பெண்ணெழுத்து – 14

நாயகர்களைப்போல்
அவர்கள் சண்டையிட்டபோது,
அவர்களின் போற்றத்தக்க
இதயங்கள் அமைதியாகவும்
வாள்கள் வன்முறை
கொண்டும் இயங்கின.
சாகவும் கொல்லவும்
அவர்கள் எப்போதோ
தயாராகி விட்டிருந்தார்கள்.

- ஜோர்ஜ் லூயி போர்ஹே

ஃபஹீமா ஜஹான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர். 90-களின் மையப்பகுதியில் எழுதத் தொடங்கினார். ஒரு கடல் நீருற்றி (2007) அபராதி (2009) என்று இரு கவிதைத் தொகுப்புகளையும் ஆதித்துயர் (2010) என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பையும் வெளியிட்டிருக் கிறார். ஃபஹீமா போயம்ஸ் என்ற வலைத் தளத்திலும் பதிவுகளைச் செய்துவருகிறார்.

அழகிய படிமங்களைக் கொண்டவை. ஆரவாரமற்ற இயற்கையோடு ஒன்றிப் போகக் கூடிய மானுடத்தின் குரல். ஆணாதிக்கத்தைப் பொதுத்தன்மையோடு எதிர்ப்பவை. போர் சூழலில் கூடிழந்து அலையும் பறவைக் கூட்டங் களாக மனிதர்கள் அலையுறுவதையும் நிலம் சார்ந்த பிடிப்பை, ஆர்வத்தை, அக்கறையை வெளிப் படுத்துவனவாகவும் இருக்கின்றன. நிலத்தை கூர்மையாக அவதானிப்பதையும் அதன் முகிழ்ந் தலை இரசனையோடு விவரிப்பதையும் கொண்டிருக்கின்றன.

மீன்கள் நிரம்பிய சின்னச்சட்டையை நனைத்துக் கூத்தாடும் கவிஞர் நதி நனைத்து சுமந்து வந்த பல்லாயிரம் வேர்களின் மொழிகளின் சூட்சுமத்தில் கரைந்து போகிறார்.

ஃபஹீமாவின் கவிதைகள் எளிமை யானவை தனித்துவம் மிக்கவை. இவர் இன அரசியல் பிரச்சனைக்குரிய நாட்டில் வாழ்பவர். குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர். இஸ்லாத்தைப் பின்பற்றுகிற பெண்கள் எழுத வருவது குறைவு. அவர்களை வரவேற்க எழுது வதற்கு உந்துதலை அளிக்க வேண்டி யிருக்கிறது.

ஃபஹீமாவின் கவிதைகளில் பெண்ணுக் கான குரல் தீவிரமாக எழுகிறது. பழைய நடைமுறைகளைக் கேள்விகேட்கிறது. அழுத்தித் திணிக்கும் பழைய மரபுகளுக்கு எதிராக நிற்கிறது. நிலவுடமையும் மதமும் பெண்ணை ஒடுக்குகிற அம்சங்களின்மீது தொடர்ந்து விசாரணைகளை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. பெண்ணாக பலங் கொண்டமட்டும் அவற்றின் அடக்கு முறையை எதிர்க்க வேண்டிய துணிவைப் பெற வேண்டி யிருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான மாறு பட்ட நியதிகளைக் களையெடுக்க வேண்டி யிருக்கிறது. இந்நிலையில் ஃபஹிமாவின் கவிதை கள் பெண்ணின் குரலாக வெளிப்படுகின்றன. பெண்ணின் கருத்தை நெரித் திடும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிற இவர் பெண்ணைப் பெண்ணாக வாழவிடச் சொல்கிறார்.

 எக்காலத்திலும் இனி
 உங்கள் பீடங்களில்
 முழந்தாளிட வரமாட்டேன்
 நீங்கள் ஆராதிக்கும்
 நாமங்களிலும் சேரமாட்டேன்
 ஆதிமுதல் போற்றிவரும்
 அந்தக் கிரீடங்களின்மீது
 அவமதிப்பை விட்டெறிகிறேன்

என கோபத்தை வெளிக்காட்டத் தயங்காத குரல் ஃபஹிமாவுடையது.

காதலின் துவக்கத்தில் இருபாலருக்குமான வேறுபாடுகள் கருத்து வேறுபாடுகளை அதிகம் நிகழ்த்துவதில்லை. ஒருவர் மற்றொருவரின்மீது எடுத்துக் கொள்ளும் உரிமையின் ஜ்வாலையைத் தாண்டி பால்சார்ந்து இயற்றப்படும் நியதிகள் முன்வைக்கப் படுகின்றது.

உன்மனத்திரையினூடு சட்டமிட்டுப்பார்க்கும்
எல்லைகள் உள்ளவரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது

என காதல் சரிசமமாக நிகழ்வதற்குக்கூட பால்பாகுபாடு தடையாக இருப்பதை அதன் தீவிரத்தைப் பதிவுசெய்கிறார். அன்பிற்குக்கூட தடைகளும் முரண்களும் செயலூக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்வதைச் சுட்டுகிறார்.

காதலின் பெயரால் அடிபணிவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். காதலின் பெயரால் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து தலையசைப்பவளாக உரிமையற்றவளாக இருப்பதை மறுக்கிறார். பெண்ணாக இருப்பதனால் அடிபணிய முடியாது சக உயிராக சமதையாக காதலின் இருபாலினமும் இருக்கவேண்டும் என்பதை விழைகிறார். 

வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறுபிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்றுதான்
அழகாகச் சிரித்தோம்

என பால்வேறுபாடின்றி ஒன்றிப் பறந்த நாட்களின் நினைவெச்சத்தை ஆதங்கத்தோடு முன்னிறுத்துகிறார் வாழ்வின் உயிர்த்தலைமீறி வகுத்துக் கொண்ட சட்டகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்தத் தக்கனவாக மட்டுமல்ல. மகிழ்ச்சியைக் களவாண்ட தருணமாகவும் மாறிவிட்டது. ஓரிடத்தில் கலாசாரம் பண்பாடு எனும் அரிகண்டங் களை அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்என உனதடி பணிதலில் அவளுக்கு ஈடேற்றம் கிடைக்குமென்கிறாயே என்கிறார். வானதி கவிதைகள் எனும் தொகுப்பில் கவிஞர் வானதி தாலியை கேள்விக்குட்படுத்தி இனப்போர் நடக்கும் வேளையில் சயனைடு குப்பிகளே கழுத்தை அலங்கரிக்கிறது என மரபார்ந்த தாலியை விமர்சிப்பார். அந்த வரிகள் இயல்பாகவே நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

அவளைப் பலவீனப்படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்தபின்பும்
அவளை உள்நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?
போரிலும் பகையிலும் முதல்பொருளாய்அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே
ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
நிமிர்ந்து நடந்தாய்

போர்ச் சூழலிலும் பெண்ணினமே துயரத் தைச் சுமந்து அலைவதாக இருக்கிறது. பாரங்களை முற்றிலும் சுமந்து கொண்டு இனத்தை வளர்க்க பிரயத்தனப்படுகிறார். ஆனால் இவையெல்லா வற்றையும் சுமத்திவிட்டு ஆணாதிக்கம் – அரசாங்கம் எனும் படிநிலைகளின்படி ஆண் மனித இனத்திற்கு தலைமையேற்கிறான். சுமத்துபவனுக்கும் சுமைதாங்கிக்குமான வேறுபாடு இரு இனங்களுக்கிடையே நிறைந்திருப்பதைக் காட்டுகிறார்.

ஃபஹிமா பேசும் முக்கியமான இடம் நிலம். காலங்காலமாக மனிதனின் வாழ்க்கையில் முக்கிய வினையாற்றுவது நிலம். ஐம்பூதங்களுள் ஒன்றான நிலம் இருப்பின் ஆதாரம். ஆதிமனிதன் தொடங்கி இக்கால நவீனமனிதன் வரை அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத கூறு நிலம். நிலத்தில் மனிதன் நிலை பெறுதலி லேயே நாகரிகம் வளர்ச்சி பெற்றது. நிலம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக் கிறது. வாழ் வதற்கு நிலமற்றவனுக்கும் பெரு நிலத்தைக் கொண்டிருப்போருக்குமான வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆதிக்கம் அரசு உருவாக்கிய சட்டகங்கள் அனைத்தும் நிலத்தை கையகப்படுத்தவும் பாது காக்கவும் பயன்பெறவுமாக உண்டாக்கப் பட்ட வையே! நிலமில்லாதவனை துச்சமென மதிக்கும் போக்கு எல்லாக் காலத்திலும் உள்ளது போலவே நிலத்திற்காகப் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்வதன் பொருட்டாக அந்நிலத்தில் வாழும் இன மக்கள் வெவ்வேறு காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர் என்பதைக் காண் கிறோம்.

நிலம் வாழும் மனிதனுக்கு நம்பிக்கை யளிப்பது. மனிதனின் பண்பாட்டு வேர் அவன் வாழுகின்ற நிலத்தை ஒட்டியே அமைகிறது.

பூர்விக குடிகள் விட்டுச்சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப்படுத்தியிருப்பாய்

பூர்விகமாக வாழும் இடத்தில் அவர்களுக் கான வாழ்வியல் முறைகள் இருக்கும். அவர்களுடைய உடை, உணவு, மருத்துவம் சார்ந்த அடிப்படை விடயங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு இனமும் தன் குழந்தைகள் மூலமாக இந்த அடிப்படைகளையும் கடத்துகின்றன ; நிலைபெறுகின்றன ; பின்பற்றுகின்றன.

ஏகாதிபத்தியம் முழுப்பண்பாட்டையும் ஒரு சேரத் தாக்குகிறது. சமூக அமைப்புகள் பொருளாதார உறவுகள் பண்பாட்டு மரபுகள் முதலானவற்றையும் ஏகாதிபத்திய அரசியல் பாதிக்கிறது. இதற்கு எதிராக பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய தேவையும் எழுகிறது. அன்னிய கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்ப்பது போலவே சொந்த கலாச்சாரம் சிதைக்கப்படுவதையும் தடுக்க வேண்டியிருக்கிறது.

கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டுவிட்டு

இனமக்களின்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை அவர்களது அடையாளச் சிதைவாக மாறுகிறது. அடையாளத்தை வேரறுத்தல் என்பது வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளை அழித்தொழிக்க பங்காற்றிய ஆஸ்திரேலிய அரசு. சொந்த மண்ணில் வாழும் அதிக மக்கள் தொகை கொண்டவர்களை அழிக்க இறங்கிய இலங்கை அரசு மற்றும் உலகம் முழுவதும் இன அழித் தொழிப்புப் போர்கள் நடைபெறுவதைக் கண் கூடாகக் காண்கிறோம்.

பெரு முதலாளிகளின் கூட்டிணைவில் நாட்டிற்கு வந்துசேரவேண்டிய இலாபத்தைக்கூட தனியார் பெருமுதலாளிகளிடம் தாரைவார்க்க பழங்குடிகளை அழித்தொழிப்பு செய்வது நடுநிலை நாடென உலக அரசியலில் பெயர்பெற்ற நாட்டில் அப்போது இருந்த அதே கட்சி நடத்தும் ஆட்சியின்போது நிகழ்த்தப்படுகிறது.

இங்கெல்லாம் புரியாதமொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுருவத் தொடங்கியவேளை
விக்கித்துப் போனோம்

எமது கல்லூரி நூலகம் கடற்கரை விளையாட்டுத்திடல் ஆலயமெங்கிலும் அச்சம் விதைக்கப்பட்டு
ஆனந்தம் பிடுங்கப்பட்டதை
விழித் துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்

குறிப்பிட்ட இன மக்களின் அடையாளத்தை அழிக்கும் பொருட்டாக மற்றொரு இன மக்களை அவ்விடங்களில் குடியமர்த்துவதும் இராணுவத்தை யும் காவல் துறையையும் களமிறக்குவதும் இலங்கையில் சர்வ சாதாரணம். போர் அபாயம் இல்லாத பகுதிகளில் முன்பே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இம்முறைமை போர்பாதித்த பகுதிகளிலும் தற்போது நிகழ்ந்துவருகிறது. மிகச் சாதாரணமாக பூர்வீகத்தை, மூலத்தை, வேர்களைப் பிடுங்கி எறிய ஏகாதிபத்தியத்தியத்தின் கொடுங் கோல் ஆட்சியின் கோடரிகளால் நிகழ்த்தப்படுகிற அவலம் பார்க்க இயலாதது. சொந்த மண்ணில் சொந்த நாட்டில் தன் தாய்மொழியைக்கூட உரத்துப்பேசிவிட முடியாதது அவலத்தின் உச்சம்.

தோற்றுப்போன அரசியலின் பின்னர்
அமைதியைத் தேடித் தூரதேசம் ஒன்றில்
அடைக்கலம் புகுந்தாய்
மனச்சுமைகள் அனைத்தையும்
மௌனமாக அஞ்ஞாத வாசத்தில் கரைத்தாய்
நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுத்திடத்
திசைக் கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த. . .

தட்பவெட்ப நிலை மாறுதலைமுன்னிட்டு பறவைகள் சொந்த நிலத்தைவிட்டு இனப் பெருக்கத்திற்காக வேறொரு நிலத்திற்கு வருகிற இயற்கையை பறவைகள் சரணாலயங்களில் பார்க் கிறோம். பெயர் தெரியாத எந்த தேசத்திலிருந்து வந்தது என்ற ஆய்வை தொடர்ந்து நிகழ்த்தச் செய் கிறது இயற்கை. ஒரு விதை விளைந்த மரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிழ எச்சங்கள் உதவுகின்றன.

ஆறு தன்போக்கில் நிலையில்லாமல் ஓடிக் கடந்து கொண்டே போகும் பாதையை வளம் மிக்கதாக மாற்றுகிறது. இயற்கை எல்லை கடத்தலை நிலம் மாறுவதை இனசுழற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இயற்கையின் படைப் பான மனிதன் மனிதநேயமின்றி ஆயுதமெடுப் பதன்மூலம் மானுட இனத்தின் பகுதியை இரத்தக் களரி யாக்குகிறான், நரபலியிடுகிறான், சுயதேவை, அதிகாரம், பணபலம் இவற்றின் காரணமாக இதயத்தை அறுத்துவிட்டு இடிஅமீன்கள் தழைத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் சூழல் நிலவுகிறது. இல்லைஎன மறுக்க முடியாத அளவு சூழலியல் சார்ந்த நிலைப் பாட்டில் உலகின் வல்லரசு நாடுகளும் அதன் ஆதரவு நாடுகளும் தேர்ந்தெடுத்திருக்கும் கொடிய பாதை கண்முன் விரிகிறது.

சிறுதீவுகளின் அழிவை கவனத்தில் கொள்ளாத சுற்றுச்சூழல் மாநாட்டின் உதவாத சடங்குத் தனம் செரிமானத்தை நிறுத்துகிறது. இதைமிக இயல்பாக எடுத்துக்கொள்வதற்கு பிறநாடுகள் பழக்கப் படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வன்முறையை மிகச் சாதாரண கண்களோடு கண்டு கடந்து விடுகிறது. அவ்வாறே உலக நாடுகள் மனிதநேயத்தை வெறும் பேச்சளவில் மட்டுமே கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக் கின்றன. மண்ணைவிட்டு சிதறடிக்கப் படுகிற இனத்தின் மொழி தழைக்குமா? அழியுமா? எனும் ஐயம் உள்ளது. காலப்போக்கில் அழிவதற்கான சாத்தியங்களே அதிகம். இவ்வுண்மையை ஃபஹிமாவின் கவிதை வரிகள் சுட்டுகின்றன.

ஃபஹீமா இஸ்லாமிய பெண்ணியலாளராக தன் பெண்சார்ந்த உணர்வை முன்வைக்காமல் பால் வேறுபாட்டுத் தளத்தில் மட்டுமே இயங்கு கிறார். பெண் அடக்கப்படும் பல்வேறு சட்டகங்களை விமர்சிக்கிறார். போர்நிகழும் சூழலில் பெண்ணியம் மலர்வது அரிது. உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்கப்பட்ட ஆயுதங்களுமே இவர்களை வழி நடத்தும். போரச்சம் இல்லாத சூழலில் வாழ்ந்து வருகிற ஃபஹிமாவின் கவிதைகளில் நிலத்தை பிறர் ஆக்கிரமிக்கும் பொழுது சுயம் அழிக்கப்பட்ட இனத்தினராக இயல்பான நடைமுறைக்கு ஊறுநேர்வதாக சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதான அவலம் பதிவாகிறது. செழித்தநிலம், திரிந்த நிலம், கருணைமிக்க நிலம், வாழ்வா தாரத்தின் துணையாக இருக்கின்ற நிலம் இந்த நிலத்தை வளப்பமாக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது.

Pin It