வழி தவறிய இரண்டு மீன்கள்

சந்தித்துக் கொண்டன

மணல்வெளியில்.

இரண்டிடமும்

கடல் பற்றிய கதைகள் இருந்தன‌

கடல் இல்லை

- இலக்குவன்

‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமாகின்றன.

எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் எங்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும்.

சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள், சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீழே ஒரு இலை... அதை புதர் இடுக்குகளில் ஒளித்து வைத்து அடுத்த நாள் வந்து எடுத்துக்கொள்வார்கள். விடுமுறை நாட்களில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்தி போவதும், முங்கு நீச்சல் அடிப்பதும், நாவல் மரமேறி பழம் தின்று நீர் அதிர "தடாலென்று" கீழே குதிப்பதுமாக குளம் என்பது சிறுவர்களின் பேருலகமாக இருந்தது. குளத்துக்குள் கண்டெடுக்கும் காசில் வாங்கும் இலந்தைப்பழ மிட்டாய்க்கு ருசி அதிகம். காசைவிட எப்போதும் ஊக்குகளே அதிகம் கிடைக்கும்! வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு, குடத்தை நீருக்குள் கவிழ்த்துப் போட்டு நீச்சல் கற்றுக் கொடுக்கும் காட்சிகள் அரிதானவை, அழகானவை. மெல்ல, மெல்ல குளத்தின் நீர்ப்பரப்பு சுருங்கி வெயில் தீயும் கோடையில் குளம், குட்டையாகும். ‘‘இன்னைக்கு செங்கூரணியில மீன் புடிக்கிறது...’’ என அதிகாலையில் தண்டோரா சத்தம் கேட்கும் நாட்களில், ஊரெங்கும் மீன் குழம்பு. இப்போதும் செங்கூரணி இருக்கிறது. மீன் பிடித்தல் நடக்கிறது. ஆனால் அதில் மீன்வாசம் இல்லை. யூரியா வாசமே அடிக்கிறது.

இன்றைய கிராமத்துக் குளங்கள் அனைத்தும் வெறும் பணம் காய்ச்சி மரங்களாகவே நடத்தப்படுகின்றன. ‘உள்நாட்டு மீன்பிடிப்பு’ என்ற பெயரில் கிராமத்து குளங்களில் மீன் வளர்ப்பதை அரசு ஊக்குவிக்கிறது, மானியம் கொடுக்கிறது. இதில் அதிக லாபம் வருவதை உணர்ந்து கொண்ட உள்ளூர் பணக்காரர்கள், குளத்தை ஏலம் எடுக்க போட்டிப் போடுகின்றனர். பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன கிராமத்துக் குளங்களின் இன்றைய குத்தகைத் தொகை ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதிக பணத்தை குளத்தில் கொட்டும் முதலாளிகள், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் குளத்துக்குள் கண்ட கருமாந்திரத்தையும் கொட்டுகின்றனர். யூரியா, மாட்டுச்சாணி, பன்றிக் கழிவு... இன்னும் பெயர் தெரியாத வேதிப்பொருட்கள் குளத்துக்குள் கொட்டப்படுகின்றன. இவை தரும் போஷாக்கில் மீன்கள் தழைத்து வளருகின்றன. நாம் ஐந்து நிமிடம் உள்ளே நின்றுவிட்டு ஏறினால் உடம்பெல்லாம் அரிக்கிறது. அதில் குளித்தால் அழுக்குப் போவதற்கு இன்னொருமுறை குளிக்க வேண்டியிருக்கும். அந்த தண்ணீரை மாடுகளும் குடிப்பதில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக கிராமத்து குளங்களில் குளிப்பதை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். மனித நடமாட்டம் குறைந்துபோன குளங்களில் ஆண்கள் படித்துறையும் இல்லை, பெண்கள் படித்துறையும் இல்லை. எல்லா திசைகளிலும் கோரை மண்டிப் போய் கிடக்கிறது. மனித மூளையில் மண்டிய கோரைகள் இவை. மீன் வளர்ப்பின் லாப ருசி பார்த்தவர்கள் இப்போது தங்கள் சொந்த விவசாய நிலங்களையும் குளமாக்கத் தொடங்கியுள்ளனர்.

குளத்தின் மக்கள் பயன்பாட்டை இப்போது பதிலீடு செய்பவை போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள். பெரும்பான்மை மக்கள் குளிப்பதும், துவைப்பதும் இதில்தான். ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட போர்வெல் இருக்கிறது. இந்த போர்வெல், மின்சாரம் இருக்கும் நேரமெல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கும், கறவை மாடுகளிடம் பாலை உறிஞ்சுவது மாதிரி. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் போர்வெல்கள் இருக்கின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு போர்வெல்கள் டெல்டா மாவட்டங்களில் இருப்பவை. இதுபோக வருடம் ஒன்றுக்கு 40 ஆயிரம் புதிய போர்வெல் இணைப்புகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. இந்த போர்வெல் அனைத்தும் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சுவதன் நிலத்தடி பாதகங்கள் ஒரு பக்கம்... இன்னொரு புறம் இந்த நீரைப் பயன்படுத்தி கிராம விவசாய நிலங்களை ஓய்வு, ஒழிச்சல் இல்லாத அசுரத்தனமான உழைப்புக்கு உட்படுத்துகிறார்கள். குருவை, சம்பா, தாளடி, வைகாசிப்பட்டம், ஆடிப்பட்டம்... ஒரு கருமமும் இப்போது கிடையாது. அறுப்பு முடிவதற்குள் நடவுக்கு தயாராகி விடுகின்றனர். நாற்று நடுவதற்கு, நெற்பயிர் சுமார் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும். அதைப் பறித்துதான் நடவு நடுவார்கள். இப்பொழுதெல்லாம் அந்த முப்பது நாளைகூட வீணாக்கக்கூடாது என்பதற்காக, வேறொரு வயலில் நாற்றுவிட்டுத் நாற்றைத் தயாராக வைத்துக் கொள்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து எங்கள் வயலில் நடந்த வழமையான விவசாயம் இப்போது கிடையாது. இருக்கும் முக்கால் ஏக்கர் வயல் நான்காக பிரிக்கப்பட்டிருக்கும். நிலத்தின் வரப்புகளில் துவரை, வெண்டை, கத்தரி போன்றவற்றை நட்டு வைப்போம். அறுப்பு வரைக்கும் அந்த காய்கறிகள் வீட்டுக்கு உதவும். அறுப்பு முடிந்த சில நாட்களில் வயலில் ஈரம் காய்ந்த பின்பு ஓர் ஓட்டு ஓட்டி உளுந்து, எள்ளு இவற்றுடன் கொஞ்சம் தட்டைப்பயறு, பாசிப்பயறு இவற்றையும் சேர்த்து விதைப்போம். சில வருடங்களில் கடலை மட்டும் விதைப்பதுண்டு. முன்பே விதைத்த துவரைப்பயிர் வரப்புகளில் கூடாரம் போல் வளர்ந்து நின்று, இந்த தானியப் பயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும். இன்று எதுவுமில்லை. பென்சிலால் வரையப்பட்டது போல வரப்புகள் சுருக்கப்பட்டு, அந்த இடத்தில்கூட நாலு நெல் விளைய வைத்து காசாக்க முனைகிறார்கள்.

ஒரு விவசாயி காசு கொடுத்து அரிசி வாங்குவதை கேவலமாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அதிக விலைக்குப் போகும் நெல் ரகத்தை பயிட்டு விற்றுவிட்டு, டவுனில் இருந்து பொன்னி அரிசி கிலோ 35 ரூபாய்க்கு வாங்கி வருகிறார்கள். இப்படி பணம் காய்ச்சி மரமாக நிலத்தை மாற்றினால், பாவம் அந்த நிலம்தான் என்ன செய்யும்?

யுகம், யுகமாக ஆதி கரங்கள் உழைத்த இந்த பூமியை அதிஉயர் உழைப்புக்கு உட்படுத்துவதன் எதிர்விளைவாக, இதுவரை நிலம் சார்ந்த வாழ்வின் ஆதாரமாக இருந்த கால்நடைகள் விவசாயியின் வீடுகளை விட்டு துரத்தப்பட்டுவிட்டன. கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த மாட்டுக் கொட்டகைகள் 75 விழுக்காடு இப்போது இல்லை. அந்த மாடுகளின் சாணங்களை அள்ளிக் கொட்டிய எருக்குழிகளும், அந்த எருவை அள்ளி வயலில் கொட்டிய பாரம்பரிய விவசாயமும் இல்லை. ‘ஏர் கலப்பை உழவு முடிந்துவிட்டது, இயந்திரங்கள் வந்துவிட்டன’ என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போய்விட்டதுதான் மிக முக்கியக் காரணம். தரிசு நிலம் என எதுவும் கிடையாது. எங்கும், எப்போதும் வயல்களில் பசுமையே நிறைந்திருக்கிறது. இது வேறு பலவற்றை பறித்து, விழுங்கிச் செரித்த ஆபத்தான பசுமை. பணக்காரரின் முகத்தின் ஜொலிக்கும் திமிரின் ஒளி போன்றது. கொத்த வரும் பாம்பின் மினுமினுப்பு போன்றது. ‘எங்கும் பசுமை எப்போதும் பசுமை’ என்றால் அப்புறம் மாடுகளை எங்கேப் போய் மேய்ப்பது? மாடுகளை விற்றுவிடு... பாக்கெட் பால் வாங்கிக்கோ... காபி குடி... முடிந்தது சோலி.

பழமை, பாரம்பரியம், பண்பாடு என்றெல்லாம் சொல்லி பின்னோக்கி போவதை ஆதரிப்பதில்லை மேற்கண்ட எழுத்தின் அர்த்தம். நவீன வசதிகள் என்னும் முன்னோக்கியப் பாய்ச்சலில் நாம் பெற்றிருக்கும் தீதுகள் அளவை விஞ்சிவிட்டன. சாதியைக் காப்பதாக இருக்கும் நம் கிராமத்துப் பண்பாட்டு, பாரம்பரியத்தின் கூறுகள் தொடர்ந்தபடியே இருக்க, பற்றித் தொடர வேண்டிய மனிதக்கூறுகள் பலவற்றை உலகமயத்தின் நாவுகள் தின்று செரித்துவிட்டன. இதே கட்டுரையின் தொடக்கத்தில் வரும் குளம் பற்றிய பகுதியில், அந்தக் குளத்தில் குளிக்க முடியாத ஒரு தலித்தின் மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை பார்ப்பது அவசியமானதும், முக்கியமானதும் ஆகும். அதேபோலதான் ஒரு நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளியின் மனநிலையில் இருந்தும் இந்த விவசாய நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பேச வேண்டும். ஆனால் உலகமயத்தின் கரங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயங்களுடன் இந்த அடையாள அழிப்பை நிகழ்த்தவில்லை. மாறாக பிராந்திய தேவைகளை புறமொதுக்கி, எல்லோரது அடையாளத்தையும் அழித்து தன்னுடைய வண்ணத்தை வலுக்கட்டாயமாகப் பூசிவிடுகிறது. இன்றைய தமிழக விவசாய கிராமங்களின் மீது உலகமயம் துப்பிய எச்சில் படிந்திருக்கிறது. அதைத் துடைப்பதற்கு நம் கரங்களை ஒன்று சேர்ப்போம். யாவற்றையும் ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்க்க, நம்மைப் பழக்கும் உலகமய மாயையிலிருந்து விடுபட்டு நம் வாழ்வாதாரங்களின் தனித்துவங்களை மீட்டெடுப்போம்.

 

Pin It