சென்னை உயர்நீதிமன்றம் சந்திக்கும் விசித்திரமான வழக்கு:
நவம்பர் 24ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை அரசுச் செயலரும், அரூர் ஆர்டிஓ அவர்களும் நேரில் பங்கேற்று நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினர். அதை ஒப்புக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் இந்த அதிகாரிகள் மீது தலைமைச் செயலாளர் / தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை, 2016 ஜனவரி 5 ஆம் தேதி அன்று தெரிவிக்குமாறு உத்திரவிட்டதாக தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டன. தமிழ்நாட்டில் உண்மையான பழங்குடிகள் யார்? போலிகள் எவர் என்ற பிரச்சனையில், சென்னை உயர்நீதிமன்றமே லஞ்சம் வாங்கி தீர்ப்புகளை வழங்கிவிட்டது என இந்த அரசு அதிகாரிகள் விமர்சித்ததுதான் அவமதிப்பு வழக்கிற்கான பின்னணி என செய்தித்தாள்கள் தெரிவித்தன.
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டத்தைச் சார்ந்த வீரமணி (இந்திய உணவுக் கழகம் –FCIயில் பணியாற்றுபவர்) என்பவர், தான் குருமன்ஸ் என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்றும், தனது பிள்ளைகளுக்கு இதே சான்றிதழை வழங்க வேண்டும் என அரூர் வட்டார வருவாய்க் கோட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்தார். விண்ணப்பித்தவர் பழங்குடி அல்லவென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த குரும்பக் கவுண்டர் எனவும், ஏற்கனவே இதே பழங்குடி சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களும் போலிகள் எனவும், குருமன்ஸ் என்ற பழங்குடி இனம் நீலகிரி மலையில்தான் உள்ளது என்பதும் மறுப்பிற்கான காரணமாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே போலிகள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்து, தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கி வந்து பழங்குடி சாதிச் சான்றிதழ்களை வழங்குமாறு, அரூர் ஆர்.டி.ஓவை வலியுறுத்தினர்.
அரசுs செயலர் அவர்களும், குருமன்ஸ் பழங்குடிச் சான்று கோருபவர்கள் பற்றிய முறையான விசாரணை நடத்தப்படாமல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். எனவே, மனுதாரர் வீரமணி வழக்கில் விசாரித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் திரு. சத்தீஷ். கே. அக்னிகோத்ரி உட்பட்ட நீதிபதிகள் அமர்வு, குருமன்ஸ் பழங்குடி சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும், தவறினால் கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுs செயலர் மற்றும் அரூர் ஆர்.டி.ஓ.விற்கு எச்சரிக்கை செய்து ஆணையிட்டது.
தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சில மாவட்டங்களைச் சார்ந்த குருமன்ஸ் பழங்குடி என சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, பழங்குடி சான்றிதழ் வழங்கக்கூடாது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் திரு. அண்ணாமலை அவர்கள் உத்தரவிட்டு இருந்தார். போலிப் பழங்குடி குருமன்ஸ் சங்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களை ஆதரிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் (சிபிஎம் கட்சி சார்பு) என்ற அமைப்பின் மாநிலத் தலைவரும், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டில்லி பாபுவிடம் முறையிட்டனர்.
டில்லி பாபு எம்.எல்.ஏ. போலி பழங்குடி சங்கத்தைச் சார்ந்த பத்துப் பேருடன், கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்துக்குச் சென்று அண்ணாமலை அவர்களை சந்தித்துப் பேசினார். அவருடன் பேசியதை வேறொருவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த உரையாடலின்போது “எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்து, உத்தரவைப் பெற்றுவந்து பொய்யான பழங்குடிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மிரட்டுகிறீர்களா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இந்த உரையாடலின் சி.டி.யை சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுதாரர் வீரமணி தாக்கல் செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரினார்; அரசு அதிகாரிகளை நவம்பர் 24 அன்று கோர்ட்டில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும், அவ்வழக்கில்தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, மன்னிப்பு கேட்டனர் என்பதும்தான் இந்த வழக்கின் பின்னணியாகும்.
குரும்ப கவுண்டர் எதிர் குருமன்ஸ்
இவ்வழக்கைப் புரிந்து கொள்ள தமிழகப் பழங்குடியினர் பற்றி சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் குரும்பாஸ், குருமன்ஸ் என்ற இரண்டு சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியில் (மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில்) கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் மலபார், வயநாடு, மைசூர் ஒட்டிய பகுதிகளில், இனவரைவியல் ஆய்வுகளின்படி, ஆலுகுரும்பா, பாலுகுரும்பா, பெட்டகுரும்பா, தேனு குரும்பா, முள்ளுக் குரும்பா, ஊராளிக் குரும்பா, முடுகர் என ஏழு விதமான பழங்குடி குழுக்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாதிகள் / பழங்குடியினரை வகைப்படுத்தும்போது பெயர் உச்சரிப்புத் தவறுகளில் தொடங்கி, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட சில பிரிவினர்களுக்கு (சாதிகளுக்கு) குற்றப் பழங்குடிகள் எனப் பெயர் சூட்டுவதுவரை தவறுகள் நடைபெற்றன. பழங்குடியினர் பட்டியலை உருவாக்கியபோது, இந்திய அரசாங்கம் தமிழகத்தில் இருந்த சில பழங்குடி இனங்களுக்கு ஏரியா ரெஸ்ட்ரிக்ஷன் (Area Restriction) குறிப்பிடாததும் பிரச்சனைக்கு வாய்ப்பாக அமைந்தது.
மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் 17 ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குரும்பர், குரும்பா, குருபா, குரும்பக் கவுண்டர் எனப்படுவோர், ‘குருமன்ஸ்’ பழங்குடி எனக் கோருவதுதான் பிரச்சினையின் அடிப்படையாகும். ஆங்கிலேயர்கள் குரும்பா என்பதை குருமன்ஸ் என்று உச்சரித்து, பதிவு செய்ததை, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்திக் கொண்டனர். (நீலகிரியில் உள்ள தொதவர்களைத் தோடா எனவும், கோத்தர்களை கோத்தா எனவும், சோளகர் பழங்குடியினரை சோளகா/ சோளிகா எனவும் பிரிட்டீஷார் உச்சரித்தனர்; அதேபோலே அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலிலும் பெயர்களைப் பதிவும் செய்தனர்.) குரும்பர் – குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் ஆடு மேய்ப்பதை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட மிகவும் பிற்பட்ட சாதியினராவர். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களில், சமவெளிப் பகுதிகளில் கணிசமாக வாழ்ந்து வருபவர்களும் ஆவர். 5 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட குரும்பக் கவுண்டர்களில் சுமார் 25,000 பேர் இதுவரையிலும் போலியாக எஸ்.டி. (ST) பழங்குடி குருமன்ஸ் என்ற சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்களுடைய சாதிச் சான்றிதழ்கள் பழங்குடி / ST என்றிருந்த போதிலும், ரத்த உறவுகள், மண உறவுகள், சமூக உறவுகள், பண்பாடு அனைத்தும் மிகவும் பிற்பட்ட சாதியினரான குரும்பக் கவுண்டர் உடையதாகவே இருக்கிறது. இவர்கள், குரும்பக் கவுண்டர் சாதியின் ஓர் அங்கமே ஆவர்.
அட்டவணைப் பழங்குடி (ST) பட்டியலில் நிரம்பி வழியும் போலிகள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பழங்குடி மக்கள் தொகை 7,94,697 (1.1 சதவிகிதம்) ஆகும். இவர்களில், ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்போர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். 1971 சென்சஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515 மட்டுமே ஆகும். ஆனால், 1981 கணக்கெடுப்பில், 5,20,226 என உயர்ந்துவிட்டது. அதாவது 1971 – 1981ற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகை (அதிர்ச்சிகரமான வகையில்) 67% உயர்ந்து விட்டது. 1981 – 91 பத்தாண்டுகளில், மக்கள் தொகையில் 10%மும், 1991 – 2001 பத்தாண்டுகளில், தமிழகப் பழங்குடி மக்கள் தொகையில் உயர்வு 13% மட்டுமேயாகும். 1971-81, பத்தாண்டுகளில் உயர்ந்த 67% எண்ணிக்கையில், 50%ற்கு மேற்பட்டவர்கள், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பல்வேறு உயர் பதவிகளை அபகரித்துக் கொண்ட இந்த போலிகள் உண்மையான பழங்குடிகளின் இட ஒதுக்கீட்டிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். அன்றைக்கு ரூ. 5,000 / ரூ. 10,000க்காக, தாசில்தார்கள் போலிச் சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தது, இன்றைக்கு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
யார் இந்த போலி பழங்குடிகள்? எந்தெந்தப் பெயரில், பழங்குடிப் பட்டியலில் நுழைந்துள்ளனர் என்ற விபரங்களைப் பரிசீலிக்கலாம். பழங்குடிப் பட்டியலில் உள்ள 36 வகையான சாதிகளில், பெரும்பான்மையான பழங்குடி இனங்களில் போலிகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் போலிகளே பழங்குடிச் சாதிகளாக இருப்பது காட்டு நாய்க்கன், குருமன்ஸ், கொண்டா ரெட்டி, மலைக்குறவன், மலைவேடன் போன்ற சாதிகளின் பெயரில் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் போலியாக உள்ளன.
2007–08ல் பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா கமிட்டி (2004) அறிக்கைகள் போன்றவை புள்ளி விபரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடி அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரித்திருப்பதாகவும், பின்வரும் பழங்குடியினர் விஷயத்தில், அவர்களின் மக்கள் தொகையில் திடீரென்று எழுச்சி இருப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தெரிவித்து இருப்பதாகவும், பூரியா கமிட்டி அறிக்கை சுட்டிக் காட்டியது. அப்பட்டியல் 1961-1991 வரை உள்ள விவரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 2001 கணக்கெடுப்பை கூடுதலாக இணைத்துள்ளோம்.
பழங்குடியின் பெயர் | ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எண்ணிக்கை | ||||
1961 | 1971 | 1981 | 1991 | 2001 | |
காட்டு நாய்க்கன் | 6,459 | 5,042 | 26,383 | 42,761 | 45,227 |
கொண்டா ரெட்டி | 8 | 855 | 31,525 | 30,391 | 19,653 |
குருமன்ஸ் | 112 | 11,269 | 14,932 | 17,458 | 24,963 |
மலைக் குறவன் | 2 | 130 | 7,079 | 18,969 | 18,296 |
மலை வேடன் | 2 | 85 | 7,098 | 8,910 | 6,411 |
- உதாரணத்திற்காக, ஒரு சில பழங்குடிகள் மட்டும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
- லோக்கூர் கமிட்டியால், 1965ல் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்ட பழங்குடியான கொண்டாரெட்டி 1961ல் வெறும் 8 பேரிலிருந்து 1991ல் 30,391 ஆக உயர்ந்தது. மாநில கூர் நோக்கு குழு’வின் கெடுபிடிகளால் 2001ல் 19,653ஆகக் குறைந்தது. அதேபோல, மலை வேடன் மற்றும் மலைக் குறவன் எண்ணிக்கையிலும் சிறிது சரிவு ஏற்பட்டது.
- குருமன்ஸ் பொருத்த வரையில் தொடர்ந்து எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. உண்மையான குரும்பா பழங்குடிகள் நீலகிரிப் பகுதியில் 1961ல் 1,174 பேர், 2001ல் 6,823 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளனர்.
- காட்டு நாயக்கன் எண்ணிக்கையைப் பொருத்தவரையில், 1961ல் 6459 பேராக இருந்தது, 700 மடங்கு உயர்ந்து, 2001ல் 45,227 என நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. நீலகிரி, முதுமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் உண்மையான காட்டு நாயக்கன் எண்ணிக்கை சுமார் 9 ஆயிரம் மட்டுமே ஆகும்.
- முற்பட்ட சாதியான ரெட்டி, ரெட்டியார் பழங்குடி கொண்டா ரெட்டியாகவும், பிற்பட்ட வகுப்பினரான நாய்க்கர், நாய்க்கன் மற்றும் நாயுடுக்கள் பழங்குடி காட்டு நாய்க்கன் ஆகவும், 26 வகையான சீர் மரபினரான (MBC) குரவர்கள், மலைக் குறவன் ஆகவும், பிற்பட்ட சாதி ஊராளிக் கவுண்டர் பழங்குடி ஊராளியாகவும், பிற்பட்ட வகுப்பு குச்சடிகார் பழங்குடி குறிச்சான் ஆகவும், பிற்பட்ட வகுப்பினரான குரும்பா, குரும்பர், குருபா, குரும்பக் கவுண்டர் பழங்குடி குருமன்ஸ் ஆகவும், போலிகள் பல்கிப் பெருகியுள்ளதை மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறைகளும், அமைச்சரகங்களும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.
- நலிந்தவர்களின் (எஸ்டி) பங்கைத் திருடுபவர்களாக, மனசாட்சியைக் கொன்று தின்பவர்களாக, பிற சாதிகளைச் சேர்ந்த படித்தவர்களும், சாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களும் மாறிப்போன அவலம், சமூக நீதியின் பிறப்பிடமாகப் போற்றப்படும் (!) தமிழகத்திற்கே மாபெரும் அவமானம் ஆகும். மேலும், தமிழகத்தில் அருகி வரும் தொல்பழங்குடியினர் (Particularly Vulnerable Tribal Groups- PVTG) எனக் கருதப்படும் காட்டு நாயக்கன், இருளர் போன்ற பழங்குடிப் பிரிவுகளிலும் போலிகள் நுழைந்து பழங்குடி சான்றுகளைப் பெற்றதுதான், மோசடியின் உச்சகட்டம் ஆகும். வேட்டைக்காரன் என்ற பிற்பட்ட சாதியினர் இருளர் என்று போலி பழங்குடி சான்றிதழ்களைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
குரும்பர் / குரும்பக் கவுண்டர்கள் – பழங்குடி குருமன்ஸ் அல்ல
மத்திய பழங்குடியினர் அமைச்சரகம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் உண்மையான பழங்குடி அமைப்புகளால், மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட புகார்கள் ஆகியவற்றின் பின்னணியில், பின்வரும் முக்கிய குழுக்கள் ‘குரும்பர்-குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் பழங்குடி குருமன்ஸ் அல்ல’ என்ற அறிக்கைகளை வழங்கியுள்ளன.
- தமிழ்நாடு அரசாங்கம் பழங்குடியினர் நலத்துறை (சென்னை) இயக்குநர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களையும், தருமபுரி, அரூர் வட்டார வருவாய் அதிகாரிகள் திருப்பத்தூர் துணை ஆட்சியர் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவானது, ஆய்வு செய்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் சாதிகள், மிகவும் பிற்பட்ட சாதியினர் குரும்பரே என்றும், குருமன்ஸ் பழங்குடி அல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை 66, தேதி 5/8/2011)
- குரும்பா, குரும்ப கவுண்டர், குரும்பன், குரும்பச் சாதிகளை தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி குருமன்ஸ் சாதியோடு ஒரே மாதிரியானதுதான் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை மக்கள் தொகைப் பதிவாளர் (Registrar General of India) நிராகரித்ததை, தேசிய பழங்குடி ஆணையம் தனது 24.11.2.14 தேதி குறிப்பேட்டில் (மினிட்ஸ்) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகளாக ஏற்கவில்லை. சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம்.
(அ) ‘குரும்பன் மற்றும் குரும்பக் கவுண்டர்களுக்கு பழங்குடி குருமன்ஸ் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்ற தமிழக அரசாணை எண் 388 (6. 5. 77)க்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் சமூக நல சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் டபுள் யூ பி எண் 2401/1977) இத்தகைய ஆணைகளை இந்திய குடியரசுத் தலைவர்தான் பிறப்பிக்க முடியும், தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என தீர்ப்பு வழங்கி அரசாணை 388ஐ ரத்து செய்தது.
(ஆ) குருமன்ஸ் குலசங்கத் தலைவர் கே.எல். கரிபிரான் எதிர் தமிழக அரசு வழக்கில் (11933/ 1983, 3238 /1984) 8.07.94ல் வழங்கிய தீர்ப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் குரும்பாஸ் மற்றும் குருமன்ஸ் பழங்குடிகள், வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் பழங்குடியினர் என்று கூற முடியாது என்று தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
(இ) P. கர்தான் (அமைப்பாளர், குலமகள் சீகேஸ்) என்பவரின் வழக்கு, மோசடியை நன்கு தெளிவாக்குகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியில் இருந்த குரும்பா மற்றும் குரும்பக் கவுண்டரை மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற P. கர்தான் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில்தான் அரசாணை எண் 96 (8.09.2008) பிறப்பிக்கப்பட்டு குரும்பக் கவுண்டர்கள் மிகவும் பிற்பட்ட சாதியினர் ஆயினர். இதே P. கர்தான் (அமைப்பாளர் குலமகள் சீகேஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் கழித்து, குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வழக்கு (WP No 1819/ 2010) தொடுத்தார். உயர்நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 5.10.2010ல் தள்ளுபடி செய்தது. மீண்டும் இவரே மேல்முறையீடும் (WP Civil Appeal No 176/ 2011) செய்தார். இந்த மேல் முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போலிப் பழங்குடிகள் விவகாரத்தில், உண்மைத் தன்மையை மெய்ப்பித்து மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனையில், அதன் தலைவராகத் திகழ்ந்த முன்னாள் செயலாளர் (ஆ.தி.மற்றும் ப.கு.நலத்துறை) அவர்களும் அதன் முன்னாள் உறுப்பினரான சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் பேராசிரியர் அவர்களும் ஏராளமான போலி பழங்குடிச் சான்றிதழ்களுக்கும் போலிகள் நீடிப்பதற்கும் வழிவகுத்தனர். இதனால், இவர்கள் மாநில கூர்நோக்குக் குழுவிலிருந்தும் விலக்கப்பட்டனர். தற்போது இவர்கள் மாநில கூர்நோக்கு குழுவில் இல்லாததால் உண்மை வெளியே வந்து விவாதப் பொருளாக மாறிவிட்டது.
மக்கள் பிரதிநிதிகள் முதல் நீதிமன்றங்கள் வரை
திரு.அண்ணாமலை அரசு செயலராக (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை) பொறுப்பேற்ற பிறகு, போலி சான்றிதழ்களுக்கு தடை விதித்தார்; கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். போலி பழங்குடி சான்றிதழ்கள் கிடைக்காத குரும்பக் கவுண்டர்கள் நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டன. போலி குருமன் சங்கம், போலி காட்டுநாயக்கன் சங்கம், போலி குறவன் சங்கம், போலி கொண்டாரெட்டி சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக, அரூர் எம்எல்ஏ டெல்லிபாபு தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைகீழாக மாறியிருப்பதுதான், அரசியல் சந்தர்ப்பவாதம், சீரழிவிற்கு இட்டுச் சென்றதற்கு அடையாளம் ஆகும். கடந்த 5 மாத காலத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ், கொண்டா ரெட்டி, குறிச்சான் போலி பழங்குடி சான்றிதழ்கள் மீதான தீர்ப்புகள், மனுதாரர்களுக்கு ஒரே வழக்கறிஞர், ஒரே சிறப்பு அரசு வழக்கறிஞர், அனைத்தும் ஒரு நீதிபதி அங்கம் வகித்த கோர்ட்டுகளில் நடைபெற்றது. போலிகளுக்கு விசாரணையின்றி பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என முடிவெடுத்த நேர்மையான இரண்டு தலித் அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளா?
தமிழகத்தில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையாளி என அழைக்கப்படுகிற மலைகளில் வாழ்கிற தமிழ் பேசுகிற பழங்குடி இனத்தவர் ஆவர். இவர்களின் இட ஒதுக்கீட்டின் பலன்களை, வேலைவாய்ப்புகளை போலி பழங்குடி சான்றுகள் வைத்திருக்கக் கூடியவர்கள் அபகரித்துக் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான, படித்த உண்மையான பழங்குடிகள் (ஏற்கனவே தங்கள் பாரம்பரியமான நிலங்களையும் அன்னியரிடம் இழந்துவிட்டதால்) மலைகளில் வேலை கூட கிடைக்காமல், திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்ட கூலி வேலைக்குச் சென்று உயிர்களை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; 2000த்திற்கும் மேற்பட்டோர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 500க்கும் அதிகமானோர் பத்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால், குரும்பக் கவுண்டர் உட்பட்ட போலி பழங்குடிகள் பலரும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் உயர்நிலை அதிகாரிகளாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளின் ஆதிவாசிப் பிரிவிற்கும் போலிகளே தலைவர்களாகவும் உள்ளனர்.
வாச்சாத்தி வன்முறையின்போது, பழங்குடியினரின் நீதிக்கான உரிமைப் போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் வகித்து நன்மதிப்பைப் பெற்ற த.நா.மலைவாழ் மக்கள் சங்கம் குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக, போலிகளிடம் கிடைக்கும் ஆதாயங்களுக்காக மதிப்பை இழந்து சரிந்து கொண்டிருக்கிறது. நீதியும், நியாயமும், விலை போவது சனநாயகத்திற்கு மாபெரும் தலைகுனிவாகும். உண்மையை நிலைநிறுத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். உறுதியாக அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
- சந்திரமோகன்
I THINK THAT THE KEETRU.COM MAY HELP TO REAL TRIBAL PEOPLES.
by
K,KUBENDIRAN, STATE PRESIDENT, TAMILNADU ST MALAYALI PERAVAI,
குறவர்கள் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் கள்ளர் என்ற பிரிவினறோடு சேர்ந்து வசதி படைத்த செல்வந்தர்கள் வீடுகளில் கன்னம் வைத்து திருட ஆரம்பித்தார்கள் . கன்னம் என்பது பகலில் கைரேகை பார்க்க செல்லும் பெண்களை விட்டு அந்த வீட்டினுள் யார் இருக்கிறார்கள்? எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பகலில் வேவு பார்த்து வர சொல்லி விட்டு இரவு நேரத்தில் இவர்களும், கள்ளர் பிரிவினரும் சேர்ந்து திருடுவார்கள். காலபோக்கில் நகரங்களில் திருட்டு பயம் அதிகரிக்க தொடங்கியது. வெள்ளைக்கார அரசாங்கம் இவர்களையும், கள்ளர் பிரிவினரையும் குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த சட்டத்தின் நடவடிக்கையின் படி மாலை 6 மணிக்கு மேல் இவர்கள் நகரத்தில் இருக்க அனுமதி இல்லை. இரவு நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தான் உறங்க வேண்டும்,விடிந் ததும் கையெழுத்து போட்டு விட்டு தான் ஊருக்குள் செல்ல வேண்டும், உறவினர் இல்லங்களுக்கு செல்வதாக இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும், அப்படியே அனுமதி கிடைத்து விட்டாலும் மாலை 6 மணிக்குள் வந்து விட வேண்டும்.போகும் ஊர்களில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் தான் தங்க வேண்டும், கையெழுத்து போட வேண்டும், இந்த குறவர்களில் யாரோ ஒரு சிலர் செய்த தவறான செய்கைகளினால் அனைத்து குறவர்கள் சமுதாயமும் மிக சிரமத்திற்கு ஆளானார்கள்.குற் ற பரம்பரையினர் சட்டத்தின் கீழ் இந்த சமுதாயமே தடுமாறியது.சட்ட த்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க தன்னுடைய சாதியினை மாற்றி சொல்ல ஆரம்பித்தனர்.(உ தாரணம்) குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந ்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார ்,குறசெட்டி,குற வன்,கொறவர்,கொறவ ாஸ், சி.கே குறவர்கள்,சங்கை யம்புடி குறவர்கள்,தொப்ப குறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்ப ை கொறச்சாக்கள், கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ் சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்ன ை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க் கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமல ை குறவர்கள்,செட்ட ி பள்ளி குறவர்கள்,வடுவா ர்பட்டி குறவர்கள்,வெட்ட ா குறவர்கள்,வரகநே ரி குறவர்கள் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்
நிலைமை இவ்வறிருக்க தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்த ில் உள்ள குறவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. சாதிச்சான்று எங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டோம ். நாடோடிகளாக திரிந்த நாங்கள் எங்கள் தலைமுறையில்தான் அந்தந்த பகுதியில் நிலைபெற்று வாழ்கிறோம்! அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்று கேட்டால் உங்கள் தாத்தா அப்பா வின் கல்விச்சான்றில் உள்ள சாதியை ஆதாரமாக கொடுங்கள் என்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் கல்வி எனும் வாசத்தை அறிந்தவர்கள்! அதன் முக்கியத்துவத்த ை உணர்ந்தவர்கள்! எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு பட்டம் படித்தும் எங்கள் குலத்தொழிலையே செய்து வருகிறோம்! எங்களுக்கு உதவ மணிதநேயம் மிக்க அரசு அதிகாரிகளோ! அமைப்போ! ஊடகங்களோ! முன்வராதது வேதனைக்குரிய செயல்! எஙகள் ஊரில் எங்களை குறவன் என அழைக்காதவர்கள் இல்லை! குறவன் என்ற அடையாளச்சொல் பரம்பரையாக அடுத்த சந்ததியினருக்கு ம் கூட வாழ்வில் ஒட்டிக்கொண்டுதா ன் வருகிறது! படிக்கும் இடத்திலும், வேலைபார்க்கும் இடத்திலும், பொது இடத்திலும் குறவன் என்ற அடையாளத்தை சுமந்து ஒதுக்கப்படுகிறோ ம்! இதனாலேயே இந்த சமூகத்திற்க்கு அஞ்சி குலத்தொழில் செய்து எங்கள் பசி போக்குகிறோம். இன்றும் இந்த சாதி மக்கள் நடோடிகளாகவே வாழ்கின்றனர்!
அதிகாரிகள், சில சங்கங்களை சார்ந்த நண்பர்கள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்யாமல் அப்படியே பதிவிட்டுள்ளீர் கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டது முதல் அனைத்து பட்டியல் பழங்குடியினரின் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக பட்டியல்
பழங்குடியினர் 36 பிரிவினரும் இச்சங்கங்கத்தில ் உறுப்பினராக உள்ளனர் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
பழங்குடியினருக் கு இனச்சான்றிதழ் கோரி வலுமிக்க பல போராட்டங்களை நடத்தி பல்லாயிரக்கணக்க ான பழங்குடியினருக் கு சான்றிதழ் பெற்றுத்தந்தது இச்சங்கம். இந்தப் போராட்டம் தொடரும்.
அதே நேரத்தில், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம், அக்கறையற்ற தன்மை காரணமாக பல்வேறு பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தவ ரை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்கான போராட்டத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசால் பல்வேறு பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் மூலம் சம்பந்தபட்ட மக்களின் வாழ்வியல் நிலை குறித்து ஆய்வு செய்து, மானிடவியல் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்று அனுப்பப்பட்டுள்ளது.
நரிக்குறவர் பிரிவு மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் தற்போது உள்ளனர். இன்றைக்கும் நாடோடியாக, உற்பத்தியில் ஈடுபடாத சமூக இருப்பவர்கள் இவர்களை பழங்குடி பட்யடிலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மலையாளி ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும் ஈரோடு மாவட்டம் தனியாக பிரிந்த பிறகு, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடி சான்றிதழ் இப்போது வரை வழங்கப்படவில்லை . ஏரியா வரையறையை எடுக்க வேண்டும். அல்லது ஈரோடு என்று சேர்க்க வேண்டும். ஏரியா வரையறையை எடுப்பது என்று தற்போது மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது.
குறுமன்ஸ் தமிழக பழங்குடி பட்டியலில் வரிசை எண் 18ல் உள்ளது. இவர்களுக்கும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் என்று குறிப்பிட்டுள்ள குறும்பாஸ் (வரிசை எண் 17) வேறுவேறானவர்கள் . குறுமன்ஸ் - குறும்பாஸ் ஒன்றல்ல என்பதற்கு பல்வேறு மானிடவியலாளர்கள ின் அறிக்கைகள் உள்ளன. குறுமன்ஸ் சமவெளிப் பகுதியில் வாழ்பவர்கள். குறும்பாஸ் மலையில் வசிப்பவர்கள். காட்டை சார்ந்து வாழ்பவர்கள். குறுமன்ஸ் ஆடு மேய்ப்பது, கம்பளி நெய்வது பாரம்பரியமான தொழில்.
குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவான குறுமன், குறும்பா, குறும்பர் ஆகியோரும் பழங்குடியினர் தான். அவர்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கை. இதை ஏற்றுத்தான், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து மேற்படி உட்பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்கலாம் என்ற பரிந்துரையை ஏற்று 2006ல் மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன் மீது இந்திய பதிவாளர்துறை கேட்ட சந்தேகங்களுக்கு 2007ம் ஆண்டு தமிழக அரசு பதில் அனுப்பியுள்ளது.
இதற்கும் மேலாக 2013ம் ஆண்டு தமிழக அரசு 7 பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து குறும்பாஸ், குறுமன்ஸ் இரண்டு பிரிவுகள் சம்பந்தமாகவும் ஆய்வு செய்து, குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவான குறுமா, குறும்பா, குறும்பர், குறும்பன், குறும்ப கவுண்டர், ஆகிய அனைத்து பிரிவினரும் பழங்குடியினர் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
பழங்குடியினராக இருந்தும் பட்டியலில் சேர்க்காமல் கிடப்பில் போட்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக இயல்பாக கோபம் வந்திருக்க வேண்டும். சின்னஞ்சிறு காரணங்களை கூறி இந்திய பதிவாளர் தன்னிச்சையாக இத்தகைய கோரிக்கைகளை நிராகரிப்பதை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்கவில்லை. இத்தகைய கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க தனியாக தேசீய அளவில் ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.
பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தவித ஆய்வுமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் ஏற்பதில்லை. உதாரணத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் தங்களை ஆதியன் என்றும் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரினர். அந்த மக்களை மன்னார்குடி கோட்டாட்சியரிடம ் அழைத்து சென்றேன். அதிகாரியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. உடனே நான் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யுங்கள். நான் செயலாளரோடு பேசுகிறேன் என்று அன்று முடித்தோம். பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட து. அப்போது இயக்குநராக இருந்த திரு. டாக்டர் ஜக்கா பார்த்தசாரதி அவர்கள், அம்மக்கள் ஜோகிஸ் என்ற பிற்படுத்தப்பட் ட பிரிவை சார்ந்தவர்கள் என்று அறிக்கை கொடுத்தார். அதை அம்மக்களுக்கு தெரிவித்து விட்டோம்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.
புலையன் இன மக்கள், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கோரி, போராடினோம். பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி பழங்குடி பட்டியலில் சேர்க்கலாம் என்று டி.ஆர்.சி பரிந்துரை செய்துள்ளது.
எனவே, ஏற்கனவே பட்டியலில் உள்ள பிரிவினர்களுக்க ு சான்றிதழ் கோரி நடைபெறும் போராட்டமும், பட்டியலில் சேர்கக வேண்டுமென்று கோரி நடைபெறும் போராட்டமும் தனித்தனியானது.
கொண்டாரெட்டி (வரிசை எண் 12) பழங்குடி பட்டியலில் உள்ளனர். பள்ளிபட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கொண்டாரெட்டிகளு க்கு மட்டுமே நாங்கள் சான்றிதழ் கோருகிறோம் தமிழ்நாடு முழுவதும் அல்ல.
குறவன் இன மக்களுக்கு எஸ்.சி சான்றிதழ் கோரித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம ். பட்டியலில் சேர்த்தல் என்பது வேறு என்ற புரிதலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம ்.
போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள ன என்பதில் இருவேறு கருத்துக்களுக்க ு இடமில்லை. வழங்கியதுயார். வருவாய்துறை அதிகாரிகள் தானே. போலி என்பது நிரூபிக்கப்பட்ட ால் நடவடிக்கை எடுக்க எந்த தடையுமில்லை. இதைக்கூறி உண்மையான பழங்குடியினருக் கு சான்றிதழ் தர மறுப்பதை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்காது .
எனவே, சந்தர்ப்பவாத நிலை எடுத்து சீரழிந்து கெண்டிருக்கிறோம ் என்பதை வன்மையாக மறுக்கிறேன். பட்டியலில் சுமார் 20 போலி பழங்குடி பிரிவினர் உள்ளனர் என்பதையும் நாங்கள் ஏற்றவில்லை. 1950, 1956, 1976 என பல்வேறு காலக்கட்டங்களில ் ஆய்வுகளுக்கு பிறகு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய செயலாளர் அண்ணாமலை, நீதிமன்ற வழக்கைப் பொருத்தவரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு அதில் உடன்பாடில்லை. எந்தவொரு அதிகாரியையும் நேருக்கு நேராக எதிர்த்து போராடுவது தான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வரலாறு. உடன்வந்த யாரோ செய்த வேலை இது. நீதிமன்றத்திற்க ு போன பிறகு தான் விபரம் தெரியும். அண்ணாமலை சார்பாக என்னிடத்தில் பேசியவர்களிடம் எனது மிகுந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளேன். ஆனால், செயலாளர் அவ்வாறு தான் பேசினார் என்பதே உண்மை. அன்றைக்கு செயலாளரை பார்க்க சென்றது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அளிப்பதற்காகவே. அதில் ஒரு கோரிக்கை பட்டியலில் உள்ள அனைத்து பழங்குடியினருக் கும் தாமதமில்லாமல் சான்றிதழ் வழங்க வேண்டுமென்பதே, அதை படித்துவிட்டுத் தான் செயலளரை தேவையில்லாமல் அத்தகைய கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பிட்ட வழக்கை பற்றி சென்றவர்கள் யாரும் பேசவில்லை. பட்டியலில் உள்ள ஒரு பிரிவினருக்கு சான்றிதழ் தரக் கூடாது என்று சொல்வதற்கு செயலாளருக்கு ஏது அதிகாரம். வழக்கறிஞர்களுடன ் டெல்லிபாபுவும் சேர்ந்து கொண்டு நீதிபதிகளுக்கு பணம் வாங்கிக் கொடுப்பது போல் தங்கள் எழுதியிருப்பது அயோக்கியதனமான குற்றச்சாட்டு. இதை திரும்ப பெற வேண்டும். பழங்குடி அல்லாத ஒருவருக்கு கூட பழங்குடி சான்றிதழ் வழங்கக்கூடாது என்பதில் உங்களை விட நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம்.
பழங்குடியினருக் கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் தான் அடிப்படை காரணம் என்பதை தாங்கள் அறியாதவரல்ல. குறிப்பிட்ட அதிகாரி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர், நேர்மையானவர் என்றெல்லாம் தாங்கள் குறிப்பிட்டுள்ள ீர்கள். அவர் தனது பொறுப்பை எப்படி நிறைவேற்றுகிறார ் என்பதை பொருத்துத்தான் அவரை மதிப்பீடு செய்ய வேண்டும்.
வணக்கம்.
RSS feed for comments to this post