ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும்போது ‘இந்த உலகில் இது போன்ற நிலைமை யாருக்குமே வரக்கூடாது’ என்று கடவுளை வேண்டிக் கொள்வான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுளும் எங்களைப் போன்ற அவல நிலை யாருக்குமே வரக்கூடாது என்று மற்ற நாட்டு கடவுள்களைப் பார்த்து கதறும் சூழ்நிலைதான் உள்ளது!.
ராமன், கிருஷ்ணன், ஐயப்பன் என்று யாரையும் விடாமல் ஆன்மீக அரசியலின் பேரால் அவர்களை அரசியல் பலத்காரம் செய்த அயோக்கியர்கள் இன்று தமிழ்நாட்டிலும் முருகனை அரசியல் பலாத்காரம் செய்யக் கிளம்பியிருக்கின்றார்கள். மூத்திரச் சந்தில் மாட்டிக் கொண்ட வடிவேலுவின் கதையாக மாறியிருக்கின்றது முருகனின் கதை.பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டில் முருக வழிபாடு இருந்தாலும் அது சாமானிய மக்களின் எளிய வழிபாட்டு முறையாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தமிழரின் பன்பாட்டு மரபோடு அதற்கு இருந்த நெருக்கம்தான்.
களவு மணத்தைக் கொண்டாடிய ஆதித்தமிழரின் மிச்ச சொச்சம்தான் முருக வழிபாடு. இன்று முருகனிடம் கார் வேண்டும், பைக் வேண்டும், ஐ போன் வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்ளும் வழிபாட்டு முறை அன்றிருந்த மக்களிடம் இல்லை. அவர்கள் முருகனை காதல் நோயைத் தீர்க்க வந்த மருத்துவனாகவே பார்த்தார்கள்.
வேலன் என்பவன் முருகனின் பூசாரி ஆவான். அவன் வேலெடுத்து ஆடி குறி சொல்வதால் வேலன் எனப்பட்டான். சங்க இலக்கியங்கள் முருக வழிபாட்டைப் பேசும்போது ஆட்டு ரத்தத்தில் திணை மாவைப் பிசைந்து படையலிடும் முறையையே குறிப்பிடுகின்றன.
ஆனால் இன்று முருகன் பார்ப்பனக் கடவுளாக வடநாட்டு ஸ்கந்தனாக பூணூல் அணிவிக்கப்பட்டு தயிர்சோறு முருகனாக மாற்றப்பட்டிருக்கின்றான்.
சரி, ஏன் சங்கிகள் முருகனுக்கு ஆறு படை வீடுகள் இருந்தும் திருப்பரங்குன்றத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அது ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம்தான் முதன்மையானது என்பது மட்டுமல்லாமல் இங்குதான் தமிழனின் களவு மணப் பண்பாட்டை காலி செய்துவிட்டு அவனுக்கு பாப்பாத்தியான தெய்வானையை மணமுடித்து வைத்தார்கள்.
தமிழனின் வரலாற்றை, பண்பாட்டை பார்ப்பனர்கள் அழித்த இடமென்பதால் தமிழின துரோகிகளின் கூட்டம் திருப்பரங்குன்றத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றது.
மலை வாழ் மக்களின் கடவுளான முருகனுக்கு எப்படி ஒரு பாப்பாத்தியை மணம் முடித்து வைத்தார்கள் பார்ப்பனர்கள்? இங்குதான் முருகனுக்கு ஒரு புராணக் கதையை பார்ப்பனக் கூட்டம் கட்டிவிட்டது.
தேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) தொல்லை கொடுத்துவந்த சூரபத்மனையும் அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பாற்றியதால் மகிழ்ச்சியடைந்த இந்திரன் தனது நன்றியைச் செலுத்தும் வகையில் தன் மகளாகிய தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். இந்தத் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
ஆக பார்ப்பனர்கள் சும்மா எல்லாம் தெய்வானையை முருகனுக்குக் கொடுக்கவில்லை. பார்ப்பனக் கூட்டத்தையே அடித்து உதைத்து ஊரைவிட்டே ஓட ஓட விரட்டத் துடித்த ஒருவனை பார்ப்பன கைக்கூலியாக மாறிய முருகன் அழித்ததற்காகத்தான் வெள்ளைத்தோல் பாப்பாத்தியை முருகனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கின்றார்கள்.
அப்படியே திருமணம் செய்து வைத்தாலும் அது மநு தர்மத்தின் படி பிரதிலோம சங்கரமாகும். அதாவது ஒரு கீழ்சாதி ஆணுக்கும் ஒரு மேல்சாதி பெண்ணுக்கும் நடக்கும் திருமணமாகும். சங்கரம் என்றால் முறைதவறிய என்று அர்த்தம். அதனால்தான் இன்றளவும் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு பார்ப்பனன் கூட தன் மகனுக்கு முருகன் என்று பெயரிடுவதில்லை.
இது பார்ப்பனர்கள் தமிழ் முருகனை அபகரிக்கச் செய்த அப்பட்டமான புராணப் புளுகு என்பதால்தான் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களில் யாரும் முருகன் என்ற பெயரை வைத்துக் கொள்வதும் இல்லை. முருகனுக்கு கோயிலும் இல்லை.
இப்போது நம்முன் இருக்கும் பெரிய கேள்வி எப்படி தமிழ் முருகனை சங்கிகளிடம் இருந்து மீட்டெடுப்பது என்பதுதான்.
இதற்கு ஒரே வழி பாலை நிலத்துக் கொற்றவையின் மகனான முருகனை அவனது மரபான ரத்தபலி வழிபாட்டுக்கு மாற்றுவதுதான். ஆனால் அதைச் செய்ய இங்கே ஒருவனுக்கும் திராணி இல்லை என்பதும் இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதும்தான் உண்மை.
இன்று தமிழ்நாட்டில் முருகனை துக்கிப் பிடிப்பதில் முதன்மையான நபர் சீமான். ஆனால் முருகனை அவர் மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கின்றார்?. பார்ப்பனர்கள் எப்படி முருகனுக்கு பூணூல் போட்டு சைவமாக மாற்றினார்களோ அதையேதான் சீமானும் செய்துகொண்டு இருக்கின்றார்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் சீமான் துவங்கினார். ஆனால் பழனியில் பண்டாரங்களிடம் இருந்த பூசை செய்யும் உரிமையைப் பார்ப்பனர்கள் பறித்துக் கொண்டதைப் பற்றியோ அதை மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியோ சீமான் அன்று மட்டுமல்ல இன்று வரையிலும் பேசவில்லை.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என்று சொல்லும் சீமானால் ஏன் அங்கே கிடா வெட்டி பூசை செய்ய வேண்டும் என சொல்லத் துப்பில்லை.
இன்றும் நாட்டார் தெய்வக் கோயில்களை பார்ப்பன சங்கி கும்பலும் அதன் அடிவருடிகளும் தொட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுதான். அப்படி என்றால் நாட்டார் தெய்வ வழிபாட்டில் வரும் முருகனை மட்டும் எப்படி சைவமாக சீமான் முன்னிறுத்துகின்றார்?
பார்ப்பன கும்பல் செய்யும் அதே வேலையைத்தான் சீமானும் செய்து கொண்டிருக்கின்றார்.
2015 ஆண்டு மார்ச் மாதம் விகடனுக்கு சீமான் அளித்த பேட்டியில் முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் அவரை எப்படி மொத்தத் தமிழர்களுக்கும் கடவுளாக முடியும்? என்ற கேள்விக்கு “தமிழனின் ஐந்து திணைக் கடவுள்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் 50 ஆயிரம் மாவீரர்களின் படங்களுக்குப் பதிலாக நடுகல் வழிபாட்டை ஒரு குறியீடாக தலைவர் கொண்டுவந்தது போல நாங்கள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகனை முதன்மைப்படுத்துகிறோம். ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைத்த சூழ்ச்சியில் இருந்து வெளியேறி வந்தவன் என் முப்பட்டான். எனக்கென ஓர் உலகம், என் நாடு, என் மக்கள்’னு அவன் தனியா வந்ததைப் பார்க்கணும்!”. என்று கூறியிருக்கின்றார்.
இதைவிட சீமான் பார்ப்பன அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும். இந்த ஞானப்பழக் கதையை ஏற்றுக் கொண்டால் முருகனுக்கு அப்பன் சிவன் என்பதையும், அம்மா பார்வதி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது முற்பட்ட சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் பிம்பத்திற்கு நேர் எதிரானது ஆகும்.
அது மட்டுமல்ல ஓம் போன்ற பார்ப்பனிய சொற்களையும் பயன்படுத்துகின்றார். இந்த ‘ஓம்’ எங்கிருந்து தமிழுக்கு வந்தது? இந்த ஓம் பற்றி உபநிடதங்கள் , பகவத் கீதை போன்றவை விரிவாக பேசுகின்றன. தமிழில் பார்ப்பன திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பேசுகின்றார். தன்னுடைய கையில் சீமான் பிடிக்கும் வேலில் உள்ள ‘ஓம்’ எங்கிருந்து வந்தது என்பதை வரலாற்று அறிஞரான அவர்தான் சொல்ல வேண்டும். பார்ப்பனியத்தின் அத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்குப் பெயர் வீரத்தமிழர் முன்னணி என்று வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்.
மேலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு சிவன் காட்சி தந்ததார் என்று சொல்லப்படும் புராணக் கதையை ஏற்றுக் கொண்டு தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என கேட்டார். இதுதான் சீமான் தமிழர் மெய்யியலை மீட்டெடுக்கும் யோக்கியதை.
அது என்னமோ தெரியவில்லை - முருகனை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எல்லோருமே பார்ப்பனிய பாதந்தாங்கிகளாகவே இருக்கின்றார்கள்.
மதுரையில் பாஜக நடத்திய முருக பக்தர்கள் மாநாடானது எந்தளவிற்கு பாஜகவுக்கு ஓட்டுவங்கியாக மாறும் என்பதெல்லாம் தேர்தல் முடிந்தவுடன்தான் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டப் பார்க்கும் பாஜக கணிசமான அளவிற்கு இந்துமத வெறியர்களை உருவாக்கி வைத்திருக்கின்றது என்பதை நாம் மறுத்துவிட்டு கடந்து போக முடியாது.
மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தாலே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பாஜக காலிகள் பெரிய மதக்கலவரத்திற்குத் திட்டமிடுவது நன்றாகத் தெரியும்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவே முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
இதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் நடைபெற்று வந்த விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காகும். ஏற்கெனவே இதை வைத்து மதுரையில் இந்து முன்னணி பாஜக காலிகள் கலவரம் செய்ய முயன்று தோற்றிருக்கின்றார்கள்.
அதே போல தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பாஜக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதும், அதற்கு முக்கிய காரணம் ஆளும் திமுக மற்றும் ஆண்ட அதிமுக என்பதும்தான் உண்மை.
இந்த இரண்டு ஓட்டுப்பொறுக்கி கார்ப்ரேட் கட்சிகளிடமும் எந்த நேர்மையோ, யோக்கியதையோ கிடையாது. ஆனால் இவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்சிகள் என்று தொடர்ச்சியாக சொல்லப்பட்டு மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.
தேர்தல் களத்தில் ஊறுகாயாக தொட்டுக் கொள்ள மட்டுமே இவர்கள் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் மூலம் லட்சக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளாக மாறினார்கள். இவர்கள் அடிக்கும் அனைத்துக் கொள்ளைகளுக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழாதபடி பாசிச பூச்சாண்டி காட்டினார்கள்.
ஆனால் பாசிசம் வளர்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்த அயோக்கியர்களே இவர்கள்தான். பகுத்தறிவு வழியில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டியதுதான் ஒரு அரசின் கடமையாகும். ஆனால் தமிழ்நாட்டிலோ முருகனை வைத்து எப்படி எல்லாம் அரசியல் பலாத்காரம் செய்யலாம் என்ற போட்டிதான் நடந்து கொண்டு இருக்கின்றது.
இருக்கும் மலத்தில் எது நல்ல மலம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே ஓட்டு போடும் மக்களுக்கு இருக்கின்றது. வேறு எந்த வழியும் இல்லை.
- செ.கார்கி