மதில்களைத் தாண்டுதல்
பற்றிய பாதச் சுவடுகளை
எழுதிக் கொண்டிருந்தான்
கொய்யா மரத்தின்
கிளையொன்று
கை நீட்டியபடியே
சிநேகம் கொள்ளத் தயங்கவில்லை
அவள் தோட்டத்து நெல்லி மரத்தோடு
தயங்கி விழுங்கும் எச்சிலின்
வெப்பத்தை
தொண்டைக்குழிக்குள்
கவனமாக சேகரிக்கின்றது
ரகசியமாக உச்சரிக்கப் பழகிவிட்ட
அவளின் பெயர்
பரிமாறிக் கொண்ட
புத்தகங்களின் பொருட்டு
கை விரல்களுக்கான
தருணங்களை
அடிக்கோடிடத் தொடங்கிய மனதை
இயல்பாகக் கை குலுக்கி
விடை கொடுத்த புன்னகையில்
நொறுக்கிவிட்டு
நகர்ந்து விட்டாள்
மற்றுமொரு வாசிப்பு நோக்கி...
- இளங்கோ
RSS feed for comments to this post