இதை ஏன் எழுதுகிறேன்…?

1989 – 90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜிவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.

pasu gouthaman on venmaniயாரும், எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்களோ, அப்பாற்பட்டவைகளோ அல்ல. தோழர் பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டதுதான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. தோழர் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று சொல்லிக் கொண்டதில்லை. தோழர் பெரியாரும் அப்படித்தான்.

“…இந்த சொத்துமுறைகள் மாறி பொதுவுடமை முறை வந்து தாண்டவம் ஆடும்போது – இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூடநம்பிக்கை – காட்டுமிராண்டி காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்பதோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகின்ற என்னை ஒரு மூடநம்பிக்கைக்காரனாக – வைதீகப் பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள் பிள்ளைகள் - பேரர்மார்கள் சொல்லும்படியான நிலைகூட வந்துவிடும்” என்று (06.12.1944, ராஜபாளையத்தில் ஒரு திருமண நிகழ்வில் பேசும்போது) பெரியார் சொல்வார்.

அந்தக் காலம் – அப்படியான சூழல் இங்கு வந்துவிட்டதா? அந்த மாற்றம் – பெரியார் ராமசாமியை, வைதீகப் பிடுங்கல் ராமசாமி – மூடத்தனமான ராமசாமி என்று சொல்லக் கூடிய மாற்றம் வந்துவிட்டதா? (இப்போது சிலர் சொல்லிக் கொண்டுதான், உடைத்துக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்களின் ‘களியாட்டத்திற்குள்’ நான் போகவில்லை) மாற்றம் என்பதே மாறுதலுக்குட்பட்டது என்று மார்க்சியம் சொல்கின்றதே, அந்த மாற்றம் வந்துவிட்டதா? அதிலும் கூட பெரியார் சொல்வார், “அந்த மாற்றம் வெறும் மாற்றமாக இல்லாமல் மனிதகுல வளர்ச்சிக்கு – மனிதகுலப் பயன்பாட்டுக்குரிய வளர்ச்சியாக இருத்தல் வேண்டும்” என்று. அத்தகைய மாற்றம் - வளர்ச்சி இங்கே என்ன முழுமையாக ஏற்பட்டுள்ளது? எனவே இங்கே பெரியாரும், மார்க்சும் தவிர்க்க முடியாதவர்கள், ஒதுக்க முடியாதவர்கள் - நீங்கள் விரும்பினாலும் – விரும்பாவிட்டாலும். விவாதத்திற்கோ அல்லது தங்களின் அறிவின் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்ளவோ எப்படி வேண்டுமானாலும் பேசிவிட்டு, எழுதி விட்டுப் போகலாம்தான். ஆனால் அதுவல்ல உண்மை என்று அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் புரியும்.

தாழ்த்தப்பட்ட – வேண்டாம், அவர்கள் ‘பாஷையிலேயே’ சொல்வோம். தலித்துகளுக்கு எதிரானவர் பெரியார். தலித்துகளுக்கென்று அவர் எந்த ஒன்றையும் செய்யவில்லை. அவர் இடைநிலை – பிற்படுத்தப்பட்டவர்களையும் ஏமாற்றி அவர்களுக்குத் தலைவரானவர். அதற்கு தாழ்த்தப்பட்டவர்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்று இப்படிக் காட்சிப்படுத்தி, கட்டமைப்பதற்காக தலித் அறிவுஜிவிகளும் (அனைவரும் அல்ல, ஒரு சிலர்), இப்போது கொஞ்ச காலத்திற்கு முன்னால் உற்பத்தியாகியுள்ள இனவாதத் தமிழ் தேசிய நடமாடும் ஆய்வக‌ங்களும் கையில் எடுக்கும் ‘பேராயுதங்களில்’ ஒன்றுதான் “வெண்மணி விவகாரம்”.

பொதுவாக டிசம்பர் வந்துவிட்டால் மேலே சொன்னவர்களுக்கும் அவர்களோடு புரட்சிகர இடதுசாரி பொதுவுடமைவாதிகளுக்கும் ‘வெண்மணி ஜீரம்’ வந்துவிடும். அன‌த்தல்கள் அதிகமாகிவிடும். சமூக வலைதளங்களில் இவர்கள் யாரோ, எப்போதோ எடுத்த வாந்திகளை இவர்கள் வாயால் எடுப்பார்கள். அந்த அளவிற்கு அறிவார்ந்த அறிவாளிகள். வரலாற்றை வாய்தாமுறையில் படிப்பவர்கள். வெண்மணியின் ஏகபோக மொத்த முதலாளிகள்.

உங்கள் யாரிடமும் பங்கு கோரியோ, பாத்தியதை கேட்டோ இந்தப் பதிவினை செய்யவில்லை. அதுபோலவே செங்கொடியின் – அதன் ஒவ்வொரு தனி மனிதனின் அளப்பரிய தியாகத்திற்கும், பங்களிப்பிற்க்கும் தலை தாழ்ந்து வீரவணக்கம் செலுத்தியேதான் இது பதிவிடப்படுகின்றது. ஆனால் தோழர்களே... தமிழ்ச் சூழலில் பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் புறந்தள்ளிவிட்டு அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு இங்கே எந்தத் தரவுகளும் இல்லை என்ற உண்மையினையும் எல்லா வரலாற்று நிகழ்வுகளும் சொல்லிக் கொண்டுதான் உள்ளது என்பதனையும் அவ்வளவு எளிதில் விட்டு விலகிவிட முடியாது. அந்த அடிப்படையில்தான் இந்தப் பதிவினை தொடர்கின்றேன்.

தோழமையுடன்,
பசு.கவுதமன்.
14.01.2019.

***

பச்சைத் தீ …! (வெண்மணி பதிவுகள்)

கொஞ்சம் இருங்க..

இந்தக் கலந்துரையாடலைக் கேட்டுவிட்டு பிறகு நாம் பயணிக்கலாம்.

மங்கனூர் ரோட்டோர வயலுக்கு நடுவே உள்ள அந்தக் களத்துமேட்டுக் குடிசையில் சன்னமான வெளிச்சம். அமைதியான, ஆனால் ஆக்ரோசமான வாதப்பிரதிவாதங்களோடு தோழர்கள். மத்தியக் கமிட்டிக்குச் சென்று வந்த தோழர், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானகரமான முடிவினை அறிவித்துவிட்டு அதுகுறித்து பேசியதற்குப் பின்னால்தான் இந்த வாதப்பிரதிவாதங்கள். அவர் இப்படித்தான் ஆரம்பித்தார்,

“தோழர்களுக்கு என்னுடைய புரட்சிகர வணக்கங்கள். நம்முடைய தலைமைக்குழு கூடி எடுத்த முக்கிய முடிவுகளை உங்களிடம் சொல்லி விளக்குவதற்காக நான் வந்திருக்கின்றேன். முரண்பட்ட, சிக்கலான சூழ்நிலையில் நானிருக்கிறேன். நம்முடைய வழமையான பாதையிலிருந்து விலகி, ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டியவர்களாக, மாற வேண்டிய – மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. அழித்தொழிப்பு அல்லது கலகம் அல்லது கைப்பற்றுதல் என்ற கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் நியாயங்களை நிர்மாணிப்பது என்ற நிலையில் ரகசியக் குழுக்களாக - தலைமறைவு இயக்கமாக நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இப்போது கூட ஒரு குழு அழித்தொழிப்பு நடவடிக்கை ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு, இங்கே நமக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றார்கள் என்பதும், இன்னும் ஒரு அழித்தொழிப்பு நிகழ்வு நடத்தப்பட உள்ளது என்பதையும் நாம் அறிவோம். இந்தச் சூழலில் ஆயுதம் தாங்கி அறுவடையை கையகப்படுத்துதல், கலகத்தை ஏற்படுத்துதல், தூண்டுதல், அழித்தொழிப்பு போன்ற இயங்குமுறைகளை - நடைமுறைகளை விட்டுவிட்டு சனநாயக வழியில் மக்கள் ஆதரவினைப் பெற்று இயக்கத்தினை புன‌ரமைப்பது அல்லது கட்டமைப்பது என்று நமது தலைமைக்குழு - கட்சி முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தலைமைக் குழுவில் – கட்சியின் உயர்மட்டத்தில் பல்வேறு விதமான மிகக் கடுமையான விவாதங்கள் நடந்து கடைசியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ”

“தோழர், அப்ப நாங்க நடத்தப்போற அழித்தொழிப்பை கட்சி நிறுத்தச் சொல்கிறதா, நிறுத்த வேண்டுமா?”

“தோழர் நான் கட்சியின் உயர்மட்ட முடிவச் சொல்றேன், என்னோட முடிவ சொல்லல?

“நாப்பத்துநாலு உசுரு தோழர், நிமிசத்தில கருகிப் போச்சுது தோழர், பன்னெண்டு வருச வெறி, பகை தோழர் இது. அழித்தொழிப்பு வேணாம், ஜனநாயகரீதியான்னா பேசிப் பஞ்சாயத்துப் பண்ணிக்குவோமா தோழர்?”

“காம்ரேட், உங்க கோபத்த என்னால உணரமுடியுது.”

“காம்ரேட், நாங்க இந்த அழித்தொழிப்ப தீர்மானகரமா நடத்தி முடிப்போம். அதிலே எங்களுக்கு சந்தேகமில்ல. இப்ப என்னோட - மன்னிக்கனும், எங்களோட கேள்வி கட்சி இன்னைக்கு ஜனநாயகப் பாதைக்குப் போயிடுச்சின்னு சொல்றீங்க, அதனால அழித்தொழிப்புல்லாம் இனிமே கிடையாதுங்கிறீங்க. சரி, கமிட்டியின் நேத்தைய முடிவுப்படி நாயுடுவ அழித்தொழிக்க தேதி குறிச்சோம். தலைமைக்குழு உள்பட எல்லாரோட ஒத்துழைப்பு, சம்மதத்தோட! அத நடத்தப் போறோம். அப்படின்னா, நாங்க கட்சியின் முடிவை மீறி செயல்படப் போறோம்னு அர்த்தமாகுது. அப்ப நாங்க கட்சிக்காரர்களா இல்லியா? கட்சி எங்க நடவடிக்கைய அங்கீகரிக்குமா, அங்கீகரிக்காதா?”

தோழர்களின் வாதப்பிரதிவாதங்கள் சூடேற,

“ தோழர்களே, உயர்மட்டக் குழுவோட இந்த முடிவு செயல் வடிவம் பெறுவது முந்தேதியிட்டா? இல்ல, பின் தேதியிலேயா? இல்ல, இன்னியிலிருந்தா? ஆனா, எடுக்கப்பட்ட முடிவில், கட்சியோட முடிவில் மாற்றமில்லை என்பது மட்டும் சர்வ உண்மை.”

“கட்சி ஜனநாயகப் பாதைக்குப் போகட்டும் தோழர். தேர்தலில் நின்னுகூட ஓட்டு கேட்கட்டும். ஆனா, நாங்க நாயுடுவை அழித்தொழிப்பதிலிருந்து பின் வாங்கப்போவதில்லை. கட்சி எங்களை தள்ளி வச்சாலும் சரி, அதப்பத்தி எங்களுக்குக் கவலையில்ல. அப்படி ஒண்ணு நடந்தா, அதாவது கட்சி இந்த அழித்தொழிப்ப ஏத்துக்கலேன்னா இந்த நடவடிக்கைக்கு கட்சி தார்மீகமா உரிமை கோர முடியுமாங்கறத மாத்திரம் உங்க மூலமா கட்சிக்கு சொல்லிக்கிறோம்.” என்று வாக்குவாதங்களாக மாறிப்போன வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோது, பொழுது புலரத் துவங்கியது.

தோழர்களே, இது முழுக்கவும் கற்பனை அல்ல, ஆனால் காலங்கள் மாறலாம், காட்சிப்படுத்தப்பட்ட களங்கள் வேண்டுமானால் மாறலாம் …! இது அவர்கள் கட்சிப் பிரச்சனை. தலைமை ஒரு முடிவெடுத்து அது தன்னுடைய தோழர்களுக்குச் சொல்லிவிட்டது. அதை நடைமுறைப்படுத்தக் கூடிய தோழர்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம். நமக்கும் அதற்கும் தொடர்புமில்லை, சம்பந்தமுமில்லை. ஆனால் வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும். வாதப்பிரதிவாதங்கள் – விமர்சனங்கள் – தீர்வுகள் – தீர்ப்புகள் எல்லாவற்றையும் வரலாறு பதிவு செய்யும்…! நாளைக்கோ அல்லது பின்னாளிலோ பார்வைகள் மாறலாம். அதிலொன்றும் சந்தேகமில்லை.

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது, இல்லையா…!

நமக்கான தேடுதல் அது இல்லை – நம்முடைய தேடுதலும் அதிலில்லை. ஆனால், யாராவது அல்லது எங்கிருந்தாவது, இங்கே என்ன தேடுகின்றீர்கள்? இது எங்களுடைய தளம். உங்களுக்கான இடம் இதில் கொஞ்சமும் இல்லையே - அல்லது - இந்த வரலாறு எங்களுடையது. இதில் நீங்கள் ஏன் தலையிட்டு உரிமை கோருகின்றீர்கள் என்று உரிமைக்குரல் எழுப்பக்கூடும். அல்லது வரலாற்றைத் திரிக்காதீர்கள். வலிந்து உங்களை திணித்துக் கொள்ளாதீர்கள் என்றுகூட சொல்லக்கூடும்.

உண்மைதான், உள்ளே அத்துமீறி புகுந்து உங்களிடம் உரிமை கோரவில்லை. இதில் எங்களுடைய உரிமைக்கான குரல் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதைப் போலவே எங்களை திணித்துக் கொள்ளாத உங்களுடைய வரலாற்றுத் தளத்தில் எங்களுடைய இரத்தமும் சிந்தப்பட்டுள்ளது என்பதும் நிதர்சனமான, உங்களால் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையல்லவா!

எனவே அது ஏன்? எப்படி? என்ற உண்மையினை எங்கள் உணர்வுகளின், வலிகளின் வழியாக –
இந்தத் தேடுதலின், துவக்கமாகக் கூட அமையலாம் அல்லவா…!

சரி, இனி நாம் தொடர்ந்து தேடுதல் தடத்தில் பயணிக்கலாம்.

- பசு.கவுதமன்

Pin It