூழல் விரிவு கொண்டிருக்கிறதா என்றால் நான் அறிந்தவரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கனவு மட்டும் அளவுக்கதிகமாகவே நம்மிடம் நிரம்பி வழிகிறது. இன்றும் அந்தந்த நாட்டின் அரசியல் சக்திகளுடனோ அல்லது சிந்தனையாளர்கள் மத்தியிலோ தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் உருவாகியிருக்கிறார்களா என்றால் இல்லையென்ற பதிலைத் தவிர எதுவுமே இல்லை. இப்போதுதான் ஏதோ ஞானோதோயம் பிறந்தது போல் சில அசைவுகள் தெரிகின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இப்படியான இடங்களில் இருக்கும் உயர் இலக்கியவாதிகள், சிந்தனையாளர், அறிஞர்களோடு ஒரு உரையாடலையாவது எங்களால் செய்ய முடிந்திருக்கிறதா? பின்னர் எதற்கு இந்த வீண் கனவு நமக்கு?

முதலில் தகுதியை வளர்த்துக் கொள்வது பற்றி சிந்திப்போம். பின்னர் கனவுகளைக் காண்போம்.

- யதீந்திரா

Pin It