இந்திரா காந்தி மரணத்தையொட்டி நடைபெற்ற கலவரத்தில்
இறந்து போன சீக்கியர்களின் மனைவிமார்கள்.
பயம் பதுங்கிய கண்கள்
வெறிக்கின்றன வானத்தை
படுகொலைகள் நிகழ்ந்த
வாழ்வின் காயங்களில் வழிகின்றது
காலம்
காரணங்களின் மேலாடும்
வன்முறைக் களங்களில் வீழ்ந்த
உடல்கள் தெறித்த ரத்தம்
தேசத்தின் பெயரில் நாறுகிறது
எதுவுமறியாத அப்பாவிகளின்
செத்த உடல்கள் இழப்புகளின்
எண்ணிக்கை என்றானது
விசாரணையின் சுத்தியல்கள்
உடைந்து சிதறிய பொழுது
புதைந்து போயின நீதியின்
கீச்சுக் குரல்கள்
போடப்பட்ட கமிஷன்கள்
ஒவ்வொன்றும் முடிந்து போகின்றன
வெறும் கையெழுத்தோடு மட்டும்