குட்டியம்முவிடம்
கை கால்கள் முளைத்து
அசைவுறும்
ஆன்மத் தேடலைக் கண்டு
பிரபஞ்சமானோம்
உந்தித் தவழ
அவளின் தலைமுடிகள்
சுருளாய் விழப்
பொம்மையாகினாள்
யாவரின் கைகளுக்குள்ளும்
அரிசிப் பற்களால்
புன்னகை மொழுகினாள்
அதனில் முத்தங்களின் வித்துக்கள்
சிந்த மீண்டும் ஏந்தி
ஊட்டிவிடக் காத்திருப்போம்
அவளிடம் அழகியல் மட்டுமல்ல
அழுகையுமுண்டு
அத்துளிகள் இதயவழி நுழைய
உப்புக் கரித்துத் திணறுவோம்
பூம்பாதங்களில் கொலுசுகளிட்டு
நடந்து வர
அம்பாளுக்கொரு வெண்பாவென
கலீரென்ற முத்தொலிகள்
காதிசைக்கும்
அவள் எச்சில் செய்த
பண்டங்களின் மிச்சங்கள்
எங்களின் நாவெழுதி
செங்கமலங்களாய் மலரும்
வளர்கிறாள்
அவளோடு வளர்கிறோம் வாழ்கிறோம்
எங்கள் வீட்டின்
முதல் பேரக் கிள்ளையவளிடம்
மழலைக் கேள்விகள்
மூக்கு சிவக்க
அதன் இறகுகளைப் பிடித்த
எங்களின் கைகள் சிலுப்பி
வானவெளியெங்கும் நிரம்பியது
பஞ்ச வர்ணம்....!
- புலமி