கோயமுத்தூர் ஜில்லா மகாநாடு ஈரோட்டில் சென்ற மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற்ற விபரம் மற்ற பக்கங்களில் பார்க்கலாம். மகாநாடு மிக்கச் சிறப்பாகவும், பிரதிநிதி ஜனங்களின் மனதைக் கவரத்தக்கதாகவும் நடை பெற்றிருக்கின்ற தென்பதை அதிலிருந்து உணரலாம்.

அதோடு இம் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்கள், திறப் பாளர்கள், வரவேற்புத் தலைவர்கள், உருவப் படத் திறப்பாளர்கள் ஆகியவர்கள் பெரிதும் நமது மகாநாட்டுக்குப் புதிதானவர்களென்றும் காணப் படலாம். சுயமரியாதை மகாநாட்டுக்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்கள் கொச்சி ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் மகாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களில் தலைவர் தோழர் நாயகம்-சிதம்பரம் அம்மாள் அவர்கள் இதற்குமுன் நமது மகாநாடுகளில் கலந்திருந்தாலும் அவர்கள் நமது மகாநாட்டில் தலைமை வகித்தது இதுவே முதல் தடவை. திறப்பாள ராகிய தோழர் பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்கள் சுயமரியாதை உலகத்துக்குப் புதியவர்களேயாவார்கள்.periyar 522உருவப்படத் திறப்பு விழாவுக்கு தலைமை வகிக்கவும், விழா நடத்தவும் வந்த தோழர்கள் Dr.வரதராஜுலு, கல்யாண சுந்தர முதலியார் ஆகியவர்கள் நம் இயக்கத்துக்கு புத்தம் புதியவர்களென்றே சொல்ல வேண்டும். நம் இயக்கத்தைக் குறை கூறியவர்கள் என்றும் கூற வேண்டும். நமது இயக்கத் துக்கும் அவர்களது கொள்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லப்பட்டது என்றும் சொல்ல வேண்டும். நாமும் அவர்களை அப்படியே சொன்னோம் என்பதையும் மறைக்க வில்லை. ஆனால் அவர்கள் இப்போது நம்மை சில விஷயங்களில் மாத்திரம் நாம் அதி வேகமாய் போய்க் கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார்கள். நாமும் அவர்கள் பல விஷயங்களில் நமது கொள்கைக்கு அனுசரணையான அபிப்பிராயங்கள் கொண்டிருக்கிறார்களென்று கருதுகிறோம்.

இதன் உண்மைகள் எப்படியோ இருக்கட்டும். இருவர் நிலைக்கும் பிரமாத வித்தியாசம் அதாவது கூடிக் கலந்து நாமும், அவர்களும் ஒற்றுமை யாய் இருந்து நம் அடிப்படையான கொள்கைக்கேற்ற தொண்டை நடத்த முடியாத அளவு, வித்தியாசமான நிலைமையில் இன்று இல்லை என்பதை நாமும் உணர்கிறோம். அவர்களும் உணர்கிறார்கள் என்றே கருதுகின்றோம்.

இந்த உண்மையை அவர்களது உபந்யாசங்களில் இருந்தே அறிய லாம். மேலும் “தமிழ்நாடு” பத்திரிகையானது சுமார் 2-வருஷகாலமாகவே பச்சையாய் சமதர்மத்தை ஆதரித்து வந்திருக்கிறது. காங்கிரசின் போக்கை யும் காந்தியாரின் கொள்கைகளையும் ஒப்புக் கொள்ளாமல் நம்மைப் போலவே பல தடவை தாக்கி வந்திருக்கிறது. பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் கண்டிப்பதில் அது பின் வாங்கினதுமில்லை. நமது இயக் கத்துக்கும் அது தன்னாலான உதவி செய்து வந்திருக்கிறது - வருகிறது.

ஆகவே அப்பத்திரிகையின் உதவியையும் டாக்டர் வரதராஜுலு அவர்கள் கூட்டுறவையும் நாம் அனுபவிக்க நேருவது நமக்கு நன்மையேயாகும்.

தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களது அபிப்பிராயங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை வெறுத்து நிற்கின்றதென்றே உணர்கிறோம். சமதர்மத்தை முழுதும் ஆதரிக்கின்ற தென்றே கருதுகிறோம். தொழிலாளர் விஷயங்களில் அவருக்கு எப்போதும் கவலையுண்டு. தொழிலாளர்களுக் காக எதுவும் செய்ய அவர் துணிந்திருக்கிறார் என்பவைகளில் யாருக்கும் உறுதியான நம்பிக்கையுண்டு. ஆதலால் அவர்களது கூட்டுறவும் நமக்கு நன்மையையே பயக்கும் என்பது நம் உறுதி.

மற்றபடி நம் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட எண்ணங்கள் சில அவர்கள் இருவர்களிடமும் இருக்கலாமென்றே வைத்துக் கொள்வோம். அதனால் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடாது. மகாநாட்டின்போது அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் நாம் ஆnக்ஷபித்துத் தீர வேண்டிய அம்சம் எதுவும் நமக்குத் தென்பட்டதாக நமக்கு ஞாபகமில்லை.

கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மத நம்பிக்கையைப் பற்றியுங்கூட அவர்கள் நம்மைக் கட்டாயப் படுத்தவில்லை. எதையும் வலியுறுத்திச் சொல்லவுமில்லை. அவற்றில் தங்களுக்குச் சிறிது நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கலாம். அவை உண்மையான கடவுள் மத நம்பிக்கை யானால் நமக்குக் கவலையில்லை. உண்மையான நம்பிக்கையென்பது அனுபவத்தில் முன்னுக்குப் பின் முரணாய்த் தீருமானதால் சீக்கிரம் மாறியே தீருவார்கள். பொய்யான-உலக மெய்ப்புதலுக்கான கடவுள் மத நம்பிக்கை யானால் சமயத்திற்குத் தகுந்த படி அவற்றைத் திருப்பிக் கொள்வார்கள். ஆதலால் நம்மீது அந்நம்பிக்கைகளைப் புகுத்துகின்ற வரையில் நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த விதத்திலும் உலகப் பொது எதிரிகளான பார்ப்பனர்கள் விஷயத்தில் நம்மைப் போலவே அவர்களும் அபிப்பிராயம் கொண்டிருப்பதால் பொது எதிரிகளை ஒழிக்க ஒன்று சேர்ந்தாக வேண்டியதே புத்திசாலித்தனமாகும். அரசாங்க விஷயத் திலும், உலகப் பொது எதிரிகளாகிய ஏகாதிபத்தியங்களை அழிப்பதிலும், முதலாளிகள் ஆதிக்கங் களை ஒழிப்பதிலும், முதலாளித் தன்மை அரசியல் களை ஒழிப்பதிலும் நம்மைப் போலவே அவர்களும் கருத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆதலால் அவற்றில் நாம் ஒன்று சேர்வது அவசியமேயாகும்.

ஏழை மக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் (பார்ப்பனர்கள்) மக்களை ஏய்ப்பதை ஒழிக்க வேண்டியதும், பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனரல்லாதார் கட்சி என்னும் பெயரால் ஒரு கூட்டம் (பணக்காரர்கள்) மக்களை ஏய்ப்பதை ஒழிக்க வேண்டியதும் நமக்கு எவ்வளவு அவசியமோ அது போலவே தொழிலாள மக்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு தொழி லாளர் சங்கம், டிரேட் யூனியன் என்னும் பெயர்களால் ஒரு கூட்டம் (சிவ ராவ்கிரி முதலிய கூட்டத்தார்கள்) மக்களை ஏய்ப்பதையும் ஒழிக்க வேண்டி யதும் இப்போது நமக்கு மிகவும் அவசியமாகும். இக்காரியத்திற்கும் தோழர்கள் நாயுடு, முதலியார் ஆகியவர்களது கூட்டுறவு நமக்கு அவசிய மேயாகும். ஆதலால் இம்மகாநாட்டுக்கு அவர்களை அழைத்ததையும் அவர்கள் மகாநாட்டுக்கு விஜயம் செய்ததையும் நாம் மனமார பாராட்டு கின்றோம்.

இதிலிருந்து, நாம் கருத்திலிருத்த வேண்டியது என்னவென்றால் நமது இயக்க கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் நமது தோழர்கள், நேயர்கள் ஆவார்கள். நமது கொள்கைகளுக்கு எதிர்ப்பு அளிப்பவர்கள், எதிர்மாறாகச் சூக்ஷி செய்கின்றவர்கள் நமது எதிரிகள் ஆவார்கள் என்று தான் கருத் திலிருத்த வேண்டும்.

தோழர் சி.டி. நாயகம் அவர்கள் தனது குடும்ப சமேதராய் நமது இயக்கத்துக்கு உழைத்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் இப்போது பென்ஷன் பெற்றுவிட்டதால் இனி நமக்கு அவர்களது முழு நேர உழைப் பும் கிடைக்கும் படியாக ஏற்பட்டதானது மற்றொரு பலமேயாகும். தோழர். பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்களது வருகையும், நமது இயக்கத்துக்கு புதியதொரு ஆதரவாகும். இவைகளின் பயனாய் நமது இயக்கம் முன்னிலும் வேகமாய்ச் செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்ட தென்றே கருதுகிறோம். மற்றும் இயக்கத்திலிருந்து பல காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் நிஷ்டூரப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் காட்டிக் கொண்டிருந்த பல தோழர்கள் அதாவது அய்யாமுத்து, கண்ணப்பர், கோவை சி.பி. சுப்பையா, ராவணதாஸ் முதலிய இன்னும் பல தோழர்கள் மகாநாட்டிற்கு வந்திருந்ததும் காரியங்களில் கலந்து கொண்டதும் மகிழத் தக்க காரியமாகும்.

இவைகளையெல்லாம்விட மகாநாட்டு நடவடிக்கைகளில் நாம் மிகுதியும் பாராட்டி மகிழ்ச்சியடையத்தக்க காரியம் ஒன்று உண்டு; அதென் ன வென்றால் மகாநாட்டிற்கு விஜயம் செய்த கனவான்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்கும் முறையில் இயக்கக் கொள்கைகளையும் தோழர் ஈ.வெ.ராமசாமியையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்லது தாக்கியோ பேச நேரிட்ட சமயங்களில் எவ்வித சந்தடியும் ஒழுங்குத் தவறுதலான நடவடிக்கையும் எவரிடமிருந்தும் காணாமல் இருந்ததானது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததோடு சிறிது தைரியத்தையும் கூட ஊட்டிற்று என்று மனமாற தெரிவித்துக் கொள்கிறோம். சிலருக்குப் பேச சந்தர்ப்பம் கொடுபட வில்லை என்ற வருத்தம் இருந்ததாகக் கண்டாலும் அது உடனே மறந்து போயிருக்கும் என்றே கருதுகிறோம்.

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இப்போது அவசர மாயும், அவசியமாயும் காரியத்தில் செய்து காட்ட வேண்டிய தீர்மானங்கள் இரண்டாகும். அவை முதலாவது தோழர் காந்தியவர்கள் தென்னாட்டிற்கு வந்து தீண்டாமை விலக்கு என்னும் பேரால் நடத்தப்போகும் வருணாச்சிர-மதப்பிரசாரத்தை பகிஷ்கரிப்பதாகும்.

இரண்டாவது சமீபத்தில் நடைபெறப் போகும் தமிழன்பர் மகாநாடு என்னும் பேரால் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்காக செய்யப்படும் பார்ப்பன சூட்சி மகாநாட்டை பகிஷ்கரிப்பதாகும். இவ்விரண்டு காரியங்களையும் செய்யவேண்டுமானால் பெரியதொரு கிளர்ச்சி உடனே செய்ய வேண்டி யிருக்கிறது. இதற்காக உடனே சென்னையில் ஒரு பகிஷ்காரத் திட்டக் கூட்டம் ஏற்பாடு செய்து பிரசங்கம், துண்டுப் பிரசுரம் முதலியவை மூலம் பிரசாரம் செய்ய வேண்டியதாகும். பல சங்கங்களிலும் இப்பகிஷ்காரத் தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும். தோழர் காந்தியாருக்கும், தமிழன்பர் மகாநாட்டு நிர்வாகிகளுக்கும் அனுப்ப வேண்டும். இன்று கூடும் இராமநாதபுரம் ஜில்லா சுயமரியாதை மகா நாட்டிலும் இதைப்பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசிய மாகும்.

கடைசியாக மகாநாட்டுக்கு அதிக உதவி செய்த மாயவரம் தோழர் நடராஜன் முதலியவர்களுடையவும், முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு லண்டன்மிஷின் பள்ளிக்கூடம், மகாஜன பள்ளிக்கூடம், அர்பன் பாங்கு முதலிய ஸ்தாபனங்கள், தலைவர்கள், அதிகாரிகள், சிப்பந்திகள் ஆகியவர்களுடையவும் உதவி மிகவும் பாராட்டத்தக்கதே ஆகும். காரியதரிசிகள் தோழர்கள் எஸ்.வி.லிங்கம், எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகியவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் மகாநாடு சிறப்பாய் நடைபெறுவதற்குக் காரணமாகும்.

(புரட்சி - தலையங்கம் - 03.12.1933)

Pin It