1. 1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.

2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை. 

4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும். பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.

5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.

6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.

7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.

8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.

9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010ல் வெளியான கட்டுரை)

Comments

1 comment

1
Saji
Kulanthaikaluku mooku edupathu Sariya mookai eduthu vitaal sharp nose varuma

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.