தெருவில்
செருப்புகளணிந்து நுழைந்ததற்காய்
தாத்தாவால் விளாசப்பட்டார்
அவன் தகப்பனார்
நடவு நாளொன்றில்
முழுநாள் வேலைக்கு
அரைநாள் கூலிதந்து
பாட்டியால் வஞ்சிக்கப்பட்டாள்
அவன் அம்மா
வீட்டுப்படியேறி
நின்றதற்காய்
பதறப்பதற
மாமாவால் விரட்டப்பட்டான் அவன்
அண்ணன்
கிணற்றடியில்
பானையை தீண்டியதற்காய்
அத்தையால் இழிசொற்களால்
ஏசப்பட்டாள் அவன் அக்கா
சோற்றுக் கூடையை
மறந்துவிட்டு வந்த
ஒரு பள்ளிநாளின் பகல்வேளையில்
தன் ஈயப்போசியின் பழஞ்சோற்றை
இவனுக்கு
சரிவிகிதமாய் பகிர்ந்தளித்து
நன்னயம் செய்தான் அவன்!
- ஸ்ரீதர்பாரதி