மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தமிழக அரசு கோவையில் நடத்திய "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு' ஆரவாரங்கள் இன்னும் அடங்கவில்லை. ஆனால், விழா நடத்திக் களிப்பதில் வித்தகரான இன்றைய முதல்வர், தற்பொழுது தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை (செப்டம்பர் 22 அன்று தொடங்கி 26 வரை) அமர்க்களமாய்க் கொண்டாடி இருக்கிறார். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், சாதி சண்டைகள், சமயப் பூசல்கள் போன்ற பல்வேறு சுமைகளின் பாரம் தாங்காமல் – தமிழனின் முதுகெலும்பே முறிந்து போகும் நிலையில் இவையெல்லாம் எதற்காக? வீழ்ந்து கிடக்கும் தமிழினம், மாமன்னன் ராசராசனின் வெற்றிப் பெருமிதங்களின் நினைவூட்டலால் தலைநிமிரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்விழா நடத்தப்பட்டதா?

tanjore_big_temple_400ராசராசனின் பெயரை விண்ணளவு உயர்த்திக் காட்டும் கலைப்பெட்டகமாய் இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சைப் பெரிய கோயில். ராசராசனின் ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளில் பலருக்கும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைத் திறனுக்கு சான்றாய் தனிச் சிறப்போடு நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கி.பி. 1009இல் இவன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அக்கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கல் 80 டன் எடை கொண்டதாகும். 25.5 அடி சதுரம் உடைய அந்த ஒற்றைக் கல்லை கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல 10 கி.மீ. தொலைவுக்கு சாரங் கட்டித்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இன்றைக்கும் தஞ்சை அருகே "சாரப்பள்ளம்' என்கிற ஊர் உள்ளது. இரும்பும், சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகிலமே வியக்கின்ற இந்த அருஞ்செயலைச் செய்து முடித்த நம் தமிழ் முன்னோர்களின் ஆற்றல்சால் கட்டடக் கலைத்திறன் போற்றுதற்கு உரியதே!

ஆனால், இவ்வளவு பெரிய அறிவு நுட்பமும் கலைத் திறனும் கொண்ட அந்தக் கால உழைப்புச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்நிலை என்ன? வான் முட்ட எழுந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கடைக்காலில் புதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் கண்ணீரும் செந்நீரும் – இந்த ஆயிரமாம் ஆண்டு விழா ஆர்ப்பாட்டப் பேரிரைச்சலில் நம்மால் அடையாளம் காணப்படுமா?

சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.

நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய

– தொல். பொருள். மரபியல் 66

முப்புரி நூல் (பூணூல்), தண்ணீர் சொம்பு, முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகிய அந்தணர்க்குரியன என்பது இதன் பொருள்.

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன

– தொல். பொருள். அகத்திணையியல் 28

என்கிற நூற்பா, "ஓதுதல்' ஆகிய "கல்வி' என்பது, உயர்ந்தோரான அந்தணர்க்குதான் உரியது என்று சொல்லப்பட்டுவிட்டது.

இதன் தொடர்சியானது, பின் நாட்களில் பாறைபோல் கெட்டிப்பட்டுப் பிற்கால சோழப் பேரரசில் அசைத்துப் பார்க்கவே முடியாத பார்ப்பன மநுதரும ஆட்சியாகவே நிலைத்துவிட்டது. ராசராசன் காலத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுப் பார்ப்பனர்கள் அலையலையாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மடங்கள் ஆகியவற்றில் அந்தப் பார்ப்பனர்கள் – அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் அமர்த்தப்பட்டனர்.

வேத நெறியைத் தழைத்தோங்கச் செய்ய, சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்கினார்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தனி நிலங்களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அவ்வாறு அரசர்களால் வழங்கப்பட்ட பார்ப்பனக் கிராமங்கள் – அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயம் என்கிற பெயர்களில் செல்வச் செழிப்போடு விளங்கின. அந்தக் கிராமங்களில் அரசனின் ஆணைகள்கூட செல்லுபடி ஆகா. எவ்வகையான வரிகள், கட்டணங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்தும் அவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன.

ராசராச சோழன், அவன் மகன் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் என நீளும் பிற்காலச் சோழர் ஆட்சியில், உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து மிகக் கொடிய முறையில் பல்வேறு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இருந்துதான் விண்முட்ட ஆலயங்கள் எழுப்பப்பட்டன. மநுதர்ம விதிகள் சட்டமாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் கேட்டவை கேட்டபடி அளிக்கப்பட்டன.

சோழர் கால ஆட்சிச் சிறப்புகள் பலவற்றுள் ஒன்றாகச் சொல்லப்படுவது அவர்கள் நாடு, கூற்றம் என தம் ஆட்சிப் பரப்பைப் பல உட்கூறுகளாகப் பிரித்து ஆண்டார்கள் என்பதாகும். நிலங்களை அளந்து நாட்டைப் பகுத்தமையும், ஊர்ச்சபைகள் அமைத்துக் குடிமக்கள் நலன் காத்தமையும் சிறப்பாகப் பேசப்படுகிறது. சோழர் காலத்துக் குடவோலை முறை, பள்ளிப் பாடநூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு செய்தியாகும். இதுபற்றி உத்தரமேரூர்க் கல்வெட்டுகளில் பின் காணப்படுவன :

“உத்தரமேரூர் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு குடும்புகளால் நியமனம் பெறுவோர் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பதின்மர் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓலை நறுக்குகளில் பெயர்கள் எழுதப்படும். அவை ஒரு குடத்தில் இடப்பட்டுக் குலுக்கப்படும். பின் சபைக்குத் தேவைப்படும் உறுப்பினர்களை, ஒரு சிறுவனை ஏவி கைவிட்டு எடுக்கச் செய்வர்.'' இந்த முறையில் அமைந்த குடிநாயக மாண்பைப் பெருமையாகப் பேசுவோர் ஒன்றை மறைத்து விடுகின்றனர்.

கிராம நிர்வாகத்தில் முதன்மைப் பாங்காற்றும் அந்த முப்பது உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளாக, உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் உரைப்பன யாவை?

அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு கால்வேலி நிலமாவது இருக்க வேண்டும். சொந்தமாய் வீட்டுமனை இருக்க வேண்டும். 35 வயதிற்குக் குறையாமலும் 70 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டிய அவர்களுக்குரிய மிகமிக முதன்மையான தகுதி, அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதத்தை ஓதும் திறனைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்காணும் ஊர் உறுப்பினர்களின் தகுதிகளில் இருந்து சோழர் கால கிராம ஆட்சி என்பது யாரால், யாருடைய நலனுக்காக நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, சோழர் கால மெய்கீர்த்திகள் அனைத்திலும் அம்மன்னர்கள் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதையே தம் சீரிய அரச கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆரிய ஒழுக்கங்களைப் பாராட்டும் சாத்திரங்களும் புராணங்களுமே நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டடுள்ளன. அரசர்கள் அமைத்த கல்வி நிறுவனங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மாறாக, இதிகாசங்கள், சிவதருமம், ராமநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் போன்ற வடமொழி இலக்கிய இலக்கணங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.

சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்ட வர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் – பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.

rajarajacholan_400தமிழினத்திற்கே பெரும் தலைக்குனிவாய் உள்ள சாதி வேற்றுமைகள் பல்கிப் பெருகி வேர்விட்டது சோழர்கால ஆட்சியில்தான் என்பது, வரலாறு பதிவு செய்து வைத்துள்ள மாபெரும் உண்மையாகும். வேளாளர், பிள்ளைமார் முதலியோரும், செட்டிமார்களும் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தோர் என்றும், பார்ப்பனர்க்கு அடுத்த நிலையுடையவர்கள் தாம் தாம் என்றும் தருக்கி வாழ்ந்தது, சோழர் கால ஆட்சியில் கெட்டிப்பட்டுப்போன பெருங்கேடாகும்.

வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்துவிட்ட வலங்கை இடங்கைக் குலங்களின் குருதி சிந்திய போராட்டங்கள் பற்றி கே.கே. பிள்ளை அவர்கள் தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

“சோழர் காலத்தில் ஓங்கி வளர்ந்த குல வேறுபாடுகள், மிகவும் தீய விளைவுகளுக்கு களனாக இருந்தது வலங்கை – இடங்கை என்னும் பிளவாகும். இவ்விரு பிரிவினருக்கும் இடையே பல கடும் பூசல்கள் நேரிட்டுள்ளன. இப்பூசல்கள், சோழப் பேரரசின் காலத்திற்கு முன்னே தோன்றி, விசய நகரத்துப் பேரரசர்கள் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து – ஆங்கிலேயர் அரசாட்சியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் நடைபெற்று வந்தன.

“சென்ற நூற்றாண்டில் இப்பூசல்களின் காரணமாக சென்னையின் தெருக்களில் மனித ரத்தம் சிந்தியதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை – இடங்கை வேறுபாடுகள் திடீரென்று மறைந்துவிட்டன. இப்போது மக்களுக்கு அப்பெயர்களின் பொருளே இன்னதென விளங்குவதில்லை. இந்த வேறுபாட்டை வரலாற்று நூல்களின் பக்கங்களில்தாம் விளங்கக் காண்கின்றனர். ஒன்பது நூற்றாண்டுகளாகத் தமிழரின் வாழ்க்கையை அலைக்கழித்து வந்த சமூகக் கேடு ஒன்றன் தோற்றமும் முடிவும் வரலாற்று விளக்கங்காணாத மறைபொருள்களாகவே உள்ளன.'' ("தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்' – பக். 321)

சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில், பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு என்று பெருமை பேசப்படுகிறது. ராசராச சோழனுக்கு உலோகமாதேவி, சோழமாததேவி, திரைலோக்கியமா தேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வல்லவன்மாதேவி, வனவன்மாதேவி எனப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர் என, வே. ஆனைமுத்து தாம் எழுதிய "தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும். தமிழர் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்த வர்ணாசிரம ஆதிக்கம், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடிய சுரண்டல் போன்ற அழிக்க முடியாத வரலாற்றுக் கறைகளைப் பிற்காலச் சோழர் ஆட்சி, மிகமிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவப் பொதுமைச் சமூகத்தை தமிழ் மண்ணில் அமைத்திட முயலும் யார்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு விழா, எந்த வகையிலும் நிறைவைத் தராது என்பது உறுதி!

சோழர் காலத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்பட்ட வரிகள்

மீன்பாட்டம் : மீன்பிடி தொழிலுக்கு மீனவர் செலுத்திய வரி

 வட்டி நாழி : கழனிக்குத் தண்ணீர் பாய்ச்சிய நாழிகையைக் கணக்கிட்டு அதன்படி உழவர்கள் செலுத்திய தண்ணீர் வரி

 கண்ணாலக் காணம் : திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி

வண்ணாரப்பாறை : துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி

குசக்காணம் : குயவர்கள் (மண்பாண்டம் செய்வோர்) செலுத்திய வரி

தறிக் உறை : தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி

தரகுப்பட்டம் : தரகர்க்கு விதிக்கப்பட்ட வரி

ஆட்டுக்கறை : ஆடு வளர்ப்பவர் செலுத்த வேண்டிய வரி

நல்லெருது : எருது, பசு வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி

ஓடக் கூலி : ஓடம் செலுத்துவோர் கட்டிய வரி

ஈழம் பூட்சி : கள் இறக்குவோர் செலுத்திய வரி

– கே.கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்', பக். 314, 315 வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 

வெட்கங்கெட்ட ராஜராஜன்கள்

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்கு, அக்கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க – அன்றும் முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அவர்கள் முயன்றபோது, அதற்கு மத்திய தொல் பொருள் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே அச்சிலையை முதல்வர் நிறுவினார். இப்பெருங்கோயிலைக் கட்டிய ராஜராஜன், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவன் சூத்திரன் என்பதால், அக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.

அரசப்பெருமிதங்களில் கரையும் இன்றைய ராஜராஜ சோழன்களுக்கும் அதுதான் நிலை! ஆனால், இதுகுறித்து ராஜராஜனும் வெட்கப்படவில்லை; ஆயிரமாண்டுகள் கடந்தும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராமல், கோயில் கட்டடப் பெருமிதங்களில் திளைக்கும் தமிழ்ச் சமூகமும் வெட்கப்படவில்லை.

(தலித் முரசு செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It