1.
ஆளரவமற்ற மந்தையில்
அசரீரியாய் ஒலிக்கிறது
முன்பொரு நாள்
மூதாதையர் சுழற்றிய
தாயக்கட்டைகளின் குரல்.
2.
ஆணியில் தொங்கும் சலங்கை
அசைந்து அசைந்து
அவ்வப்போது ஞாபகமூட்டும்
செத்துப்போன செவலை மாட்டை.
3.
வணங்காமுடிகளையும்
கவிழ்த்துவிடுகிறது
சவரக்காரனின் சிறுகத்தி.
- ஸ்ரீதர்பாரதி