dalit ladyநான் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது கண்ட நிகழ்வு. அது ஒரு குக்கிராமம். போதிய போக்குவரத்து வசதி கூட இல்லை. விவசாயத்தில் போதிய வருவாய் இன்மையால் அங்குள்ள பெரும்பாலோனோர் வேலை தேடி நகரங்களுக்கு சென்றுள்ளதால் தற்போது குறைவான குடும்பங்களே அங்கு வசித்து வருகின்றனர். அதில் இரு குடும்பங்கள் மட்டும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். மற்ற எல்லோரும் ஒரே வகையான உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாவர். அங்கு தீண்டாமைக்குப்
பஞ்சமில்லை.

அந்த கிராமத்தில் அதே மாதத்தில் தலித் குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கும் உயர் வகுப்பைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கும் குழந்தை பிறந்துள்ளது. ஒரு நாள் உயர்வகுப்பு பெண்மணியின் குழந்தைக்கு போதிய தாய்பால் இன்மையால், குழந்தை மூச்சு நிற்கும் அளவிற்கு அழுகை. எனவே அங்குள்ள பெரியவர்களின் ஆலோசனைப்படி அப்பெண்மணி தன் குழந்தைக்கு தாய் மட்டுமே மருந்து என்பதையும், அதற்கு தகுதியான பெண் அத்தலித் பெண்மணியால் மட்டுமே முடியுமென்பதையும் உணர்கிறாள். ஆனால் போயும் போய் தலித் பெண்ணிடம் தாய்பால் கேட்பதா என்ற எண்ணம் குறுக்கே நிற்கிறது.

தன் குழந்தையின் நிலை மோசமாகவே வேறு வழியின்றி அப்பெண்மணியிடம் கேட்கிறாள். உடனே தலித் பெண்மணியோ மனம் உகந்து உயர்குடியில் பிறந்த குழந்தைக்கு போதுமான தாய்பால் கொடுத்து அந்த அழுகையை நிறுத்துகிறாள். சிறிது நேரத்தில் அக்குழந்தை இயல்புநிலைக்கு திரும்புகிறது. அக்குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

நாம் இங்கு சிந்திக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இதே நிலை ஒரு தலித் பெண்மணியின் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தால் எத்தனை உயர்குடி தாய்மார்கள் மனம் உகந்து தாய்பால் தர முன்வந்திருப்பார்கள்? எங்கே இருக்கிறது ஜாதி?

- இல.சுருளிவேல், முனைவர்பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

Pin It