குர்து மொழி பேசும் இசுலாமிய மக்கள் குர்தியர்களாவர். பெரும்பான்மை குர்தியர்கள் சன்னி முசுலிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை சியா பிரிவு முசுலிம்களும், கிருத்துவர்களும், யூதர்களுமாவர். இவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியே குர்திசுதான் என்று அழைக்கப்பட்டது. தங்களுக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட ஒரு தனி இனமாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். குர்து மொழி சுமேரிய கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இவர்கள் ஒரு தொன்மையான பழங்குடி இனம் என்பது புலனாகின்றது.
முதல், இரண்டாம் உலகபோர்கள் இவர்கள் வாழ்ந்த குர்திசுதானை நான்கு துண்டுகளாக்கி, நான்கு நாடுகளின் எல்லைகளுக்குள் சிக்கிவைத்தது. ஆம், துருக்கி, ஈராக், ஈரான், சிரியா என்பவையே அந்த நான்கு நாடுகள். குர்தியர்கள் தாங்கள் வாழுகின்ற எல்லா நாடுகளிளும் தங்களது தேசிய விடுதலைக்காகவும், சுதந்திர குர்திசுதான் அமைக்கவும் போராடி வந்துள்ளனர். குர்தியர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 20லிருந்து 25 கோடி வரை இருக்கக்கூடும். இதில் ஈராக்கில் 4 கோடி குர்து மக்கள் வாழ்கின்றார்கள். ஈராக்கில் வாழ்ந்த குர்து மக்களின் விடுதலைப் போராட்டத்தினால் கோபமடைந்த ஈராக் அரசு அவர்களின் மேல் மேற்கொண்ட இனப்படுகொலையை பற்றியதே இக்கட்டுரை. இந்த படுகொலை இனவெறியினாலோ, பாசிசவெறியினாலோ நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை அல்ல. அரசை எதிர்த்து தனி நாடு(குர்திசுதான்) கேட்டு போராடிய புரட்சிக்காரர்களையும், மக்களையும் ஒடுக்க அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த இனப்படுகொலை.
குர்திசுதான் ஈராக்கில் வாழ்ந்த குர்து இனமக்களிடையே இரண்டு பெரிய இயக்கங்கள் இருந்தன. ஒன்று முசுதபா பர்சானி என்பவரால் 1959ல் தொடங்கப்பட்ட குர்திசுதான் சனநாயக கட்சி (Kurdistan Democratic Party - KDP), சலால் தலபானி என்பவரால் 1975ல் தொடங்கப்பட்ட குர்திசுதான் நாட்டுப்பற்றுள்ளோர் கூட்டணிக் கட்சி (Patriotic Union of Kurdistan-PUK). இந்த இரு இயக்கங்களும் தங்களுக்கென்று தனியாக இராணுவத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த இரு இயக்கங்களும் குர்திசுதானின் விடுதலைக்காக போராடினார்கள். ஈரானுக்கும், ஈராக்கும் இடையிலான போரில் இவர்கள் ஈரானின் பக்கம் சாய்ந்து ஈராக்கிற்கு எதிராக போராடினார்கள் (1987ஆம் ஆண்டு). இதனால் ஆத்திரம் கொண்ட ஈராக்கின் ஆட்சியிலிருந்த சதாம் உசைன் குர்தியர்களுக்கு எதிரான "Anfal" என்ற இனப்படுகொலை operation-ஐ தொடங்கினார். 1987ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த இனப்படுகொலை திட்டம் 1988 இறுதியில் தான் முடிவடைந்தது. மொத்தம் நான்கு கட்டங்களாக இந்த இனப்படுகொலையை அரசு நடத்தியது.
இந்த இனப்படுகொலையில் 50,000லிருந்து 2,00,000 வரையிலான பொதுமக்கள் இறந்திருக்கக் கூடும் என்றும், ஒட்டுமொத்தமாக 1,000 கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகின்றது. இந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர் பாத் கட்சியின்(சதாம் உசைன் கட்சி) வடக்கு பகுதி பொறுப்பாளரான அலி ஆசன் அல்-மசீது. இந்த இனப்படுகொலை அரசால் திட்டமிட்டு, மிகவும் இரகசியமாக முடிக்கப்பட்டது. இந்த இனப்படுகொலை தாக்குதலின் போது தடை செய்யப்பட்ட வேதியல் குண்டுகள் மக்கள் மீது வீசப்பட்டுள்ளன. இது போன்ற ஒரு வேதியல் தாக்குதலை நேரில் பார்த்த ஒருவரான அப்துல்லா அப்தெல் காதிர் கூறுகையில்....
"ஈராக் அரசு எங்கள் மீது வேதியல் குண்டுகளை வீசி தாக்கும் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்திருப்பினும், எப்போது அந்த தாக்குதல் நடக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. 1988 மே 3 அன்று எங்கள் ஊரில் ஏதோ ஒன்று நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இராணுவம் மிகவும் அமைதியாக இருந்தது. அன்று நானும் எனது உறவினரும் (இருவரும் ஆசிரியர்கள்) எங்கள் கிராமத்தில் உள்ள மிக உயர்ந்த இடமான எங்கள் பண்ணைக்கு சென்றோம். முதலில் இரண்டு சோதனை விமானங்கள் பறந்தன. அந்த விமானங்கள் காற்று எந்த திசையில் வீசுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளது தெரிந்தது. இந்த இரண்டு விமானங்களும் சென்ற பிறகு 18 விமானங்கள் (தோராயமாக) நாங்கள் இருந்த பகுதிக்கு வந்து குண்டுகளை வீசத்துவங்கின.
இந்த குண்டுவீச்சில் எப்பொழுதும் வெளிப்படும் சத்தம் வரவில்லை என்பதால் அவர்கள் வீசிய குண்டுகள் வேதியல் குண்டுகள் என்று எண்ணினேன். நான் எண்ணியது போலவே ஒரு பழுப்பு நிறத்துகள்கள் அந்த பகுதியில் ஒரு போர்வையைப் போல சூழத்துவங்கின. இது ஒரு இரசாயனத் தாக்குதல் என்பது எனக்கு உறுதியாயிற்று. நான் மேலிருந்தபடியே கிராமத்தில் உள்ளவர்களைப் பார்த்து, அவர்கள் இரசாயனத்தாக்குதல் நடத்துகின்றார்கள் எல்லோரும் மேலே வாருங்கள் என்று அழைத்தேன். மேலே வந்தவர்கள் பிழைத்தார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இரசாயனத்தாக்குதல் நடந்த கிராமப்பகுதியிலேயே இருந்தார்கள். எங்களுக்கு அடுத்த என்ன செய்வதென்று தெரியவில்லை. தாக்குதல் நடந்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பின்னர் நாங்கள் கீழேவந்தோம். ஒருவர் என்னைப் பார்த்து உங்கள் வீட்டுப் பகுதிகளில் அவர்கள் குண்டுகளை வீசுகின்றார்கள். இன்னேரம் உங்கள் வீட்டார் அனைவரும் இறந்திருப்பார்கள்" என்ற அதிர்ச்சியான செய்தியை என்னிடம் சொன்னார்.
எனக்கு இப்பொழுதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சில நொடிகளுக்குப் பின்னர் வீட்டை நோக்கி செல்வதென்று முடிவெடுத்தேன். சூரியன் மறைவதற்கு அரை மணிநேரம் முன்பாக நான் வீட்டை அடைந்திருப்பேன் என நினைக்கின்றேன். வீட்டைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. முதலில் நச்சு இரசாயனப் பொருட்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முகமூடியை அணிந்து கொண்டு நான் உருவாக்கியிருந்த பதுங்குகுழிக்கு சென்று பார்த்தேன். அங்கு யாரும் இல்லை. எனக்கு அச்சம் அதிகரித்தது. பின்னர் என் வீட்டுக்கு அருகிலுள்ள குகைக்கு சென்று பார்த்தேன். அங்கேயும் ஒருவர் கூட இல்லை. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய நீரோடைக்கு சென்று பார்த்தேன். இரசாயனத்தாக்குதல் நடந்தால் இந்த நீர் அதிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று என் மனைவியிடம் ஒருமுறை கூறியிருந்தேன். முதலில் அந்த நீரோடையை ஒட்டி என் அம்மாவைப் பார்த்தேன். அவர் இறந்திருந்தார். நான் அவரை இறுதியாக ஒருமுறை முத்தமிடலாம் என எண்ணினேன். ஆனால் அவ்வாறு செய்தால் அவரைத்தாக்கிய நச்சுப் பொருள் என்னுள்ளேயும் சென்று விடும் என எண்ணி தவிர்த்துவிட்டேன். ஆனால் பின்னாட்களில் இதை நினைத்து பலமுறை நான் அழுதுள்ளேன். அந்த நீரோடையை ஒட்டி பலபேர் இறந்து கிடந்தார்கள். அவர்கள் நீரோடைக்கு அருகில் வரும் முன்னரே மயக்கம் ஏற்பட்டு அப்படியே இறந்திருக்கக்கூடும், மேலும் பலர் அந்த நீரோடையில் மூழ்கி இறந்திருந்தார்கள்.
அந்த நீரோடை வழியே நான் நடந்துகொண்டிருந்தன். என் 9 வயது பிள்ளையைப் பார்த்தேன். அவள் என் உறவினர் பையனின் கையை இறுகப்பிடித்தப்படியே இறந்துகிடந்தாள். மேலும் அந்த வழியே நடக்க என் தந்தை, என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும், என் தம்பி, அவரது மனைவி என எல்லோரும் அங்கு இறந்து கிடந்தார்கள். சுமார் 200லிருந்து 300 மீட்டர் இடைவெளிக்குள்ளே பல மக்கள் இறந்து கிடப்பதை பார்த்தேன். என் மனைவியின் அருகே ஒரு பெண் இறந்து கிடந்தாள். அந்த பெண்ணை சற்றே திருப்ப முயன்றேன். அவரை இறுக அணைத்தப்படி அவரது குழந்தை இருந்தது. குழந்தை இறக்கவில்லை. உடனடியாக அந்த குழந்தையை வீட்டுக்கு சுமந்து சென்று அந்த குழந்தையின் உடைகளை மாற்றினேன். என் கூட்டுக்குடும்பத்தில் 40 பேர் வாழ்ந்து வந்தோம். ஆனால் இந்த இரசாயன தாக்குதலுக்குப் பின்னர் மிஞ்சியது 15 பேர் மட்டுமே.
அரசு இந்த தாக்குதலுக்கு ஒரே ஒரு நச்சு இரசாயனத்தை பயன்படுத்தவில்லை. நான்கு இரசாயனப்பொருட்களை கலந்து அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதனால் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்களின் தசைகளை முதலில் செயல்படமுடியாமல் உறுதியான ஒன்றாக மாற்றியதால் அவர்களால் நகரமுடியவில்லை. மேலும் இந்த நச்சு அவர்களை இரண்டு நிமிடங்களுக்குள் கொன்றிருக்கும் என்பது என் கணிப்பு..."
இது போன்ற இரசாயனத்தாக்குதல்கள் முடிந்த பின்னர் ஈராக் இராணுவத்தின் தரைப்படை ஊர்களுக்குள் வந்து மீதியிருக்கும் 15 வயதிலிருந்து 45 வயது வரையிலான ஆண்களை கைது செய்தும், சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெண்களையும் கைது செய்து ஈராக்கின் சில பகுதிகளுக்கு கொண்டு சென்றார்கள். இது போன்ற நடவடிக்கைகளை Genercide என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆம் இயக்கங்களின் படையணிகளில் இருப்பவர்களை மட்டும் தனிமைப்படுத்துவது. இதனால் தான் எல்லா பகுதிகளில் உள்ள ஆண்களும், சில பகுதிகளில் மட்டும் பெண்களும் கைது செய்து தனியே அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுபோன்று கைது செய்து அழைத்துச் சென்றவர்களை சுட்டு புதைப்பதற்காக ஆழக்குழி தோண்டும் கனரக இயந்திரங்களைக் கொண்டு 100 பேர் வரை ஒட்டுமொத்தமாக போட்டு புதைக்கக்கூடிய மிகப்பெரிய சவக்குழிகள் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. இந்த சவக்குழிக்கு சென்று மரணத்தை அருகில் கண்டு பின்னர் தப்பித்த "அப்துல்லா" என்பவரின் சாட்சியம் ......
கேள்வி: கிர்குக்கில் உள்ள தோப்சாவா சிறையை நீங்கள் அடைந்த உடன் என்ன நடந்தது?
பதில்: நாங்கள் அங்கு சென்று சேர்ந்த உடனே அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் பிரித்து, ஆண்களை தனியே ஒரு அறைக்கு கொண்டு சென்றார்கள்.
கேள்வி: உங்களை அவர்கள் எந்த குழுவில் வைத்திருந்தார்கள்?
பதில்: நான் என் அம்மா உடனும், தங்கைகளுடனும் இருந்தேன் (15லிருந்து 18 வயதிற்கு இடைப்பட்ட சிறுவன்).
கேள்வி: நீ அதற்குப்பிறகு உன் அப்பாவை எப்போதாவது பார்த்தாயா?
பதில்: அவரை மீண்டும் ஒருமுறை தோப்சாவா சிறையில் பார்த்தேன். அதன்பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை.
கேள்வி: அவரை நீ இறுதியாக பார்த்த பொழுது உன் அப்பாவை அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
பதில்: அவரது உள்ளாடையை மட்டும் விட்டு விட்டு மீதமுள்ள ஆடைகளை களைந்து, எல்லோரையும் பெரிய ஊர்திகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
கேள்வி: அதற்குப்பிறகு நீ உன் அப்பாவைப் பார்க்கவே இல்லையா?
பதில்: இல்லை
கேள்வி: அதற்கு பிறகு என்ன நடந்தது?
பதில்: எங்களை சுடுவதற்கு முன்பாக நாங்கள் வந்த ஊர்திகளில் இருந்து எங்களை இறக்கி, எங்கள் கண்களை கட்டி, குடிக்க சிறிதளவு நீர் கொடுத்தார்கள். நான் கட்டியிருந்த துணியை சற்று நகர்த்துவதற்கு என்னால் முடிந்தது. அந்த மிகப்பெரிய சவக்குழி இராணுவ வீரர்களால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
கேள்வி: உங்கள் கைகள் கட்டப்பட்டிருந்ததா?
பதில்: இல்லை.
கேள்வி: அவர்கள் உங்களை ஊர்திகளிலிருந்து கீழே இறக்கிய போது நீ முதலில் என்ன பார்த்தாய்?
பதில்: நான் எங்களுக்காக தயாராக இருந்த அந்த சவக்குழிகளை பார்த்தேன்.
கேள்வி: எத்தனை சவக்குழிகளை நீ பார்த்தாய்?
பதில்: அது இரவு நேரம், ஆனால் எங்களைச் சுற்றி நிறை சவக்குழிகள் இருந்தன.
கேள்வி: நான்கு அல்லது ஐந்து இருக்குமா?
பதில்: இல்லை, அதற்கு மேலாகவே இருக்கும். மிகப்பெரிய சவக்குழிகளில் இருந்த எடுக்கப்பட்ட உடலங்கள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன.
கேள்வி: உன்னை கொண்டு சென்ற சவக்குழியைப் பற்றி கூறு?
பதில்: அந்த குழி ஒரு நீர்த்தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியைப் போன்று இருந்தது. இந்தக் குழிகளில் தான் அவர்கள் எங்களை சுட்டுப் போட்டார்கள்.
கேள்வி: ஊர்தியிலிருந்து கீழே இறங்கிய உடனே அவர்கள் உன்னை அந்தக் குழியில் தள்ளினார்களா?
பதில்: ஆம்.
கேள்வி: எவ்வளவு உயரம் இருக்கும்? ஒரு மீட்டர்? இரண்டு மீட்டர்?
பதில்: மிக உயரமாக இருந்தது
கேள்வி: எவ்வளவு இருக்கும்?
பதில்: ஒரு ஆள் முழுவதுமாக உள்ளே நிற்க வைக்கும் உயரம் இருக்கும்.
கேள்வி: எத்தனை பேர்களை ஒரு குழியினுள் போட்டார்கள்?
பதில்: ஒரு ஊர்தியிலிருந்து வந்த அனைவரையும் ஒரு குழிக்குள் போட்டார்கள்.
கேள்வி: ஒரு ஊர்தியில் எவ்வளவு பேர் இருந்தார்கள்?
பதில்: நூறு பேர் இருந்திருப்பார்கள்.
கேள்வி: அவ்வளவு பெரிய குழியா அது?
பதில்: செவ்வகவடிவில் இருந்தது.
கேள்வி: அந்தக் குழி இயந்திரத்தைக் கொண்டு சரியாக வெட்டப்பட்டது போல் இருந்ததா?
பதில்: ஆம், நீர்தேக்கத்தொட்டிக்கான குழிகளை உருவாக்கும் கனரக இயந்திரம்(Bulldozers) கொண்டு வெட்டப்பட்டது போல இருந்தது.
கேள்வி: நீ யாராவது இராணுவ வீரனின் முகத்தைப் பார்த்தாயா?
பதில்: ஆம்.
கேள்வி: அந்த இராணுவவீரனின் கண்களைப் பார்த்தாயா?
பதில்: ஆம்
கேள்வி: அவன் கண்கள் உனக்கு என்ன கூறின? அவனது முக உணர்ச்சிகள் எப்படி இருந்தன?
பதில்: அவன் அழுதுவிடும் நிலைக்கு அருகில் இருந்தான். ஆனால் அருகில் இருந்தவன் இவனை நோக்கி கத்தி என்னை அந்தக் குழிக்குள் தள்ளிவிடும் படி கூறினான். அந்தக் கட்டளையை ஏற்று அவன் என்னை குழியில் தள்ளினான்.
கேள்வி: அவன் அழுதானா?
பதில்: இல்லை, அழும் நிலைக்கு வந்திருந்தான்.
கேள்வி: அவனுக்கு கட்டளையிட்ட அந்த அதிகாரி எவ்வளவு தூரத்தில் இருந்தான்?
பதில்: மிக அருகிலேயே இருந்தான்.
கேள்வி: உன்னைக் குழிக்குள் தள்ளிய அந்த இராணுவ வீரன் தான் உன்னை இரண்டாவது முறையாக சுட்டவனா?
பதில்: ஆம், கட்டளை வந்தவுடன் அவன் என்னை மீண்டும் ஒரு முறை சுட்டான். அவன் என்னை இரண்டாவது முறையாக சுட்ட பொழுது எனக்கு இங்கு காயமானது(காயமான இடத்தைக் காட்டுகிறார்)..........."
வதைமுகாம்களில் இருந்த குர்தியர்கள். இதுபோன்ற திட்டமிட்ட முறையில் எல்லோரையும் கொன்றுவிட்டு, மீதமிருந்தவர்களை அருகிலிருந்த பாலைவன வதை முகாம்களில் குடியேற்றியது இராணுவம். இளைஞர்கள் அனைவரும் கொல்லப்பட்டதால் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமாகவே இந்த வதை முகாம் காட்சியளித்தது. இந்த வதைமுகாம் பின்னர்(1991) போராளி இயக்கங்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் இங்கிருந்த மக்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த பால் பாகுபாடு கொண்ட இனப்படுகொலை (genercide genocide) தாக்குதலில் அண்ணளவாக(Approximately) ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றாகள்.
இதை இந்த படுகொலையை முன்னின்று நடத்திய அல் அல்-மசீதே கூறியிருக்கின்றான் "அது என்ன கணக்கு 2,00,000... ஒரு இலட்சத்திற்கும் சற்று அதிகமான மக்களே இறந்துள்ளார்கள்". மேலும் ஈரானுக்கு (அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானை பிடிக்காது) எதிரான போரில் ஈராக் செய்த இந்த படுகொலையைப் பற்றி யாரும் பேசவே இல்லை. ஈராக்கில் அந்த காலத்தில் பணிபுரிந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் இராணுவத்தின் உளவுப்பிரிவு அதிகாரியான ரிக் ஃபெரன்கோனா கூறுகையில் "எங்கள் அரசுக்கு இவ்வாறான தடை செய்யப்பட்ட இரசாயன நச்சுகளைக் கொண்டு ஈராக் இராணுவத்தினர் தம் நாட்டு மக்களின் மீதே போர் புரிந்து வருகின்றார்கள் என்பது தெரியும், ஆனால் ஈரானுடனான போரின் வெற்றிக்காக எங்கள் அரசு கண்டு கொள்ள்வில்லை".
1990 களின் ஆரமப காலகட்டத்தில் இந்த Anfal Genocide Operation-ஐ பற்றிய அரசு குறிப்புகள் குர்து போராட்ட இயக்கங்களின் மூலமாக கைப்பற்றப்பட்டு உலகின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் நான் முன்னர் கூறியுள்ள காரணத்தினால் உலகம் இந்த இனப்படுகொலையை முடிந்த அளவிற்கு மறைக்க முடிந்தது. இந்த இனப்படுகொலைக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஈரானுக்கு எதிராக போர் புரிந்ததால் உலகநாடுகள் எல்லாம் ஈராக்கின் இனப்படுகொலையை எவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டதுவோ அதுபோல இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி உலக நாடுகள் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன. குர்தியர்கள் மேல் எப்படி தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் எல்லாம் வீசப்பட்டதோ அதே போலவே ஈழத்திலும் தமிழ்மக்களின் மேல் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள், கொத்தணி குண்டுகள் என எல்லாமே வீசப்பட்டன. குர்திய இனப்படுகொலையைப் போலவே, ஈழ இனப்படுகொலையிலும் உலகம் வாய்மூடி கள்ள மௌனம் காத்தது. உலக நாடுகள் எல்லோருக்கும் இங்கு அவரவர் நலனே முக்கியம். அந்த நலன்களைப் பொறுத்தே மனித உரிமை என்ற வார்த்தைக் கூட இங்கே பிரயோகிக்கப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்......
பின்குறிப்பு: அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும், அரபு நாடுகள் இருந்ததால் இந்த இனப்படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவற்று கிடந்தது. ஆனால் 1991ல் ஐக்கிய நாடுகள் சபையில் ஈராக்கிற்கு எதிராக பிரான்சு, ஈரான், துருக்கி நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 688 குர்தியர்களுக்கு சில பலன்களை அளித்தது. இந்த காலத்தில் குர்திய படைகள் ஈராக் படையினரிடம் இருந்து தங்கள் நிலங்களை மீட்டன. மேலும் குர்திசுதான் பிராந்திய அரசு என்ற அரசையும் குர்திசு போராட்ட இயக்கங்கள் உருவாக்கின. இதனால் ஈராக் அந்த பகுதியின் மேல் பொருளாதார தடைகளை விதித்தது. 2003ல் வட அமெரிக்க ஈராக் மீது நடத்திய போரின் பின்னர் 2005 மாற்றப்பட்ட ஈராக்கின் அரசியலமைப்பு இந்த குர்திசுதான் பிராந்திய அரசை அங்கீகரித்து, இதன் மூலம் குர்திசுதான்(ஈராக்) ஈராக் அரசுடன் இணைந்த ஒரு கூட்டு அரசாக உருவானது. 2003 போருக்குப் பின்னர் உருவான ஈராக்கின் ஆட்சியமைப்பிலும் குர்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்......
1980களில் தன்மீது நடந்த தாக்குதலுக்கு பதிலாக சதாம் 148 shiite இன ஆண்களையும், சிறுவர்களையும் கொன்ற வழக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார், குர்து இனப்படுகொலை வழக்கிற்காக அல்ல. ஆனால் குர்து இனப்படுகொலையை முன்னின்று நடத்திய அல்-அம்சீது அலி ஈராக் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை வழங்கப்பட்டது(2009) குறிப்பிடத்தக்கது. அலியுடன் சேர்த்து மேலும் இரண்டு ஈராக் அதிகாரிகளுக்கும் குர்து இனப்படுகொலையில் பங்குகொண்டதற்காக தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது. (ஈராக்கில் உள்ளது போலவே ஒரு கூட்டு அரசை உருவாக்குவதற்காக துருக்கி, ஈரானில் உள்ள குர்தியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்).ஆனால் தற்பொழுது உருவாகி இருக்கும் குர்திசுதான் அரசும் வட அமெரிக்காவின் கைப்பாவையாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பதால் குர்திசுதான் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மிக அண்மைய செய்தியாகும். அரசு இந்தப் போராட்டத்தை மிகக் கடுமையாக அடக்கிவருகின்றது. மக்கள் அதிகாரமே இறுதி தீர்வு என்பதையும், அதை அடைய அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதும் நமக்கு குர்தியர்களின் இன்றைய போராட்டங்கள் கற்பிக்கின்றன.
மூலம்:
1) The Century of Genocide - Page no 375 to 394.
2) http://www.gendercide.org/genocideinkurdistan
3) Wikipedia & other sources......