சமீபத்தில், ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை துவங்கவேண்டும் அதற்கு ஆதரவும் நிதியும் தாருங்கள்..’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

marguerite yourcenarநமது 2000 ஆண்டுகால மொழியின் பெருமை உலகஅரங்குகளில் ஒலிக்கவேண்டுமானால் அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைந்தால்தான் நடக்கும் என்று இருக்கை ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் திருவாய்க்கும் உண்டோ மறுவாய்?

உள்ளூர்களில் நிராகரிக்கப்படும் என் அன்னைத் தமிழுக்கு உலக அரங்குகளில் மகுடம் சூட்டப்படும் சூழல் உருவாவதை நான் எப்படி எதிர்ப்பேன்?

இந்தத் தருணத்தில்தான் எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது, நவீன பிரெஞ்சு எழுத்தாளர் மார்கெரித் யூர்ஸ்னார் எழுதிய ‘கீழைநாட்டுக் கதைகள்’ என்னும் தொகுப்பு.

2006 ஆம் வருடம் தமிழில் வெளிவந்த அத்தொகுப்பில் உள்ள ‘தலை வெட்டப்பட்ட காளி’ கதையைப் பேசவேண்டிய தருணம் வந்துவிட்டது.

கதைத்தளம் இந்திய இறைவழிபாட்டில் உள்ள காளி என்னும் பெண்தெய்வத்தை முன்வைத்துப் பேசுகிறது.

//இந்தியப் பெண்தெய்வமான காளி. மிக அருவருப்பானவள், கேவலமானவள். கீழ்ச்சாதியினரிடமும், பிற்படுத்தப்பட்டோரிடமும் உறவு கொண்டதால் தன்னுடைய தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாள். சாவைப் போன்ற ஆழ்ந்த கண்கள் கொண்ட அவள் எலும்புகளால் ஆன மாலை அணிந்திருந்தாள். //

//காளி பூரணத்துவமான தாமரை. முன்பொருகாலத்தில் இந்திரனின் தேவலோகத்தினுள், ஆட்சி புரிந்து வந்தாள். காளியிடம் பொறாமை கொண்ட கடவுளர்கள், அவளை வெட்டித் தலையைத் துண்டிக்கின்றனர். அவளுடைய உடல் நரகத்தின் அடியாழத்தில் வீழ்கிறது. அங்கே ராட்ஸசர்கள் வடிவில் இருந்த தெய்வங்கள், கால்நடை வடிவில் இருந்த தெய்வங்கள், சக்கரங்களாய்ச் சுழலும் பல கைகளையும் கால்களையும் கொண்ட தெய்வங்கள் இருந்தார்கள். //

//தங்களுடைய செயலுக்காக (காளியின் தலையை வெட்டியதற்காக) வருந்திய கடவுளர்கள், மனமிறங்கி அந்த அருவருப்பான நரகத்திற்கு வருகிறார்கள். எலும்புக்குவியல்களின் கீழ்சகதியில் தாமரையைப் போல் மிதந்து கொண்டிருக்கும் காளியின் தலையை பக்தி சிரத்தையுடன் எடுத்துக் கொண்டு உடலைத்தேடிச் செல்கிறார்கள் தேவர்கள். //

ஒரு ஆற்றங்கரை ஓரமாகத் தலை துண்டிக்கப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த உடலில், காளியின் தலையைப் பொருத்தி அந்தப் பெண்தெய்வத்திற்கு உயிர் கொடுக்கிறார்கள்.

//அந்த உடல் விலைமகள் ஒருவளின் உடல். இளம் அந்தணன் ஒருவனுடைய தியானத்தைக் கலைத்த குற்றத்திற்காகச் சபிக்கப்பட்டு சாவைத்தேடிக் கொண்டவள் அவள். ரத்தம் வடிந்து வெளிறிப் போயிருந்த அந்த உடல் தூய்மையாகக் காணப்பட்டது. பெண்தெய்வத்துக்கும் விலைமகளுக்கும் தங்களுடைய இடதுதொடையில் ஒரேமாதிரியான மச்சம். //

//காளி, இந்திரனின் தேவலோகத்தில் ஆட்சிபுரியத் திரும்பிச் செல்லவில்லை. விலைமகளுக்கான பழைய நினைவுகளே தெய்வீகத் தலை பொருத்தப்பட்டிருந்த அவளுடைய உடலுக்குள் வளைய வந்து கொண்டிருந்தன. //

ஒரு நீண்ட வர்ணனையில் விலைமாதர்களின் அந்த இடமும், அவள் அங்கே வாழும் விதமும் மோசமான, கொடூரமான விவரணைகளில் (தன் குட்டிகளுக்கே எதிராகத்திரும்பி விடும் பெண் காட்டுப்பன்றியைப் போல, தான் பெற்றெடுத்த குழந்தைகளை நசுக்கினாள்..) சொல்லப்படுகின்றன.

//வனப்பகுதி ஒன்றின் ஓரத்தில் ஒரு ஞானியைக் காளி சந்திக்க நேர்ந்தது. ஒளிவட்டமாய் திகழும் அவரைச் சுற்றியிருந்த பிரகாசத்தில், காளியின் மனத்தில் உருவாகியிருந்த சூன்யம், அவளது இதயத்தின் ஆழங்களிலிருந்து மேலெழும்பி வருவதை உணர்கிறாள்.//

//கருணையே வடிவான குரு தன்னைக் கடந்து செல்லும் பெண்ணை ஆசீர்வதிப்பதைப் போலத் தனது கையை உயர்த்தினார். //

//“என் பரிசுத்தமான தலை அவதூறுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படாமலும் இருக்கிறேன். துன்புற்றாலும் இன்பத்தையே அனுபவிக்கிறேன். வாழ்வதை வெறுத்தாலும் சாவைக்கண்டு அஞ்சுகிறேன்..” என்றாள் காளி. //

//“நாம் எல்லோரும் முழுமையற்று இருக்கிறோம்.. தனித்தனியாக, துண்டுதுண்டாக, நிழல்களாக, ஸ்திரத்தன்மை அற்ற ஆவிகளாக இருக்கிறோம். தொடந்து பலநூற்றாண்டுகளாக,” என்கிறார் ஞானி. //

//“இந்திரனின் தேவலோகத்தில் நான் பெண்தெய்வமாக இருந்தேன்” என்றாள் விலைமகள். // (இந்தக்கூற்றை விலைமகள் கூறியதாக எழுதுகிறார் ஆசிரியர்)

//“இழிவு படுத்தப்பட்டு தெருத்தெருவாகத் திரியும் அதிர்ஷ்டமில்லாத பெண்ணே, அரூபநிலை அடைவதற்கு மிக அருகில் ஒருவேளை நீ வந்திருக்கக்கூடும்” என்றார் ஞானி. //

//“எனக்கு அலுப்பாக இருக்கிறது” என்று முனகினாள் பெண்தெய்வம். // (இந்தக்கூற்றை பெண்தெய்வம் கூறியதாக எழுதுகிறார் ஆசிரியர்)

சாம்பல் படிந்து மாசுற்று இருந்த அவளுடைய கரியகூந்தலைத் தன் விரல் நுனிகளால் தொட்ட ஞானி ஒரு நீண்ட ஞானோபதேசம் செய்து, இறுதியில், “பெறுமையைக் கடைப்பிடி..” என்று செல்கிறார்.

கதை முடிகிறது.

இந்தக்கதையைச் சுருக்கிச் சொல்லும்போதுகூட ஒருவார்த்தையும் என்னுடையதில்லை. எல்லாமே மூல வார்தைகள்தான்.

கதை முழுக்கவும் காளி என்கிற பெண்தெய்வத்தை கொச்சைப்படுத்தியே நகர்கிறது கதை. ஒருவேளை, இலக்கிய மேதாவிகளின் பாணியில் அந்த பிம்பத்தை எதிர்மறையாகச் சொல்லி அதை ஒரு கலகவடிவமாக நிர்மாணித்து, இறுதியில் அதன் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கிறதா என்றால், காளி மீது ஆணையாக அவ்வாறெல்லாம் இல்லை.

பக்கத்துக்குப் பக்கம் காளியைப்பற்றி முன்வைக்கும் வர்ணனைகளைப் பாருங்கள்:

//“காளி அருவருப்பாக இருக்கிறாள். கீழ்ச்சாதியினரிடமும், பிற்படுத்தப்பட்டோரிடமும் உறவு கொண்டதால் தன்னுடைய தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்தை அவள் இழந்துவிட்டிருந்தாள். தொழுநோயாளிகளால் முத்தமிடப்பட்ட அவளுடைய முகத்தில் நட்சத்திரப் பொருக்குகள் தோன்றியிருந்தன. கடுங்குளிரினால் குளிக்காமலேயே இருந்த ஒட்டக ஓட்டிகளின் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். பார்வையிழந்த பிச்சைக்காரர்களின் பூச்சிகள் மண்டிய படுக்கைகளில் படுக்கிறாள். பிராமணர்களின் தழுவல்களிலிருந்து விலகி சவங்களைக் கழுவும் பணியைச் செய்யும் பகல் வெளிச்சத்தை மாசுபடுத்தும் அருவருப்பூட்டும் இனத்தைச் சேர்ந்த வறியவர்களின் அணைப்பைத் தேடிச் செல்கிறாள். பிரமிட் வடிவத்தில் இருக்கும் சிதைகளின் நிழலில் வெதுவெதுப்பான சாம்பலில் படுத்தவாறு தன்னை அளிக்கிறாள். முரட்டுத்தனத்துடன் வலிமையோடு இருக்கும் படகோட்டிகளையும் அவளுக்குப் பிடித்திருக்கிறது. பொதிசுமக்கும் பிராணிகளையும் விடஅதிகமாக அடிவாங்கிக் கொண்டு கடைவீதிகளில் வேலை செய்யும் கறுப்பர்களையும் ஏற்றுக் கொள்கிறாள். பொதிகளை ஏற்றி, இறக்கி வைப்பதால் தோல் உரிந்து சொரசொரப்பான அவர்களுடைய தோள்களைத் தன்முதுகால் வருடுகிறாள். குடிப்பதற்கு நீர் கிடைக்கப் பெறாத காய்ச்சல்காரியைப் போல கிராமம் கிராமமாக, நாற்சந்தி நாற்சந்தியாக இவை போன்ற துயரம் மிக்க இன்பங்களைத் தேடி அவள் செல்கிறாள்.” //

இன்னொரு இடத்தில் எழுதுகிறார்:

//“காளி பூரணத்துவமான தாமரை. முன்பொருகாலத்தில் இந்திரனின் தேவலோகத்தினுள், நீலக்கல்லுக்குள் இருப்பதைப் போல ஆட்சி புரிந்து வந்தாள். காலைப் பொழுதின் வைரங்கள் அவளுடைய பார்வையில் ஜொலித்தன. அவளுடைய இதயத்துடிப்புகளோடு இசைந்த வண்ணம் பிரபஞ்சம் சுருங்கியும் விரிவடைந்து கொண்டும் இருந்தது. ஆனால், மலரைப் போல முழுமையாக இருந்த காளி தன்னுடைய பூரணத்துவத்தை அறிந்திருக்கவில்லை. பகல் பொழுதைப்போலப் பரிசுத்தமாக இருந்த அவளுக்குத் தன் தூய்மையைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.” //

இது எல்லாவற்றையும் கூட ஏற்றுக் கொண்டுவிடலாம். நவீன இலக்கியத்தின் எதிர்மறை தரிசனத்தின் கூறுகளாக கடைசீ பத்தியிலாவது, “காளி என்னும் பிம்பம், தெய்வீக இனத்தினுடைய அந்தஸ்து பன்மடங்கு வீரியத்துடன் ஜொலித்தது..’ என்கிற பார்வை கொண்ட கருத்துருவத்தின் உட்கிடக்கையோடு ஒரே ஒரு வாக்கியத்தைப் போட்டிருந்தால் இதனுடைய பார்வையே வேறுவிதமாக உருமாறியிருந்திருக்கும்.

ஆனால், ஒரு ஞானி இந்தப் பெண்தெய்வத்திற்கு ஞானோபதேசம் செய்கிறார் இவ்வாறாக..

//“நாம் எல்லோரும் முழுமையற்று இருக்கிறோம்.. தனித்தனியாக, துண்டுதுண்டாக, நிழல்களாக, ஸ்திரத்தன்மை அற்ற ஆவிகளாக இருக்கிறோம். தொடந்து பலநூற்றாண்டுகளாக,” //

இதன் மூலம் என்ன கருத்தியலை முன்வைக்கிறது கதை..?

காளி என்பது இந்தியப் பெண்தெய்வங்களில் முக்கியமான தெய்வம். விளிம்புநிலை மக்களின் தெய்வம். வடமாநிலங்களில் இதை மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். தமிழில் எளிய மக்களின் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புறத் தெய்வங்களில் கோபம் கொண்ட துடியான தெய்வங்கள் சுடலைமாடன், முனியப்பன், அய்யனார்.. களுக்கு இணையான பெண் தெய்வமாக நாக்கைத் துருத்தியபடி இருக்கிறாள் காளி. சங்க இலக்கியங்களில் காணும் கொற்றவை தெய்வத்தை காளியாகவும் உருவகிக்கப்படுகிறது. சிவனின் துணைவியான பரமேஸ்வரியாகவும் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட எளிய நாட்டுப்புற மக்களின் இறை பிம்பத்தை இவ்வாறாகக் கட்டமைக்கவேண்டியதன் அவசியம் என்ன?

ஒருவேளை இந்த மொழியாக்கம் சரியாகக் கைகூடவில்லையோ என்று நாம் யோசிக்க வேண்டியதில்லை. ஏனெனில், மொழியாக்கத்திற்காக பிரான்ஸ்நாட்டின் உயரிய விருதான ஷெவாலியே விருது பெற்ற திரு. வெ.ஸ்ரீராம் அவர்கள் மொழியாக்கம் செய்தது. ஆக நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.

கதையில் பூடகமாக பல்வேறு குறியீடுகளையும் உருவகங்களையும் இணைத்து விட்டிருக்கிறாரோ என்று தேடினால் ஒரு ஈர வெங்காயமும் இல்லை. இது எல்லாமே தப்பு. இந்தியத் தொன்மவியலைப் பற்றியோ, நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றியோ எதுவும் தெரியாமல் அரையும் குறையுமாக தெரிந்து கொண்டு உளறியிருக்கிறார் இந்த யூர்ஸ்னார்.

இந்தியத் தொன்மத்தில் தலை வெட்டப்பட்டவள் காளி அல்ல. ரேணுகாதேவி. அது மட்டுமல்லாது, அந்த உடல் அழுக்கைச் சுத்தமாக்கும் வண்ணார் என்கிற சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அந்தத் தொன்மத்தை எடுத்து காளியின் பிம்பத்தில் பொருத்தி நவீன கதையாக்கம் செய்திருக்கிறேன் என்று இந்த யூர்ஸ்னார் சொன்னால், அவருக்கு, அவரது ஊரைச் சார்ந்த, புகழ்பெற்ற புராணத் தொன்மவியல் ஆய்வாளரான லெவிஸ்ட்ராஸ் எழுதிய ‘அஸ்டிவாலின் கதை’யைப் பரிந்துரைக்கலாம்.

பசிபிக் கடற்கரை நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கப் பெறும் அஸ்டிவால் என்னும் வீரனின் தொன்மக் கதையை முன்வைத்து புராணக்கதை உருவாகக் காரணமான பல்வேறு நிலைகளை ஒப்பிடுகிறார் லெவிஸ்ட்ராஸ். நிலவியல், பொருளியல், சமூகவியல் நோக்கில் பல்வேறு சாத்தியங்களை முன்வைக்கிறது ஆய்வு. புராணக்கதைச் சிந்தனையின் அடிப்படைத்தன்மை மாற்றம் பெறும்பொழுதும் சிதையும் பொழுதும், புராணம், குழப்பம் மிக்கதாக மாறிவிடுகிற நிலையை விரிவாக எடுத்துரைக்கிறார் ஆய்வாளர்.

அதுமட்டுமல்லாது, ஒரு தொன்மத்தை மறுகட்டமைப்பு செய்யும்பொழுது அதில் ஒலிக்கும் கதைசொல்லியின் குரலே பிரதானமானது என்று புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையை முன்வைத்து தொடர்ச்சியாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மேற்கு வங்கத்தில், பெரும் இறைவழிபாடாகக் கொண்டாடப்படுவது காளிபூஜை. ஐப்பசி பௌர்ணமியிலிருந்து 14 நாட்கள் கழித்து அமாவாசைக்கு முந்தினநாள் இரவில், 14 தீபங்கள் ஏற்றி 14 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் காளியை வரவேற்கும் முகமாக காளிபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். துர்க்காதேவியின் ஆக்ரோஷ வடிவமான நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் காளியின் தொன்மம், மேற்கு வங்கத்தின் மரபுசார்அடையாளம்.

14 நாட்கள் போர் செய்து ராட்சசன் தாருகனையும் தீயசக்திகளையும் அழித்துவிட்டு, ரத்தவெறியுடன் அமாவாசை இருளில் வரும் காளிக்கு 14 தீபங்களில் ஒளியேற்றி வரவேற்கும் ஐதீகம்தான் காளிபூஜை. நாக்கைத் துருத்திக் கொண்டு கடுங்கோபத்துடன் வரும் காளியை சாந்தப்படுத்த, அந்த வழித்தடத்தில் சிவபெருமான் படுத்திருக்கிறார். ஆவேசத்துடன் வரும் காளி அவர் வழியில் படுத்திருப்பது அறியாது மிதித்து விடுகிறார். அப்போதுதான் அவரது சன்னதம் குறைகிறது. (தனது கணவரை மிதித்து விட்டோமே என்று வெட்கத்தால் நாக்கை வெளியில் நீட்டினார் என்று சொல்லப்படுவதும் உண்டு) நாட்டார் தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும் துர்க்கையின் காலடியில் சிவபெருமான் படுத்திருக்கும் நிகழ்வு மேற்கு வங்கத்தின் பெண்ணியம் மற்றும் விளிம்புநிலை சார்ந்த முற்போக்கு முகத்தை முன்வைக்கிறது.

இந்த உருவகம் குறித்து பல்வேறு தத்துவக் கருத்தாடல்கள் வங்காளம் முழுவதும் வேரூன்றியுள்ளன. வங்க இலக்கியங்களில் எண்ணற்ற படிமங்களாக விரிபடும் காளியின் நாக்கு அந்த மண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளியின் நாக்கு என்பது ‘மெய்துணிவின் சின்னம்’ என்று வியக்கிறார் புராணவியல் அறிஞரான தேவ்தத் பட்நாயக். ‘வெறும் ஆவேசமாக மட்டுமே பார்க்காமல், இயற்கையுடன் இணைந்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ளும் மெய்துணிவாகக் கொள்ளலாம்’ என்கிறார் அவர்.

(கல்கத்தாவுக்கு வந்திருந்த ஜெர்மன் நாவலாசிரியரான குந்தர் கிராஸ், ‘நாக்கை நீட்டிக் காட்டு’ என்ற உருவக ரீதியான பொருள் கொண்ட தலைப்பிலேயே அந்த நகரத்தின் சமூகச்சூழல் குறித்து எழுதியிருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.)

Times of India (11.11.15) நாளிதழில் South Kolkata breaks away from tradition என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒருமுக்கியமான அம்சத்தை இத்தருணத்தில் இங்கு குறிப்பிடவேண்டும். இதுவரை மண்ணின் மரபான காளி தெய்வத்தை பூஜை செய்துவந்த தன்மை மாறி, கல்கத்தாவின் தெற்குப் பகுதியில் ‘சாமுண்டா’ என்னும் சாந்தமான தெய்வத்தை இந்தவருடம் புதியதாக பூஜை செய்யும் போக்கு ஆரம்பித்திருக்கிறது என்கிறது அச்செய்தி. வங்காள மண்ணின் பண்பாட்டு அடையாளமான ‘காளி’ என்னும் நாட்டார் வடிவத்தின் நாக்கு, இனி மெல்ல மெல்ல சாமுண்டீஸ்வரியின் பெருந்தெய்வ அம்சத்தில் உள்ளடங்கிப் போகும்.

ஆதிக்க அந்தணர்களின் பெரும் தெய்வங்களால் அழித்தொழிக்கப்படும், கபளீகரம் செய்யப்படும் அல்லது கொச்சைப்படுத்தப்படும் நாட்டார் தெய்வங்களின் தொன்மங்கள் பற்றியும் 2000 ஆண்டுகளாக தமிழ்ச்சூழலில் போராடிவரும் நாட்டார் தெய்வங்களின் அடையாள அரசியல் பற்றியும் எவ்வித அடிப்படையும் அறியாமல் உளறியிருக்கிறார் யூர்ஸ்னார்.

தமிழ் கலைஇலக்கிய தளத்தில் செயல்படுபவன் முட்டாள். மேலைநாட்டுக்காரன் மட்டுமே மாபெரும் அறிவு சீவி... என்பது போன்ற உணர்வை மேலைநாட்டு இலக்கியப் போக்கு தொடர்ச்சியாக உருவாக்கி தமிழ் எழுத்தாளனிடம் ஒரு தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. தமிழ் நவீன இலக்கியத் தளத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பெயரில் என்ன கஸ்மாலங்கள் வந்தாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது..

தமிழின் மிகத் தொன்மையான கூத்து வடிவமான "நார்த்தேவன் குடிகாடு கூத்து" என்கிற ஒரு கூத்துவகையை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

நார்த்தேவன் குடிகாடு என்னும் பகுதியில் ஆடப்படும் கூத்துவகை மிகமிக வினோதமானது. அதாவது, இந்தக் கூத்தரங்கத்தில் நிகழும் பிரகலாதன் கூத்தில் வரும், நரசிம்மன் கதாபாத்திரத்தைத் தவிர எல்லாக் கதாபாத்திரங்களும் இரண்டிரண்டாக மேடையில் தோன்றுவார்கள். இரண்டு இரண்யன்கள், இரண்டு பிரகலாதன்கள்.. என்று எல்லாமே இரண்டிரண்டாக இருக்கும். இது, 2000 ஆண்டு கூத்துவரலாற்றில் முற்றிலும் புத்தம்புதிய ஒரு வகை .

இதற்கான காரணமாக ஆய்வாளர்கள் முன்வைக்கும் விஷயம் என்பது மேலோட்டமானது.

அதாவது, பண்டைய காலங்களில் கூத்து என்பது இறைவழிபாட்டுமுறையின் இன்னொரு கூறு. மகாபாரதக்கூத்துகளை நிகழ்த்துவோர் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை தாங்கள் மட்டுமே நிகழ்த்தவேண்டும் என்கிற மரபைப் பேணிவருபவர்கள். இப்படியான மரபுவழிக் குடும்பங்கள் இன்றும் உண்டு. அந்த ரீதியில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நிகழ்த்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெருக்கம், பல்வேறு குடும்பங்களாகப் பெருகுகிறது. அந்த மரபுக் குடும்பங்களின் பங்காளிகள், தாங்களும் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பப்படுவதன் விளைவாக, ஒரே கதாபாத்திரம் இரண்டிரண்டு நடிகர்களாக உருவாக்கப்படுகிறது.. என்று ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்தினை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

இந்த ஆய்வுக்கருத்தை நுட்பமாகப் பார்த்தால் அந்த மரபுக் குடும்பங்களின் பங்காளிகள் என்போர் வெறும் இரண்டு குடும்பங்கள் மட்டுமேயாக இருந்திருக்கமுடியாது. அவர்கள் பல்வேறு குடும்பங்களாகப் பெருகியிருந்திருப்பார்கள். அவர்கள் அனைவருமே அவரவர்க்கான மரபுக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க சொந்தம் கொண்டாடியிருப்பார்கள். ஆனால், காலங்காலமாக இந்தவகைக் கூத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு இரு நடிகர்கள் மட்டுமே பங்கு பெற்றிருக்கிறார்கள் என்கிற நிகழ்வை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். அப்போது தவிர்க்க முடியாமல் நமக்குள் ஒரு புதிய கருத்தியல் வகை உருவாகுவதை உணரலாம்.

இந்த இடத்தில் பிரெஞ்சு பின்நவீனத்துவச் சிந்தனையாளரான ழாக் லக்கானின் புகழ்பெற்ற இலக்கியத் தத்துவக் கோட்பாடான The Mirror Image என்கிற கருத்தியலை இங்கு பொருத்தலாம். ஒருபிரதியில் ஒரே பிம்பம் பல்வேறு பிம்பங்களாக வரும் பிரதி பிம்பச்சூழலையும், அந்த ஒரு பிம்பம் மற்றொரு பிம்பத்தை உடைத்து உடைத்து ஒரு புதிய தத்துவத் தேட்டத்தை உருவாக்கும் தன்மையையும் முன்வைக்கும் மிக முக்கியமான கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டின் வேர்களை நாம் இந்த கூத்துவகையில் கண்டுணரலாம் என்பதை, பிரெஞ்சுக் கலாச்சாரத்தையும் இன்னபிற விஷயங்களையும் மாய்ந்து மாய்ந்து தமிழில் இறக்குமதி செய்துகொண்டிருக்கின்ற இலக்கிய மேதாவிலாசங்கள் எவரொருவரும் கண்டுகொள்ளவேயில்லை.

இந்த வகையை ஒருநூறு வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய படைப்பாளியின் புத்தம் புதிய மாற்றுப் பார்வை கொண்ட கருத்தியல் தளத்தை நுட்பமாக ஆய்வு செய்திருக்கும் பட்சத்தில் தமிழ்மொழியின் வீரியத்தை உலக மொழிகள் உணர்ந்திருக்கும்.

மாறாக, நம்முடைய தொன்மங்களைப் பற்றி அவர்கள் ஒரு கதையை உருவாக்கி அதை நமக்கே திருப்பிச் சொல்வதும், அதை சற்றும் மனம் தளராமல் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மொழியாக்கம் செய்வதற்கு பெரும் நெஞ்சுறுதி வேண்டும். மேலும், இந்த நூலை மாபெரும் இலக்கியப் புதையல் என்று கொண்டாடிய நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு, மேலை நாட்டினர் உயர்த்திக் காட்டும் மூன்றாவது விரல் சமர்ப்பணம்.

இங்குதான் தமிழ் வளர்ச்சி குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் ஒரு நவீன கருத்தியல் கொண்ட எழுத்தாளருக்கு காளி என்கிற தெய்வத்தைப் பற்றிய தொன்மமும், இங்குள்ள சமூகவியல் சார்ந்த பார்வைகளும் நிலவியல் பொருளியல் சார்ந்த அடையாள அரசியல்களும் இவ்விதமாகத்தான் வடிவமைக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருக்கின்றனவா?

பிரான்ஸ் நாட்டின் பெரும் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் கீழ்த்திசை மொழிகளின் ஆய்வு நிலையங்களிலும் தமிழ் மொழி குறித்த சிந்தனைகள் இவ்வாறாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றனவா?

இந்தியவியல் (Indology) பற்றிய கடந்தகால மேலைய ஆய்வுகளில் சமஸ்கிருத மரபிற்கே உயரிய இடம் கிடைத்து வந்திருக்கிறது என்பதை அறியலாம். ஜெர்மானிய அறிஞரான மாக்ஸ்முல்லர் போன்ற உயர்நிலை அறிவுசீவிகள் இந்தியத் தொன்மங்களின் பொருண்மைகளை சமஸ்கிருத மூலத்திலிருந்து தேடியவர்கள். மேலும் அந்தப் புராணவியலின் தோற்றம் வேதங்களிலிருந்து தொடங்குகிறது என்று கருதியவர் மாக்ஸ்முல்லர். மேலைநாட்டினர் நமது புராணங்களைப் பற்றியோ, தொன்மங்களைப் பற்றியோ அவை முன்வைக்கும் சமகால அரசியல் அடையாளங்கள் பற்றியோ சிறிதும் அறியாமல் ஆய்வறிஞர் என்னும் கித்தாப்பில் அள்ளிவிட்ட கருத்துக்களே வரலாறுகளாக, தமிழனின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் போக்குகளாக மாறிப்போன அவலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு நவீன இலக்கிய சாட்சியம்.

உலகத்தின் அனைத்து மொழிகளின் கலை இலக்கியச் செல்பாடுகளையும் தீர்மானிக்கும் உலகளாவிய அதிகாரம் கொண்ட மொழி ஆளுமை. ‘எல்லாப்பாதைகளும் பாரிஸை நோக்கி’ என்கிற கொள்கைப் பாடல் முழங்க ஆர்ப்பரித்து நிற்கும் பிரெஞ்சு இலக்கியத்தில் தமிழ் மொழியின் பார்வை இப்படித்தான் பதிவாகியிருக்கிறதா? ஒரு நவீன பிரெஞ்சு எழுத்தாளர் தமிழ் மொழி சார்ந்த அல்லது இந்திய மொழி சார்ந்த அம்சங்களைப்படித்து உள்வாங்கி அதன் இலக்கியவிசாரத்தை இவ்வாறாக வெளிப்படுத்துகிறாறென்றால், உலக மொழிகளில் கட்டமைக்கப்படும் தமிழ் வளர்ச்சியின் லட்சணம் புரிகிறது.

இறுதியாக நான் உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். தமிழ் மொழியை உலக அரங்குகளில் உட்கார வைத்து அங்கு நீங்கள் கட்டமைக்கப்படும், மொழி சார்ந்த, வரலாறு சார்ந்த, சமூகவியல் சார்ந்த பண்பாட்டு மானுடவியல் சார்ந்த அம்சங்கள் எத்தகையானவை? இந்த இருக்கைகளை நீங்கள் எதற்காக நிறுவுகிறீகள்? இந்த இருக்கையின் மூலம் நீங்கள் உலக அரங்குகளில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்?

- கௌதம சித்தார்த்தன்

Pin It