periyar 450 copyஅர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப் படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத்தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே. இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு “நான்” பெண் வேஷம் எப்படிப் போடமுடியும்.

அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு. அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்ப்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப்பவனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப் பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அர்ஜுனன் : அந்த தத்துவார்த்தம் என்ன எனக்குச் சற்று சொல்லு பார்ப்போம்.

கிருஷ்ணன் : அந்தமாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும் எதிரியை ஜெயிக்க போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து.

அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப்போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதை காட்டுவதற்காக எழுதப்பட்ட தாகும்.

இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்கு பொதுஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

அதாவது “சக்கரத்தின் மகிமையினால்” சம்பாதித்துதான் வெற்றி பெற்றான், பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களை கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என்(விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர்; பெண்கள. . . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்.

ஆதலால் வெற்றி பெறுவதற்கு ஒருவழி என்பதைக்காட்டும் தத்துவப் பொருளுக்காகவே ‘பெரியோர்கள்’ இப்படி எழுதி வைத்தார்கள். புராணங் களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு.

அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றை பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்த பழக்கமும் வழக்கமும் தத்து வார்த்தத்தை பின்பற்ற வேண்டிய அவசியமுமாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அர்ஜுனன் : சரி சரி. இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம். சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு “புண்ணியம்” உண்டு.

கிருஷ்ணன் : அதென்ன சொல்லு பார்ப்போம்

அர்ஜுனன் : அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்யாசி ரூபமாக, பக்தன் ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட் டான் என்றும் அந்தப்படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படு கின்றதே அதன் ரகசியம் என்ன?

கிரு : இது தெரியவில்லையா?

அர்ஜுனன் : தெரியவில்லையே.

கிருஷ்ணன் : சன்யாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ் தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே அந்தப்படி சன்யாசிக்கு பெண்களைக் கொடுக்கும் போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி ரூபமாய், ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்யாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால், அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே.

அதாவது “இந்த சன்யாசி - சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ” என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்துவிடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப்பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குரு, சாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப் பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்துக் கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்த அந்த வீட்டுக்காரருக்கு இந்த “புண்ணியமும்” கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன்.

சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

அர்ஜுனன் : சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின்றாயா?

கிருஷ்ணன் : என்ன அது, சொல்லு பார்ப்போம்.

அர்ஜுனன் : அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான, புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே, இதன் தத்துவமென்ன?

கிருஷ்ணன் : இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய் புரட்டு சுயநலத்திற்காக எழுதப் பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும், இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும் அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கை தேர்ந்தவர்கள் என்றும் காட்டு வதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும்.

இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காக பார்ப்பனர்களை தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்கு பொருப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்க ளாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அர்ஜுனன் : இன்னம் ஒரு சந்தேகம்.

கிருஷ்ணன் : என்ன சொல்லு.

அர்ஜுனன் : கடவுளை படைத்தார்களல்லவா மனிதர்கள்.

கிரு : ஆம்!

அர்ஜுனன் : அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பாபிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும், கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்கு கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?

கிரு: அதன் இரகசியம் என்னவென்றால் மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டுவிடுவான், அணிந்து கொள்வான். அப்புரம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும்.

ஆதலால் தான் கல்லி லும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதை யெல்லாம் நைவேத்தியம் செய்யச்செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசியமாயிற்று.

அந்தப் பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்து விடும். கடவுள் மஹிமைகளும் ஒழிந்து விடும்.

அர்ஜுனன் : சரி இவைகள் எல்லாம் எனக்கு ஒரு மாதிரி விளக்க மாயிற்று. இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி.

கேள்வி - விடை

கே : கட்சிகள் என்றால் என்ன?

வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசீயக் கட்சி முதலிய பல கட்சிகள்.

கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?

வி: சேராது!

கே: ஏன்?

வி : அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை, பணம் கேட்பதில்லை, உத்தியோகம் கேட்பதில்லை, பதவி கேட்பதில்லை, பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எது அதிகக்கெடுதி

மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகிறவர் களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதனால் கோவிலுக்குப் போகும் படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.

கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர்களா லேயே மக்களுக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்படுகின்றன.

கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.

100 ரூபாய் இனாம்

தானாக ஏற்பட்ட கடவுள் எங்காவது உண்டா?

இந்த மூவரில் யார் நல்லவர்கள்?

கருப்பக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கினார்.

தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்.

பஞ்சாபகேச அய்யர் சுயராஜ்யம் வாங்கி கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசைக்காட்டி ஓட்டு வாங்கினார்.

இம்மூவரில் யார் யோக்கியர்கள்?

இவர்களில் யார் பதிவிரதைகள்?

1. சீதா, புருஷன் பந்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.

2. மீனாக்ஷி புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை.

3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற் குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.

4. இரஞ்சிதம் தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.

5. சரஸ்வதி மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.

6. மேனகை தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.

7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை.

இவர்களில் யார் பதிவிரதைகள் ?

(குடி அரசு - உரையாடல் - 21.12.1930)

Pin It