ரஷியக் கூட்டுறவு முறை

தலைவரவர்களே! தோழர்களே!! எனக்கு இன்று பேச சந்தர்ப்பம் கொடுத்து எனது அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அனுமதி கொடுத்த தோழர் கணபதி ஐயர் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடைசியாக பேச வேண்டியவனாக இருக்குமென்று கருதினேன். ஆனால் நான் முதலிலேயே பேச ஏற்பட்டு விட்டது. ஆனபோதிலும் எனது அபிப்பிராயங்களை சொல்லி விடுகிறேன்.

நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜிஸ்ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம் டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரிய வரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைட்டிகளிலிருந்து சிறிது விலகி அலக்ஷிய அபிப்பிராயமுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் கக்ஷியும் சுயநலத்துக்கு ஸ்தாபனங்களை உபயோகித்துக் கொள்வதும் அதன் உத்தேசங்களுக்கு விறோதமாக பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்து வருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று குறிப்பிட்டார். அதுமிக உண்மையேதான். ஏனெனில் நம் நாட்டில் நிலைபெற்றுள்ள பல்வேறு விஷயங்களையும், முறைகளையும் அடியோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு நன்மையைக் கொண்டு வந்து விடுவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகும்.

ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப் பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்தியமாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது.

periyar 352என்னைப் பொருத்தவரையில் என்னைப் பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்த போதிலும் எனது முடிவான லக்ஷ்யம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத் தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.

கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது நம்முடைய நாட் டில் ஏற்பட்டுப் போனால் ஜனசமூகமானது கவலையற்று - சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக - சவுக்கியமாக குதூகுலமாக வாழ வழி ஏற்பட்டு விடும்.

நம்முடைய நாட்டில் ஏதாவது ஒருசங்கம் ஏற்பட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்களென்றால் அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும் அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாமென்றும் தான் கருதிக் கொண்டு அதில் சம்மந்தம் வைத்துக் கொள்ளுகிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கு - ஜன சமூக மேம்பாட்டிற்குப் பாடுபட வேண்டுமென்பதைப்பற்றிய கவலையை அறவே விட்டு விடுகின்றார்கள்.

அதுபோலவே நம்முடைய கோவாபரேடிவ் ஸ்தாபனங்களிலும் இருந்து வருகிறது. அந்த ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்குள்ளாகவே கூட்டுறவு உணர்ச்சி கூட கிடையாதென்றே உறுதியாகச் சொல்லலாம். ஆனால் ஏதோ சிலர் அவரவர்கள் தங்களுடைய நன்மைக்காகவும் பட்டம் பதவிகளுக்காகவும் கௌரவத்திற்காகவும் ஏதோ சம்பந்தம் வைத்திருப்பதினால் மாத்திரம் என்ன பலன் ஏற்பட்டுவிடும்?

சாதாரணமாக இந்த ஊர் கூட்டுறவு ஸ்தாபனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2000, 3000 பேர்கள் வரை பங்குதார மெம்பர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த ஸ்தாபனத்தினால் உருப்படியாக பொது மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடுகிறது? ஒரு சில சொற்ப பேர்கள், ஏதோ எப்படி கடன் பெறலாமென்று பெருத்த பிரயாசை எடுத்துக் கொள்பவர்களே சில அனுகூலங்கள் அடைகிறார்கள். இவர்களுக்கு ஸ்தாபனத்தைப் பற்றிய கவலையே இல்லை. இன்றை உலக எல்லா வாழ்க்கையும் இப்படித் தான் இருக்கிறது. வெறும் குற்றத்தையே பேசுவதால் பயனில்லை. ஆனாலும் இவைகள் தக்க படிப்பினையாக இருக்க உதவ வேண்டும். கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிற விஷயங்களே நமது வாழ்க்கை யின் முக்கிய லக்ஷியமாய் இருக்க வேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பதே கூடாது.

சாதாரணமாக நாம் நம்மிடையே ஒருவரை புதிதாகக் கண்டால் அதாவது சந்தித்தால் அவருடைய நிலை என்னவென்றும், உத்தியோகம் என்னவென்றும் வினவ ஆசைப்படுகிறோம். அவர் ஒரு பெரிய உத்தியாகஸ்தனாகவோ, பணக்காரனாகவோ இருந்தால் ஒரு தனி மதிப்பும், ஒரு குமாஸ்தாவாக இருந்தால், கூலியாக இருந்தால், ஒரு தனிமதிப்பும் தான் கொடுக்கின்றோம். இது தான் நம்முடைய நாட்டில் ஒரு மனிதனை மதிப்பதைப் பற்றிய முறையாகும். ஆனால் ரஷ்யாவிலோ இங்குள்ள இதுபோன்ற கேள்விகளை அங்கு யாரும் கேட்பதில்லை. அங்கு ஒருவருடைய உத்தி யோகத்தைப் பற்றியோ, செல்வத்தைப் பற்றியோ சிறிதும் யோசிப்பதே இல்லை; விசாரிப்பதுமில்லை. ஒருவனைக் கண்டதும் அவன் (Social service) சமுதாய சேவை என்ன செய்திருக்கிறான் என்று மட்டுமேதான் பிரதானமாக கவனிப்பார்கள், அதைத்தான் கேட்பார்கள். ஒருவர் பிறருக்கு என்ன நன்மை புரிய ஏற்றுக் கொள்ளுகிறார் என்பது தான் மனிதனை அறிய முக்கிய தத்துவமாகும். அதுதான் அங்கு அவனுடைய பெருமையைக் காட்டுவதாகும். அங்கு உத்தியோகத்தைப் பற்றிய பேச்சோ, வருமானமோ, மேல்கீழ் வரும்படி என்பது போன்ற பேச்சோ, எங்கும் எவ்வித ரூபத்திலும் கிடை யாது. அங்கு எங்கும் யாவரும் சமுதாய வேலை செய்வோரேயாவார்.

நான் ரஷ்யாவில் இருந்த காலத்தில் ஒரு நியாயஸ்தலத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒரு குற்றவாளியை விசாரிக்கக் கண்டேன். அவன் ஒரு விசேஷ நாளில் குடித்து வெறியனாகி கலகம் செய்தான் என்பதான குற்றவாளி. இவனை அந்த விசாரனை ஸ்தலத்தில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால் உன்னுடைய Social Service Work (சமுதாய ஊழிய வேலை) என்ன என்பதேயாகும். அவன் அதற்கு எனக்கு (Social Service) சமுதாய வேலை இல்லை என்றான். இதைக் கேட்டதும் நியாயாதிபதியும் ஜூரியான ஒரு பெண்ணும் ‘உனக்கு சமுதாய வேலையில்லாமல் போய் விட்டது என்கிறாயே வெட்கமில்லையா? என்னை உலகுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள வகையற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லுவது அவமானகரமானதாகத் தோன்றவில்லையா?” என்று கடிந்தார். அதற்கு அவன் எல்லா சோஷியல் சர்வீசையும் சிறு பிள்ளைகளாகிய கம்சமால் கூட்டத்தார் எடுத்துக் கொள்ளுகிறார்கள், நான் என்ன செய்வது என்றான். அந்தம்மாள் வெட்கம், வெட்கம், என்றாள். இவைகளைக் கேட்ட பிறகு தான் சோஷியல் சர்விஸ் (Social Service) என்பவைகளைப் பற்றி அதிகம் அறிய விசாரணை செய்தேன். சமூக ஊழியம் செய்வது தான் தங்கள் வாழ்க்கையின் கௌரவம் என்பதை முதலாகவும் அடுத்தபடி கூட்டுறவு வாழ்க்கையே மேலானதாகவும் அவர்கள் கருதி நடக்கிறார்கள்.

ரஷ்யர்களுடைய வாழ்க்கையானது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் Social Service சும் கூட்டுறவு வாழ்க்கையை நடத்த முனைந்து நிற்பதேயாகும். அவர்கள் வாழ்க்கையில் மேற்போட்டுக் கொள்ளும் இந்த வேலையானது மனிதனுடைய கவலை துன்பம், மனச்சோர்வு என்பவைகளே இல்லாமல் செய்து விடுகிறது. அங்குள்ள சர்வ ஜனங்களுடைய எண்ணமெல்லாம் பிறருக்கு எவ்வளவு தூரம் நன்மை செய்ய வேண்டும்? என்றே குடிகொண்டிருக்கிறது. இந்த நோக்கமில்லாத மனிதனை மனிதனல்ல என்று வன்மையாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் உத்தியோகத்தின் பேராலும் மற்ற பதவிகளின் பேராலும் 1000, 2000, 5000, 7000 ரூபாய்கள் கொள்ளை கொள்வது போன்ற கொடுமைகள் ரஷ்யாவில் கிடையாது. அங்கு உள்ளவர்களுக்கு தனக்கு வேண்டிய அளவுக்கு மேல் வரும்படி - லஞ்சம் - லாவணம் என்பன போன்றவைகளே அடியோடு கிடையாது. அங்கு ரூபாய் 10, 20 கூட கடன் கொடுக்கும் முறையோ,கடன்படும் முறையோ கிடையாது. அது குற்றமாகும்.

ஆனால் அந்த முறைகள் எல்லாம் நம்முடைய நாட்டின் இன்றைய நிலைமைக்கு சாத்தியமில்லை என்று சொன்னாலும் நம் நாட்டு நிலைமைகளை எல்லாம் அடியோடு மாற்றி அமைத்துத்தான் ஆக வேண்டும். இக் கருத்தைத்தான் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இது சிறிது சிறிதாய் கோவாப்பரேட்டிவ் ஸ்தாபனங்களின் மூலம் செய்யலாம். நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச் செருக்கு கொண்டவர்களையும் - கல் நெஞ்சம் படைத்த கணத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாய் வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களையும் பிச்சைக்காரர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இது போன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரையிலும் தொல்லைப்படுகிறவர்களும் - தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.

இன்று காலை முதல் மாலை வரையிலும் என்னிடம் வந்து 5, 6 பேர்கள் வரை வந்து “வேலை கொடு - வேலை கொடு” என்று வருந்தினார்கள். ஒருவருக்கு கலைக்டருக்கு சிபார்சு கடிதம், தாசில்தாருக்கு சிபார்சு கடிதமும் எழுதித் தர வேண்டுமாம். ஒருவர் தனது குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கிறது, சம்சாரத்திற்கும் உடல்நோவு, நான் என்ன செய்வேன். 4 மாதமாக வேலையில்லையே காப்பாற்றுவாறில்லையே என்று கதறினான். நான் அவருக்கு 2 படி புழுங்கல் அரிசி கொடுக்கும்படி வீட்டிற்கு சீட்டு கொடுத்தேன். இதுபோன்ற கொடுமைகளின் தன்மையை இன்று என்னுடன் தங்கியிருந்த நண்பரும் நன்கறிவர். எங்கும் வேலை இல்லை என்ற கூக்குரல் அதிகரித்து விட்டது. ஏன் வேலை இல்லாமல் போய் விட்டது? வேலை இல்லாமை எப்படி ஏற்படும்? என்று யோசித்துப் பார்த்தீர்களா? ஒரு வேலைக்காரன் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை வேலை செய்கின்றான். ஒரு தையல்காரன் 3-மிஷின்களை வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு 5ரூ. 10ரூ. சம்பாதிக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவன் அதிக நேரம் வேலை செய்து அதிகப்பணம் ஒருவனே சம்பாதிப்பது எதற்கு? இவைகளையெல்லாம் கணக்குப் போட்டு ஒரு ஒழுங்குமுறைப் படுத்தி ஒரு கூட்டுறவு முறையில் அமைத்தால் அவனவனுக்கு தேவையான அளவுக்கு ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக போதிய பலன் கிடைக்கும்.

நம்முடைய நாட்டில் அடிப்படையான மாறுதல் செய்யாவிட்டால் கூடிய சீக்கிரத்தில் நாம் என்ன கதிக்கு ஆளாக வேண்டி வரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண்செலவு செய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒருபாகம் தான் செலவு ஏற்படும் பாக்கி இன்னும் 8-பேருக்கு உதவும்.

உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு வேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்கு மேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார்கள் - 4, 5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் கண்டிப்பாக சமையலுக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப சமையலுக்கு என்றும் ஒரு தனி அரை. பாக்கி வசதிகளுக்கென்று கொள்ளை கொள்ளையான இடமும் ஒதுக்கி வைத்துக் கொண்டு என்ன அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ரஷ்யாவிலுள்ள மேல் சொன்ன பொது சமையல் சாலையில் (General Kitchen) 970 பேர்கள் தான் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக் கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டில் 4-பேர்களுக்கு ஒரு பெண்வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற கணக்குப்படி 40000 பேர்களுக்கும் எத்தனைப் பெண்களை ஒதுக்கித் தள்ளி கொடுமைக்காளாக்குவது? என்றுதான் யோசித்துப் பார்க்கும்படி கோருகிறேன். நம்முடைய சமையலைப் பற்றி ஏதாவது பந்தோபஸ்து உண்டா? சமையலரையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்த பிறகும் அங்கு தினம் டாக்டர் சரியான பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி.டாக்டர் அதற்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமயலுக்கு உண்டு. இங்கு நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப் போட்டு வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும் நோய் அடைகின்றோம். மேல் நாட்டின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டக் குறைவு, அனுகூலம், மிச்சம், சுகாதாரம், சௌக்கியம் ஆகியவைகள் கவனிக்கப் படுகிறதென்பதை யோசியுங்கள். அங்கு ஒரு ரொட்டிக் கிடங்கில் (Bakery) நாள் ஒன்றுக்கு 250 டன் ரொட்டிகள் ஒரே சமயத்தில் செய்யப்படுவதைப் பார்த்தேன். கூட்டுறவு முறையினால் ஒருநாள் ஒன்றுக்கு ஒரு இடத்தில் இருபதினாயிரம் முப்பது ஆயிரம் வீதம் ஷர்ட்டுகள் டிரௌசர்கள், ஜாக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அத்தனை பேரும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். அங்கு மிகக் குறைந்த சிலவு தான்.

இங்கு நாம் துணி வாங்கிக் கொடுத்தால் காலே அரைக்கால் பாகம் திருட்டும் சேதமாகிறதென்றும் சொல்லலாம். அங்கு அப்படியில்லை. துணியை அப்படியே 200, 300 வீதம் மடிப்பு மடித்து முதலிலேயே சின்ன சின்ன வேலைக்கானவைகளுக்கு அதாவது பாக்கெட், கழுத்துப்பட்டை கைப்பட்டை முதலானவைகளுக்கு ரம்பத்தில் அறுப்பது போன்ற மிஷினில் அறுத்து எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே சேதாரம் இல்லாமல் முழுதும் உபயோகப்படுத்தி விடுகிறார்கள்.

அங்கு ரஷ்யாவில் 2,000-3,000 ஜனங்கள் சந்தோஷமாக சௌக்கியமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிரம்பி வாழ்வதைப் பார்த்தேன். இங்கு நம்முடைய ஒரு வீட்டை என்ன அனாவசியமாக 3, 4 அடுக்கு மெத்தைகளுடன் கட்டுகிறோம். அதில் பகுதி பாகம் நாம் உபயோகப்படுத்துவதுகூட இல்லை. அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம் சுகாதாரம் இருப்பதில்லை. நம்முடைய வீட்டை நிரப்புவது ஒடிந்து போன மத்து கெட்டுப்போன நாற்காலி முறம் கூடை கிழிந்துபோன பாயும் அவிந்து போன தானிய குப்பைகளால்தான். இந்த முட்டாள் தனத்திற்காகவா நாம் பெரும்வீடு வைத்துக் கொண்டு வாழுகிறோம்? என்று யோசித்துப் பாருங்கள்.

அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்கலாம். சர்வாதிகாரியான ஸ்டாலினுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் சுமார் 10, 16 அடிக்கும் உள்ள ஓர் அளவு இடந்தான். அங்கு ஒரே மாதிரி சாதிக்காய் கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு சிறு 4 - 4 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது. தோட்டியே கிடையாது. அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய்விடுவோம். அவ்வளவு சுத்தம் அதில் எவ்வித வாடையும் இருக்காது அழகு ஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இங்கு ஒரு வீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கச்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்? அப்படியிருந்தும் என்ன சகிக்க முடியாத சுகாதாரக் குறைவு? இங்கு 300 பேர்களுக்கு ஒரு தோட்டி வீதம் இருப்பானென்று நம்புகிறேன். இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்? எத்தனை வீடு, தெருக்கூட்டுகிறவர்கள்? எத்தனை வேலைக்காரர்கள்? இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுத்தந்தானே என்றும் அதிஅக்கிரமமாக இருக்கிறது. அங்கு கக்கூசுக்கு பக்கதிலேயே படுக்கை அறை இருக்கும் அங்குள்ள முறை கஷ்டத்திற்கே இடமில்லை வழியுமில்லை.

ஒவ்வொரு கூட்டு பண்ணையிருக்கும் இடத்திலும் ஒவ்வொரு தொழில் சாலைக்கும் ஒரு நல்ல (Park) பார்க் சினிமா, விளையாட்டு இடம், டிராமா சுகாதார வசதி சாலை எல்லாம் அமையப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும் 1000 கூட்டுறவு பேருக்கும் முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு சம்பளம் ஒரே அளவு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மேல்கெண்ட மீதியை அக்கூட்ட பொதுஜனங்களுடைய நன்மைக்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

கூட்டுறவு சிக்கனம்

இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு வண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவன் எப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிறானா? 10மணி நேரத்திற்கும் வீணில் தீனி போட்டு 8மணி நேரத்திற்கும் குறைவாகவே வேலை வாங்குகிறான். 3 மணிநேரத்திற்கு அனுபவிப்பதினால் பாக்கி 7 மணிநேர கூலியும் செலவும் வீணாகிறது. இப்படியேதான் தனிப்பட்டவர்கள் தன்மையால் உண்டாகும் நாசங்கள். அநேகம் நம்முடைய நாட்டில் தேச செழிப்பும் அனுபவப் பொருள்கள் உற்பத்தியும் ஒன்றுக்கு எட்டாக விளங்குகிறதா இல்லையா? ஆனால் மக்களின் கஷ்டத்திற்குக் காரணம் என்ன? தனித்தனி என்னும் உணர்ச்சி ஒழிய வேண்டுமா - வேண்டாமா? கவலையற்று வாழ்வது தான் சிறந்தது அதற்கு கூட்டுறவு முறையே தான் பெரிதும் தேவையானது.

இந்த ஈரோடு முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒன்று சேர்க்கப்பட்டு பலருக்கும் வாழ்க்கை வசதிகளை பூர்த்தி செய்விக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு பிரயோசனப்படும்? எவ்வளவு செலவு மிச்சமாகும்? எவ்வளவு அனுகூலம்? எவ்வளவு லாபம்? எல்லாவற்றிலும் நன்மையே தான் ஏற்படும். அப்படிக்கின்றி தனிப்பட்டவர்கள் நன்மைக்கு மாத்திரம் ஏன் எதுவும் இருக்க வேண்டும்.

ஒரு ஹோட்டலை பொதுவாக பல குடும்பங்களுக்கு சேர்த்து வைத்து நடத்தினால் இரண்டணாவுக்கும் கீழாகவே நல்ல சாப்பாடு போடலாம். அது சத்துள்ளதாகவும், சுகாதார முறைப்படியும் இருக்கும். நம் வீட்டில் சமையல் என்னும் பேரால் சரிபாக சாமான் வீணாய் போகிறது. நம்முடைய நாட்டில் என்ன பொதுப்பிரியம் இருக்கிறது? பொது அலுவல்களில் டாக்டர் பரீக்ஷை செய்து என்ன சௌக்கியமாக எத்தனை காரியங்களைச் செய்யலாம். இது போலவே வியாபாரத்திலும் கடையில் பேரம் செய்யும்போது கிராமக் குடியானவனிடம் 9 சாக்குப் போட்டு விட்டு 10 சாக்கு என்று பித்தலாட்டம் செய்வது தெரியும். ஒன்றுக்கு ஒன்ரரையாய் எடுத்துக் கொள்வது தெரியும். இது நானும் செய்திருக்கிறேன். நம்மிடம் நிறைந்திருப்பது பொய், சரக்கோ கலப்படம், உபயோகிப்பதோ முக்கால் அளவுள்ளபடிதான். இவைகளினாலெல்லாம் எவ்வளவு நஷ்டம்? இவைகளை எல்லாம் கூட்டுறவு முறையில் லக்ஷியம் கொண்ட ஜனத் தலைவர்கள் என்பவர்கள் ஏன் Control செய்து அடக்கித் தடுக்கக் கூடாது? ஒவ்வொரு தனிப்பட்டவனையும் ஒன்றுபடுத்தி நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தை செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம். அதிக லாபமும் அதிக ஓய்வும் எடுத்துக் கொள்ளும் என்று ஏன் கூட்டுறவுத் தன்மையை பிரவேசிக்கக் கூடாது?

இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கிதான் ஆக வேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டுமா? பொதுவுடமை பேச்சே வேண்டிய தில்லை. ஆனால் இன்றே கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றுங்கள், வட்டி விஷயத்திலும் பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது. இங்கு வட்டி 10க்கு மாதம் கால் ரூபாய் வாங்குகிறானே? என்ன கொடுமை? ரஷ்யாவில் லேவாதேவியும் செய்யக்கூடாது? ஒருவனுக்கு ஐந்து ரூபாய் கடன் கொடுத்தால் அது அங்கு திருட்டு ஆகி விடுகிறது. ஆபத்தில் உதவுவதென்றால்- கஷ்டத்துக்காக இருக்குமென்றால் - ஏன் ஆபத்தும், கஷ்டமுமான நிலைமையும் ஏற்படும் என்பது தான் அங்கு கேட்கப்படும் கேள்வியாகும்.

ஜனசமூகம் கவலையற்று வாழஒழுங்கான முறை கூட்டுறவுத் தத்துவ வாழ்க்கை முறையேயாகும். நான் அதிகமாகச் சொல்ல வரவில்லை. இவைகளைத்தான் சொல்ல நினைத்தேன். இதற்கு மக்கள் தயாராகி விட வேண்டும். சுயநலத்தை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் - பலருடைய நன்மைக்கும் என்று கருதி இரங்க வேண்டும். இவற்றைச் சர்க்கார் செய்ய வேண்டியதா? பொது ஜனங்கள் செய்ய வேண்டியதா? என்பது ஆஸ்திகர்கள் விதி பெரிதா? மதி பெரிதா? ஏன்று தர்க்கிப்பதை ஒத்ததாகும். இவ்விவகாரங்களில் வலுத்தவன், வாய்ப் பேச்சுக்காரன் தான் ஜெயமடைவான். சர்க்கார் தான் ஜனங்கள்; ஜனங்கள் தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்னவென்று நாம் இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்க வேண்டும். சிப்பியானது திறந்திருக்கும் பொழுது மழை ஜலம் விழும்போது தான் முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள் பக்குவப் படுத்தி சரிப்படுத்தி வைத்துக் கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டு விடும். நம்முடைய அபிப்ராயந்தான் ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்ய வேண்டும். நமது உடலில் பழைய தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்ச (Inject) செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது. கண்டிப்பாய் இது முடியாமல் போய்விடாது.

நம்முடைய மக்கள் மடத்தனத்தில் இருக்கின்றார்கள். அதனால் முடியாது என்றோ அறியாமை அந்தகாரம் சூழ்ந்திருக்கிறது. அதனால் முடியாதென்றும் சொல்லி விடமுடியாது. 1914-18 வருஷத்தில் நடந்த கொடிய மகாயுத்தத்தைக்கூடக் கேள்விப்படாத ரஷ்யர்களே இருக்கிறார்கள். இப்பொழுதும் (Czar) ஜார் அரசன் இருந்து அரசாளுகின்றான் என்றே கருதிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார் கள். இதனால்எல்லாம் அங்கு சகித்துக் கொண்டிருந்த கூட்டுறவு தன்மை ஏற்படாமல் போய் விட்டதா? எப்படிகாய்ந்த தீய்ந்த சருகில் அதி வேகமாய் நெருப்புத்தீ பற்றிக் கொள்ளுகிறதோ அப்படியேதான் அங்கு மதம் ஒழிந்து - கடவுள் மாய்ந்து - அரசர்கள் மண்ணாங்கட்டிகளாகி செல்வவான்கள் பனிக்கட்டிகளாகி மழை பெய்தாலும் வெய்யில் அடித்தாலும் கெடுவது போல்கெட்டு 16 கோடி ஜனங்களும் கூட்டுறவு வாழ்க்கைக்காரராக்கி விட்டது என்பதை நீங்கள் ஞாபகத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டு இந்நாட்டு கொடுமை ஒழிப்புக்கு தைரியங்கொண்டு திடங்கொண்டு போராடி உழையுங்கள். உங்கள் உணர்ச்சிகள் இவைகளுக்கு எப்பொழுதும் அனுகூலமாகவே இருக்கட்டும்.

(குறிப்பு:- 04.11.1933 இல் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளி சரஸ்வதி அரங்கில் அகில கூட்டுறவாளர்கள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரஷியாவில் உள்ள கூட்டுறவு முறையைப் பற்றி ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 12.11.1933)

Pin It