இந்திய வரலாறு எப்பொழுதெல்லாம் தன்னை முற்போக்காக புனரமைத்துக் கொள்ள முற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அது பிற்போக்குச் சக்திகளால் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. பார்ப்பனியத்தை வீழ்த்தி நிலைநிறுத்தப்பட்ட பெளத்த புரட்சியானது எப்படி பார்ப்பன புஷ்யமித்தர சுங்கனால் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதே போல ஒவ்வொரு பார்ப்பனிய பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சிறு முயற்சிகளும் கூட படுகொலையில் முடிந்ததை நாம் வரலாறு முழுவதும் பார்க்கலாம். சம்புகன், நரகாசூரன், இராவணன், நந்தன், வள்ளலார் தொடங்கி இன்று நரேந்திர தபோல்கர், கோவிந்து பன்சாரே, கல்புர்கி வரை அது தொடர்கின்றது.

 சாதாரண மக்களிடம் அறிவியல் சிந்தனையை வளரவிடாமல் தடுத்த பார்ப்பனியம் தன்னை மட்டும் காலந்தோறும் ஒரு விசயத்தில் முற்போக்காகவே வைத்துக்கொண்டது. அது  தனக்கு எதிரான சக்திகளை ஒழித்துக்கட்ட பயன்படுத்திய ஆயுதங்களை அது காலத்திற்கு ஏற்றார்போல மாற்றிக்கொண்டே வந்தது. ராவணனை அம்பு எய்தி கொன்ற பார்ப்பனியம் தன்னுடைய பரிணாம வளர்ச்சியில் ராமராஜியம் பேசிய காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இன்று அது துப்பாக்கிகளைக் கடந்து நவீன ரக வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

 வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தோம் என்றால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும் - பார்ப்பனியம் என்னும் விஷக்கொடி தானாக வளரும் தன்மையில்லாதது என்று. அது ஒரு ஒட்டுண்ணி. எப்போதும் தன்னுடைய அடிமை சித்தாந்தத்தை ஏற்றுகொண்ட பெரும்பான்மை சாதிகளின் மீது படர்ந்தே தனக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டு அது வளர்ந்துள்ளது. பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற சாதி மக்களின் அறிவு வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவரையும் பார்ப்பனியம் அந்த மக்களை வைத்தே கொன்றிருக்கின்றது. இதுதான் பார்ப்பனியத்தின் வெற்றி. நாம் பார்ப்பனியத்துக்கு எதிராக பேசும்போதெல்லாம் முதலில் முந்திக்கொண்டு வந்து நம்மைத் தாக்குவது பார்ப்பனியத்தால் வேசிக்குப் பிறந்தவர்கள் வரிசையில் வைக்கப்பட்ட சூத்திர ‘அறிவாளிகள்’ தான். இவர்கள் தான் பார்ப்பனியத்தின் போதையில் வேசிப்பயல் பட்டத்தை கெளரவமாக ஏற்றுக்கொண்டு அதற்காக மனதார பாடுபடுபவர்கள்.

   RSS terror groupஇந்து என்ற பொதுக்கருத்தாக்கத்தை அதில் உள்ள  அனைத்து ஜனநாயக விரோத கருத்துக்களையும் நியாயப்படுத்திக் கொண்டே அது  பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரையும் அந்தக் கருத்தாக்கத்தின் குடையின் கீழ் ஒன்றுபடுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றது. நம்மால் அனைவரும் சமம் என்று சொல்லி ஒன்றுபடுத்துவதை விட இந்தச் சமூகத்தில் யாருமே ஒருவனுக்கு ஒருவன் சமமில்லை என்று சொல்லி பெரும்பான்மை சமூக மக்களை அதனால் வென்றெடுக்க முடிகின்றது. அந்தப் பெரும்பான்மைச் சமூகம், தனக்காக பேசிய தனக்காக எழுதிய மனிதர்கள் அந்தப் பார்ப்பனிய சக்திகளால் அவதூறு செய்யப்படும் போதும் கொல்லப்படும் போது வாய்மூடி மெளனியாக கிடக்கின்றது. ராமனை அம்பலப்படுத்தும் போது கொதித்தெழும் பார்ப்பன அடிமையின் ரத்தம் வசதியாக ராவணனையும், சம்புகனையும் மறந்துவிடுகின்றது. இந்தக் கேடுகெட்ட அடிமை புத்தியில் தான் நமது வீழ்ச்சியின் அடிப்படைக் காரணம் உள்ளது.

  நமக்காக பேசுபவர்கள் யார்? நமக்கு எதிராக பேசுபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் திராணியற்றுப் போய், வெட்கக்கேடான முறையில் பார்ப்பனர்களைத் தவிர்த்துப் பெரும்பான்மை இந்து சமூகம் கிடக்கின்றது. அதனால் தான் அது தனக்கு எதிரான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து தனக்கு ஆதரவான சக்திகளையும் கொலை செய்கின்றது.  நாம் காவி பயங்கரவாதிகள் என்று சொல்லும் போது அது பார்ப்பன பயங்கரவாதிகளை மட்டும் குறிக்காமல் அவர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கும் சாதி இந்துக்களையும் சேர்த்தே குறிக்கின்றோம். அப்படி இல்லை என்றால் அது தனக்காக பேசிய, தனக்காக எழுதிய நரேந்திர தபோல்கர், கோவிந்துபன்சாரே, கல்புர்கி போன்றவர்களைக் காவிபயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற போது பெரிய அளவில் எதிர்வினை ஆற்றாமல் இருந்திருக்காது.

  அவர்கள்  யாருக்காக பேசினார்கள்,  யாருக்காக எழுதினார்கள் என்று இன்னும் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நரேந்திர தபோல்கர் பிள்ளையார் சதுர்த்தியைக் காரணமாக வைத்து முஸ்லீம்களின் மீது வன்முறையை ஏவிவிடும் பார்ப்பனியத்தின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தியது, பெரும்பான்மை இந்து சமூக மக்கள் முஸ்லீம்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை பார்ப்பனிய பயங்கரவாதிகள் சொல்வதைப்போல முஸ்லீம்கள் இந்த நாட்டின் வந்தேறிகள் அவர்களை நாட்டைவிட்டே அடித்து விரட்ட வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையைப் பரப்பவா?. சிவாஜி ஒரு இந்துமத வெறியன் கிடையாது, அவன் இஸ்லாமிய மக்களின் நண்பனாக இருந்தவன் என்று நிரூபித்து புத்தகம் எழுதிய கோவிந்து பன்சாரே அதை யாருக்காக செய்தார்? ஒடுக்கப்பட மக்களின் உரிமைக்காக கல்புர்கி  ஏன் குரல் கொடுத்தார்? இதெல்லாம் பெரும்பான்மை சூத்திர மக்களின் நலனுக்காக செய்ததல்லவா?  ஆனால் அவர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு இந்தப் பெரும்பான்மை சூத்திர இந்து சமூகம் எப்படி எதிர்வினை ஆற்றியது?

 இந்த மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக படுகொலை செய்யப்பட்ட போதே நிச்சயம் இது காவி பயங்கரவாதிகளின் வெறிச்செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து முற்போக்குவாதிகளும் ஒரே குரலில் சொன்னார்கள். இந்த மூவரின் கொலைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக கர்நாடக மாநில காவல்துறை சொன்ன போது, மோடி அரசின் கீழ் இயங்கும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்காமலேயே அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னதே, இதற்கு என்ன அர்த்தம்? நரேந்திர தபோல்கர் கொலைக்கும், பன்சாரே கொலைக்கும், கல்புர்கி கொலைக்கும் உள்ள நேரடி தொடர்பைக் கண்டுபிடிக்க சிபிஐ அதிகாரிகளிடம் கர்நாடக சிஐடி அதிகாரிகள் கேட்ட தகவல்களை சிபிஐ கொடுக்காமல் மறுத்ததே இதற்கு என்ன காரணம்? காரணம் என்ன காரணம், எல்லா கொலைகளுக்குமான உத்திரவுகளும் மேல்மட்டத்தில் இருந்தே கொடுக்கப்படுகின்றன. அதுதான் ஒரே காரணம்.

 இப்போது கொலை நடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ, சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டே என்ற நபரை கைதுசெய்து இருக்கின்றார்கள். இந்த நபர்தான் நரேந்திர தபோல்கர் மட்டுமின்றி, பன்சாரே, கல்புர்கி போன்றவர்களின் கொலையையும் இந்த அமைப்பின் தலைவன் அல்கோரின் வழிகாட்டுதலின் படி திட்டமிட்டு செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றான். மேலும் இந்துமதத்திற்கு எதிராக செயல்படும் நபர்களை ஒழித்துக்கட்ட 15000 பேர் கொண்ட ராணுவம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கின்றான். காவி பயங்கரவாதிகளுக்காக நாக்கை தொங்க போட்டுக் கொண்டு வக்காலத்து வாங்கவரும் சூத்திர இந்துக்கள் இதை நன்றாக கவனிக்க வேண்டும். கொலை செய்வதற்காகவே ஒரு ராணுவத்தைக் கட்டப் போகின்றார்களாம்!

 நாம் காவி பயங்கரவாதிகள் எதற்கும் அஞ்சாத அயோக்கியர்கள் என்று சொல்லும் போதெல்லாம் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரித்த சாதி இந்துக்கள் இப்போது என்ன சொல்லப் போகின்றார்கள்? நடந்த கொலைக்கு மட்டும் அல்ல, இனி அவர்களால் நடத்தப்படப் போகும் கொலைகளுக்கும் நீங்கள் உடந்தையாக இருக்கப் போகின்றீர்களா? இல்லை பார்ப்பனிய மேலாண்மையை காப்பாற்றுவதற்காகவே அதை எதிர்க்கும் அனைவரையும் குறிவைத்துக் கொலை செய்யும் பார்ப்பன பயங்கரவாதிகளுடன் எதிர்த்து நிற்கப் போகின்றீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It