உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு அறச்சிந்தனை வாய்ந்த படைப்புகளைத் தந்தது தமிழ் மொழி. காலம் இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பழமை பொருந்திய மொழியாக, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்திலுமே ஈடு இணை இல்லாத மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது.

erode mahadevan 600தமிழ் மொழியின் தொன்மை என்பது எகிப்து, பாலஸ்தீனம், சுமத்ரா, ரோம் போன்ற நாடுகளுக்கு எல்லாம் தொடர்பு உள்ள கலாச்சாரம், பண்பாடு உள்ள மொழியாக அறியப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் அணைத்துமே தங்களுக்கான கலாச்சாரம், பண்பாட்டை 3 ஆயிரம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக அறியப்பட்டவை. தமிழ் மொழி இந்த நாடுகளுக்கு முந்தைய கலாச்சாரம், பண்பாட்டுக்கு முந்தைய பழமை பொருந்திய மொழியாக நின்று நிலவுகிறது. ஆனால் தமிழ் மொழி சார்ந்த படைப்புகள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

தொல்காப்பியத்தில் எம்மனோர் புலவர் என்ற வரி வருகிறது. அந்த வரிக்கு என்ன அர்த்தம் என்றால், தொல்காப்பியமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட படைப்பு என்று அறிந்தால் தொல்காப்பியத்திற்கு முன்பும் படைப்புகள் இந்த மண்ணிலே இருந்திருக்கின்றன என்பதை அந்த வரி சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு வாய்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட தமிழ் படைப்புகள் பல்வேறு காரணங்களால் அழிந்துபோயின.

அற்புதமான படைப்புகளைத் தாங்கிய ஏட்டுச் சுவடிகள் செல்லரித்துப்போயின, ஆறுகளில் தூக்கி வீசப்பட்டன. ஞானசம்பந்த மூர்த்தி 39,000 பதிகங்கள், திருநாவுக்கரசர் 38,000 பதிகங்கள், சுந்தரமூர்த்தி பெருமான் 31,000 பதிகங்கள் என எழுதி குவித்துவிட்டுச் சென்ற அந்தப் படைப்புகள் அத்தனையும் செல்லரிக்கப்பட்டன.

கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பற்ற படைப்பாக திருக்குறள் இந்த மண்ணிற்கு வருகிறது. உலகத்தில் இருக்கும் படைப்புகளில் முகமற்ற மாந்தர்களுக்கான படைப்பாக அறியப்பட்டது திருக்குறள் மட்டும்தான். இந்த நாடு, மொழி, மண், கலாச்சாரம் என்கிற எந்தப் பாகுபாடும் இல்லாமல் தமிழகத்தின் குக்கிராமங்களில் வசிக்கும் மனிதன் வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளை அணுகிப் பார்க்க வேண்டும் என்றால், பாலஸ்தீனத்தை வாழும் ஒரு மனிதன் தன் வாழ்க்கை பிரச்சனைகளை அணுகிப் பார்க்க வேண்டும் என்றால், 2 பேரையும் ஒரே படைப்பின் ஒரு குறளின் உள்ளே அடக்க முடியும். அத்தகைய ஒப்பற்ற தன்மை வாய்ந்த அற்புதமான படைப்பாக மிளிரக்கூடியது அன்றும், இன்றும், இனியும் திருக்குறள் மட்டும்தான்.

1ஆம் நூற்றாண்டில் கபிலரும், பரணரும் இந்த மண்ணின் மாண்பை வியக்கச் செய்கிறார்கள், கபிலர் சங்கத் தமிழ் பாடல்களில் பெரும்பான்மையான பாடல்களைத் தந்து இந்த மண்ணின் மாண்பினை உயர்த்தினார் என்பது மட்டுமல்ல, படைப்பாளி துணிவு கொண்டவனாக இருப்பான் என்பதை அப்போதே பதிவு செய்தவன்.

2ஆம் நூற்றாண்டில் இருந்து 4 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் இருண்ட காலத்தை சந்திக்கிறது. களப்பிரர்கள் ஆட்சிக் காலம் அது, அந்தக் காலத்தில் ஏராளமான படைப்புகள் உருவானாலும் அதனை பதிப்பிக்க முடியவில்லை. இதனால் 4 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் என்ற உருவம் ஒதுக்கிவைக்கப்பட்டது.

4ஆம் நூற்றாண்டு இறுதியில் மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகளும், அவரைத் தொடர்ந்து சீத்தலைச் சாத்தனாரும் வருகின்றனர்.

5ஆம் நூற்றாண்டில் திருமூலர் வந்ததாக சரித்திரம் கூறுகிறது. காரைக்கால் அம்மையார் தோன்றியதும் அந்த நூற்றாண்டு தான். 6 ஆம் நூற்றாண்டு திருமுறைகளைத் தந்த ஞானசம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசு பெருமான் தோன்றிய காலம். சுந்தரமூர்த்தி நாயனார் தோன்றியது 7 ஆவது நூற்றாண்டு. 8ஆவது நூற்றாண்டு பெண்ணிய சிந்தனைகளைத் தூண்டிய ஆண்டாள் தோன்றிய காலம். 9ஆம் நூற்றாண்டு யாப்பெருங்கலம் என்ற படைப்பு தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் மக்களின், வாழ்க்கை, கலாச்சாரம், மொழியின் தன்மை அனைத்தையும் பதிவு செய்து காட்டுகிறது. 10 ஆம் நூற்றாண்டு பட்டினத்தார் தோன்றிய காலம்.

10ஆம் நூற்றாண்டு வரையிலான படைப்புகள் மூலம், உன்னை நீ உணர, இறைத் தன்மையுடன் மாற, சிந்தனையில் தெளிவு பெற தேவையான அனைத்தையும் வழங்கினர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில அறிஞர்கள் எழுதிக்காட்டியவை அனைத்தும், நாம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்தியவை.

11ஆம் நூற்றாண்டில், ஒட்டக்கூத்தரும், பவனும், மேலும் பலரும் வைணவம் சார்ந்த பல பாடல்களைத் தந்தாலும், தமிழ், அதன் பண்பாடு, கலாசாரம், தொன்மையை பிரதிபலிப்பவையாகவே வழங்கினர்.

வால்மீகி ராமகாவியத்தின் படைப்பில் 478 பாடல்களில் சைவநெறியை எழுதினாலும், மீதமுள்ளவை வைணவத்தை விளக்குபவையாகவே உள்ளன. அதன் மூலம் வைணவம், சைவம் என்பது முக்கியமல்ல. அவை கூறும் அறங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என உணர்த்தினர்.

12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் 63 தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் சேர்த்து 4,896 பாடல்கள் தந்து பெருமை சேர்த்தார். 13, 14 இல் அருணகிரிநாதர் அலங்கரித்தார். 15 இல் என்ரிகோ, எல்லீஸ் என்ற ஆங்கிலேயர் வந்தனர். அவர்கள் நோக்கம் வணிகம் என்றாலும், தமிழ் மொழி, அதன் சிறப்பு, அவற்றின் படைப்புகளை பதிப்பிக்கத் துவங்கினார். 16, 17 ஆம் நூற்றாண்டில், ஜி.யூ.போப், கால்டுவெல், எல்லீஸ் போன்றோர், தமிழ் கற்று, தமிழ்ப் படைப்புகளை தமிழில் அச்சாக்கம் செய்தனர். தமிழ் இலக்கியத்தையும் அச்சாக்கத்துக்கு உள்ளாக்கினர். பெப்ரீசியல் எனும் அகராதியை தரங்கம்பாடியில் தமிழில் தொகுத்து அச்சில் தந்தனர்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாறுபட்ட சிந்தனை வருகிறது. இலக்கியம், வேறுபட்ட படைப்புகள் போன்ற சிந்தனைகள் எழுகிறது. வேற்று நாடுகளின் படைப்புகளை நாமும் அறியமுடிந்தது. 19ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய நிகண்டுகள், பழமையானவை அனைத்தும் பதிப்பிக்கப்பட்டது. அப்போதுதான் புதுமைப்பித்தன் போன்ற சிறுகதை படைப்பாளிகள், வ.ராமசாமி, மவுனி, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி என பல படைப்பாளிகள் உருவானார்கள். உரைநடையில் உ.வே.சாமிநாதய்யர் பல படைப்புகளை வழங்கினார்.

கடந்த 1950-க்குப்பின், அரசியல், மதபோதகர்கள், பல வீரியமிக்க தாக்கங்களால் பல படைப்பாளிகள் வெளிவரத் துவங்கினர். இருந்தும் தமிழ் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியது. மாறி நிற்கும் மொழித் தன்மை, மாற்று மொழியின் பிரயோகம், மார்க்சிய சித்தாந்தம், பெண்ணியம் என பலவும் எழுந்து நிற்கிறது.

இருந்தும் எந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தாலும், சீனா, பாரசீகக் கடலின் ஓரத்திலும் தமிழர்கள் வாணிபம் செய்ததற்கான பதிவுகள் கிடைப்பதுடன் அங்கும் தமிழின் பதிவுகள் நமது பழமையை வெளிக்காட்டுகின்றன.

எத்தகைய தாக்குதல்கள் வந்தாலும் அவற்றைத் தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் விளங்குவதைக் காணமுடிகிறது. அதற்கு முக்கிய காரணம் உலகின் உன்னதமான ஒழுக்கத்தை எடுத்துக்காட்டும் மொழியாக, தமிழ் விளங்கியதேயாகும். இனிவரும் படைப்புகளும் அதை உறுதிப்படுத்துபவையாகவே அமையவேண்டும். காலங்கள் கடந்து தமிழ் வாழும் படியான படைப்புகளே வரவேண்டும். உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுவது மொழி என்பதை உணர வேண்டும்.

(ஈரோடு புத்தகத் திருவிழாவில் 03.08.2019 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்.)

Pin It