உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள் பெயர். ஜோசபின் மண்டாமின். கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒரு பிரிவான Anishinabeயை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும் பயணத்திலிருக்கிறாள்.

       கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் போலுள்ளது.

       இது உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. ஏரியின் ஆழம் மிக அதிகம். பரப்பளவும் கண் கொள்ள முடியாதது. இதன் கரைகளில் பூர்வ குடிகள் காலம் காலமாக வசித்து வருகிறார்கள். ஆனால் சமீபமான ஆண்டுகளில் இந்த ஏரிகளில் தொழிற்சாலைகளின் மாசுபடுதல் மற்றும் சூழல் சீர்கேடுகள் மிக அதிகமாகி வருகிறது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் குடிநீரை முப்பது மில்லியன் மக்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார்கள்.

       ஏரியில் இருந்து கிடைக்கும் மீன்களே பூர்வ குடிகளின் பிரதான உணவு. தொழிற்சாலைகளின் கழிவுபொருள்கள் மட்டுமின்றி ரசயான கலப்புகள் காரணமாக மீன்கள் குறைவதோடு, தண்ணீரின் இயல்பும் பெரிதும் மாறியிருக்கிறது.

       இந்த ஏரியைச் சார்ந்து வாழ்ந்த பூர்வகுடி பெண்களில் ஒருவரான ஜோசபின் மண்டாமின் ஒவ்வொரு நாளும் ஏரியை காணச் செல்லும் போது அதன் மாசுபடுதல் மற்றும் அழிவை கண்டு மனம் பொறுக்காமல் கண்ணீர் விடுவாள்.

       அவள் தண்ணீர் உயிரோடு உள்ளது என்று நம்பக்கூடியவள். ஆகவே தண்ணீரோடு தினமும் பேசுவாள். உலகின் மிக ஆதி உயிர் தண்ணீர் தான் என்று சொல்லும் அவள் தண்ணீர் தன்னிடம் அதை காப்பாற்றும்படியாக கெஞ்சியது. அது உலகின் ஆதி தாய் தன் பிள்ளைகளிடம் கேட்பதை போலிருந்தது என்கிறாள்.

       சாவின் பிடியில் உள்ள தண்ணீரைக் காப்பாற்ற வேண்டியது தனது வேலை என்று உணர்ந்த ஜோசபின் ஒரு வாளியில் ஏரித் தண்ணீரை நிரப்பிக் கொண்டு தன்னோடு நெருக்கமாக உள்ள இரண்டு பாட்டிகளையும் அழைத்துக் கொண்டு ஏரியை சுற்றி வருவது என்று கிளம்பினாள்.

       அதாவது கால்வாசி கனடாவையும் கால்வாசி அமெரிக்காவையும் ஒன்றாக சுற்றி வருவது போன்றது அந்தப் பயணம். எதற்காக கையில் வாளியில் தண்ணீர் கொண்டு போகிறாள் என்று வழியில் உள்ளவர்கள் கேட்டதற்கு தண்ணீர் உயிர் தரும் சக்தி. தண்ணீர் மக்களை ஒன்று சேர்க்கும் வலிமையானதொரு பிடிப்பு.

இரண்டு நாடுகளை தண்ணீர் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. நாம் உருவாக்கிய எல்லைகள் தான் நம்மை பிரித்து வைக்கிறது.

       பெண் தண்ணீரை சுமப்பவள். கர்ப்பத்தில் உள்ள குழந்தை தண்ணீரில் தான் வளர்கிறது. ஆகவே எதிர்கால தலைமுறைக்காக தண்ணீரை காப்பாற்ற வேண்டியது நமது வேலை. அதை உலகிற்கு தெரியப்படுத்த ஏரி தண்ணீரில் ஒரு வாளி அள்ளிக் கொண்டு நடக்கிறேன்.

       படித்தவர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் என்று எவ்வளவோ பேர் இரண்டு நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விட பூர்வகுடி மக்களான நாங்கள் அதிகம் தண்ணீரை நேசிக்கிறோம். அக்கறை கொள்கிறோம். அதை வெளிக்காட்ட பூர்வகுடிகளின் இறகுகளை கொண்டு செல்கிறோம்.

       உண்மையில் அறிவாளிகள் செய்ய மறந்ததை பலநேரம் படிப்பறிவற்றவர்கள் தங்கள் செயலால் மாற்றி காட்டியிருக்கிறார்கள். எனது தண்ணீருக்கான நடை பயணமும் அப்படி பட்டதே என்று சொல்லும் ஜோசபின் ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்.

       அவளது நடைப்பயணத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. பூர்வகுடி மக்களும் சூழல் அக்கறையாளர்களும் அவளுடன் சேர்ந்து நடக்கிறார்கள். வழி முழுவதும் தண்ணீர் குறித்த தொன்மையான நாட்டார் பாடல்களை பாடு கிறார். தண்ணீர் நோய்மையுற்றிருக்கிறது. அதை நமது பிரார்த்தனைகளின் வழியே சுத்தம் செய்வோம் என்று பிரசங்கம் செய்கிறாள். கிரேட்டர் லேக் மிகப் பெரியது என்பதால் அவளது பயணம் ஒவ்வொரு ஏரியாக கடந்து செல்கிறது. ஒரு ஏரி என்பதே பல நூறு மைல் நீளமானது.

       சில இடங்களில் அவள் தண்ணீரை நெருங்கி சென்று அதோடு பேசுகிறாள். தண்ணீரே, தண்ணீரே நீ எங்களுக்காக எவ்வளவு தந்திருக் கிறாய். உனக்காக தான் நாங்கள் இப்போது குரல் தருகிறோம். எங்களை காப்பாற்றியது போல நீ எங்களது எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டும். ஆலை கழிவுகள் நிரம்பிய தண்ணீரால் மனிதர்கள் மட்டுமில்லை மீன்கள், விலங்குகள், மற்றும் பறவைகள் யாவும் பாதிக்கப்படுகின்றன. ஆகவே எனது போராட்டம் உயிரினங்கள் யாவற்றிற்கும் பொதுவானது என்று சொல்கிறார் ஜோசபின்.

       சில நேரம் அவளால் தண்ணீரோடு பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை பற்றிக் கொள்கிறது. தண்ணீரின் முன்பாக நின்றபடியேஅழுகிறாள். அவளது கண்ணீர் ஏரியில் விழுகிறது. தன் கையில் வைத்திருந்த பரிசு பொருட்கள் சிலவற்றை தண்ணீருக்காக படையல் செய்கிறாள்.

       ஏரி தண்ணீரை பயன்படுத்தி தனது மூதாதையர்கள் செய்த விவசாயம் மற்றும் அந்த ஏரியிலிருந்து கிடைத்த மீன்கள் பற்றிய தனது நினைவுகளை அவள் பகிர்ந்து கொள்கிறாள். மற்றவர்களையும் தன்னோடு பகிர்ந்து கொள்ளச் செய்கிறாள். இந்த தண்ணீருக்கான நடை இயக்கம் மிகுந்த கவனம் பெற்றதோடு நதிநீர் குறித்த தேசிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

       வயதான காலத்தில் அவரவர் வீட்டிற்குள் ளாகவே நடப்பதற்கு கூட முடியாமல் சோம்பிக் கிடக்கும் சூழலில் பொதுவான அக்கறையில் 17000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஜோசபின் நடந்து சென்றது எளிதான விஷயமில்லை. அது அவளது மனவலிமையையும் உலகின் மீது அவள் கொண்டிருக்கும் தீவிர அக்கறையையும் வெளிப் படுத்துகிறது.

       பூர்வ குடிகளை வெள்ளை அதிகாரம் காலம் காலமாக அடக்கியும் ஒடுக்கியும் அவர்களது தனித்தன்மைகளை அழித்து அடிமைகளை போலாக்கி வைத்திருக்கிறது. ஆனால் அந்த பூர்வகுடிகளில் இருந்து ஒரு பெண் உலகைக் காக்க போராட கிளம்பியிருக்கிறது மிகுந்த பாராட்டுக் குரியது.

       ஆரம்பத்தில் மக்கள் தனது நடைபயணத்தை பரிகாசம் செய்தார்கள். ஆனால் நான் தண்ணீரை போலமுடிவற்று போய்க்கொண்டேயிருந்தேன். இன்று அதற்கான சரியான எதிர்வினையும் கவனமும் கிடைத்திருக்கிறது என்கிறார் ஜோசபின்.

       இன்றும் அவளது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பூர்வகுடிகளின் பாடல் களுடன் துவங்கும் அவளது நடைபயணத்தில் பல நூறு பேர் சேர்ந்து நடக்கிறார்கள். ஊடகங்கள் அவளைப் பின்தொடர்கின்றன.

       அதிகாலையில் நிழல் உருவங்கள் போல கையில் வாளியோடு பெண்கள் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி ஏரியின் வழியிலே நடந்து போகி றார்கள். இருள் வரும் வரை தொடர்கிறது பய ணம். இரவில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்கி கொள்கிறார்கள்.

       தண்ணீரை காப்பாற்ற குரல் தந்தபடியே நெடும்பயணத்தில் உள்ள ஜோசபின் மண்டாமின் என்ற முதியவள் நம் காலத்தின் நாயகி. அவளை கொண்டாடுவோம். அடுத்த முறை தண்ணீரை பயன்படுத்தும் போது சற்று கவனித்து அது எங்கிருந்து வந்தது. எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அறிந்து செயல்படுவோம். இயற்கை வளங்கள் அழிவுறும் போது அதை காப்பது நம அனைவரின் கூட்டு செயல்பாடு என்பதை கவனித்தில் கொள்வோம்.

       இன்றும் சென்னையின் நுங்கம்பாக்கம் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் லேக் ஏரியா என்ற வீதிகள் இருக்கின்றன. ஆனால் அங்கே இருந்த ஏரிகள் காணாமல் போய்விட்டன. ஏரிகளின் மீது வீடுகளும் கட்டிடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகருக் குள் பதிமூன்று ஏரிகள் இருந்துள்ளன என்கிறது பிரிட்டீஷ் ஆவண குறிப்பு.

       இன்று மாநகருக்குள் ஏரி இருந்த இடம் வீதியின் பெயராக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இது போல காணாமல் போன ஏரிகள் தமிழகம் முழுவதுமே இருக்கின்றன. அந்த ஏரிகளின் பெயர்களை அழிக்க முடியவில்லை. அவை அப்படியே மக்கள் நினைவில் இருக்கின்றன.

       தண்ணீர் பஞ்சம் வரும் நாட்களை தவிர மற்ற நேரங்களில் நம் கவனம் தண்ணீரின் மீது இருப்பதேயில்லை. அப்போதும் கூட இது பெண்களின் பிரச்சனை என்று ஒதுங்கி கொண்டு விடுகிறோம்.

       நம் காலத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர். நதி நீர் பங்கீட்டில் துவங்கி அன்றாட குடிநீர் வரை அது வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களில் தண்ணீர் மிக முக்கியமான விற்பனை பொருள். அதிலும் விவசாயம் பொய்த்து போன கிராமங்களில் உள்ள ஊற்றுள்ள கிணறுகளை தொழில் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றன. இரவும் பகலும் அதிலிருந்து தண்ணீர் லாரி லாரியாக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இன் னொரு பக்கம் இயற்கையான நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஊரணி யாவும் பராமரிப்பின்றி தூர்ந்து கிடக்கிறது. நானூறு ஐநூறு அடி தோண்டியும் கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை.

       இந்த பிரச்சனையின் தீவிரம் அறியாமல் நம்மை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மழை மட்டுமே. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் மழை சீராகவே இருக்கிறது. ஆனாலும் கிராமம் வரை பாட்டில் குடிநீரும், தண்ணீர் வணிகமயமாக்கலும் மிக அதிகமாகவே நடந்து வருகின்றது. அது குறித்து கவனமோ, அக்கறைகளோ மிக குறைவே.

       இயற்கை சீரழிவுகள் குறித்த விஷயத்தில் பெரிதும் சுற்றுசூழல் ஆய்வாளர்களுக்கு மட்டுமே உரியது என்ற பொது புத்தி தான் நமக்கிருக்கிறது. மின்சாரமற்று போன இரவில் காற்றே வரவில்லையே என்று ஆதங்கப்படும் பலரும் மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஏன் காற்று வரவில்லை என்று யோசிப்பதேயில்லை. காற்று, தண்ணீர், நிலம் என்று நம்மை சுற்றியே இயற்கையை அதிவேகமாக அழித்து கொண்டு வருகிறோம்.

       தமிழகத்தில் குளங்கள் இல்ல்ôத கோவில்களே இல்லை எனும் அளவு பெரியதும் சிறயதுமான குளங்கள் இருக்கின்றன. இதில் மிக சொற்பமானதில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும் சில குளங்களில் மட்டுமே குடிநீராக உள்ளது. எல்லா கோவில்களுக்கும் லட்சக் கணக்கில் வருவாய் உள்ளது. குறைந்த பட்சம் கோவில் குளங்களை முறையாக பராமரித்து அதை குடிநீராக பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தால் கூட பல ஊர்களில் வருடம் முழுவதும் குடிநீர் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

       எனது அருகாமை வீட்டில் உள்ள பள்ளச்சிறுமி ஒரு நாள் ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரை தரையில் ஊற்றி உற்று பார்த்தபடியே இருந்தாள். என்ன பார்க்கிறாள் என்று கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவள் ஆர்வத்துடன் இன்னொரு டம்ளர் தண்ணீரை தரையில் ஊற்றி பார்த்துக் கொண்டேயிருந்தாள் என்ன செய் கிறாய் என்று கேட்டேன்.

       எதற்காக தண்ணீர் தரையில் பட்டவுடன் ஓடத்துவங்கிவிடுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாள். அது தான் தண்ணீரின் சுபாவம் என்றேன். உடனே அவள் டம்ளரில் இருக்கும் போது தண்ணீர் ஏன் ஓட முயற்சிக்கவேயில்லை என்று கேட்டாள் நீ இப்போது தான் தண்ணீரை கவனிக்க ஆரம்பித்தி ருக்கிறாய் என்று பாராட்டினேன்.

       அவள் தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் வாளியினுள் தன்விரலை விட்டு ஆட்டியபடியே தண்ணீருக்குள் எப்படி விரல் எளிதாக நுழைந்துவிடுகிறது என்று கேட்டாள். நான் சிரித்தபடியே உன் விரல் மட்டுமில்லை. ஆகாசம் கூட சப்தமில்லாமல் தண்ணீருக்குள் நுழைந்து விடும் என்றேன்.

       அவள் ஆமாம் பார்த்திருக்கிறேன் என்றபடியே நான் தண்ணீரோடு பேசிக் கொண்டிருப் பேன் என்று சொன்னாள். நீ மட்டுமில்லை நானும் பேசுவேன் என்றேன். அவளால் நம்பமுடியவில்லை. பெரியவர்கள் யாரும் தண்ணீரோடு பேசுவ தில்லை அவர்கள் தண்ணீரை வீணடிக்கிறார்கள் என்று சொன்ன படியே திரும்பவும் விளையாட துவங்கினாள். தண்ணீரோடு விளையாட விரும் பாத சிறார்களே இல்லை.

       தண்ணீர் மனிதர்களை ஒன்று சேர்க்க கூடியது. எல்லா துயர்களில் இருந்தும் நீராடுதல் மனிதனை விடுவிக்க கூடியது. ஆற்றை போல மனிதனை சாந்தம் செய்யவும் புத்துணர்வு கொள்ளவும் வைக்கும் வேறு துணை யார் இருக் கிறார்கள். ஆற்றின் படித்துறையை விட உலகின் அழகான இடம் வேறு என்ன இருக்கிறது.

       தண்ணீரின் இயல்பான ருசியை நாவு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது. ஒவ்வொரு ஊரின் தண்ணீருக்கும் ஒரு மணமும் ருசியு மிருக்கும். அதிலும் ஊற்றுத் தண்ணீருக்கு உள்ள குளிர்ச்சியும் ருசியும் அலாதியானது. ஆனால் இன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.

       தண்ணீர் நம் காலத்தின் அதிமுக்கிய பிரச்சனை. அதை நாம் கவனம் கொள்ள மறப்பது கண்ணை மூடிக் கொண்டு நெடுஞ்சாலையின் ஊடே நடப்பது போன்றது. விபத்தின் பின்னால் நமது கவனம் பற்றி பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

       தேர்தலுக்கான வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் இந்தச் சூழலில் எவரது தேர்தல் அறிவிப்பிலும் இயற்கை வளங்களை காப்பது பற்றியும் நீர்வளம் அதன் முறையான பாதுகாப்பு பங்கீடு பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லை.

       எனக்கு தேவதச்சனின் கவிதை வரி நினைவிற்கு வருகிறது.

       ‘கண்ணாடி டம்ளரில்

       ஒரு சொட்டு

       தண்ணீரில்

       முழ்கியிருந்தன

       ஆயிரம் சொட்டுகள்’

தண்ணீரோடு பேசுங்கள் என்று ஜோசபின் மண்டாமின் சொல்வது நாம் அனைவரும் பின்பற்றபட வேண்டியதும் அக்கறை கொள்ள வேண்டியதும் என்பதை இந்த கவிதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

Pin It