ஏ அம்பானி பாத்தீயா.. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்ல.. எல்லாக் கட்சியும் தேர்தல புறக்கணிச்சாங்க.. என்னமோ தேர்தல புறக்கணிக்கிறது தீவிரவாதம்னு சொன்ன.. தி.மு.க., காங்கிரஸ்., பி.ஜே.பி. யை எல்லாம் எந்தப் பட்டியல்ல சேக்குறது..

இல்ல அரக்காசு! அது அவங்களோட சனநாயக உரிமை.. ஜனநாயகத்துல அரசியல் சாசனத்துக்கு விரோதமா எதையும் செய்யக் கூடாது. ஓட்டுப் போடுறதும் புறக்கணிக்கிறதும் அவங்கள் உரிமை..

இது என்னய்யா இடதுசாரிக புறக்கணிச்சா அது தீவிரவாதம்.. மற்றவன் செஞ்சா அது சனநாயக உரிம.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னி மற்றவனுக்கு வந்தா ரத்தமா?

 அம்பானி.. குஜராத்துல பஞ்சாயத்து எலக்சன்ல கட்டாயமா ஓட்டுப் போடனும்னு சட்டம் போட்டிருக்காங்கெளே அது சரியா?

அதுவா அது யங் ஜெனரேசனுக்கு பி.ஜே.பி பயிற்சிக் கொடுக்குது..

அம்பானி.. அப்ப மட்டும் ஜனநாயக உரிம பத்தி பேச மாட்ட.. குஜராத்துல போட்ட முதலீடு அப்படிப் பேச வைக்குது ஒன்னய... நீ தான்யா உண்மையான அரசியல்வாதி..

அரக்காசு ஒங்க ஊர்ல யாரு ஜெயிக்குது.. மகேந்திரன் ஜெயிக்குதா...

அம்பானி..  மக்களுக்கு எப்பவும் மொதலாளிக கூடச்சேரத்தான் விருப்பமே.. அம்மா தோத்தா கோபத்துல தொகுதிக்கு எதுவும் செய்ய மாட்டாய்ங்க.. அதனால புத்தியா பொழச்சுக்குவோம்னு கங்கணமா இருக்காக.. அதனால அம்மாகூட நிக்கிறதுதான் பலம்னு நெனக்கிறாக. அது மட்டுமில்ல, எப்படியாவது புகழ்பெறு! பணம்பெறு!ன்னு சமூகத்துல திரும்புற பக்கமெல்லாம் சொல்லி கொடுக்குறானுவலா.. அதனால அம்மாவ மாதிரி  அட்டகாசம் பண்ண முடியாதான்னு ஏங்குறான்..

ஏன் அரக்காசு அம்மா ஊழல்கேசுல மாட்டி.. மோசடி தீர்ப்புனால விடுதலையானது ஊருக்கே தெரிஞ்சு போச்சே, அது எதுவும் பாதிக்காதா?

ஊழல் கேசுல விடுதலையானத எங்காளு வீரமாத்தான பாக்குறான். சாமானிய மனிசன் ஒங்கள மாதிரி முதலாளிக ஆட்சி நடக்குற நாட்டுல சின்னஞ்சிறு ஏமாத்து பண்ணித்தான் வாழுற நிலையில கெடக்குறான். அதனால பெரிய ஏமாத்து செஞ்ச அம்மாவ அவன் ஆன்னு வாயத் தொறந்துதான் பாக்குறான்.. கட்டாயம் ஓட்டுப் போடுவான்.. அம்மாவுக்கே ஜெ. பாத்தியா அம்பானி, பட்டாசு வெடிக்கிறானுவ... அம்மா ஜெயிச்சாச்சாம்.

சரி வா, அகில இந்திய பிரச்சனையப் பார்ப்போம். பத்திரிக்கையாளர்கள் இந்தியாவுல தீக்குளிக்குறாங்களாம்ல.. ஏன் அம்பானி..?       

இல்ல அது உ.பியில அமைச்சர், ரிப்போர்ட்டர எரிச்சது..

ஏன் அம்பானி..?

அமைச்சரோட சுரங்கத்துல முறகேடு நடந்ததா அந்த ரிப்போட்டரு எழுதுச்சு..  அதனால 5 போலீஸ்காரங்க போயி அந்த ரிப்போர்ட்டர உயிரோட கொளுத்துச்சு.. அந்த ரிப்போட்டரு சாகுறதுக்கு முன்னால “அந்த அமைச்சருக்கு தைரிய மிருந்தா என்ன அடிச்சிருக்க வேண்டியதுதான.. ஏன் எரிக்கனும்”னு கேட்ருக்கு.. ஆனா  அரசாங்க தடய அதிகாரிங்க அந்த ரிப்போர்ட்டர் தானா தீ வச்சு செத்துச்சுன்னு சொல்லுது.. உ.பி. மாநில முதல்வர் அகிலேஷ்யாதவும் அரசாங்க அறிக்கப்படிதான் நடவடிக்க எடுக்க முடியுன்னு சொல்லுது.. அதனால அந்த ரிப்போர்ட்டர் தீக்குளிச்சது உண்மதான்..

அட அம்பானிப்பயபுள்ள கடைசியில ஓம் பாசத்தக் காட்டுறயில.. ஏன்யா அந்த ரிப்போர்ட்டர் தீக்குளிச்சான்னு இப்படி அப்பட்டமா புழுகுற.. அடுத்து மத்திய பிரதேசத்துல ஒரு ரிப்போர்ட்டர எரிச்சுருக்கானுக.. அதையும் தீக்குளிப்புன்னுதான சொல்லுவ.. சொல்லுயா..!

அரக்காசு மோதுர எடத்துல மோதனும்.. தப்புத் தப்பான எடத்துல மோதுனா இப்படித்தான்..

அம்பானி கொள்ளை முதலாளி.. சூறையாடும் முதலாளின்னு கேள்விப்பட்டேன்.. இப்பத்தான் புரியுது இவனுக எவ்வளவு கொடூரமா இருக்கானுகன்னு.. இருக்கட்டும் இப்படியேவா போயிரும்..

அரக்காசு நீ சும்மா வசனம் விடுது.. நீ யார என்ன பண்ணும் சொல்லு.. கிரிக்கெட் வாரியத் தலைவரா இருந்த லலித்மோடி வெளிநாட்டுல பிடிவாரண்ட்ல இருக்காரு.. ஒங்க பாசையில சொல்து மோசடிமன்னன்.. அவருக்கு விசா வாங்கித்தரது எல்லாம் பி.ஜேபி.அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செஞ்சிருக்கு.. ஆனா மோடி அவங்க செஞ்சது மனிதாபிமான உதவின்னு சொல்து.. அதனால மேல இருந்து கீழ வரே அப்படித்தான்.. ஏன் உலக நடப்பே இப்படித்தான்.. பெரிசா பேச வந்துட்ட அரக்காசு...

எனக்கு வர்ற கடுப்புக்கு அப்புடியே கடிச்சு துப்பிப்புடுவேன்.. ஓடிப்போ..

அரக்காசு ரொம்ப டென்சன் ஆகாத.. போய் யோகா பண்ணு.. மோடி ஐ.நா சபையில சொல்லி உலக யோகா தினம் அறிவிச்சிருக்கு.. போ அமைதி கிடைக்கும்... இதையெல்லாம் பாராட்ட மாட்டியா அரக்காசு..

ஊரான் வீட்டு நெய்யேன்ற மாதிரி தமிழ்நாட்டுல களறிப்பயித்துல இருந்த மூச்சுப் பயிற்சிக் கலைய திருடி யோகான்னு பேரு வச்சு மதவெறிக் கொலைகார கும்பல் மன அமைதிக்கு பயிற்சி கொடுக்குதுன்னு சொன்னா நம்புவனா.. நீ வேண்ணா பாரு அம்பானி இனி யோகாவ தெருத்தெருவா கூவி விக்கப் போறானுக... அம்புட்டுக் காசு. நீயே கூட ரிலையன்ஸ் யோகா ஒண்ணு ஆரம்பிச்சாலும் ஆச்சாரியமில்ல...

அம்மா மெட்ரோ ரயில் தொடங்கி இன்பராடிரக்சர உருவாக்கிருக்கு.. ஐ லைக் இட் அரக்காசு...

இன்பரா டிரக்சர்னா...

அது உள்கட்டுமானமு அரக்காசு..

ஓஹோ.. ஏன் அம்பானி இதுனால என்ன நன்ம..

ஏ அரக்காசு அதனால சிட்டியில டிராபிக் குறையுது.. ஜனங்க நெரிசல் குறையுது அரக்காசு..

அம்பானி புண்ணுக்குப் புணுகு பூசி ஆகுறதென்ன? கிராமப்புறங்கள பொழப்பத்த பூமியா மாத்திப்புட்டு எல்லாரையும் கிராமத்த விட்டு வெரட்டிவிட்டுப்புட்டு நகரத்துல நெரிசலக் கொறைக்குறேன் பேர்வழின்னு ரயிலுவுடுறேன்.. கப்பலுவுடுறேன்றது சுத்த பைத்தியக்காரத்தனமா இல்ல. முதலாளிக நோகாம நொங்குதின்றதுக்காக துறைமுகம் இருக்குற எடம், ஏர்போர்ட்டு இருக்குற எடம்.. அரசு தலைமையகம் இருக்குற எடம்ணு பார்த்து சென்னைய சுத்தி மொதலீடு போடுறேன்றான். ஓன்ன மாதிரி ஆளுகள கண்டிச்சு சரிபண்ணத் தெரியாம எங்களக் கொண்டுவந்து வுட்டுப்புட்டு எங்க மேலய குற்றம் சொல்லி கூட்டத்த கொறைக்குறோம்னு சொல்லி ரயில்பாலம் கட்டுறேன்னு சொல்லி அதுல கான்ட்ராக்ட் எடுத்து காசுபாக்குறானுவ.. இதுக்குப் பேருதான் உள்கட்டுமானமுன்னு சொல்ற..

என்னத்த சொன்னாலும் எங்க பாட்டனுக சொன்ன மாதிரி கிராமத்தக் கொன்னவன் மழையக்கொன்னவன், அவன் தண்ணியில்லாமத்தான் சாவான். அம்பானி கடைசியில ஒங்க குரூப் எல்லாம் பண்ண வீடு வாங்கிக்கிட்டு சாய்வு நாற்காலித் தேச்சுப்புட்டு மண்ணுதிண்ணு குப்புற விழுந்துதான் சாவீங்க..

அரக்காசு.. ரொம்பப் பேசிட்ட... இந்தா சோடா குடி. நீ சொல்ற மாதிரி ஒண்ணுகூட நடக்காது.. போயிட்டு வரேன்.

ஆடுங்க அம்பானி ஆடுங்க.. ஒங்களுக்கும் அதானி மாதிரி மோடி கூட ஒலகம் சுத்தனும்னு ஆசை வந்திருச்சு.. போயிட்டு வா அம்பானி போயிட்டுவா..

Pin It