தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பாக பல்வேறு முன்னேடுப்புகள் செய்து வருவது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசின் கொள்கை முடிவுகள் என்பது ஆட்சியாளர்களின் சுய விருப்பு வெறுப்புகளில் இருந்தே வெளிப்படுகிறது. பொதுவான சொல்லாடல்களாக அனைவரின் மனதிலும் இருப்பது 14 ஆண்டுகள் ஆயுள்சிறைவாசம் அனுபவித்தால் போதுமானது, அவர்கள் மகிழ்சியுடன் வீடு திரும்பிவிடுவார்கள் என்பதே.

ஆனால் எதார்த்தம் என்பது வேறாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலை என்பது 10, 7, 5 ஆண்டுகள் என்று ஒரே சீரான முறையில் இல்லாமல் அரசியல், தேர்தல், தங்களுக்கு விருப்பமானவர்களை விடுதலை செய்வதற்காக விடுதலை செய்வது என்று அனைத்தும் இங்கே அரசியல்மயப்படுத்தியே உள்ளது.

சிறையில் இருப்பவர்கள் என்றால் அவர்களுக்கு என்று ஆன்மா இல்லை என்ற எண்ண‌ங்களும், தப்பு செய்தால் தண்டனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற பொது உரையாடல்கள் தவிர்த்து நமது சிந்தனை முறை விரிவடைவதில்லை.

இந்தியப் பேரரசின் தற்போதைய சட்ட முறைகள், தண்டனை சட்டங்கள், காவல் சட்டங்கள் அனைத்தும் முந்தைய எஜமானர்களின் சட்டமுறைகளை அப்படியே இன்று வரை பின்பற்றி வருகின்றன.(அவ்வப்பொழுது சிற்சில திருத்தங்களை செய்தாலும்) நாமும் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்திய ஆட்சியாளர்களின் குற்றவியல், தண்டனை சட்டங்களில் அதே பழைய, நவீனகாலத்திற்கு ஏற்ப இல்லாத இந்த உளுத்துப்போன சட்டங்களுடனே போராடி வருகிறோம்.

தண்டனை முறைகளைப் பற்றி பேசும் நாம் நமது தேசத்தில் நிலவி வரும் சமுக, பொருளாதாரப் பிரச்சனைகள், அரசியல் சூழல்கள் இவை குறித்தும் இவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை.

"சட்டங்களை சார்ந்துதான் சமுகம் இருக்கிறது என்பது சட்டப்பூர்வ கற்பனையே. மாறாக சட்டங்கள்தான் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களே அன்றி சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதான சட்டமுறைகள்தான் இங்கே சிறந்த சமூக அமைப்பு முறைகளை உருவாக்கும்”

தமிழகம் மட்டும் அல்ல இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் இந்த சட்ட வன்முறைகளில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இசுலாமியர்கள், தலித்துகள், ஏழைகள், அரசியல் காரணிகளுக்காக போராடுபவர்கள், பழங்குடியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏதும் அற்ற அப்பாவிகள்.(உதாரண‌மாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள். சிறுவர்கள், பெண்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. 70 வயது முதியவர் மீது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது)

தமிழகம் முழுவதும் அரச வன்முறைகளாலும், காவி தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட சமூகம் இசுலாமிய சமுகம். இவைகளுக்கு எதிரான எதிர்வினையாற்றால்களால் தங்களின் வாழ்நாளைத் தொலைத்த பெரும்பாலான‌ இளைஞர்கள் இன்றைக்கு சிறையில் பல்லாண்டு காலமாக தங்களின் விடுதலை நாள் என்று வருமோ என்று தங்களின் வாழ்நாட்களை சிறையில் எண்ணி வருகிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா, அபுதாஹீர் என்ற இளைஞனை. சிறுவனாக சிறைக்குச் சென்ற இந்த இளைஞன் இன்றைக்கு 10 ஆண்டுகள் கடந்து SLE என்ற சிறை நோயால் தன் உடலில் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறான். இடைக்காலமாக ஒரு நீண்ட பரோல் கொடுக்க சிறைசட்டங்களில் இடம் இருந்தாலும் இவனை விடுதலை செய்ய அரசும், ஆட்சியாளர்களும் தயாராக இல்லை. அபுதாஹீருக்கும், மதானிக்கும் கருணை காட்டாத சட்டங்கள், இவர்கள் என்ன வகையான வழக்குகளில் சிறையில் இருக்கிறார்களோ அதே வகையான வழக்குளில் சிறையில் இருக்கும் பெண் சாமியார்களுக்கும், நடிகர்களுக்கும் கருணை காட்டுவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாக்குவதாக இருக்கிறது.

இங்கே சட்டங்கள் சமூகங்களை இரண்டுவகையான‌ பாகுபாடுகளுடன் அணுகுகிறது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களை சட்டம் அணுகும் முறையே எந்த அறங்களும் அற்றதாய் இருக்கிறது.

தண்டனை கொடுக்க வேகம் காட்டும் நீதிபதிகளும், சட்டப் புத்தகங்களும், தண்டனைக்குப் பின்பான ஒரு சிறைக் கைதியின் வாழ்நிலை குறித்து எதுவும் பேசுவதில்லை. ஒருவன் தன் குற்றத்தை நினைத்து வருந்துவதற்கும், தண்டனைக்குப் பின்பான வாழ்கையில் மீண்டும் அந்த குற்றங்களை செய்யாமல் அவனைத் திருத்துவதற்கும், மறுவாழ்வுக்கான வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதற்கும்தான் சிறை என்று சொல்லப்படுகிறது.

இந்த நாட்டில் தண்டனை என்பதற்கான அளவுகோல் எதுவும் அற்றே இருந்துவருகிறது. ஆயுள்சிறைவாசம் என்றால் ஆயுள் முழுமைக்கும் என்று பொருள். அதாவது ஒரு சிறைக் கைதி அவன்/அவள் உயிர்போகும் வரையிலுமான கால அளவு என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. அப்படி என்றால் ஒரு சிறை மனிதனின் மறு வாழ்வு, அவனைத் திருத்துகிறோம் பேர்வழி என்ற பெயரில் சிறை சாம்ராஜ்ஜியத்தில் ராஜாக்களாக வல‌ம் வரும் கண்காணிப்பாளர்கள், பலகோடி செலவு என்று இவைகள் அனைத்தும் எதற்கு என்ற கேள்விகளும் இங்கே எழாமல் இல்லை.

இந்திய அரச‌மைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கான அதிகார வரையறையில் மாநில ஆளுனர்களுக்கு சட்டப்பிரிவு 161ன் படி தண்டனை குறைப்புக்கான அதிகாரங்களை வழங்கியிருந்தாலும், மாநில அரசு தன்னுடைய சுய விருப்பு, வெறுப்புகள் அடிப்படையிலேயே இங்கே தண்டனை குறைப்புகள் செய்யப்படுகிறது.

ஆயுள் சிறைதண்டனை என்பது தமிழக சிறைவாசிகள், மற்றும் இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் இருக்கும் சிறைவாசிகளைப் பொருத்தவரை மரண தண்டனையின் மறு வடிவமாகவே இருக்கிறது. மரண தண்டனையை எதிர்க்கும் மனித உரிமையாளர்கள் சிறைகளில் ஆயுள்சிறை என்ற மரண தண்டனையின் மறுவடிவத்தைக் குறித்தும், கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஆயுள் சிறைவாசம் குறித்தும் பேசவேண்டும்.

தமிழக மனித உரிமையாளர்கள், இசுலாமிய அமைப்புகளின் போராட்டத் தொடர்ச்சியாக தனது வரலாற்றுக் கடமையாக இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களை முன்னேடுத்துச் செல்கிறது.

தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய ஆயுள்சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் சாத்தியப்பட்ட அளவில் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் மூலமும், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர், ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் மக்களிடமும் கொண்டு சென்றோம்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்களைச் சந்தித்து ஆயுள்சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர்களின் குரல்களை இணைத்தோம்.

இந்தியா துணைக்கண்ட அளவில் பல்வேறு தேசிய இனத் தலைவர்களிடம் சிறைவாசிகள் குறித்த பல்வேறு அறிக்கைகளை சிறு புத்தக வழியாக கொண்டு சென்றோம்.

தற்போது கடந்த 14.11.2013 அன்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.ஜெ.உமர்கயான் அவர்களால் சிறைவாசிகள் விடுதலை குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம் மக்களிடமும் ஆட்சியாளர்களின் கவனத்தை சிறைவாசிகளின் பால் ஈர்க்க பல்வேறு போராட்ட வடிவங்களையும், முன்னெடுத்து வருகிறோம்.

அன்பான தமிழக முற்போக்கு அரசியல் இயக்கங்களே, அதன் தலைவர்களே..!

தமிழ்த் தேசிய, பெரியார் இயக்கத் தோழர்களே….

இசுலாமிய அமைப்புகளே…

மனித உரிமை செயல்பாட்டாளர்களே…

பத்திரிக்கையாளர்களே…

ஊடக செயல்பாட்டாளர்களே…

விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலையின் பால் உங்கள் கவனத்தை செலுத்த அன்பான வேண்டுகோளை உங்கள் முன்னால் வைக்கிறோம்.

சிறை சீர்திருத்தம் தொடர்பான விவாதங்கள் தொடங்கப்படவேண்டும். அதற்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுகிறோம்.

ஆண்டுகள் பல கடந்தும் தங்களின் விடுதலை நாள் என்று வருமோ என்று எதிர்பார்பில் தங்கள் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் சிறைவாசிகளின் துயரங்களை நீங்கள் பேசவேண்டும் என்று சிறைப்பட்ட ஆயுள்சிறைவாசிகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

இவர்களின் விடுதலைக்கு உங்களின் குரல்கள் ஒலிக்குமா…?

- உமர்கயான்.சே, ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

Pin It