1
அடித்துத் துவைக்கும்
பெண்களை
எதிரொலி
எழுப்பி
நகைக்கிறாயே
உன் சப்தத்தின்
கூடு எங்கே
திறந்து காட்டு
2
பூக்களைக் கொய்யும்
சிறுமிகளை கவனியுங்கள்
அவர்களின் கொய்தலுக்கும்
சேகரிப்பிற்கும் இடையே
எத்தனை சிரிப்புகள்
யாராவது சொல்லியிருக்கவேண்டும்
மறு நாளும் சிரிப்பொலிக்காகவே
பூத்து குலுங்கும்
மரத்தின் காத்திருப்பை
3
மழை பெய்து ஓய்ந்தாலும்
வெள்ளம் கட்டி கிடக்கும்
முற்றம் மாத்திரம்
மழையை தானோ
ஞாபக படுத்துகிறது
வெறுங்கல்லோ
மழையில் அடித்து
வரப்பட்டதோ
பூமியிளகி மேலெழுந்ததோ
முற்றத்தைப் பெருக்காத
போதும்
முற்றத்தையன்றோ
பார்க்கத் தோன்றுகிறது
4
எழுதி எழுதிக் களைத்தாயோ
என்று கேட்குமட்டும்
ஆன உனக்கு
நீண்ட நெடிய
ஒரு இருப்பு
ஆகவே ஆகாதடி
கிளியே
5
பழைய கல்மண்டபத்தின்
தூணிலிருக்கும்
நாட்டிய மங்கை
தீராத நடனத்தை
முடிக்கக் கூடாதோ
காலம் முடித்து
வைக்கும்
என்றொரு
யோசனையோ?
- நட்சத்திரவாசி