சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக அசுர பலத்துடன் வளர்ந்து வருவதாகவும், அதன் வளர்ச்சியை கண்டு தமிழ்நாடு முதல் ஸ்டாலின் பயந்து நடுங்குவதாக பேட்டி அளித்து விட்டு சென்றார்.

உண்மையில் அண்ணாமலை சொன்னது போல பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது அது அண்ணாமலையின் அதீத நம்பிக்கையா என்று பார்த்தால் உண்மையில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றே சொல்ல முடிகிறது. அப்படியெனில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு முடிவு நெருங்கி கொண்டிருக்கிறதா என்று பார்த்தால் இன்னும் அதற்கான காலம் வரவேயில்லை. பிறகு பாஜகவும் வளர்கிறது என்பது குழப்பமாக இருக்கலாம்.annamalai at bjp rallyதிராவிட வரலாறும், தமிழ்நாட்டின் போராட்டங்களின் பின்புலமும் அறியாத ஒரு தலைமுறையின் அரசியல் புகலிடமாகவே பாஜக இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. குறிப்பாக 2000-த்திற்குப் பிறகான இளைய தலைமுறைக்கு அரசியல் என்பது சித்தாந்தமாக தோன்றவில்லை. மாறாக அது ஆரவாரத்துடன் காட்டுக் கூச்சலிடும் சந்தையாகவே தோன்றுகிறது. அதனால் தான் இங்கே அண்ணாமலை போன்ற அரை வேக்காடுகளும், சீமான் போன்ற தற்குறிகளும் களமாட முடிகிறது.

குறிப்பாக அண்ணாமலை போன்றவர்களுக்கு எந்தவிதமான தரவுகளும் தேவைப்படுவது கிடையாது. எதை வேண்டுமானாலும் அவர்களால் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்று விட முடிகிறது. அதனால் தான் கோவை சம்பவத்தில் தொடங்கி அத்தனை சம்பவத்திலும் ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலையால் பேச முடிகிறது.

கோவை சம்பவம் பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய ஒரு வாய்ப்பு. அதை வைத்து எந்தளவிற்கு அவர்களால் மக்களைச் சென்றடைய முடியுமோ அந்தளவிற்கு சென்றடைந்து இருக்கிறார்கள். இதை வைத்து மத ரீதியிலான அரசியலை முன்னெடுத்தாலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லை என்ற வகையில் பாஜக இதில் அறுவடை செய்திருக்கிறது.

ஆனால் மறுபுறம் திராவிட இயக்கங்கள் இதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன. அனைத்து ஜமாத்துகளும் முபீனின் உடலை அடக்கம் செய்ய மறுத்து விட்ட நிலையில் இஸ்லாமியர்கள் – இந்துக்கள் இடையிலான மத நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் பாஜகவின் முகத்திலடித்தாற் போல் உரக்கச் சொல்லுவதற்கான வாய்ப்புகளை திராவிட இயக்கங்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டன.

இதுவரை பாஜகவை ஒரு கட்சியாகவே கருதாத திமுக தற்போது இறங்கி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அண்ணாமலை தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைக்கு அந்த கட்சியை பாஜக கிட்டத்தட்ட தள்ளியிருக்கிறது. மறுபுறம் அதிமுக தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்குமான இடைவெளியில் தான் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது.

திமுக அமைச்சர்களின் அடாவடிப் பேச்சுக்கள், பாஜகவிற்கு கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சம், அரசியல் தெரியாத தலைமுறை போன்றவை பாஜகவிற்கு சாதகம். குறிப்பாக வலுவான எதிர்க்கட்சி களத்தில் செயல்படாதது பாஜகவிற்கு பெரிய அளவில் பலனளிக்கிறது. பாமகவிற்கு காவேரி ஆற்றைத் தாண்டி தென் தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. தென் தமிழகத்தில் ஓரளவேனும் இருக்கும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு வட தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் பாஜக இவற்றை எல்லாம் வளைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு புறம் திமுக தன்னை இந்துக்களின் கட்சியாக கட்டமைக்கவும் பகீரத பிரயத்தனம் செய்து வருவதைக் காண முடிகிறது. திமுக அமைச்சர்கள் கோயில்களுக்குப் படையெடுப்பது, பண்டிகைகளுக்கு அமைச்சர்களை வைத்து வாழ்த்து சொல்ல வைப்பது என்று பல முயற்சிகளைக் காண முடிகிறது.

ஆனால் அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியும் எழுந்துள்ளதை மறுக்க இயலாது. நுபுர் சர்மா விவகாரத்தில் கலைஞர் இருந்திருந்தால் இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் முன்பே முதல் கண்டனக் குரல் எழுந்திருக்கும் என்பதை இஸ்லாமியர்கள் குறையாகக் கருதி வருகிறார்கள். தாங்கள் நம்பும் திமுக இந்த விஷயத்தில் தங்களை கைவிட்டு விட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

அதே போல கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது. 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்து இரண்டாமிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம். குறிப்பாக இவற்றில் பெரும்பாலானவை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் என்று கொங்கு பகுதிகள் தான். எங்கெல்லாம் மத மோதல்கள் அதிகரிக்கின்றனவோ அங்கெல்லாம் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் தாக்கங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது தான் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் நிலை. இதன் மூலம் கொங்கு பகுதியிலும் பாஜக வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. தற்போது இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும் பாஜகவின் இலக்காக மாறியிருக்கிறார்கள்.

பிற மதத்தினர் மத்தியிலான அச்சத்தை உருவாக்குவதன் வாயிலாக இங்கே பாஜக வலுவாகக் காலூன்ற முடியும் என்று எண்ணினாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே சாத்தியம் என்பது தான் தமிழ்நாட்டின் சித்தாந்தம்.

நகர்ப்புறங்களில் பாஜகவின் வளர்ச்சி சீராக உயர்ந்து கொண்டு வந்தாலும் கிராமப் புறங்களில் இன்னமும் இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்குமான வாக்கு வங்கி உறுதியாக இருக்கிறது. 

பாஜகவிற்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆதரவு என்பது வட மாநிலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கே அவர்களால் கிடைக்க கூடிய ஆதரவை வாக்குகளாக மாற்ற முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய ஆதரவை வாக்குகளாக மாற்றுவது என்பது பாஜகவிற்கு இன்னமும் புலப்படாத ஒரு சிக்கல். அதனால் தான் இன்னமும் பாஜக வளர்ந்து வரும் கட்சியாகவே இருந்து வருகிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரையிலும் பாஜகவின் அரசியல் இன்னும் மூர்க்கமாகவே தமிழ்நாட்டில் காணப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தொடருமா அல்லது முற்றுப் பெறுமா என்பதற்கான விடையை தரப்போகிறது. மத்தியில் பாஜக ஆட்சியை இழக்குமானால் அந்தக் கட்சிக்கு இனி தமிழ்நாட்டைப் பிடிப்பது தேவையில்லாத ஒன்று. தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனத்தை செலுத்தக் கூடும். ஆனால் மீண்டும் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வென்று விட்டால் தமிழ்நாட்டில் மிகத் தீவிர அரசியலை முன்னெடுப்பார்கள். அதுவரை பொறுத்திருப்போம்.

- இரா.வெங்கட்ராகவன்

Pin It